18/7/18

சினிமாக்கள் பார்த்துதான் தொழில் கற்றேன்”



வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல், கைதிகள் சிறையிலிருந்து தபிப்பது போன்ற காட்சிகளைப் பிரமிப்புடன் பார்க்க வைத்த ஹாலிவுட் படங்கள் 1990 களிலும்,2000களிலும் வெளிவந்த அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ் ஹீட் போன்றவை. இன்றும் ரசித்துப் பார்க்கப்படும் இந்த ஹாலிவுட் படங்களைத் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு ஒரு சிறை யிலிருந்து தப்பிக்கும் சாகசம் அண்மையில் பிரான்ஸில் நிகழ்ந்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியான சூட் பிரான்ஸிலியனில் (sud-Francilien) நவீன பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு அதி பாதுகாப்பு அமைப்புக்கொண்ட சிறைச்சாலை. இருக்கிறது.  இதில் 25 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கிரிமினல் குற்றவாளி ரொடோய்ன் ஃபெய்ட்.( Redoine Faid)

கைதிகள் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறையில் அண்மையில் இவரைச் சந்திக்க வந்த ஒரு ஒரு உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடுமென்று நவீனத் துப்பாக்கிகளுடன் பிரான்ஸின் கமாண்டோக்கள் உடையணிந்த இருவர் கண்ணாடிக்கதவுகளை வலிமையான டிரில்லர்களால் துளைத்து உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். கதவுகளை உடைக்கும் போதே புகைக்குண்டுகளை வெடித்ததால். புகை சூழுந்த அந்த நிமிடங்களில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டு சிறைக் காவலர்கள் சுதாரிப்பதற்குள் ரொடொய்ன் ஃபெய்ட்டை இழுத்துக்கொண்டு  வெளியே ஒடி  ஒரு கமாண்டோ காவலுடன் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டனர். அதன் உள்ளே பைலட்டின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்த மற்றொரு காமண்டோ கட்டளையிட்டவுடன் விமானம் பறந்து சிலநிமிடங்களில் மறைந்தது.உலகச்சிறைச்சாலைகள் உடைப்பு வரலாற்றில் இதுவரை இவ்வளவு வேகமாக ஒரு சிறை தப்பிப்பு நடந்ததில்லை. உண்மையான கமாண்டோ ஆக்‌ஷன் இது.
ஒரு ஹாலிவுட் திர்ல்லர் போல 10 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் தப்பிப்பித்தலில் துப்பாக்கிச்சூடு, மனித உயிர் இழப்பு எதுவுமில்லை. ஒத்திகைப்பார்க்கபட்ட ஒரு சினிமா ஷூட்டிங் போல ராணுவத்துல்லியத்துடன் நிகழ்ந்த இதைக் கண்டு பிரான்ஸின் போலீஸ் திகைத்து நிற்கிறது. நாட்டின் நீதித்துறை துறை அமைச்சர் இது அழகாகத் திட்டமிடப்பட்டு அருமையாகச் செயலாக்கப்பட்டிருக்கும் சிறை உடைப்புதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்
.
நிகழ்ந்த சில வினாடிகளில் வயர்லஸ், போன்களில் செய்தி பறந்தது. தேடிக்கொண்டிருந்த போலீஸ் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்தது நெடுஞ்சாலையில் 40 மைகளுக்கு அப்பால் எஞ்ஞின் எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரையும் அதனுள் மயங்கிக்கிடந்த அதன் பைலட்டையும் தான். அந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள ஒரு விமான கிளப்புக்கு சொந்தமானது. உறுப்பினர்களக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பைலட்டை துப்பாக்கி முனையில் கடத்தி அந்த ஹெலிகாப்படரில் சிறைக்குள்ளிருந்த ரொடோய்ன் ஃபெய்ட் யை அதிரடியாக மீட்டிருக்கின்றனர் அவரது நண்பர்கள்.
ஹெலிகாப்பட்டர் நின்ற இடத்திலிருந்து ஒரு அதி வேகக் காரில் 100 மையில் பயணம் செய்து பாதி வழியில் அதன் எஞ்ஞினையும் எரித்துவிட்டுத் தப்பியிருக்கின்றனர் குற்றவாளிகள். ஒரு ரயில் நிலையம். சின்ன விமான நிலையம் இருக்குமிடத்தின் அருகில் அந்த கார் இருந்ததால் அங்கிருந்து எங்கே எப்படி சென்றிருப்பார்கள் என இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
இந்தச் சிறை ஒரு அதி பாதுகாப்புச் சிறை ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத மேல்தளம், வலையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும் மைதானங்கள் போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள்.  சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் சில நிமிடங்கள் நின்று கடக்க வேண்டிய ஒரு திறந்த வெளியில் மட்டும் இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் இல்லை. சரியாக அந்த இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கிக் காத்திருந்திருந்து காரியத்தை முடித்துவிட்டார்கள்.
.
சிசிடிவி கேமிராக்களில் புகை மூட்டத்தால் பதிவானவை எதுவும் தெளிவாக இல்லை. . இப்போது பிரான்ஸ் முழுவதும் 30000 போலீஸார் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
இப்படி சிறையிலிருந்து தப்பித்திருக்கும் ரொடோய்ன் ஃபெய்ட்.க்கு இப்படி சிறையிலிருந்து தப்புவது இது முதல் முறை இல்லை. வங்கிக் கொள்ளை, நகைக்கடை கொள்ளையென பலகுற்றங்களில்ஈடுபட்டிருக்கும் பெரிய கொள்ளைக்காரனா இவருக்குத் திட்டமிட்டு குற்றங்கள் செய்வதும்ஜெயிலிருந்து அட்டகாசமாகத்தப்பிப்பதும்  வாடிக்கை.

