21/3/19

பேசும் கட்டிடமும் பேசாத படங்களும்.....



 

ஒரு பெரிய அரங்கத்தில் அழகாக வரிசையாகப் பலவிதமான படங்களுடன் நடைபெறும் புகைப்பட கண்காட்சிகளை  நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் ஒரேசமயத்தில்  நகரின் பல இடங்களிலுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் பிரமாண்ட அரங்கங்களில் வெவ்வேறு தலைப்புகளில் இந்தியாவின், உலகின்  பிரபல புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கப்பட்டால் எப்படியிருக்கும்?





அதைத்தான் செய்திருக்கிறார்கள் சென்னை போட்டோ பைனியல் (Chennai Photo biennial)  என்ற அமைப்பினர்.  2016 ஆண்டு ஆண்டு முதல் காட்சியை நடத்திய இவர்கள்  இப்போது இரண்டாவது காட்சியை மிகப்பெரிய அளவில்  நடத்துகிறார்கள். சென்னையின் கலைக்கல்லூரி,  அருங்காட்சியகம்,பல்கலைக்கழக வளாகம்,  எழும்பூர் ரயில்  நிலையம் போன்ற  12 இடங்களில் 20க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
       
 ஒவ்வொரு இடத்திலும் சில கலைஞர்களின் படைப்புகளை வெறும் படக்காட்சிகளாக வைக்காமல் ஒரு தலைப்பின் கீழ் பெரிய அளவுகளில் அமைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடைபெறப்போகும் இந்த கண்காட்சிகளில் தினசரி பேச்சரங்கம், பயிலரங்கம், குறும்படங்கள்  என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்களையும் ,அறிவிப்புகளையும்  செய்வதில் கூட அடேஎன்று திரும்பிப்பார்க்கவைக்கிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் பலகலைக்கழக வளாகத்திலிருக்கும் செனட் ஹவுஸ்  என்ற பாரம்பரிய கட்டிடமும் இந்த கண்காட்சி நடைபெறும் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. புகைப்பட காட்சியைப் பார்க்கப் போன நாம் அந்த கட்டிட அழகில் பிரமித்து நிற்கிறோம். 140 வருடங்களுக்கு முன் எப்பட்ட அந்த கட்டிடத்தின்  ஒவ்வொரு அங்குலத்திலும் கலை நயம் மிளிர்கிறது. 19 நூற்றாண்டில் இந்தியாவின் பல பகுதிகளில் கட்டப்பட்ட இந்தோ சாராசெனிக்  (Indo-Saracenic)    பாணி அரசு கட்டிடங்களில் ஒன்றான இதன் கம்பீரமும், அழகும் அசத்துகிறது.     கட்டிடத்துக்கான வடிவமைப்பை வரவேற்று அரசின் வெளியிட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வடிவமைப்பை அனுப்பியவர்  ராபர்ட் ஸிஷோம்(Robert Chisholm)  என்றும் ஆன்கிலேயர் எனப்தும்  அப்போது அவருக்கு வயது 21தான் என்ற செய்தி கட்டிடத்தின்மீது நமக்கு எழுந்திருக்கும் பிரமிப்பை அதிகமாக்குகிறது. பட்டமளிப்பு விழாக்களுக்காக நிறுவப்பட்டு  பராமரிப்பு இல்லாமல் பல்கலைக்கழகத்தின்  ஒரு கோடோவுனாக பயன் படுத்தப்பட்ட இந்த கட்டிடம் பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. (உள்ளே கொஸ்டின் பேப்பர்கள் இருக்கும் என்ற கிசுகிசு வேறு) அண்மையில் சீரமைக்க பட்டதாகச் செய்திகள் வந்த போதிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றது அறிவிப்பு.  இந்த கண்காட்சி நடத்துபவர்களின் புண்ணியத்தில்  கண்காட்சியுடன் ஒரு கலையம்சம் மிகுந்த ஒரு  கட்டிடத்தைப் பார்க்க முடிந்தது.




150 அடி நீளத்தில் 60 அடி அகலத்தில் 50 அடி உயரமும் உள்ள தரைதளத்தில்  நுழைந்தவுடன் வாவ்! எனச்சொல்லவைக்கிறதும் சுற்றுச் சுவர்களில் அமைக்கப்பட்டிருக்கும் வட்டமான வண்ண பூக்கண்ணாடிகள். பிரமாண்டமான கண்ணாடிக்கதவுகளுடனிருக்கும் வாயில்கள்.  அதன் வழியே தெரியும் பசுமை , பெரிய, வண்ண  மலர்கள் நிறைந்த மேற்கூரை.
 
