11/1/15

DARE TO DREAM



 தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த  பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த  மேனேஜ்மெண்ட் குரு. அவரது வாழ்க்கை கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக ”வெற்றி வெளியே இல்லை” என எழுதியிருந்தேன். அது புத்தக வடிவில் இம்மாதம் 23ம் தேதி வெளியாகிறது.  அதற்கு முன் அதன் ஆங்கிலபதிப்பு நாளை12/1/15ல் மும்பையில் வெளியாகிறது. இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித்  தலைவர்கள் ரத்தன் டாட்டா, ஆதி காத்திரஜ், தீபக்  ப்ரேக்  விழாவில் பங்கேற்கிறார்கள்.(விபரங்கள் அழைப்பில்)
விழா விபரங்களும் படங்களும் அடுத்த பதிவில்


8/1/15

டிராகன் பறக்க ஆரம்பித்துவிட்டது



பழமை,வறுமை, குழப்பம், பெரிய மக்கள் தொகை, முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்னியூசம் எல்லாம் இருந்தும்  பிரம்மாண்ட வளர்ச்சியை சீனா அடைந்திருப்பதின் ரகசியம் என்ன?
தொடர்ந்த வளர்ச்சி என்ற தொலைநோக்குடன் இயங்கும் சீரிய தலமையா?
ஜனநாயகத்தை பலிகொடுத்து அடைந்து கொண்டிருக்கும் செயற்கையான வளர்ச்சியா?
இந்தியா இது போன்ற வளர்ச்சியை திட்டமிட்டு அடையமுடியுமா?
இத்தனை வேகத்தில் பறக்கும் டிராகன் உலகின் முதலிடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தில் நிலைக்குமா? 
அந்த இடத்தில் தன்னை உறுதியாக தக்க வைத்துக்கொள்ளுமா?
இந்த அடுக்கடுக்கான கேள்விகளை ஆராய்கிறது இந்த புத்தகம். 

எனது இந்த புதிய புத்தகத்தை கிழக்கு வெளியிட்டிருக்கிறது பக் 104 
விலை 90.ரு. புத்தக கண்காட்சியில் கிடைக்கும் ஆன்லையனிலும் வாங்கலாம்

3/1/15

புத்தாண்டின் முதல் நாள் காலையில்


புத்தாண்டின் முதல் நாள் காலையில் முதலில் படித்த பதிவு இது. நண்பர் சரவணின் விமர்சனம். ஒரு அருமையான பதிவாக கருதுகிறேன். எழுதியிருப்பதை சொல்லிவிட்டு விடுபட்டிருப்பதை அவர் பார்வையில் பேசியிருக்கிறார். எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது. இந்த புத்தாண்டுதினத்தில் அந்த சந்தோஷத்தை கொடுத்த நண்பர் சரவணுக்கு நன்றி.





பூ.கொ. சரவணன்
நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :
தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.
பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.
சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.
இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,
முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.
சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.
அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.
சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115
புத்தகத்தை வாங்க http://www.wecanshopping.com
---------------------------------------------------------------------------------------------------
இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.
ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.
அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.
இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.
சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.
  • Shah Jahan //எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது.//சரியாகச் சொன்னீர்கள்.
  • Vedha Gopalan # எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது #

    Very correct.! அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறேன்! ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இன்னும் பெரிய சந்தோஷம் அளிக்கிறது