நீண்ட தேடுதலுக்குப்பின் 1990 களில் ஒரு வங்கிகொள்ளைக்காகக் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்தபின் 2010ல். தண்டனைக்காலம் முடிந்தவுடன் “நான் திருந்திவிட்டேன், இனி திருடமாட்டேன் பாவமன்னிப்புக் கேட்டுப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன், சமூக சேவை செய்யப் போகிறேன்” என்றெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.  வெளிவரப்போகும் வரப்போகும் தன் புத்தகத்துக்காகப் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்
.
ஆனால் மீண்டும் அடுத்த வருடமே ஒரு நகைக்கடை கொள்ளையில் பிடிபட்டு புத்தகம் வெளிவரும்முன்னரே உள்ளே போனார்.  அந்தக்கொள்ளையில்  ஒரு போலீஸ்காரரைக் கொன்றதால் 25 வருடத் தண்டனையுடன் 2013 ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

 ஆனால் ஒரே வாரத்தில் அந்தச் சிறையில் அவரைப் பார்க்கவந்தவர்கள் கொடுத்த டிஷ்யூ பேப்பர் பெட்டியிலிருந்த வெடிகுண்டுகளைவெடித்தும்  காவலாளிகளைப்  பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டும் சிறையிலிருந்து தப்பிவிட்டார். வலைவீசித்தேடி 6 வாரத்துக்குள் பிரான்ஸ் போலீஸ்  அவரைத் தேடிக் கண்டுபிடித்தது, மீண்டும் 25 வருடத் தண்டனை கொடுக்கப்பட்டு இந்த அதிபாதுகாப்புச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்துதான் உலக வரலாற்றிலேயே மிக துல்லிமாகத் திட்டமிடப்பட்டு வேகமாகச் செயலாக்கப்பட்டிருக்கும் இந்த சாகசச்செயலினால் இப்போது தப்பியிருக்கிறார்.

கடந்தமுறை விடுதலையாகி வந்தபோது இவர் டி வி பேட்டிகளில் சொன்னது. “நான் அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ், ஹீட் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்த்துத்தான் என் கொள்ளைகளைத் திட்டமிட்டேன். 20 முறை பல மணிநேரம் அந்த படங்களைத் திரும்பத்திரும்பப் பார்த்துத்தான் என்னை வங்கிக்கொள்ளைக்கு தயாரித்துக்கொண்டேன். பாரிஸில் நடந்த உலகப்படவிழாவிற்கு வந்திருந்த ஹீட் என்ற படத்தின் டைரக்டர் மைக்கேல் மான் அவர்களிடமே “நீங்கள் தான் எங்கள் கொள்ளை முயற்சிகளின் டெக்னிகல் டைரக்டர்” என்று நான் சொல்லியிருக்கிறேன்
.
நிகழ்ந்த துணிகரமான சிறை உடைப்பு, வங்கிக்கொள்ளை போன்றவற்றைத்தான் நாங்கள் படமாக எடுக்கிறோம் என்று ஹாலிவுட்காரர்கள் சொல்லுகிறார்கள். . ஆனால் இவர்களின் படத்திலிருந்துதான் நான்  தொழிலைத் திறமையாகச் செய்யக் கற்றேன்  என்கிறார் இந்தக் குற்றவாளி.

உடனடியாக இல்லாவிட்டாலும் கூட அடுத்த கொள்ளை முயற்சியில் நிச்சியம் சிக்கிவிடுவான் என்று நம்பிக்கையுடன் இருக்கும் பிரான்ஸ் போலீஸின் கவலையே வேறு. 
பிடித்துச் சிறையில் அடைத்த பின் இவரை எப்படி தண்டனைக்காலம் வரை  பாதுகாப்பது என்பது தான் அது. 


10/7/18

திறமைகள் ஓய்வதில்லை.