 இரண்டு வாயில்களுக்கிடையே இருக்கும் ஓவியங்கள்,  சின்ன், சின்ன தேக்கு மரப்பாளாங்களாலான தரை,  கருங்காலி மரத்தாலான பூ வேலைகள் நிறைந்த மேடையின் முகப்பு. என அசத்துகிறது. திறந்திருக்கும் கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி சரளங்களின் வழியே நுழைந்து பரந்து விழும்  உறுத்தாத வெளிச்சம்  உள்ளே  வந்த நம்மைத்தொட்டுச் செல்லும் கடற்காற்று  நம்மை வேறு உலகத்தில் நிறுத்துகிறது.


அந்த அரங்கம் முழுவதையும்  புகைப்படங்களால் நிரப்பாமல். நடுவில் மட்டும்,  கடல் அலைகளைக் காட்டும் பிரமாண்டமான படச்சுவர்களுடன்,  ஒரு அறையை  ஒரு ஆணிகூட அடிக்காமல் உருவாக்கியிருக்கிறார்கள்.  வெளியே போகும் பாதையைச் சற்று யோசித்து  கண்டுபிடிக்கவேண்டிய புதிரின்(maze)   பாணியில்அமைந்திருக்கும் அந்த படக்காட்சியில் பெரிய அளவில் சென்னை மீனவர்களின் வாழ்க்கைப் படங்கள். கட்டுமரங்களின்  வண்ணமயமான முகப்புகள்,  நீண்டு தொங்கும் மீன்பிடி வலைகள். மணலில் கிடக்கும் ஒற்றை சங்கு,   வண்ணக் கோலமிடப்பட்ட மீனவர்களின் வீடுகளின் முகப்பு என வண்ணமயமாக இருக்கிறது. இந்த அழகான காட்சிகள் நம் கண்ணில் மட்டும் ஏன் படவில்லை? என்ற எண்ணமும் எழுகிறது. இந்தப்படங்கள்  ஜெர்மனி,  பங்களாதேஷ்  பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் புகைப்பட கலைஞர்களின் படைப்புகளின் தொகுப்பு. இவர்கள் அனைவரையுமே  சென்னை மெரினா கடற்கரையின் மீனவர்கள் ஈர்த்திருக்கிறார்கள்.



இதனருகில்  மிக விலையுயர்ந்த. அரிய    புத்தகங்களையும்  நன்கு அமர்ந்து படிக்கும் வசதியுடன்  வைத்திருக்கிறார்கள். புகைப்படக்கலையை  நேசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள்  பொக்கிஷம் .நாள்முழுவதும் உட்கார்ந்து  பார்க்கலாம், படிக்கலாம்.    .புத்தகங்கள் பாழாகிவிடக்கூடாது என்று புரட்டிப்பார்க்கக் கையுறை அணியச்சொல்லிக் கொடுக்கிறார்கள்.



அரங்கத்தின் இறுதியில் அரைவட்ட மேடை அதன் மேல்முகப்பின்  அழகிய மரவேலைப்பாடு  நம்மை நிறுத்துகிறது. வந்திருப்பது  புகைப்பட கண்காட்சிக்கு என்பது  நினைவுக்கு வரவே அங்கு  பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு பாரசீக கம்பளத்தின்  படத்தைப் பார்க்கிறோம்.

 அருகிலிருக்கும் குறிப்பு நம்மை அதிர வைக்கிறது.  கம்பளத்தின் வடிவத்திலிருந்தாலும் அது பல ஆயிரக்கணக்கான சின்னசின்ன  அரைஅங்குல சதுர படங்களால் நிரம்பியிருக்கும் ஒரு கலவைப்படம்.(கொலாஜ்) அந்த சதுரங்களிலிருப்பவை  பலவகைகளில் வதைக்கபட்ட மிருகங்கள்.  கம்பளத்தில் தெரியும் பல வித சிவப்பு  வண்ணம் அவற்றின் ரத்தத்தின் குறியீடு என்கிறது அந்த குறிப்பு.  படங்களை அருகில் சென்று  உற்றுப் பார்த்தால் பயங்கரம் புரிகிறது. (பெரிதாக்கப்பட்ட படத்தைப் பாருங்கள்)  இந்த படங்களை  எடுத்தவர் ரஷித் ராண என்ற பாகிஸ்தானியக் கலைஞர்.




