கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2/3/19

பேனாக்களும் பேசுகின்றன



ஒருவரின் எண்ணங்களை எழுத்துக்களாக்குவதில்  பேனாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு.. பறவையின் இறகு முனை,  முனை கூராக சீவப்பட்ட கட்டைகள், பொருத்தப்பட்ட உலோக நிப்பை மையில் தொட்டு எழுதும் கட்டைப்பேனாக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சியைம்  நீண்ட சரித்திரத்தையும் கொண்டது  பேனா.  இந்த எழுதுகோல்    இங்க்கையும் நிப்பையும் ஒருங்கே கொண்ட பவுண்டன் பேனாவானது 1867ல் தான். 

ஸ்பிரிங், ரோலர், ஜாட்டர்,  ஜெல் என்று பலவிதமான  பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினரில் பலர் மைநிரப்பி எழுதும் பேனாக்களை பார்த்தே கூட இருக்கமாட்டார்கள். தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்காக,  ஒரு பொட்டுக்கூட சிந்திவிடாமல் பில்லரினால் எடுத்து  பேனாவில் நிரப்பி நிப்பில் இங்க் சரியாக வருகிறதா என்று சோதித்தபின் பூஜையில் வைத்து மாணவர்களுக்குக்  கொடுத்த  சென்ற தலைமுறை பெற்றோர்கள் கூட மறந்து போன இந்தப் பவுண்டன் பேனாக்கள் இன்னும் தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது என்பது தான் ஆச்சரியம்,
பார்க்கர், வாடர்மென், லெமி மான்ட்பிளாங்க் போன்ற உலகப் புகழ்பெற்ற  நிறுவனங்கள் இன்னும்  பவுண்டன் பேனாக்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சாதாரண பேனாக்களை மட்டுமில்லாமல் மிக விலையுயர்ந்த பேனாக்களைத் தயாரிக்கிறார்கள்  வைரங்கள் பதித்தது, தங்கம்,  வைர நிப், கையால் உருவங்கள் செதுக்கப்பட்ட பேனாக்கள். ஒவ்வொன்றிலும் தனித்தனி வண்ண ஓவியங்கள்  இப்படிப்பல வகைப் பேனாக்கள். எழுத மட்டுமில்லாமல் கலைப் பொருளாக சேர்ப்பவர்கள் இந்தப் பேனாக்களை வாங்குகிறார்கள். 

