2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!





மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.

 


24/8/17

“நீங்களும் ஜெயிக்கலாம்”-- மின் புத்தகம்

எனது “நீங்களும் ஜெயிக்கலாம்” புத்தகத்தை Free tamilbooks com மின்னூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
 நண்பர் திரு. அன்வருக்கும் திரு, ஶ்ரீநினிவாசனுக்கும் நன்றி. இரண்டு நாட்களில் தரவிறப்பட்டிருக்கும் எண்ணிக்கை 1000 நெருங்குகிறது என்ற விஷயம் மகிழ்ச்சியாகயிருக்கிறது. நீங்களும் இந்த சுட்டியின் மூலம் தரவிறக்கி படித்துப் பாருங்களேன். உங்கள் கணணி, போன்களுக்கு ஏற்ப தரவிறக்கம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

http://freetamilebooks.com/ebooks/neengalum-jeyikkalam/



புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து...
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. 
பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !

4/8/17

ஜெயமோகனின் வலைப்பூவில் கடைசிக்கோடு



......ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.................

கடலூர் சீனு 

திரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவில் அவர் எழுதும் கட்டுரைகள்,வெண்முரசு ( மஹா பாரதம்) தவிர அவருக்கு எழுதும் முக்கிய நண்பர்களின் கடிதங்களையும் வெளியிகிறார். சில கடிதங்கள் கட்டுரையாகவே அமைந்து எதிர்வினைகளையும் எழுப்பும். கடந்த வாரம் திரு கடலூர் சீனு என்னுடைய புத்தகமான கடைசிக்கோடு பற்றி ஒரு நிண்ட விமர்சனத்தையே  ஜெயமோகனுக்கே கடிதமாக எழதியிருக்கிறார். அதற்கு வந்த எதிர்வினகளுக்கும் பதில் தந்திருக்கிறார். திரு கடலூர் சீனுவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றி
  அதை இந்த சுட்டியில்  பார்க்கலாம்.
 படித்து பாருங்களேன்


26/7/17

ஒரு மஹாராஜா ஏழையாகிவிட்டார்.