அங்கு  நீண்ட நாள் வாழ்ந்த வவ்வால்களின் வாசனை இன்னமும் நிறைந்திருக்கும் வளைந்த மாடிப்படிகளின் வழியே மேற்தளத்தை அடைகிறோம். அங்கும் பிரம்மாண்டமான கண்ணாடி சரளங்களின் வழியே இதமான வெளிச்சமும் சுகமான கடல் காற்றும். அந்தத் தளம் முழுவதும்  நீண்டிருக்கும் ஒரு  மேஜையில் இந்து நாளிதழின் போட்டோ   காப்பகத்தினரின்  தேர்ந்தெடுக்கபட்ட படங்களின்  தொகுப்பு.  வெறும்  படங்களாகயில்லாமல் சிறிய அளவில் கடவுட்கள் போலச் செய்து நிறுத்தியிருக்கிறார்கள். பலவித அரசியல், சமூக நிகழ்வுகளின்  சாட்சிகளாகியிருக்கும்   இந்த படங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுபோல அமைத்திருப்பதில் வடிவமைத்தவரின் சாதுரியம்  தெரிகிறது.  உதாரணமாகத் தேர்தல் நேரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த  ராஜிவ் காந்தியின்  கட்வுட்டின் படத்தை தொடர்ந்து  அவர் எப்படி விழுந்து இறந்திருப்பார்  என தடயவியல்  நிபுணர்  விழுந்து காட்டி விளக்கும் படம். இப்படி  அடுத்தடுத்து சுவாரஸ்யம் தரும் வகையில் படங்களை ஒரு மெல்லிய  இழையில் கோர்த்திருக்கிறார்கள். . பிரமாண்டமாக நிறுவப்பட்டு சுழல்காற்றில் விழுந்தவிட்ட  ஜெயலலிதாவின் கட்வுட்டை உடனடியாக  சரியாக்கப் போராடும் தொழிலாளர்களின் பணியைச்சொல்லும்  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்குத்    திறந்திருக்கும் ஜன்னல் வழியே  எதிரே கடற்கரையில்  ஜெயலலிதா  அமைத்த புரட்சித்தலைவரின்  நினைவிடமும் (பறக்கும் குதிரை)  தற்செயலாக கண்ணில் படுகிறது.




மீண்டும் கீழிறங்கி அரங்கத்தின் மறு முனையிலிருக்கும் மாடிக்குச்செல்கிறோம். நுழைவாயிலின் முகப்பின் கூரையிலிருந்து  இரண்டு புறமும் அழகாக விரிந்து வழியும்,   பூ வேலைப்பாடுகளுடான  படிகள். நுழைவு தளத்தில்  அறைக்காகப் பகுக்கப்பட்டிருக்கும்  மரதடுப்புகளில்  கூட கலைநயம்.  . கட்டபட்டகாலத்தில் வரும் விருந்தினர்கள்  தங்கள் மழைக்கோட்டுகளை, குடைகளை வைக்கத்  தகுந்த வகையில் வரிசையான  அமைக்கப்பட்ட உயரமான அலமாரிகளாலனது  அந்த மரச்சுவர்கள்.
  

இந்த கண்காட்சியில் படங்கள் மட்டுமில்லாமல் அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் முறையும் நம்மைக் கவர்கிறது.  எட்டு செங்கற்களால்  அடுக்கப்பட்ட  சிறு மேடைகள். அதன்மீது துணியில் பரப்பப்பட்டிருக்கும் வெண் மணலில் விரிந்து கிடக்கும் புத்தகத்தைப் போல நிற்கும் புத்தகம் படிக்க உதவும்  ஸ்டாண்டுகள் அந்த அறையில் அணிவகுத்து நிற்கின்றன.  ஏதோ மதப் பிரார்த்தனைக்கூடம்  போலத்தோன்றினாலும் .  ஒவ்வொரு ஸ்டாண்டிலும் படங்கள் அருகிலேயே  குறிப்புகள்.  படங்களும் அந்தக்  குறிப்புகளும் நம் மென் உணர்வுகளைக் கடுமையாகத் தாக்குகிறது. அனைத்தும் காஷ்மீரத்தின் நிகழ்கால காட்சிகள்.  கோரமான வன்முறை  காட்சிகளாகயில்லாமல்  ஓவ்வொவ்வொன்றும் அந்த மக்களின் மனநிலைகளைப். . வன்முறைகளால்  வாழ்வையிழந்த அந்த மக்களின் சோக முகங்களை   பேசுகிறது.