மான்ட்பிளாங்க்  என்ற நிறுவனம் மிக விலையுர்ந்த பேனாக்களைத் தயாரிப்பவர்கள். (இந்தியாவில் குறைந்த பட்ச விலை ரூ51,575)  ஆண்டு தோறும் தேசியத்தலைவர்கள், புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்கள்,  எழுத்தாளர்களை கௌரவிக்க அவர்கள் பெயர், அல்லது கையெழுத்துப் பொறிக்கப்பட்ட  “லிமிட்டட் எடிஷன்” என்று அழைக்கப்படும் பேனாக்களைக் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே  வெளியிடுகிறார்கள். மிக விலையுயர்ந்த இந்தப் பேனாக்களை  வாங்க   உலகின் கோடிஸ்வர வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி காத்திருக்கிறார்கள் .
இந்த ஆண்டு 17ஆம் நூற்றாண்டு சீன மன்னரின் நினைவாக  5 தங்கப்பேனாக்கள் மட்டும் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பேனாவின் விலை   12 கோடிக்கும் மேல்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மான்ட்பிளாங்க் நிறுவனம்  இம்மாதிரி  விசேஷ பேனாக்கள் வாங்கியவர்களை உலகின் பல பகுதிகளிலிருந்தும்  சுவிஸ்ர்லாந்துக்கு விருந்தினர்களாக அழைத்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வைத்து   தங்கள் தொழிற்கூடத்தை காட்டினார்கள். 
ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோவிலிருந்து அதிபர் ஒபாமா வரை  நினைவுப்பரிசாக லிமிட்டட் எடிஷன் பேனாக்கள் தயாரித்திருக்கும் இவர்கள்  சில  பிரச்சினைகளிலும் சிக்கியிருக்கிறார்கள்.  
2010ஆம் ஆண்டு அண்ணல் காந்தியின்  தண்டி யாத்திரையின் நினைவாக  மஹாத்மா காந்தி 241  என்ற பேனாவை வெளியிட்டார்கள். 241 என்பது அவர் தண்டி யாத்திரையில் பயணம் செய்த மைல்களைக் குறிப்பது. அந்தப் பேனாவின் தங்க நிப்பில் காந்தி கைத்தடியுடன் நடக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. பேனாவின் விலை 14 லட்சம்.
‘எளிமையான வாழ்க்கையின் சின்னமாக வாழ்ந்த காந்தியின் பெயரால் இப்படி ஒரு ஆடம்பரப் பேனா வெளியிட்டிருப்பது  அவரது கொள்கைகளுக்கு முரணாது மட்டுமில்லை அவரை அவமதிக்கும் செயல்  என்பதால் இந்த நிறுவனம் பேனாக்களை தயாரிப்பதையும் விற்பதையும் தடைசெய்ய வேண்டும்’ என கேரள நீதி மன்றத்திலும்  உச்ச நீதிமன்றத்திலும்  வழக்குகள் தொடரப்பட்டன.  மான்ட்பிளாங்க் நிறுவனம் இந்தப் பேனாக்களின் விற்பனை மூலம்  9 லட்சம் டாலர்கள்  அரசு சொல்லும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்க இருப்பதாகத் தெரிவித்தது  ஆனாலும் வழக்கை விசாரித்த  நீதி மன்றம் பேனாக்களைத்  தடைசெய்துவிட்டது.  நீதிமன்றம் தடையாணையில்  சொன்ன  காரணங்களில் ஒன்று  காந்தியின் உருவம் 1950 சட்டங்களின் படி  தவறாகப் பயன்படுத்தக்கூடாத  தேசிய சின்னம். அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தமுடியாது. என்பது.   மான்ட் பிளாங்க் நிறுவனம் மன்னிப்பு கோரி பேனாக்களின்  தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்திவிட்டது. 
அண்ணல் காந்தி நீண்ட நாட்களுக்கு  மெல்லிய கட்டையின் நுனி கூராக்கப்பட்ட மைதொட்டும் எழுதும் பேனாவைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.  மவுன்ட் பேட்டனுக்கு கூட அந்தப் பேனாவினால் தான் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் நான் எழுதும் அழுத்தத்தில் நிப்புகள் வளைந்து போகின்றன. இது வசதியாகயிருக்கிறது என்பது தான். 