சில தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறார்களோ அதேபோல் சில தமிழக போலீஸ் அதிகாரிகளும் மறக்க முடியாதவர்களாக, மதிக்கப்படுபவர்களாகயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு விஜயகுமார் ஐபிஎஸ்.
பள்ளியில் படிக்கும்போதே ஒரு போலீஸ் அதிகரியாக வேண்டும் என்ற தாகத்துடன் வளர்ந்தவர் விஜயகுமார். காரணம் அவரது தந்தை. மிடுக்கான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான கிருஷ்ண நாயர்தான் அவரது ரோல் மாடல். அதனால் தான் 1975ல் ஆட்சிப்பணிக்கான தேர்வில் ஐஏஎஸ்ஸில் முதல் ரேங்க் பெற்றிருந்த போதும் காக்கியின் மீதிருந்த காதலால் இரண்டாவது இடம் பெற்றிருந்த ஐபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார்.

ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவிவரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். தமிழகப் போலிஸின் 20 ஆண்டு சவலாகயிருந்த வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். 

சில பதவிகள் அதிலிருக்கும் அதிகாரிகளால் பேசப்படும். விஜயகுமார் எந்தப் பதவியிலிருந்தாலும் அதில் தன் அடையாளத்தைப்பதித்தவர். மாவட்டங்களிலிருந்தபோதும் சரி சென்னைக் கமிஷனர்களாகயிருந்த போதும் சரி நிறைய ரவுடிகளை ஒடுக்கியவர். ஒரே வாரத்தில் 1000 பேரை கைது செய்தவர். தமிழகப் போலீஸில் எஃபி அருள். வால்ட்டர் தேவாரத்துக்கு அடுத்தபடியாகத்தமிழக ரவுடிகள்தல்காட்டாமல் இருந்தது இவர்காலத்தில் தான். அதற்காக  7 என்கவுண்டர்களை நடத்தி சர்ச்சைகளுக்கும் உள்ளானவர்
அபோது அவர் சொன்னது

“நான் எனக்குக் கீழ் பணியாற்றுவோரிடம் அடிக்கடி சொல்வது துப்பாக்கி வெறும் பொம்மை அல்ல என்பதைத்தான். ஒரு அரசாங்கம் யாரிடமாவது சும்மா துப்பாக்கியைக் கொடுத்துச் சுடச் சொல்லுமா? காவல் துறையிடம் கொடுத்திருக்கிறது என்றால், ஏன்? மக்களைக் காப்பாற்றுவதற்காக. அப்படிக் காப்பாற்ற நேரும்போது, உன் உயிருக்கு ஆபத்து வந்தால் உன்னைக் காத்துக்கொள்வதற்காக. ஆனால், எதற்கெடுத்தாலும், துப்பாக்கியைத் தூக்குபவனோ, தூக்கச் சொல்பவனோ அல்ல நான். தவிர்க்க முடியாத தருணத்திலேயே அவை வெடிக்கின்றன”
துணிவான இந்த அதிகாரி ராஜிவ் பிரதமாராக இருந்தபோது அவர் பாதுகாப்புகாக உருவாக்கபட்ட ஒரு விசேஷப்படைக்கு தலமைதாங்க நியமிக்கபட்டவர் மீண்டும் தமிழத்டில் ப[ல பதவிகளை வகித்தவந்த  வந்த இவரை மத்திய அரசு அனைத்திந்திய போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்குக்கும்  தேசிய போலீஸ் அகடமியின் தலைவராக நியமித்தது. தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸின் தேசிய தலமைப்பொறுப்பை ஏற்று அதில் பல சிறப்பு பயிற்சி திட்டங்களை உருவாக்கியபின் ஒய்வு பெற்ற இவருக்கு அன்றைய உள் துறை அமைச்சர் திரு சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கினார். அந்தப்பதவியிலிருக்கும்போது விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நின்றார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தபின்னர்  இவரின் திட்டப்படி கொடுக்கபட்ட பதிலடி இன்றும் பேசப்படும் ஒரு விஷயம்.
“ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.” என்று துணிந்து போலீஸ் துறையைப் பற்றி எழுதியிருப்பவர் இவர்.

தன் அரசு ஆலோசகர் பதவிக்காலம் முடிந்த அன்று (கடந்த ஜுன்13ம் தேதி) அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் நாலு வரியில் தன் முக நூல் பக்கத்தில் நன்றியைத்தெரிவித்தபோது விஜயகுமாருக்கு அடுத்த ஒரு வாரத்தில் ஒர் ஆச்சரியம் காத்திருப்பது தெரியாது.