   என் கணவரும் மகனும் பயங்கரவாதிகள் என தவறாக அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டவர்கள் .இங்குதான்  புதைக்கப் பட்டிருக்கின்றனர். இப்போது எனக்கு  அந்த பயங்கரவாதிகளோ அரசாங்கமோ ஆதரவளிக்கவில்லை.  வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ற குறிப்பின் அருகே சமாதிகளின் அருகில் ஒரு பெண்ணின் படம்.


காஷ்மீரில் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள்.  புரட்சிகாரர்கள் ராணுவத்தை எதிர்க்கிறார்கள். ராணுத்தினர்  புரட்சிக்காரர்கள் என சந்தேகிப்பவர்களை எதிர்க்கிறார்கள். இவர்கள் சண்டையில்  சதாரண  மனிதர்கள் சிக்கி அழிகிறார்கள். உடைமைகளை இழக்கிறார்கள்

 .  குறிப்புக்கு எதிரில் வெடிகுண்டுகளுக்குப் பலியான  கடையின்  முன் அழுது நிற்கும்   அதன் பெண் உரிமையாளர் படம்.  "தூப்பாக்கிகள் நீளும் போது உரையாடல்கள் நின்றுவிடும்" என்று அப்பகுதிக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். காஷ்மீரின் அண்மைக்கால கோரம் நினைவைவிட்டு அகலாத இன்றைய நிலையில் இந்தப் படங்களைப்பார்த்த கனத்த மனத்தோடு, வெளியே வருகிறோம்.


 
அந்த  தாழ்வாரத்தின்  கம்பீரமாகக் கலைநயத்துடன் உயரமாக நிற்கும்   அந்த தாழ்வாரத்தின் தூண்களும், பூக்கோலமிட்ட அந்தச் செம்பழுப்பு கட்டிடத்தின் முன் கோபுரங்களும் நீண்டகாலத்துக்குப் பிற்கு மனிதர்களைக் கண்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிற்பது போலிருந்தது..




20/3/19

பியானோ இசை பிடித்திருக்கிறது இந்த யானைகளுக்கு...


  யானைகளை நேசிக்கும் தேசம் தாய்லாந்து.   அவர்களது பாரம்பரியத்திலும்  கலாச்சாரத்திலும் யானைகளுக்கும்  முக்கிய பங்குண்டு. யானை தாய்லாந்து நாட்டின்  தேசிய மிருகம் மட்டுமில்லை. 8 மாநிலங்களின் அரசு முத்திரைகளிலும்  யானை இடம்பெற்றிருக்கிறது. ஆண்டு தோறும் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் யானைகள் தினம் கொண்டாடுகிறார்கள்.

 உலகின் பல நாடுகளைப்போலத்  தாய்லாந்திலும் காடுகள் அழிந்து நகரங்களாகிக்கொண்டிருப்பதால், 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சத்துக்குமேல் இருந்த இந்த யானைகள் இப்போது  நான்காயிரமாகச்  சுருங்கிவிட்டது...பல நூற்றாண்டுகளாக யானைகளை மரம் இழுப்பது, கட்டுமான பொருட்களைச் சுமப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவதற்காக  வீடுகளில் வளர்க்கப்படும் ஒருமிருகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் இன்றும் சில கிராமங்களில் வீட்டுவாசலில் யானை கட்டிப்போடப்பட்டிருப்பதைப்  பார்க்கலாம். கடந்த 20 ஆண்டுகளாக இந்தநாட்டின்  கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, வேலையுமில்லாமல், வளர்க்கவும் முடியாமல் வயதாகிக்கொண்டிருக்கும் யானைகளை என்ன செய்வது? என்பது தான்.