ஆந்திர மாநில ராஜமந்திரியில் தங்க ஆபரணங்கள் செய்து கொண்டிருந்த கே.வி ரத்தினம் என்பவர் 1932ல் பேனாக்கள், நிப்புகள்  தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார். காந்திக்கு எபொனைட் என்ற பொருளில்(பிளாஸ்டிக் அப்போது வரவில்லை)  தாங்கள் தயாரித்த பேனாவை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார்.  அதைப்பயன் படுத்திய காந்தி அதன் நிப்பு வளையாமலும், பேனாவின் வடிவம் எழுத வசதியாகியிருப்பதாகவும் ரத்தினத்துக்குக் கடிதம் எழுதினார்.  இன்று பேனாக்களும், பால்பாயின்ட் பேனாக்களும் தயாரிக்கும் அந்த நிறுவனம் இந்தக் கடித்ததை தங்கள் ஷோரூமில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்   தன் வாழ்நாளின் இறுதிவரை ராஜமந்திரி ரத்தினம் தயாரித்தப் பேனாக்களைத்தான் காந்தி பயன்படுத்திக்கொண்டிருந்தார்.,  அந்தப்பேனாக் களில் சிலவற்றை இன்றும் காந்தி மியூசியங்களில் பார்க்கலாம்.
காந்தியைப்போலவே  ராஜாஜி  இந்திராகாந்தி  போன்ற பல தலைவர்கள் ஒரே மாதிரியான பேனாக்களைத்தான் தொடர்ந்த பயன் படுத்தியிருக்கின்றனர்.  சௌகரியமா, சென்டிமென்டா என்பது தெரியாவிட்டாலும் அந்தப்பேனாக்கள்  அவர்களின் அடையாளமாகிப்போய்விட்டது. 
கலைஞர் கருணாநிதி  பால்பாயிண்ட் உபயோகித்து இல்லை.    சென்னை பிராட்வே பகுதியில் இருக்கும் ஜெம்&கோ  விற்பனை செய்யும்  வாலிட்டி(Walilty) பேனாக்களை மட்டுமே எப்போதும் பயன்படுத்தி வந்தார். எழுதிக்கொண்டிருக்கும்போது இங்க் தீர்ந்தால் அவர் எழுதும் வேகம் தடைப்படும் என்பதால்  அருகிலேயே இரண்டு பேனாக்கள் தயாராகயிருக்கும். .சற்று கனமான பேனாவாகயிருந்தாலும் கலைஞருக்கு நெருக்கமான விஷயங்களில்  இந்தப் பேனாக்களும் ஒன்று.  இதை அவரிடமே பரிசாக கேட்டுப்பெற்றவர்களில் சிலர்  கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் இந்துமதி.
அவரது இறுதியாத்திரையின் கடைசிக் கட்டத்தில்  எப்போதும் தாத்தாவின்  சட்டைப்பையிலிருக்கும் பேனா மிஸ்ஸிங் என்பதைக்கவனித்த பேரன் ஆதித்தியா (கனிமொழியின் மகன்), ஓடிப்போய் ஒரு பேனாவை அவரின் சட்டைப்பையில் சொருகிய நெகிழ்ச்சியான காட்சியை டிவியில் பார்த்தது நினைவிருக்கலாம். 
பேனாக்கள் தனிமனித உணர்வுகளில் மட்டுமில்லை நாடுகளின் சரித்திரங்களிலும்  முக்கிய இடம்பெற்றவை.  
இந்திய அரசியல்  அமைப்புச்சட்டதின் இறுதி வடிவம்  முடிவானதும் அதன் முதல் பிரதியை அழகான கையெழுத்தில் தயாரிக்கும் பணி  பிரேம் பெஹாரி ரெய்ஸ்டா என்ற கையெழுத்துக் கலைஞருக்கு(calligraphist ) வழங்கப்பட்டது. இதற்காக பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பெரிய கெளரவமாக்கருதி  ஆறு மாத காலம் உழைத்த  இந்த  கலைஞர் அதை எழுதப் பயன்படுத்தியது வெவ்வேறு 254  பேனா நிப்புகள். இந்த நிப்புகளையும், அதுபொருத்தப்பட்ட பேனாக்களையும் டெல்லி அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
உலகின்  பல சுவையான வரலாறுகளை எழுத உதவிய கருவியான  பேனாவின் வரலாறும் சுவாரஸ்யமாகத்தான்  இருக்கிறது,