காஷ்மீர மாநில  அரசியல் சதுரங்கத்தில் தவறாகக் காய்கள் நகர்ந்தப்பட்டதின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கபட்டவுடனேயே கவர்னருக்கு ஆலோசகர்களாக நியமிக்கபட்ட அதிகாரிகளில் ஒருவர் விஜயகுமார். திறமையான அதிகாரி என்பது மட்டுமில்லாமல் காஷ்மீரில் எல்லைக்காவல் படை ஐஜியாக இருந்த காலத்தில் இவர் பூட்ஸ் படாத காஷ்மீர் எல்லைப்பகுதி எதுவுமில்லை என்பதும் ஒரு காரணம்
காஷ்மீரத்தில் என்று தணியும் இந்த வன்முறை தாகம் என்று பல இந்தியர்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய, ஆழமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க ஒரு முன்னாள் தமிழகப் போலீஸ் அதிகாரி நியமிக்கபட்டிருப்பது நமக்குப் பெருமை தரும் விஷயம்.


30/6/18

பாரதி : கவிஞனும் காப்புரிமையும் - புத்தக அறிமுகம்

-
 ந்த  இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது


உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதியின் எழுத்துக்குத்தான் கிடைத்தது.

ஆனால் அந்தப்பெருமை அவ்வளவு  எளிதில் கிட்டிவிடவில்லை. இதற்காக நடந்த முயற்சிகள் அதன் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள், ஏமாற்றங்கள், வழக்குகள் அரசு எடுத்த நிலைப்பாடு அனைத்தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை  முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக அருமையாக எழுதியுள்ளார்
.
மகா கவியின் படைப்புகள் நாட்டுடமையானது குறித்து வழங்கி வரும் பலவித கதைகளைக் கேட்ட நமக்கு இவர் துல்லியமான தரவுகளுடன் உண்மை வரலாற்றை விவரிக்கிறார்.
மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகுகுறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது.
 பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பைவிட அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில்தான் பல மடங்காக உயர்ந்தது அதனால் அச்சிட்ட புத்தகங்கள் அதிகம் வரத்துவங்கியது. அப்படி பதிபிக்கபட்ட பாரதியின் படைப்புகள் பொதூடமையாக்கப் படுவதற்கான் தேவை எப்படி எழுந்தது என்பதை நிகழ்வுகளின் காலபோக்கோடு விவரிக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில் தரவுகளாகச் சுட்டிகாட்டபடும் ஆவணங்களும், கடிதங்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன
.
மஹாகவியின் மனைவி அவரது மகளின் திருமணத்துக்காக அவரது படைப்புகளின் உரிமையை அடகு வைத்திருக்கிறார். அதுவும் யாரிடம் தெரியுமா?. கவிஞரின் தம்பி விஸ்வநாதய்யரிடம். . இதைவிட அதிர்ச்சியான செய்தி அந்தக் கடன் திருப்பிச் செலுத்தபடாததால் உரிமை அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.
 அவர் பாரதி பிசுரலாயம் என்ற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் 1928ல் அன்றை அரசு பாரதி நூல்களுக்குத் தடை விதிக்கிறது. விற்பனையைப் பாதிக்கிறது. காங்கிரஸ்காரர்களின் போரட்டங்களுக்குபின் தடைவிலக்கப்படுகிறது. புத்தகங்கள் பரபரப்புடன் விற்க துவங்கின. இந்தக் கட்டத்தில் ஒரு குழுவினர் பாரதியின் படைப்புக:ள் ஏன் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டும் அதை அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் மெல்ல பாரதிக்கு விடுதலை என்ற அமைப்பாக உருவாகிறது. எழுத்தாளர்கள் மாநாடு, பாரதி மணிமண்டப விழா போன்ற மேடைகளில். விவாதிக்கபடுகிறது மக்களிடம் அந்தக் குழுவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.

இதே காலகட்டத்தில் எழுந்த ஒரு வழக்கு பாரதியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது. பாரதியின் பாடல்களை இசைதட்டாக்கும் உரிமையை 1934 ஆம் ஆண்டு விஸ்வநாத அய்யர் ஒரு நிறுவனத்துக்கு விற்றிருந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளார் ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கியிருந்தார்
.
டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலைத் திரைப்படத்தில் இணைத்திருந்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார். தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பல ஆண்டுகளாகப் பாரதியின் பாடல்களைத் தன் நாடகத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்த டிகே சண்முகம் வழக்கை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தப் புத்தகத்தில் விவரிக்கபட்டிருக்கும் அந்த வழக்கில் ஏற்பட்ட ஒரு திருப்பம் பலர் அறியாதது.
ஒரு புறம் மக்களின் கிளர்சி மறுபுறம் ஒரு வழக்கு என்பதால் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது எடுத்த முடிவுதான் பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்குவது. எந்த முன் மாதிரியும் இல்லாத, உலகில் எந்த அரசும் செய்யாத விஷயம் ஒரு படைப்பாளியின் உரிமையை அரசு வாங்குவது என்பது நிகழ்ந்தது. பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக கல்வி அமைச்சர்  அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

இதுவரை நிகழ்ந்தையும், மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் 8 ஆண்டுகளுக்குப் பின்னரே !  பாரதியின் எழுத்துகள் அவன் விரும்பியபடி  தீப்பெட்டி, மண்ணெண்யை விட மலிவாகக் கிடைத்தது என்பதைச் சொல்லும் அரிய ஆவணம் இந்தப் புத்தகம்.