29/12/14

அறியாத அழகிய முகங்கள்




கேரள மாநிலத்தின் மலை மாவட்டமான இடுக்கியின் காட்டுப்பகுதியில் இருக்கிறது எடுமலைக்குடி. முதுவர்கள் என்ற பழங்குடியினரின் 25 குடும்பங்கள் மட்டும்  வசிக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.  இங்கே போக மூணாறிலிருந்து 18 கீமீ நடக்க வேண்டும். வேறு வசதிகள் கிடையாது.
ஒரு குடிசையின் வாசலில்  ”அக்‌ஷரா ஆர்ட்ஸ் அண்ட் போர்ட்ஸ், லைப்ரரி  எடுமலைக்குடி “ என்று பேப்பரில் எழுதி பின்செய்யப்பட்ட  வெள்ளைப்பேப்பர்.  அந்த குடிசையில்  வசிப்பவர் பி.வி. சின்னதம்பி வயது 73.  அந்தகுக்கிராமத்தில் இருக்கும் ஒரே சாலையில் டீக்கடை வைத்திருகிறார்.  அதோடு அவர் செய்து கொண்டிருக்கும் மற்றொரு வேலையை  நம்மை ஆச்சரியப்பட  வைக்கிறது. அவர் ஒரு நூலகம் நடத்துகிறார்.  அது மட்டுமில்லை, கிராமத்தின் விளையாட்டுகளை நடத்தும் கிளப்பையும் நிறுவி நிர்வகிக்கிறார்.
 நீண்ட ட்ரெக்கிங்க்கு பின் அந்த  கடைக்குப் போன நாம் . லைப்ரரி எங்கே எனக் கேட்டால் குடிசையின் உள்ளே அழைத்துச் சென்று அரிசி கொண்டுவரப்படும் இரண்டு கோணிப்பைகளை எடுத்துவந்து அதிலிருக்கும் புத்தகங்களை அந்த சாக்குகளை விரித்து அதன்மேலேயே பரப்புகிறார். தினசரி நூலகம் இயங்கும் நேரத்தில் இப்படி தான் வைப்பாராம் மொத்தம் 160 புத்தகங்கள்,   வைக்கம் மகமூது பஷீர், எம். டி வாசுதேநாயர், கமலாதாஸ், தோப்பில் காந்தியின் வாழ்க்கை, என்ற அந்தப் புத்தகங்களின் தலைப்பு  நம்மை அசர வைக்கிறது.
.நூலகத்திற்கு ஒருமுறை கட்டணம் 25 ரூபாய். மாத சந்தா 2ரூபாய். எவ்வளவு நாள் வேண்டுமானலும் படிக்கலாம்.  அங்கத்தினர்களுக்கு பால் இல்லாத டீ இலவசம்.  யார் இதை பயன் படுத்துகிறார்கள்? பொருளாதார நிர்பத்தங்களினால் பள்ளிப்படிப்பைக் கூட படிக்க முடியாத எல்லா பழங்குடி மக்களைப் போல தானே இவர்களும் என்ற எண்ணத்தில் எழுந்த நம் கேள்விக்கு பதிலாக அவரது நூலக நோட்டைக் காட்டுகிறார் சின்ன தம்பி.  நூலகத்தின் புத்தகங்கள் வழங்கபட்டிருக்கும்  தேதி, உருப்பினர் பெயர் புத்தக தலைப்பு என தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அது கடந்த ஆண்டு  37 புத்தகங்கள் வழங்கப்படிருப்பதைச் சொல்லுகிறது.  மொத்த புத்தகங்களில் 25% புத்தகங்கள் வழங்கபட்டிருக்கிறது. இது நகரங்களிலுள்ள பெரிய நூலகங்களில் கூடஇத்தனை% வழங்கப்படுவதில்லை..  அந்த 25 குடும்பத்திலிருப்பவர்கள் தான் படித்திருக்கிறார்கள். அந்த நோட்டில் நம்மை சந்தோஷப்படுத்தும் மற்றொரு ஆச்சரியம் மலையாளத்தில் மொழிபெயர்க்க பட்ட சிலப்பதிகாரம் இரண்டு முறை வழங்கபட்டிருக்கிறது. தமிழின் பெருமைமிக்க காவியம் இந்த  மலைக்கிராமத்தில் படிக்கப் பட்டிருக்கிறது.
உடன் வந்த நண்பர்கள் புத்தகங்களை அலசிகொண்டிருந்ததில் பார்த்தது  கையெழுத்து பக்கங்களூடன்   ஒரு பைண்ட் செய்யபட்ட நோட் புத்தகம். அது சின்ன தம்பியின் சுய சரிதை.“ எழுதிக்கொண்டிருக்கிறேன் இன்னும் முடிக்க வில்லை முடித்தபின் உருப்பினர்களுக்கு வழங்குவேன்” என்று அமைதியாக சொல்லுகிறார்.
 இந்த செய்தியைக்கட்டுரையை படங்களுடன்  www.ruralindiaonline.org.  என்ற தளத்தில் பதிவு செய்திருப்பவர்  பத்திரிகையாளர் திரு சாய் நாத்.