27/1/19

அலஹாபாத் அழகாகிக்கொண்டிருக்கிறது


4 நகரங்கள்,  இரண்டுகோடி. பக்தர்கள் ஒரே திருவிழா

கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும்  சங்கமிக்கும்  இடத்தில் 1580ஆம் ஆண்டு, மன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு 'இலாஹாபாத்' என்று பெயரிட்டார். பின்னர்,  அது ஷாஜகான் காலத்தில் 'அலகாபாத்' என்று மாற்றப்பட்டதாக வரலாறு  சொல்லுகிறது. இப்போது. அதன் புதியபெயர்  பிரயாக்ராஜ்:

இந்த பிரயாக்ராஜ் இப்போது மிக அழகாகிக்கொண்டிருக்கிறது. புதிய சாலைகள்,, பாலங்கள் கட்டிடங்கள் மட்டுமில்லை. எப்போதும் சற்று அழுக்காகவே இருக்கும் நகரின் பல தெருக்களின் சந்துகளின் சுவர்களைக்கூட அழகான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பெரிய அளவில்  தெய்வ, மற்றும் இயற்கை காட்சிகள் வண்ணப்படங்களுடன் ஒரு  ஓவியகண்காட்சி போலிருக்கிறது.






12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா என்ற திருவிழா இதை  ஆர்த கும்பமேளா அல்லது  பூர்ண கும்ப மேளா என்கிறார்கள்  6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது. அர்த்த கும்ப மேளா.  இந்த கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகப் புண்ணியம்  என்பதால்   பிரயாக்ராஜ் நகரின்(அலஹாபாத்) விழா மிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு அர்த்த கும்ம மேளா  ஜனவரி 15  மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில்  பக்தர்கள்,,சாதுக்கள் என 2 கோடி பேரின்   புனித நீராடலுடன் தொடங்கியிருக்கிறது என்கிறது கும்பமேளா ஆணையம். இந்த விழா மார்ச் 4ஆம் தேதிவரை  நடைபெறும்.


இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது? என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த நகரங்களில் மட்டும்  அமுதம் சிந்தியிருக்கிறது. . புராணக் கதையில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்தச் சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.. அதனால் அங்குள்ள நதியில் குறிப்பிட்ட நாட்களில்  நீராடினால் புண்ணியம் என்று நமப்ப்படுகிறது


உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும்  இந்த நிகழ்விற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்திருக்கிறது.


ஓவ்வொரு கும்ம்மேளாவிற்கும் பாதுகாப்பு, மற்றும் சுகாதார ஏற்பாடுகளுக்காக மாநில அரசுதான் செலவிடும் என்றாலும், இந்த ஆண்டு யோகி ஆதித்தனார் அரசு  4300 கோடி பட்ஜெட்டில் திட்டங்களை உருவாக்கிக் கடந்த ஆண்டு முழுவதும் 1000 கணக்கான அதிகாரிகளுடன்  அதைச்செயலாற்றிக்கொண்டிருக்கின்றது புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், 6 வழிச்சாலைகள் மேம்பாலங்கள் என்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நகரம் முழுக்க சாலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன, மேம்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. மேளா நடைபெறும் பகுதிக்குள் 300 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் நகரம் முழுக்க பெரிய கார் நிறுத்தும் வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட ‘கும்ப்நகரி' என்ற தற்காலிக  பெரிய  கூடார நகரம் உருவாக்கப் பட்டுள்ளது.  பாதுகாப்பு தேவைகளைக் கையாள்வதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. விழா நாட்களில்  நகரில் அசைவம் சாப்பிட  அனுமதியில்லாதால் . இவர்களுக்கும்  அனுதியில்லை 
•ஏழு வார காலத்திற்கு நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழாவில் 2 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு வந்த ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

இந்த கும்மமேளாவிற்காக  இமயமலைப்பகுதிகளிலிருந்து சாதுக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்களில்  பல குழுக்கள். பிரிவுகள். அரை ஆடைஅணிந்தவர்கள்,, அதுவுமில்லாதவர்கள்  ஆயுதங்களுடன், வாதியங்களுடன்  இப்படி பலவகையான குழுக்கள். இவர்கள் கங்கைக்கரையிலேயே 50 நாளும் தங்கிவிடுவார்கள்.