19/6/18

நிஜ நாயகன் நிழல் வில்லன்





இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையைச் சீரழித்த பெருமழை வெள்ளத்துக்கு சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு. “உங்கள் பகுதியிலிருந்து உதவி கேட்டு ஒர் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சென்று பார்த்து உண்மையாக இருந்தால் நீங்கள் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனம்மூலம் உதவுங்கள். ஆகும் செலவை நான் நன்கொடையாகத்தருகிறேன்.” நண்பருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் போனில் பேசியவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானாபடேகர். நண்பருக்குச் சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஷேர் டாக்சி பயணத்தில் கிடைத்த அறிமுகம் தொடர்ந்து நட்பாக மலர்ந்திருந்திருந்தது.
உதவியைக்கோரிய அந்த வேண்டுகோள் உண்மையானது என்பதால் நண்பரின் குழு அந்தப் பணியைச் செய்கிறது. செலவிடபட்ட கணிசமான பணத்தை விடக் கூடுதலாகவே தன் நன்கொடையை இந்த விஷயம் மீடியாவுக்கு போக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அனுப்புகிறார் நானா படேகர்.
இந்திய சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வருவாயில் பெரும் பகுதியை(70%) எந்த ஆர்பாட்டமும் இல்லமல் நன்கொடையாக வழங்கிக்கொண்டிருப்பவர் நானா படேகர் மட்டும் தான்

எந்த இந்திய மொழிப் படமானாலும் ஹீரோவைவிட வலிமையானவராகப் படைக்கப்பட்ட வில்லனுடன் போராடி ஹீரோ ஜெயிக்கும் படங்களில் அந்த வில்லன் தன் நடிப்பால் மக்களின் மனதில் தனியிடம் பிடித்துவிடுவார். அவரது நெகட்டிவ் கேரக்டர் கொண்டாடப்படும் அளவுக்குப் பேசப்படும். படம் ஹிட்டாவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்துவிடுவார். ரசிகர்களால் போற்றப்படுவார்.
இன்றைய சூப்பர் ஹிட்டான ரஜனியின் “காலா” வில் வில்லானக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானாபடேகர் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். ஏராளமான பாலிவுட் படங்களில் ஹிரோவாக, வில்லனாக, மட்டுமில்லாமல் முக்கியப்பாத்திரங்களிலும் நடித்துத் தனியிடத்தைப்பிடித்து தக்க வைத்துகொண்டிருப்பவர்

“உணர்வுகளை வெறும் வசன்ங்களில் கொண்டுவர முடியாது. முக அசைவு, உடல்மொழியில் தான் அவற்றை வெளிகாட்டும் கலைஞதான் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்” என்று சொல்லும் நானா மராத்தி, இந்தி, கன்னடம், தமிழ் எனத் தனது நடிப்பின் எல்லயை உலகிற்கு புரிய வைத்து., இதுவரை 3 தேசிய விருதுகளையும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
சினிமாவிற்காக நானாவான விஷ்வநாத் படேகர் கடந்து வந்தது மிகக்கடுமையான பாதை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திறந்தாலும் பள்ளிப்பருவம் அவருக்கு இனிமையானதாக அமைய வில்லை. தந்தையின் துணிவியாபாரத்தில் அவரது பார்ட்னர் ஏமாற்றியதால் ஒரே இரவில் ஏழையாகிப் போனது அவரது குடும்பம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துகாகப் பகுதி நேர வேலை செய்து பள்ளிக்குப் போனவர்.அப்போது செய்த வேலை சினிமா போஸ்டர் ஒட்டுவது. அதிலிருந்து எழுந்தது தான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் வெறி எல்லாம். ஆனால் பாலிவுட் இவரை உடனே ஏற்க வில்லை. உயரம், கருப்புநிறம். முகம் எடுப்பாகயில்லை.ஹிந்தி உச்சரிப்பில் அதிக மாராட்டிய வாசனை போன்ற பல காரணங்கள் சொல்லி நிராகரிக்கப் பட்டவர். பின்னாளில். இது அனைத்துமே இவரது தனித்துவமாகப் பாரட்டப்பட்டது வேறு விஷயம்
.
தனக்குப் பிடித்த ஒவியத்தில் பட்டம் பெற ஜே ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். ஆனால் தொடர்ந்து படிக்கப் பணமில்லை.மாரத்தி நாடகங்களில் நடித்துக்கொண்டே
சினிமா வாய்ப்புடன் வேலையையும் தேடிக்கொண்டிருந்தார். உனக்கு என்ன தெரியும்? எனக் கேட்டவரிடம் தன் ஓவியத்திறமை நம்பி ““பெயின்ட்டர்” (டிராயிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லதெரியாதால்) என்ற சொன்னவருக்குக் கிடைத்த வேலை ரோடுகளில் மக்கள் கடக்கும் போடுகளை பெயிண்டால் போடும் வேலை.
70களின் பிற்பகுதியில் நானா படேகர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பில் தன் திறமையை நிருபித்ததால் கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் தன் இடத்தைப் பிடிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்ற ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர்.
.
அதிக அளவில் பணமும் புகழும் சேர்ந்தாலும் மிக எளிமையான வாழ்க்கைமேற்கொண்டவர். கோடிகளில் சம்பாதித்தாலும் தன் அம்மாவுடன் ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட்டில் வசிப்பவர். தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும் மறக்காமல் கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர். அவ்வப்போது பலருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த இந்த மனிதரின் இந்தக் கருணை முகம் பெரிய அளவில் வெளிப்பட்டது சில வருடங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தபோது தான். விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டபோது தான். நானாப்டேகர் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்த அதிர்ந்து போனார். உடனடியாகத் தன் சொந்தப்பணத்திலிருந்து இறந்த 62 விவசாயிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15000 ரூபாய் அன்றே கொடுத்தார்.


"தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் உடனே என்னை அழையுங்கள்.... உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்...... உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள்...... நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து"
விவசாயிகளுக்கு மத்தியில் அன்று பேசிய நானா படேகர் கூறிய வார்த்தைகள் இவை. இதை வெறும் மேடைப்பேச்சாக இல்லாமல் இதற்கான பணிகளைத் தொடர்ந்து இதைச் சிறப்பாகசெய்ய “ நாம் என்ற அமைப்பை உருவாக்கி நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துவக்க நாளிலே கிடைத்த பணம் 80 லட்சம். சில நாட்களில் சில கோடிகளைத்தொட்டது. இன்று அந்த அறக்கட்டளை கிராமங்களில் விவசாயிகளுக்கு வேலை, குளங்கள் தூர் வாருதல் போன்ற பல சமூகப்பணிகளை சிறப்பாகச் செய்கிறது. பல நேரங்களில் நானாவே நேரடியாகக் கிராம சபை கூட்டங்களில் குறைகள் கேட்டு உதவிகளைத் திட்டமிடுகிறார்
.
விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் விதவைகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகிறார். இன்று மஹராஷ்டிர கிராமங்களில் அரசியல் வாதிகளைவிட பிரபலமான இவர் ஒரு கட்சி துவங்கி அரசியிலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
தான் செய்யும் எந்தப்பணியையும் அரப்பணிப்புடன் செய்பவர். நானா படேகர். அவரே எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே இரண்டு ஆண்டுகள்வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார். இந்திய ராணுவத்தை சிறப்பாகக் காட்ட இப்படி இவர் செய்த நல்ல பணிக்காக இந்திய ராணுவத்தின் கெளரவ கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமாத்துறையைச் சாரத நணபர்கள் பலர் இவருக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள்மூலம் பலருக்கு சத்தம் இல்லாமல் நிதியுதவிகளைச் செய்து வரும் நானா படேகர், இதுகுறித்து தனது பேட்டிகளில் கூடப் பதிலளிக்க மறுத்துவிடுவார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனதில் பட்டதை பட்டென்று வெளிப்படையாகப் பேசும் இவர் அதனால் கோபக்காரர் என்ற பெயரையும் பெற்றவர். அரசியல் வாதிகளையும், சிவ சேனா போன்ற அமைப்புகளையும் கூடக் கடுமையாக விமர்சனம் செய்தவர். பாஜகா பிரமுகர்கள் இருந்த கூட்டத்திலேயே நம் நாட்டில் ஜனநாயகம் வளர்ந்திருப்பதிற்பதற்கு காங்கிரஸ் காரணம் என்று சொன்னவர்.
993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு சர்ச்சைக்குரிய முறையில் பரோல் வழங்கப்பட்டபோது இம்மாதிரி செய்வது தவறு என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் இவர்தான்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் வரவேற்றபோது, "ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது... அவரின் குணத்திற்கு அரசியல் அவர் புகழை இழக்க வைத்து விடும்" என்று சொன்னவர் நானா படேகர். காலாவில் வில்லன் ரோலை ஏற்க தயங்கிய அவரை ரஜினி சந்தித்து ஊக்குவித்து அதை ஏற்க செய்த நேரம் அது.