'83.3 கோடி மக்களும், 780 வழக்கு மொழிகளும், பல்வகைக் கலாசாரங்களும், பல்வேறு தரப்பட்ட தொழில்களும் நிறைந்த  நம் நாட்டில்  கிராமங்களில் இது போல செய்திக்கதைகள் கொட்டி கிடக்கின்றன, அந்த  முகங்களை மீடியாக்கள்  நல்ல முறையில் காட்டவில்லை. அவைகளைப் பதிவு செய்ய வில்லை என்று சொல்லும் இவர்  இந்து நாளிதழின் கிராம புற செய்திகளை வெளியிடும் இணைப்புக்கு ஆசிரியாராக இருந்தவர்.  இவர்  எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் ஏழைகளையும் விவசாயிகளையும் கிராமப்புறப் பெண்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. இந்தியாவின் இருள் படர்ந்த பகுதிகளில் களஆய்வு நடத்தி பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய வாழ்வையும் போராட்டத்தையும் நேரடியாகப் பதிவு செய்தவர் சாய்நாத். Everyone Loves a Good Drought என்ற இவரது புத்தகம் 43 பதிப்பு களைக் கண்ட புகழ்பெற்ற புத்தகம். 2007ல் மகசஸே(Magasaysay) விருது பெற்ற இந்த மூத்த பத்திரிகையாளர் இப்போது இந்திய கிராமங்களின் பல் வேறு முகங்களை, கலாசாரங்களை, மொழிகளை, இசைகளை, மக்கள்முகங்கங்களை டிஜிட்டலாக ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு இனைய தளத்தை துவக்கியிருக்கிறார்.  பாரி (PEOPLE ARCHIVE OF RURAL INDIA)PARI என்ற இந்த தளம் வெறும் செய்தி தளமாக இல்லாமல் இந்தியாவின் கிராமங்களைப்பற்றிய ஒரு ஆவண தொகுப்பாக இருக்க திட்டமிட்டு ஒராண்டு உழைப்புக்கு பின்னர்  அறிமுகபடுத்தியிருக்கிறார்,ஆடியோ, வீடியோ, போட்டோக்கள் கட்டுரைகள் மூலம் ஏழை கிராம மக்களின் அன்றாட வாழக்கை முறைகளை பதிவு செய்து ஆவணப்படுத்த லாபநோக்கற்ற நோக்கத்துடன்  துவக்க பட்டிருக்கும்  இந்த  ”கிராம வீக்கிபீடியாவிற்கு”   படைப்புகளை யார் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். தகுந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்படும்.  பலர் செல்போனில் எடுத்த படத்தை கூட அனுப்பியிருக்கிறார்கள். . இந்தியாவின் பெரும்பகுதி கிராமப்புறமாக இருந்தபோதும் நாம் வாசிக்கும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும்  அவைகளின் செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதால் இந்த முயற்சி என்கிறார் சாய்நாத்.
 முகங்கள், நாங்கள் செய்வது, நாங்கள் தயாரிப்பது  பிரச்ச்னைகள் என பல பகுதிகளை தளத்தின் முகப்பிலேயே படமாக அறிமுகபடுத்தியிருக்கிறார்கள். அதை கிளிக்கினால் அந்த பகுதிக்கு நம்மை அழைத்துசெல்லும்படி தளம் நேர்த்தியாக அமைக்க பட்டிருக்கிறது. சூனாமியின் சீரழிவால் பெற்றோரை இழந்த மீனவகிராமச் சிறுவன் ஒருவன்  கலா ஷேத்திராவில் நடனம் பயின்று கலைஞரனது போன்ற  பல தகவல்களின்  சுரங்கங்களாக இருக்கின்றன.
 ஒரு வீடியோப்படத்தில்  ஒரு மலைக் கிராமப் பள்ளியில் குழந்தைகள் ”ஐ லவ் பொட்டட்டோ- யூ லவ் பொட்டட்டோ” என்ற ஆங்கில பாடலை சேர்திசையாக பாடுகிறார்கள் 1 முதல் 4 வகுப்புக்கள் இருக்கும் அந்த பள்ளிக்கு ஒரே ஒரு டிச்சர்தான்.  சுற்றுவட்டாரத்தில் எங்கும்  விளம்பர போர்ட்கள் அறிவிப்புகள் எதிலும் ஆங்கிலம் இல்லை. குழந்தைகளைக்  கேட்டால் அவர்கள் விருப்ப பாடம் ஆங்கிலம் என்கிறார்கள். அந்த நல்ல டீச்சர் சொல்லிகொடுத்த ஆங்கில பாட்டு. இந்த பொட்டட்டோ பாட்டு. அந்த பகுதியில் உருளை கிழங்கு விளைவது இல்லை  என்கிறதகவலைச்சொல்லுகிறது இந்த வீடியோவில் வரும் வார்த்தைகள். இப்படி ஓவ்வொரு பகுதியிலும் சுவையான தகவல்கள்  