இவர்கள் தங்க வசதியாக தனித்தனிக் கூடாரங்கள்,  அதில் மின் வசதி நீண்ட வரிசையில்  டாய்லெட்கள். சுத்தமான குடி நீர்  போன்ற எல்லா வசதிகளையும்  செய்திருக்கிறார்கள்.  இந்த சாதுகளுக்கும், மதம் சார்ந்த குழுவினர்களுக்கும்  அவர்களே உணவு தயாரித்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்காகவே  முகாமில் 160 நியவிலைக்கடைகள். இதில் மத முகாம்களுக்கு இலவசம். மற்ற பத்தர்களுக்கு நியாவிலையில்  அரிசி கோதுமை மாவு சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்காகத் தற்காலிக ரேஷன் கார்ட்கள் தரப்பட்டிருக்கின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கான சப்ளைகளைத்தர உள்ளேயே ஒரு கோடவுனுமிருக்கிறது.


100க்குமேற்பட்ட மருத்துவர்களுடன் 10 சிறு மருத்தவ மனை  எக்ஸ்ரே எடுக்கும் வசதிகள், பல் மருத்துவர்கள்,  தவிர 80 ஆயுர்வேத மருத்துவர்களும் தயாராக யிருக்கின்றனர். இவர்களைத்தவிர 80 ஆம்புலன்ஸ்கள்   நதியையில் மிதக்கும் 9  ஆம்புலன்ஸ், ஒருவிமான ஆம்புலன்ஸ்  எல்லாம்  அவசரத்தேவைகளை  சமாளிக்கக் காத்திருக்கிறது..



இம்முறை உபி   முதல்வரின் நேரடிப் பார்வையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அமைச்சர்களும், பல விஐபிகளும் விழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..

வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு  கூடாரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்தச் சொகுசு குடில்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை கட்டணம் 

சுருக்கமாகச் சொல்வதானால் கும்மமேளாவிற்காக அலகபாத் நதிக்கரையில்  சகலவசதிகளுடன் ஒரு நகரையே நிர்மாணித்திருக்கிறார்கள்..


கும்பமேளா காலத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடியவர்களுக்குப் புண்ணியம் சேருகிறதோ என்னவோ  அலஹபாத் நகரம்   இப்படி ஒரு புதிய பெயருடன் புதுப்பொலிவைப்பெற  நிச்சியமாகப் புண்ணியம் செய்திருக்கிறது

கடவுள்களாக வாழும் கலைஞன்



இன்று  நம் மனதில் பதிந்திருக்கும்,வழிபடும் சரஸ்வதி, லஷ்மி முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களை இந்த உலகுக்கு அந்த வடிவில் அறிமுகப்படுத்தியவர் இராஜா ரவிவர்மா.
தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருப்பதாகச்   சொல்லப்படும் இந்த ஓவியனின் அத்தனைப் படைப்புகளைப் பற்றிய விபரங்கள் இன்று ஒரே இடத்தில் இல்லை. மஹாபாரதம், இராமாயணம், புராணக்கதை மாந்தர்களைத்தவிர அவர் எண்ணற்ற படங்களை  வரைந்திருக்கிறார். அவை இவர் பெயர் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல அரண்மனைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சாகுந்தலம் போன்ற காவியத்தின் காட்சிகள் இவரது ஓவியங்கள் மூலம் கவிதைகளாயின.  இவர் வரைந்த பெண்களின் கண்கள் உணர்ச்சிகளை மட்டுமில்லை,அந்த உருவங்களும் பெண்ணின்உடல் மொழியைப் பேசின.  இவரது ஓவியங்களில் அந்த இடத்தின் சூழல், அணிந்திருந்த ஆடைகள், தரை, சுவர் ஒளி நிழல் என எல்லாம் மிக நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும்.  அழகான பெண் என்றால் அவர் ரவி வர்மாவின் ஓவியம் போல என வர்ணிக்கப்பட்டார். இதை வரைய எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்ற எண்ணவைக்கும் பல படங்களை இவர் சிலமணி நேரங்களில் வரைந்து தள்ளியிருக்கிறார். அதனால் தான் வாழ்நாளில் அத்தனை படங்களை வரைய முடிந்திருக்கிறது.