எழுத்தாளர், இயக்குனர், கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட கலைஞர் நானா படேகர். மொழி என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு தன் பயணத்தைத் தொடங்கிநடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பெயருடன் மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எட்டியதில்லை
.
படத்தில் ஹீரோவாக வாழும் பலர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பல படங்களில்,வில்லனாகவே முன்னிறுத்தபட்டிருக்கும் நானா படேகர் நிஜத்தில் ஹீரோவாகவே பல குடும்பங்களைக் காப்பற்றி வருவது ஒர் ஆச்சரியமான உண்மை




12/6/18

சோழனைக் காப்பாற்றிய வேல்

10 நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு கட்டிட கலைக்குச் சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அண்மைகால அரசியல் வாதிகளின் “அரசியல்”, போன்ற பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கும் இந்தத் தஞ்சை பெரிய கோவில் அண்மையில் சந்திருக்கும் ஆச்சரியம் அங்கிருந்து மாயமாக மறைந்த மன்னர் ராஜராஜன், மற்றும் அரயின் ஐம்பொன் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் நிறுவபட இருப்பது தான்.


பல தமிழக கோவில்களில் அது உருவாகக் காரணமான மன்னர் பரம்பரையினர், எழுப்பிய சிற்பிகள் போன்ற விபரங்களைப் பார்க்க முடியாது. மாறாகத் தஞ்சைப் பெரிய கோவிலில் அதைத் திட்டமிட்ட பொறியாளார். தலமைச் சிற்பி, பலதுறைகளில் உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகக்  கோவிலிலேயே இருக்கிறது.

உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார்அதிகாரி. இந்தக் தகவல்களை அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு சொல்லுகிறது.

எப்போது இந்தச் சிலைகள் காணமல் போனது தெரிந்தது.?

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து கடத்தப்பட்டு புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை கூட என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள்.

.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜராஜன் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காகப் பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையைக் கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன். அப்ப்போது தெரிந்த விஷயம் தான் ஒரிஜனல் ராஜராஜனும் ராணியும் காணாமல் போய்விட்டார்கள் என்ற விஷயம். இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி இந்த ஐம்பொன் சிலைகள் தான் 50 ஆண்டுகளிக்கு முன்னரே காணமல் போயிருக்கிறது



அரசனும் அரசியும் எங்கே போனார்கள்?

அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்ட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகளில் இந்த ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் இருக்கிறது என்ற செய்தி கசிந்தது. அது உண்மையானதுதானா என்ற விவாதமும் எழுந்தது. அந்த நிலையில் டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், அவர் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள்குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தினார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள்பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் முனைவர் தொல்ப்ருள் அறிஞர் நாகஸ்வாமி

மீட்கும் முயற்சிகள்



இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ராஜராஜனை மீட்டுவர அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பிரதமர் இந்திரா மூலம் முயற்சி எடுத்தார். ஆனாலும்  சொல்லதக்க முன்னேற்றம் எதுவுமில்லை

.

தொடர்ந்து இந்தச் சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல்வர் இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையைத் தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினர். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அருங்காட்சியம் அசைய வில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டது.

ஆச்ரியப்படுத்திய ஒர் ஆவணம்

.

அவர்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது ஒரு முக்கியமான காரணம் இது ராஜராஜனின் சிலை என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது தான். அதற்கு அவர்களிடமிருக்கும் வலுவான சாட்சியம். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் சிலைகளுக்கென்று அவற்றின் வரலாற்றைச் சொல்லும் கேட்லாக். அதில் அது ராஜாராஜின் சிலை இல்லை என்று பதிவு செய்யபட்டிருந்தது.தான். ஒரு தனியார் கேட்லாக்கில் சொல்லபட்டிருப்பதால் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் எழுந்தது ஒர் அதிர்சியான ஆச்சரியம். ஒரு சர்வ தேச் கூட்டத்தில் வாசித்தளித்த ஒரு பேப்பரில் அந்தச் சிலை ராஜராஜன் தான் என்று சொன்ன திரு நாகஸ்வாமி தான் அந்தக் கேட்லாக்கை தயாரித்தவர். ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? என்பது இன்றுவரை புரியா மர்மங்களில் ஒன்று. தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்றுநிருபிக்கபட்டால் மட்டுமே சிலையைத் தர முடியும் என்று சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பியது குழு

.

கால வெள்ளத்தில் மக்களும் அரசும் மறந்துபோன் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகக் கரைந்து போயிற்று. மன்னர் ராஜராஜன் தன் மனைவியுடன் அந்த ஆருங்காட்சியகதிடின் கண்ணாடிச் சிறைக்குள்ளேயே காலத்தைக் கழித்துகொண்டிருந்தார்.

கைகொடுக்காத தீர்ப்பு

இந்த நிலையில் தான்,தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன். மனுவை விசாரித்தனர். இறுதியில் நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை நீதிமன்றம் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு உத்திரவிட முடியாது.மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். என்று  மனுவைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

.தமிழக அரசு நீதிமன்ற ஆணைப்படி காணமல்போனாதாக்ச்சொல்லப்படும் சிலைகளைக் கண்டுபிடிக்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்திரவிட்ட்து., அவர் அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்த நியமித்தார். அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தச்சிலைகளை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாகச் சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.