கால்நடை மருத்துவர்  சாம்ராட்(Dr. Samart,) அவரது மனைவி கூன் ஃபூன் ( Khun Fon) இந்த வயதான யானைகளை பாங்காக் நகரிலிருந்து 30 கீமி தொலைவிலிருக்கும் காஞ்சனாபுரி  வனப்பகுதியில் யானைகள் உலகம்” (Elephant world) நிறுவிப்  பாதுகாக்கிறார்கள். தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயங்கள் தனியார்தொண்டு நிறுவனமாகங்களாக இயங்குபவை. .  ஓரளவு நிதியுடன் அரசு  நிலத்தை ஒதுக்கி தரும். ஆனால் நிர்வாக, பாரமரிப்பு செலவுகளை இந்த அமைப்புகள்தான் செய்து கொள்ளவேண்டும்.   இதற்குப் பெரிய நிறுவனங்கள் நன்கொடைகள் அளிக்கிறார்கள்.யானை  வீட்டில்    வளர்க்க முடியாதவர்களும், வயதான நோயுற்ற  யானைகளை சர்க்கஸ்  நிறுவனங்களும் .  இங்கு அனுப்பிவிடுகிறார்கள். சிலர் அதன் பராமரிப்புக்கு பணமும் கொடுக்கிறார்கள்.
       
பசுமை படர்ந்திருக்கும் மலைச்சரிவுகளுக்கும் சலசலக்கும்  ஒரு சிற்றாற்றுக்கும் இடையிலிருக்குக்கிறது இந்த ரம்மியமான இடம்.   யானைகளுக்கான முதியோர் இல்லமா? என்று கேட்டால் திருமதி  சாம்ராட் வருத்தப்படுகிறார்.   மனிதர்களின் முதியோர் இல்லம் போல   இங்குக் கட்டுப்பாடுகள்,  ஒதுக்கப்பட்ட தனியிடங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு என்றெல்லாம்  இல்லை.  இங்கு அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாகச் சுற்றலாம், விரும்புமிடத்தில் நிற்கலாம் விளையாடலாம். என்கிறார்.  2008ல் இரண்டு யானைகளுடன்  தொடங்கப்பட்ட   இதில் தற்போது 32 யானைகளிருக்கின்றன.  இந்த குடும்பம் ஆண்டுதோறும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

வரவேற்பு கூடத்தில் அங்கிருக்கும் யானைகளின் படத்துடன்   அதன் பெயர், வயது, அங்கு வந்துசேர்ந்த நாள்  அதன் விசேஷ குணம் ஆகிய விவரிக்கப்பட்டிருக்கின்றன. “ நாக் மாயிஎன்ற 88 வயது பெண் யானைதான் இவர்களில் சீனியர். 18 வயதான காந்தா தான் இருப்பதில்  இளையவர்.  யானைகளைப்பார்க்கும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது எனச்சொல்லுகிறார்கள். அதில் முக்கியமானது செல்பி எடுத்துக்கொள்ளாதீர்கள். நமது யானை நண்பர்கள் அதை விரும்பவில்லை”.

மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட  ஒரு நீண்ட மரப்பாலாம்.  அதில் நாம்  நடந்து செல்லும்போது  அதனருகில்  வரும்  யானைகள் நமக்கு ஹலோ சொல்லுகிறது .அந்தப்பாப்பாதையில் யானைகளைப் பார்த்தபடி நாம் நடக்கலாம்.  சில இடங்களில் குழந்தைகள் உட்கார்ந்து  அருகில் வரும் யானைகளைத்தொட்டுப் பார்க்கிறார்கள்.
பாதுகாப்புமாகத் தொடங்கப்பட்ட இது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பேசப்படும்ஒரு  சுற்றுலாத்தலமாகியிருக்கிறது. பாதுகாப்பகத்தின் பணியாளர்கள் தவிரப் பல தன்னார்வலர்களும் டூரிஸ்ட்களுக்கு உதவுகிறார்கள்.  ஒரு நாள், இரண்டு நாள் முகாம்களும் நடத்துகிறார்கள்.
யானை வளர்ப்பு, பராமரிப்பு முறைகளை மாவுத்என்ற ஆறு மாத பயிற்சியும் அளிக்கிறார்கள். பயிற்சிக்கு இந்தோனிஷியா, கம்போடியா, வியட்நாம்  நாடுகளிலிருந்து  வந்திருக்கிறார்கள்.   சில  பல்கலைக்கழக  மாணவர்கள் இங்கு தங்கி யானைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.   குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் வருகிறார்கள். யானைகளுக்குத்தரும் அரிசிச் சாதத்தைச் சமைத்து  பெரிய கவளமாக உருட்டி அதன் நடுவில் பூசனி, வெள்ளரிக்காய்  போன்றவற்றைப் பதித்து,   டைனிங் ஹாலில் வரிசையாக காத்திருக்கும் யானைகளுக்கு வழங்கும் பணியில் இவர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் சமைத்ததைச்  சாப்பிடும் யானைகளைப்பார்த்து இவர்கள் போடும் சந்தோஷ கூச்சல் யானைகளின் பிளிரலை விட அதிகமாகயிருக்கிறது.  
வனத்தில் யானைகள் விரும்பிச் சாப்பிடக்கூடிய புல் வளர்க்கிறார்கள். அதைக் குழந்தைகளே அறுத்து  யானைகளின் அருகில் சென்று  கொடுக்கிறார்கள்.
யானைகள் குளிப்பதற்கென்று ஒரு  சின்ன நீர்த்தேக்கம் இருக்கிறது.  அதில் யானைகளை  குளிப்பாட்டிக்கொண்டு  டூரிஸ்ட்களும் குழந்தைகளும் குளிக்கிறார்கள்.  யானைகளும் அவர்கள் மீது   தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடுகிறது.  
இங்கு வாழும் யானைகளைப்பற்றி அனைத்தும் அறிந்த சாம்ராட்  தம்பதியினரும் இங்கேயே வசிக்கின்றனர். நாள் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து இவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.  அருகிலிருக்கும் ஒரு யானையை காட்டி கடந்த சில நாட்களாக நான்  பெயர் சொல்லிக் கூப்பிட்ட போது இவர் திரும்பிப் பார்க்கவில்லை. காதில் ஏதோ பிரச்சனை என் நினைக்கிறேன். ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்என்கிறார் டாக்டர்  சாம்ராட். பெரிய ஹ்யரிங்அய்ட்  வைப்பாரோ என எண்ணிக்கொள்கிறோம்