திருவனந்தபுரம் அருகிலிருக்கும் கிளிமானுர் ஒரு சின்ன ஜமீன். அன்றைய திருவிதாங்கூர் ராஜ வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்ற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் 1848ல் பிறந்தவர் ரவி வர்மா. மிகச்சிறு வயதிலேயே கிளிமானுர் அரண்மனைச்சுவர் முழுவதும் கரித்துண்டால் படங்களாக வரைய முயன்றுகொண்டிருந்த இவரின் ஆர்வத்தையும் ஓவியத் திறனையும்  கண்டுபிடித்தவர் இவரது மாமா ராஜா வர்மா. அவரது ராஜா பட்டம் தான்  மறுமக்கத்தாயம் என்ற தாய்வழி மரபுப்படி பின்னாளில் இவரை  அடைந்தது.

மாமா  ராஜ ராஜா  வர்மாவே ஒரு ஓவியராக இருந்ததால், ஓவியத்தில் மிக ஆவர்வம் கொண்ட மருமகனை திருவிதாங்கூர்  மன்னர்  ஆயில்யம் திருநாளிடம்  14 வது வயதில் ஒப்படைத்தார். அங்கு அரண்மனை  ஓவியராக இருந்த தமிழர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் கற்றபின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடம் தைல வண்ண ஒவியநுணுக்கங்களை கற்றார். உலகம் வியந்த இந்தக் கலைஞனுக்கு குருவாகயிருந்தவர்கள்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.



திருவிதாங்கூர் மன்னரின் ஆதரவுடன்.   இளம் வயதிலேயே இவரது படங்கள் வெளிநாட்டு ஓவிய கண்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது  ஓவியத்தில் தீராத ஆர்வம் கொண்ட ரவி வர்மா ஒரு காலகட்டத்துக்குப்பின் தானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அந்தக் காலகட்டத்தில் இந்திய ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ணங்களை ஓவியங்களில் பயன்படுத்தி வந்தனர் அந்த உத்திகளைத் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர்  1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
 தேடித்தேடிச் சேகரித்த ஐரோப்பிய ஓவியங்கள், புத்தகங்கள் இவருக்கு உதவின.  வண்ணங்களின் கலவை, ஓவியத்திலிருக்கும் உடல் பரிமாணம் இவைகள் தான் ஒரு ஓவியத்தின் கலைநயத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்த ரவி வர்மா அதை தன் ஓவியங்களில் ஐரோப்பிய முப்பரிமாண ஓவியப்பாணியை புகுத்தி தனக்கென ஒரு ஓவியப்பாணியை உருவாக்கிக்கொண்டார்.  முதல் முறையாக இந்திய ஓவியங்களில் முப்பரிமாணத்தில் கடவுளர், இதிகாசக்காட்சிகள் தைல  ஓவியங்களாயின.

 10 ஆண்டுகளுக்குமேலாக தன் கிளிமானூர் அரண்மனையிலேயே படங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருந்த ரவிவர்மாவுக்கு  பரோடா மன்னர். சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும்  மிகப்பெரிய அரண்மனையின்  கூடங்களை ரவி வர்மாவின் ஓவியங்களால்  அலங்கரிக்க விரும்பினார்.. அதற்காக அந்த அரண்மனையில் 10 ஆண்டுகள் தங்கி ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தின் அழைப்பு. இப்படி மன்னர்கள், பிரபுக்களின் ஆதரவுடன் அவர்கள் படங்களையும் ,ஆங்கிலேயே அதிகாரிகளையும் வரைந்து கொண்டிருந்தாலும், அவரது சில சிறந்த படைப்புகள் அரண்மனைகளில்தான்  பிறந்தவை என்றாலும்  தன் படைப்புகள் சதாரண மனிதர்களை அடையவில்லையே என்ற ஆதங்கம் ரவி வர்மாவுக்கு இருந்தது.  அப்போது அவருக்கு எழுந்த எண்ணம் தான் அன்று ஜெர்மனியில் அறிமுகமாயிருந்த கான்வாஸில்  . வரைந்த ஓவியங்களை அதே வண்ணங்களுடன் காகிதத்தில்  அச்சிடும்  முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தன் படங்களை அச்சிடவேண்டும் என்பது.
தன் சேமிப்பு அனைத்தையும் மூதலீடு செய்து 1894ல் பம்பாயில் ஒரு அச்சகத்தைத் நிறுவினார்.அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல்  ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்.