அதிரடி  மீட்பு

உடனே செயலில் இறங்கினார் பொன்மாணிக்கவேல். கிராமங்களுக்குத் தானே நேரில் சென்று இந்தச்சிலைகளை நேரில் பார்த்தவர்களை தேடினார். இரண்டு 80 பிளஸ் பெரியவர்கள் கோவிலில் சிலைகளைப் பார்த்தவர். அவர்களில் ஒருவர் கோவில் பணியா

ற்றியவர். கல்வெட்டுகளில பழந்தமிழர் கணக்குமுறையில் சொல்லப்ட்ட உயர, பீடங்களின் அளவுகளை இன்றைய சென்டிமீட்டரில் கணக்கிட்டபோது அது சிலைகளின் அளவோடு பொருந்திப் போயிருந்தது.

கோவிலில் இருந்தது, திருடபட்டது, விற்கபட்டது, கல்வெட்டு சொல்லும் விபரங்களுடனும் தன் டீமுடனும் அஹமதாபாத் பறந்த ஐஜி அருங்காட்சிய அதிகாரிகளிடம் இந்த விபரங்களுக்குபின்னர்சிலை திருப்பித் தரப்படவிட்டால் தமிழக அரசுக்குச் சொந்தமான அவற்றை பறிமுதல் செய்வேன் என்றார். அதிர்ந்துபோன அருங்காட்சியகத்தினர் சிலைகளை கொடுக்கச் சம்மதித்தினர். உடனே அவைகளை

தம்முடன் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தார். இவர் ரயில் பாதுகாப்பு ஐஜியாகவும் இருந்த்தால் வழக்கமான தாமதங்கள் அனைத்தும் தவிர்க்கப் பட்டன. தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்டார். சென்னையில் மேள்தாளத்துடன் வரவேற்கபட்டசோழ மன்னரைச் சிதம்பரம் கோவிலில் பூஜித்தபின்னர் கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொல்வது “இனி காவிரியில் தண்ணீர் வந்துவிடும்”

இந்தச் சிலைகள் மீட்பை உலகின் பல பகுதிகளிலிருக்கு தமிழ் ஆர்வல்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

துணிவுடன் அதிரடி முடிவுகளை எடுத்து அதை செம்மையாகச் செயலபடுத்தும் பொன்மாணிக்கம் போன்ற அதிகாரிகளைத் தமிழகம் பெற்றிருப்பதற்காகப் பெருமயை அடைந்தாலும், தாங்கள் பதுகாக்கவேண்டிய அரிய  செல்வங்களை காசுக்காக  விற்ற அதிகாரிகளை நினைத்து வருத்தமும் வேதனையும் எழுவதைத் தவிர்க்க இயலவில்ல.



_______





தெய்வங்களைக் காக்க நீதி மன்றம் நியமித்த காவலர்

தூங்கிக்கொண்டிருக்கும் சில அரசுத்துறைகள் தலமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழித்துக்கொண்டு பபரபுடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும். அப்படியான ஒன்றுதான் தமிழகப்போலீசின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் நடந்துகொண்டிருக்கிறது. வேறுபல மாநிலங்களில் இல்லாத இந்தப் பிரிவின் தலமைப் பதவி ஆளுவோரால் ஓரங்கட்டபட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கபட்டது. திரு பொன்மாணிக்க வேல் தன் திறமையான, கண்டிப்பான அதிகாரியாகப் பெயர் எடுத்தவர், படிப்படியாக உயர்ந்து ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற இவருக்குத் தரப்பட்ட போஸ்டிங் சிலகடத்தல் தடுப்பு பிரிவின் தலமை
.
செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் பொன் மாணிக்க வேல் பதவி ஏற்றுக்கொண்டவுடனேயே தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த பைல்களை தேடி ஆராய ஆரம்பித்தார். . இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை
.
சென்னையில் தீனதயாளன் என்ற முதியவர் சர்வ தேச கடத்தல் மன்னன் கபூருக்கு உதவியர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக போலீஸ் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளைச் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று டிஜிபி உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னவுடன் நீதிபதி மிக் கோபமாக
நீதி மன்றம் 531 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கபட்டார்
.
இது இவர்மீது நீதி மன்றம் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காட்டுகிறது. அண்மையில் இவர் வெளிக்கொண்டுவந்த பழனி ஆண்டவர் கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யபட்ட அரசியல் பின்புலம் கொண்ட ஒரு முன்னாள் அறநிலைத்துறை துணை ஆணயர் ஜாமின் மனு வழக்கில் தானே நேரில் ஆஜாராகி ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? என்று நீதிபதியிடம் விளக்கினார்.
(புதிய தலைமுறையில் எழுதியது)