இங்கிலாந்த்தைச்சேர்ந்த பால் பார்ட்ன்(PAUL BHARTON) ஒரு புகழ்பெற்ற பியானோ  இசைக்கலைஞர். லண்டன் ராயல்  அக்கடமி ஆப்  ஆர்ட்ஸ்ஸில் பணிபுரிந்துவந்தவர்.  57 வயதாகும் இவர்  தன் பணி ஓய்வுக்குபின் இந்த காஞ்சனா புரியின் அருகிலிருக்கும் கிராமத்தில் வசிக்கிறார்.  அவர் வாரந்தோறும் தன் பியானோவைத் தனது
சிறிய டிரக்கில் கொண்டுவந்து இந்த யானைகளுக்காக  மேற்கத்திய  சாஸ்திரிய இசையை வாசிக்கிறார்.  யானைகள் ரசித்துக் கேட்கின்றன. நான் ஒரு புதிய ராகம் வாசித்தால் மிக கவனமாகக் கேட்கும். ஏற்கனவே வாசித்தாக இருந்தால் தலையை ஆட்டி, ஆட்டி  ரசிக்கும்.  என்கிறார். லாம் டியூன் (lamp Duin)  என்ற பார்வையை இழந்த யானை இவர் வந்தவுடனேயே ஆஜாராகிவிடுமாம். சில யானைகள்  இசையைப்பற்றிக்  கவலைப்படாமல் இவரை கண்டுகொள்ளாமல்  சுற்றிக்கொண்டு போய்விடுமாம். . 
இவர்  வாசிக்கும் போது  பியானோவிற்கு  மிக அருகில் வந்து யானைகள் ரசிப்பதைத்   தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான்  அச்சமாகயிருக்கிறது. பால் பார்ட்டன் தன் இசையில் மட்டுமே  கவனமாகயிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பியானோ வாசிக்கும் போது  தன் பேத்தியையும்  மடியிலிருத்திக் கொண்டு அவரையும்   வாசிக்கச்செய்கிறார்.
 நினைவாற்றல். சொல்வதைப்புரிந்துகொள்ளும் திறன் போல இசையைப் புரிந்துகொள்ளும் திறனும், ராகங்களின் வேறுபாடுகளும்  அவர்களுக்குப் புரிகிறது.  கோபமாக அல்லது சோர்வுற்றிருக்கும்  யானைகளைப்  பால் பியோனா வாசிக்கும் போது கொண்டுபோய் நிறுத்தினால் அமைதியாகி புத்துணர்வு அடைகிறார்கள் என்கிறார்  டாக்டர் சாம்ராட்..
நமது கோவில்களில் சிறை கைதிகள் போல மண்டபங்களில்  அடைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கும், சின்னதம்பி, ஒற்றைக்கொம்பன் போன்ற ரவுடி யானைகளுக்கும் இதுபோல ஒரு இடம் தமிழக வனப்பகுதியிலும்  அமைக்கப்பட்டால் எவ்வளவு  நன்றாகயிருக்கும்.?