 அழகான படங்கள் நிறைய அச்சிடப்பட்டும் அச்சகம் லாபத்தில் இயங்கவில்லை. 1896ல் அதை புனா அருகிலுள்ள ஒரு சின்ன நகருக்கு   மாற்றியும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது அந்த அச்சகம்.  அச்சு இயந்திரங்களை நிறுவியபோது அவரிடம் பணியிலிருந்த ஜெர்மனியாருக்கே அதை விற்றுவிட்டு தனது ஊரான கிளிமானுருக்குத்   வருத்தத்துடன்  திரும்பிய  இந்த ஓவிய மேதையின் இறுதிக்காலம் ஒரு மோசமான ஓவியத்தைப்போலத்தான் இருந்தது.



ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று பிரபல ஓவியர்களைச் சந்திக்க வேண்டும்  என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை.  அந்த நாட்களில் கடல் தாண்டி பயணம் செய்தால் திரும்பியபின் கோவில்களுகச் செல்லும் உரிமை தடை செய்யப்படும்  என்ற சமூக நிராகரிப்பைச் சந்திக்கவிரும்ப வில்லை அவர்..
அச்சகத்தை வாங்கியவருக்கு தன் கடவுளர் படங்களை அச்சிடும் உரிமையைக்கொடுத்திருந்தார். அதன் விளைவாகத்தான் கடந்த நூற்றாண்டில் காலண்டர்களாகப் பிறந்து பல இந்துக்குடும்பங்களின்  பூஜை அறையில் தெய்வங்களாக இடம்பெற்றிருக்கிறது இவரது ஓவியங்கள்.

எல்லா நல்ல கலைஞர்களைப்போல பாராட்டுகளுடன் கண்டனங்களையும் சந்தித்தவர் ரவி வர்மா.. மேற்கத்திய பாணியைப்புகுத்தி நம் பாரம்பரிய சித்திரகலையைச்சிதைத்துவிட்டார்,  நமது தெய்வங்களை கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் இந்திய  கலாச்சாரத்தின் வெளிப்பாடற்றவை என்று விவேகானந்தரும், இந்திய ரசனையையும் அதன் கலைப்பண்பாட்டையும் தரம் தாழ்த்தியவர் என்று அரவிந்தரும்  எழுதியிருக்கிறார்கள்.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் சாமானிய மனிதனை ஓவியங்களை ரசிக்க வைத்த கலைஞன் அவன். .இன்றைக்கும் ஓவியராக விரும்புவர்களுக்கு  ஆர்வம்  ரவி வர்மாவின் படங்களிலிருந்துதான் துவங்குகிறது.

ஒரு நல்ல கலைஞனின் படைப்பு காலத்தால் அழிவதில்லை என்பதற்கு, ரவி வர்மா  இறந்து 100 ஆண்டுகளுக்குப்பின்னரும் அவரது படங்கள்  இன்றும் பேசப்படுகின்றன என்பதே சாட்சி.              