 ஒரே வலைத்தளத்தில்  இந்திய கிராமங்களின்  அனைத்து முகங்களையும்  ஒன்றுதிரட்டி ஆவணப்படுத்த  பாரியின் மூலம் முயற்சிக்கிறார் சாய் நாத்.   நீங்கள் உங்கள் கிராமப்புற செய்திகளையும் படங்களையும் அனுப்பலாமே.
கல்கி 3/1/15


4/12/14

திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டால் – தேசத்துக்கு டாலரில் வருமானம்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒருநாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் முக்கிய உற்சவங்களின்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். இப்படி கழிக்க பட்ட முடிகளை என்ன செய்கிறார்கள்?  சில ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் காண்டிராக்டர்கள் மூலம்  அப்புறப்டுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்றுமதியாளர்களுக்கு அதை நல்ல விலையில் விற்கிறார்கள்  என்பதை அறிந்தபின்னர்  திருப்பதி தேவஸ்தானமே  அதை ஏலத்தில் ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏலம் இ ஆக்‌ஷன் என்று சொல்லப்படும் ஆன் லயன் முறையில் நடக்கிறது. கடந்த ஆண்டு இம்மாதிரி ஏலத்தில் கிடைத்த பணம், 200கோடி..2011ல் இப்படி ஏலமுறை துவங்கியதிலிருந்து இதுவரை விற்கபட்டிருப்பது 1178 டன் முடி, கிடைத்த பணம்  618 கோடிகள்,

ஏலத்தை நடத்துவது திருப்பதி தேவஸ்தானமும், மெட்டிரியல் ஸ்கிராப் டிரெடிங்கார்ப்ரேஷன் என்ற அரசு நிறுவனமும். விலை சர்வ தேச மார்க்கெட் நிலவரத்தின் படி முடிவு செய்கிறார்கள், விற்பனைக்கு தயாராக இருக்கும் முடிகளின் நீளம் கனம் போன்றவிபரங்கள் அதற்கான வெப்சைட்டீல் படங்களுடன் விவரிக்க படுகிறது. நேரில் வந்து தொட்டுபார்த்து வாங்க விரும்புஅவர்களுக்கு சாம்பிளும் காட்ட படுகிறது.
திருப்பதியில்  600 முடிதிருத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெண் பக்கதர்களின் வசதிக்காக 50 பெண்பணியாளர்கள். காணிக்கை செலுத்துமிடத்திலிருந்து  சேகரிக்க பட்ட முடிகள், அவற்றின் நீளத்திற்கேற்ப   9 வகைகளாக தரம் பிரிக்கபட்டுகிறது. காயவைக்கப்பட்ட பின் அவைகள் ரசயானங்களின் மூலம் சுத்த படுத்த பட்டு நீண்ட நாள் நிலைக்க பதப்படுத்தபட்டு,  முடிகளின் நீளங்கள் தரங்களுக்கேற்ப ஒரே அளவாக்க படுகிறது.. இவைகள் ஒரு குறிபிட்ட அளவு சேரும் வரை எர்கண்டிஷன் கோடவுண்களில் விசேஷமாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் வைத்து பாதுகாக்க படுகிறது.