18/3/19

சீஸரின் மனைவி ..



இந்திய வான்படை 75 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் , பாரம்பரியத்தையும் கொண்டது.   1932ம் ஆண்டு  அன்று  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்தப்படை . இந்திய  விடுதலைக்குப்  பிறகு  இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமானது.  இன்று  இந்திய வான்படை, 1.70 லட்சம் வீரர்களுடனும்   1,130 போர் விமானங்களுடனும்  1,700 மற்ற பயன்பாட்டு   விமானங்களுடனும்   உலகில் நான்காவது பெரிய வான்படையாகத்  திகழ்கிறது.  நமது  வான் படை வீரர்கள்  பல சாகச சாதனைகள்  செய்து பெருமையை  நிலைநாட்டியவர்கள்.

அண்மையில்  நடந்த ஒரு தாக்குதலில் பாக்கிஸ்தானின் சக்திவாய்ந்த F16  விமானத்தையே  மிராஜ் என்ற விமானத்தின் மூலம் தாக்கி விழ்த்தினதைக்கண்டு  உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. காரணம் மிராஜ் 2000 வகை விமானங்கள் பழையவை. அவற்றை நமது HAL சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்திருந்ததால் அதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பான F16 க்கூட விழ்த்த  முடியும்  என்பதைச்  செய்துகாட்டியது.   மிராஜ் தயாரிப்பாளர்களான இஸ்ரேல்  மட்டுமில்லை  உலகிலுள்ள அனைத்து விமானப்படையினரும் வியந்துபோன விஷயம் இது. (ரபேல் பிரச்சினையில் இந்தHAL க்குதான் நவீன விமானங்களைக் கையாள  போதுமான   கட்டமைப்பு       வசதிகள் இல்லை என்று ஏற்கனவேயிருந்த ஒப்பத்தந்திலிருந்து HAL  கழட்டிவிடப்பட்டு  ரிலயன்ஸ் போன்ற தனியார்நிறுவனங்கள்  சேர்க்கப்பட்டது  என்பது தனிக்கதை)
 ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய விமானப்படை தாக்குதல் பற்றிய விமர்சனங்கள் ,சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.  விமானத் தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தனோவா  அண்மையில்    அறிவித்திருந்தார்.   ஆனால் இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல்  ஆர்.ஜி.கே.கபூர் இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.

இந்தியாவின்  வான்வழித் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரம் என்ன? எவ்வளவு பேர்  கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமலிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், அண்மையில் ‘‘பாகிஸ்தானில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.  பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா இறந்தவர்கள் 200 பேர் என்று ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.  ஆனால்  இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம்  கேட்கப்பட்டபோது  அரசின் வெளி விவகார துறைச்செயலர் பத்திரிகையாளார் கூட்டத்தில் அறிவித்ததுதான்  அரசின்  அதிகாரப்பூர்வமான  கருத்து என்று சொல்லியிருக்கிறார். .(இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை)