உலகம் முழுவதும் உள்ள 41  நகரங்களையும் இந்தியாவில் 72 நகரங்களையும் இது இணைக்கும் ஏர் இந்தியாவின் மஹாராஜாவிற்கு சொந்தமாக 140 விமானங்கள் இருக்கின்றன. ஆனால் ஏர் இந்தியா நிறுவனம், 52,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஏர் இந்தியா ஈட்டும் வருமானத்தைவிட 300 – 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்கிறது.  இந்த நிலையில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் இயங்க முடியாது.
140 விமானங்கள், 2,000 விமானி¬கள், 2,000 தொழில்நுட்ப வல்லுனர்கள்,  விமானங்களை பழுதுபார்க்கச் சொந்த இடம், விமானங்களை நிறுத்துவதற்கு முன்னுரிமை என்று  மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்திக்கக் காரணம் என்ன?  சுருக்கமாகச் சொல்வதானால் சொல்லுவதானால் நிர்வாக குளறுபடி, அரசியல்வாதிகளின் தலையீடு, அதிகாரிகளின் மெத்தனம், போட்டி மனப்பான்மை இல்லாமல் இயங்கியது. தான்.
1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மத்திய அரசு சரியாக திட்டமிட்டுச் செயலாற்றவில்லை.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.   இந்த காலகட்டத்துக்குள்   நாட்டின் மிகப்  பெரிய விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவின் வளர்ச்சி  உள்நாட்டுச் சந்தையில் 13 சதவீதமாகச் சுருங்கி விட்டது. ஜெட் ஏர்வேஸ்,  இண்டிகோ போன்ற தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி கண்டன.
தாமதமாக விமானங்கள் வாங்க முடிவு செய்தபோது அரசியல் விளையாடியது.  தேவைக்கு அதிகமாக விமானங்கள் வாங்கித்-தள்ளியது.. ஐ.மு.கூ.,வின் முதல் ஆட்சியில், 70,000 கோடி ரூபாய் செலவில், 111 விமா¬னங்¬களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏர் இந்தியா 33,197 கோடி ரூபாய் செலவில் 50 விமானங்கள் வாங்குவதற்கு, போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது. கடன் வாங்கி விமானங்களை வாங்குவது, பின்னர் வருவாய் ஈட்டி கடனை திருப்பிச் செலுத்துவது என்பதே திட்டம். ஆனால், அது நடைபெறவில்லை.  மாறக கடன் தான் அதிகரித்தது.
இவ்வளவு விமானங்கள் வாங்கியதற்கு காரணம் தனியார் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த இந்தியன ஏர்லயன்ஸ்   நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைத்து ஒரே நிறுவனமாக்கியதனால்  என்று சொல்லப்பட்டது  ஆனால் விளைவுகள் வீபரிதமாக இருந்தது. 2002 – 03ல் இவ்¬விரு விமான நிறு¬வ-னங்¬களின் மொத்த நஷ்¬டம், 63 கோடி ரூபாய்¬ தான். ஆனால், 2010 – 11ல் அதுவே 7,000 கோடி ரூபா¬யைத் தொட்¬டது. அடுத்த ஐந்து ஆண்¬டு¬களில் 20,000 கோடி ரூபா¬யைத் தாண்டியது. ஏர் இந்தியாவால், ஏற்கனவே உள்ள கடன்களுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியவில்லை. இந்த மாதிரி நிலையிலிருந்த  மல்லையாவின் நிறுவனத்தை வராகடன் பட்டியலில் சேர்த்து போராடத்தொடங்கியிருக்கும் வங்கிகள் இதில்அப்படி செய்ய முடியாது காரணம் இது பொதுத்துறை. இதன் கடனகள் அரசால் உத்தரவாதமளிக்கபட்ட ஒன்று.  அதாவது என்றாவது ஒரு நாள் கடன் திரும்பி வந்துவிடும்- நீங்களும் நானும் கட்டும் வரிப்பணத்திலிருந்து அரசு கொடுத்துவிடும்
 செயல்பாட்டு திறன்களை  மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, 2017க்குள் லாபம் ஈட்ட வேண்¬டும் என்ற  நிபந்தனைகளுடன் மத்திய அரசு, ஏர் இந்தியாவுக்கு 30 000 கோடிகள்  கடன் கொடுத்தது. 2015 –16ல் மட்டும் 105 கோடி ரூபாய் லாபம் கிடைத்தற்கு காரணம்  விமான எரிபொருள் விலை சரிவு. இப்போது மீண்டும் நஷ்டம்.
“ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் 2005க்கும் 2010க்கும் இடையே ரூ 4,234 கோடி இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருக்கிறது” என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தேவைப்பட்டதை விட மிக அதிகமாக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதால் ரூ 68,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு விமான நிறுவனம் கடன் இல்லாமல் இயங்கமுடியாது. .  ஜெட் ஏர்¬வே¬ஸுக்கு உள்ள கடன், 7,223 கோடி . இண்டிகோவின் கடன் 3,201 கோடி ரூபாய் . ஆனால் ஏர் இந்தியாவின் கடன் அதன் வருவாயாக மதிப்பிட்டிருக்கும் தொகையை விட பலமடங்கு அதிகம்.  சுருக்கமாக சொல்லுவதானால் ஏர் இந்தியா திவாலாகிக்கொண்டிருக்கிறது. வேறு வழியில்லாமல், ஏர் இந்தியாவை விற்றுவிட வேண்டிய நிலை  இன்று எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம்  ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த முடிவு இந்த அரசுக்குப் புதிதல்ல  கடந்த 2001ம் ஆண்டே ஏர் இந்தியாவின் 60 சதவீத பங்குகளையும், இந்தியன்  ஏர்லைன்சின் 51 சதவீத பங்குகளையும் விற்க அப்போது ஆட்சியில்   இருந்த பாஜ கூட்டணி அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்போது  அது கைவிடப்பட்டது.  அதே முடிவு இன்று வேறு வடிவம் எடுத்திருக்கிறது.
“இந்தியாவின் 86 சதவீத விமானச் சேவையை தனியாரால் வழங்க முடி-யும் என்றால், 100 சதவீதத்தையும் அவர்களால் வழங்க முடியாதா?” என்று  கேட்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ,
சரி இவ்வளவு நஷ்டத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தை யார் வாங்குவார்கள்?  கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்களா? வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வார்களா? அதெற்கெல்லாம் ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அரசு எப்படி, எவ்வளவு பங்குகளை விற்கப்போகிறது என்பதை முடிவு செய்ய ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
டாடா குழு¬மம் ¬ ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது.. அதற்கு காரணம் டாடா நிறுவனத்தின்  நிதி வலிமை மட்டுமில்லை..  ஏர் இந்தியாவை துவக்கியதே ஜே.ஆர்.டி. டாடா¬ தான். 1932ல் டாடா ஏர்-லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்த விமான நிறுவனமே, 1953ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா ஆனது. அன்றைய பிரதமர் நேருவின் விருப்பத்தை ஏற்று  நீண்ட அதன் தலைவராக  இருந்தார்.ஜேஆர் டி.   அந்த சென்டிமென்ட் ஒரு காரணம். மேலும் டாடா நிறுவனம் ஏர் ஆசியா  என்ற நிறுவனத்திலும் நிறைய முதலீடு செய்திருக்கிறது.
 இன்று டாடா மட்டுமல்ல, இன்னும் மூன்று விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விரும்புகின்றன என்ற செய்திதான் ஆச்சரியத்தைத் தருகிறது.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்  ஏர் இந்தியாவிற்கு இருக்கும் கட்டமைப்புகளை இன்று உருவாக்கப் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள். மேலும்    சிறந்த தலைமை, கண்டிப்பான நிர்வாகம், திறமையான நிதிமேலாண்மையினால் 2 அல்லது  3 ஆண்டுகளில் நிலைமையைச் சீராக்கி லாபம் ஈட்ட முடியும் என இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. 1983 ல் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சந்தித்த இதே நிலை தனியார் நிர்வாகத்தால் 1987ல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிய முன்னுதாரணத்தைக் காட்டுகின்றனர்.
1953ல் விமானச் சேவையை அரசுடைமையாக  அறிவித்து அரசு  டாடா ஏர்லைன்ஸை எடுத்துக்கொண்டபோது  ஜே ஆர் டி டாடா சொன்னது “மக்கள் நலனுக்காக  விமான சேவை நாட்டுடமையக்கப் படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் இந்தியாவின் புதிய அரசாங்கத்துக்கு, விமான நிறுவனத்தை நடத்துவதில் எந்த அனுபவமுமில்லை. அதனால் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.”
இந்த வார்த்தைகள் இன்றும் உண்மையாக இருப்பது தான் ஆச்சரியம்
kalki 30/07/17

