 நல்ல கருப்புகலரிலிருக்கும்  31 அங்குல நீளத்திற்கு மேலிருக்கும் முடிகள்தான் முதல் தரம். அதற்கு சர்வ தேசமார்க்கெட்டில் பெயர் கறுப்பு தங்கம். விலை. கிலோ  ரூபாய் 25000க்கும் மேல். அதைதொடர்ந்து மற்ற ரகங்கள்.  கிலோ ரூபாய் 5000த்திலிருந்து 18000 வரை.   வெள்ளை முடிக்கும்  நல்ல விலை. சிறுசிறு துண்டுகளாகி தூளாகிப் போனதைக் கூட வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கும் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு மூன்றுதரம் ஏலம் விடப்படுகிறது. குறிப்பிட்ட விலைக்கு போகவில்லை என்றால் அடுத்த ஏலத்துக்காக காத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டில் வாங்கி என்ன செய்கிறார்கள்.?
இந்த தலைமுடிகள் அனைத்தையும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பேஷன் டெக்னாலாஜி மற்றும் மருந்து நிறுவனங்கள்  ஆண்டுதோறும் அதிகளவில் வாங்குகின்
றன. ஐரோப்பாவிலும், சில ஆசிய நாடுகளிலும் பேஷன் டிசைனகர்களுக்காக இங்கிருப்போர் வாங்குகிறார்கள். நல்ல தரமான விக் கள் தயாரிக்க மட்டுமில்லாமல், ஜரிகைகள் போல ஆடைவடிவமைப்பில், செருப்பு, கைப்பைகள், கோட்டுக்களில் இதை பயன் படுத்துகிறார்கள்.  சில ஹாலிவுட் நடிகைகள் இந்திய முடிகளில் தயாரிக்க பட்ட விக் களைமட்டுமே அணிவார்கள். மத்தியதர நீளத்தில் இருக்கும் முடிகளை  சீனாவாங்குகிறது. அவர்கள் வண்ணம் தோய்த்து விக் காளாக்கி அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளில் விற்கிறார்கள். சிறிய முடிகளில் பிரஷ்கள் செய்து விற்கிறார்கள். அவர்கள் நாட்டில் இப்படி ஒரே இடத்திலிருந்து பெருமளவு கிடைக்காததும் ஒரு காரணம். இந்த ஆண்டு 200கோடிகள் வியாபாரம் ஆகும் என எதிர்பார்த்து துவங்கிய ஏலத்தில் 64 கோடிகள் மட்டுமே வியாபாரம் ஆயிற்று. காரணம் ஐரோப்பாவில் ஹேர்ஸ்டைல் பேஷன் மாறியிருக்கிறதாம்.  ஐரோப்பிய பேஷன் மார்கெட்டின்   தேவை திருப்பதியிலிருக்கும்  முடிகளின் விலையையும் விற்பனையையும்  தீர்மானிக்கிறது. ”இது ஒன்றும் புதிதில்லை. அடுத்த சீசனில் சரியாகும்” எனகிறார். கோவிலின் நிர்வாக அதிகாரி திரு எம் ஜி கோபாலன்.
அடுத்த முறை திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் போது உங்கள் பிராத்தனை நிறைவேறுவதுடன்  தேசத்துக்கு அன்னிய செலவாணியும் சேருகிறது என்பதையும் நினைத்து சந்தோஷப்படுங்கள்