இந்த தாக்குதல் அரசியலாக்கப்படுகிறது என்கிறார் ராகுல்காந்தி. தாக்குதல் விவகாரத்தில் விசாரணை தேவை என்கிறார் அகிலேஷ் யாதவ். விமானப்படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்கிறார் மம்தா.. ராணுவம் பொய் சொல்லாது. நம் ராணுவத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள். ஆனால், மத்திய பா.ஜ அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்
இந்திய  எதிர்க்கட்சி தலைவர்களின் இக்கருத்துக்கள் பாகிஸ்தானை மகிழ்ச்சியடைய  வைத்துள்ளன. இதற்காக நம் எதிர்க்கட்சி  தலைவர்கள்  வெட்கி, தலைகுனிய வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி..  ஆக இரண்டு தரப்பும் இதை அரசியலாக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே  இந்த விஷயத்தை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 இலக்குத் தாக்கப்பட்ட விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாவிட்டாலும்., சக்தி  வாய்ந்த அதிதொழில் நுட்பத்துடன் அந்த  இடம் பகலில் அடையாளம் காணப்பட்டு,  அதே இடத்துக்கு தொழில்நுட்ப உதவியுடன் இரவில் தாக்கக்கூடிய   லேசர்  குண்டுகளால்தாக்கப்பட்டிருக்கிறது.  அந்த இடம் ஒரு மதார்ஸா என்ற போர்வையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடம்  என்பதையும்  அங்கு 300 செல்போன்கள் இயங்குவதையும்  கண்டுபிடித்தறிந்து  குறிப்பாக அந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கி,       கட்டிடத்தின்  மேற்பகுதியை துளைத்து     உள்ளே புகுந்து வெடித்து, சேதத்தை ஏற்படுத்தியது"    என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
உலகெங்கும்  இதுபோல்  அதிரடி தாக்குதல் எதாவது நிகழ்ந்தால் உடனடியாக நிகழ்ந்ததற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று ஒரு பயங்கர வாத அமைப்பு அறிவிக்கும். அல்லது அந்த மாதிரி  அமைப்புகளின் இடங்கள் தாக்கப்பட்டால் அதைச்  செய்த அரசின் படைகள்  படங்களுடன் அந்தச் செய்தியை  வெளியிடும். ஆனால் தாக்குதல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட  பாக்கிஸ்தான்  அரசு உயிரிழப்பு, சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.  இறந்தவர்கள் எங்கள் ராணுவம் இல்லை பயங்கரவாதிகள்தான்  என்று சொன்னால் அவர்கள்  பாக்கிஸ்தான் எல்லைக்கு ள்ளிருந்ததை உறுதி செய்வதாகிவிடும் என்பது காரணமாகயிருக்கலாம். இந்த நிலையில்  வெளிநாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதலைக்  கேள்விக்குறியாகியிருப்பது  இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.   
 இந்நிலையில் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பால்கோட் பகுதியின் செயற்கைகோள் எடுத்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள்  அமெரிக்காவின் சான்ஸ்ப்ரான்ஸ்கோவை சேர்ந்த பிளானட் லேப்ஸ் நிறுவனத்தால்  தாக்குதல் நடந்த  6 நாளைக்குப் பின்  எடுக்கப்பட்டவை.  அந்தப் படத்தையும் அதே இடத்தை கடந்த ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு  படத்துடன் ஒப்பீட்டு  அங்குள்ள கட்டிடங்களில்,  வனப்பகுதியில் மரங்களில்கூட எந்த மாறுதலும் இல்லை.  என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது.  தாக்குதலில் குறி தவறியிருக்கலாம் என்கிறார்கள் இந்த வல்லுநர்கள்.
புல்வாமா  தாக்குதலினால் கொதித்தெழுந்த  ஒவ்வொரு குடிமகனும்  இந்த பதிலடி விமானத்தாக்குதலினால்  மகிழ்ந்ததும்,  விமானி அபிநந்தன்  சாகசத்தால்  பெருமிதம் கொண்டதும் நிஜம்.  ஒன்றுவிடாமல் நாட்டிலிருக்கும்  எல்லா மீடியாக்களும்  அரசின் செயலைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தாக்குதலின் விபரங்களை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் கேட்பதை,அவர்கள்  ராணுவத்தைச்  சந்தேகிக்கிறார்கள்  நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பிரதமரும் அவரது  கட்சிக்காரர்களும்  கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘நமது ராணுவத்தின் வலிமையை நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. பிரதமர் கூறுவது போல் மத்திய அரசை  தர்மச்சங்கடப்படுத்தி,  எதிரி  நாட்டுப் படைகள் சந்தோஷப்படும்படியாகவும் நடந்து கொள்ளவும் இல்லை. அதேநேரம், ஒரு நாட்டின் ராணுவம், மற்றொரு நாட்டின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும்போது, அதன் முடிவு என்ன? என்பதை மக்களுக்கு  தெரிவிக்கவேண்டியது அந்த அரசின்  கடமையில்லையா? . என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
உயிர்ச் சேதம் இருப்பின் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனவும், இல்லையேல்,  உயிரிழப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.  அதுதான்  நமது  ஜனநாயகத்துக்கு ஆளும்  பொறுப்பிலுள்ளவர்கள்   அளிக்கும் மரியாதை.

அரசாளுவோருக்கு எவ்வளவு அதிகாரமிருந்தாலும்

 அவர்கள் சீஸரின் மனைவியாகத்தானிருக்க வேண்டும்