கருகிய கனவுகள்


மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது 
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக,மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வந்த நீட்  (NEET) பிரச்சனையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நீட் தேர்வில் தகுதிபெறாத தமிழக மாணவர்கள் +2 வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட   மருத்தவ கல்லூரிகளில் சேரமுடியாது. 
 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில்  கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் விளைவாக  2013ல் பிறபித்த தடையுத்தரவை ரத்து செய்து தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த  உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது 
இந்த  உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்திய மருத்துவ கல்வியில் ஒரு மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்திலும் மத்திய அரசு கட்டாயமாகி உள்ளது. என்றும் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது.  கடந்த மே மாதம் 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11.3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.      தமிழகத்தில்  எழுதியவர்கள் 83000க்கும் மேற்பட்டவர்கள் அதில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 32570 பேர். இதில்மிகப் பலர் சிபிஎஸ் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் காரணம் இந்த நீட் தேர்வின் கேள்விகள் 80% சிபிஎஸ் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டவை.
  மாநில பாடத்திட்டத்தில் +2 படித்த மாணவர்கள் இந்தத் தேர்வை சரிவரச் சந்திக்க முடியாமல் போய்விட்டது   என்பதைக் கணித்த அரசு  தமிழக அரசுஇந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வாங்கிடலாம் எனஅறிவித்தும் விட்டது. ஆனால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற  மத்திய அரசு  அனுப்ப வில்லை. தங்களது சொந்தப் பிரச்சனைகளில் மத்திய அரசின் தயவை நாடி நிற்கும். மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்க வில்லை
. இவ்வாண்டு, நீட் மூலம் தான் தமிழ்நாட்டிலும் மாணவர் சேர்க்கை என அறிவித்து அதற்கான பணிகளை வாரியம்  துவங்கியிருந்தது. இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததை உணர்ந்த மாநில அரசு அதை மறைப்பதற்காக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வர  ஒரு அரசாணை பிறப்பித்தது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 விழுக்காடு இடங்கள் போக மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையைத்தான்  செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்புக்கான முக்கிய காரணங்களாக நீதி மன்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒரே வகுப்பில் படித்த மாணவர்களிடையே வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்கள் என்பதால் தகுதி நிலையிலேயே  வேறுபாடுகாட்டுவது  எல்லோருக்கும் சமத்தவம் என்ற நிலைக்கு மாறுபட்டதாகிவிடும். இரண்டாவது இந்த அரசாணையை  வெளியிட்டிருப்பது அரசின் செயலாளர்கள். ஒரு அரசின் கொள்கை முடிவுகள் அமைச்சரவையால் பரிசிலிக்கபட்டு ஒரு ஆணையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது  சட்டமன்றத்தில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டு,ம்  ஆனால் இது அப்படிச் செய்யப்படவில்லை. 
தமிழக அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது  
ஆனால் . இப்படி வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டரீதியாக செல்லுமா? தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும்  85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது  மிகப்பெரிய கேள்விக்குறி.  ஏனெனில், அரசியல் சட்டப்படி, சமூக ரீதியாக கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒதுக்கீடுகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் எனச்சொல்ல முடியாது. மேலும் 50 விழுக்காட்டுக்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது, ஏற்கனவே, குஜராத் உயர் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த ஒதுக்கீடு  அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம். .

மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?                            
இதைக் கெளரவ பிரச்சனையாக கருதாமல் நீட் தேர்வை ஏற்று நமது மாநில பாடதிட்டங்களை மாற்றி அமைத்து தமிழக கல்வித்தரம் சிபிஎஸ் பாடத்திட்டத்தைவிட உயர்ந்தது என நீருபிக்க வேண்டும் 
 நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test). என்பதை உணர்ந்து நமது மாநில மாணவர்களை அதற்கு தயாரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  செழுமையாக்கப்படவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அண்மையில் செய்திருக்கிறது. இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாகவே செயலாக்கவேண்டும். 
குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்கொடிய வழக்கம் இந்தத் தேர்வு முறையினால்  முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவஇடம் கிடைக்காது. என்று எழுந்திருக்கும் நிலையை வரவேற்க வேண்டும்.
சட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மருத்தவ கல்லூரி கனவுகளுடன் மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும்  மாணவர்களும், கருகிய அவர்களின் கனவுகளை கண்டு கண்ணீர் விடும் அவர்கள்  பெற்றோர்களும் தான்.