அதிரடி 10% இட ஒதுக்கீடு அவசியமா? அரசியலா? – ஓர் அலசல்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜாதி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியைக் காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்சாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையநீண்ட நாட்களாக முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு  அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு. நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து, அதில் அமைச்சரவை முடிவுக்கு, ஏற்றாற்போல  நமது அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இதன்மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 60% ஆக அதிகரிக்கப்படும். ஏற்கனவே நம் நாட்டில்  சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கும்  முறையும் அமுலுக்கு வருகிறது. 
மிக முக்கியமான இந்தச் சட்ட திருத்தத்தை அதிரடியாக கொண்டுவந்தது பாஜக அரசு. முதல் நாள் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்த முடிவு. அவசர, அவசரமாக  மறு நாள் மாலை சட்ட வடிவம் பெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் இதற்காக இரண்டுநாள் சிலமணி நேர நோட்டிஸில் நீடிக்கப்பட்டது. 
.மக்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக 3 வாக்குகளும்,மாநிலங்களவையில் 7 வாக்குகளுமே பதிவாகின. காங்கிரஸ் இத்தகைய ஒதுக்கீட்டைத் தனது தேர்தல் அறிக்கையிலேயே முன் வைத்திருந்தது. கம்யூனிஸ்ட்களும் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லை என்பதால் ஆதரித்தார்கள்.. ஆம் ஆத்மி  திருணாமூல், இடதுசாரிகள்,  ஆதரித்து வாக்களித்திருக்கின்றன, அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் மட்டுமே மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன..இதில் அதிமுக எதிர் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதாவது பெருவாரியான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன‌.  இந்த பல கட்சிகளின்  ஆதரவு நிலையை எதிர்பார்த்து பாஜக  திட்டமிட்டிருப்பது அவர்களின் சாணக்கியம். 

  10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படாது, சபைகள் விடாது, எதிர்க்கட்சிகள் இம்மாதிரி விஷயங்களை ஆதரிக்காது என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்., ஆனால் ஆதரித்து  வாக்களித்த  எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறவே பாஜக அரசு அவசரமாக இந்த நேரத்தில் மசோதாவைத் தாக்கல் செய்கிறது எனக் குற்றம்சாட்டின. ‘இது நள்ளிரவு வழிப்பறி’ என ராஷ்டிரிய ஜனதா தளம் சொல்லுகிறது. , ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்தான். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த உடனேயே இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதுதான் கேள்விக்குறி. இந்த விஷயத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் விதத்தைத்தான் கேள்வி கேட்கிறோம். என்கிறது காங்கிரஸ்.
‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறது. முந்தைய அரசுகளால் நாடாளுமன்றத்தில் சரியான முறையில் இந்த விவகாரம் கையாளப்படாததால் தோல்வியில் முடிந்தது. இந்த மசோதா மூலம் 95 சதவீத மக்கள் பயனடைவார்கள்’’ என்கிறது பாஜக.


.எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல், எந்தப்புள்ளிவிவர தரவுகளும் இல்லாமல் இப்படி  மசோதாவை  அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது  நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடாளுமன்றவிவாதத்தில் குரல் எழுப்பினாலும் அவர்கள் ஆதரவு வாக்களித்தார்கள். காரணம்,அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டைச் செய்வோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது தான்.  ஆதரவு ஓட்டளிக்காவிட்டால் பஜகா அதை  எதிர் வரும் தேர்தலில் தங்களுக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் என்ற நிலை. தான் காரணம்.  இதை எதிர்பார்த்து பாஜக சாதுரியமாக காய்களை  இறுதி நேரத்தில் நகர்த்தி ஆட்டத்தில்  வென்றிருக்கிறது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டால்  உடனே இது சட்டமாகும். 
இரவு வரை நீடித்த பாராளுமன்ற கூட்டத்துக்குப் பின் பிரதமர்  இது இந்திய  சமூக நீதி வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று ட்விட் செய்திருக்கிறார்.  
இந்த நள்ளிரவு காட்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன

ஏன் இந்த அவசரம்?

விவசாயிகள் போராட்டம்', `பெட்ரோல், டீசல் விலையேற்றம்', `ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு' என மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசைக் குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் நடந்த மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த  பாஜக.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதில் . மிகவும் தீவிரமாக இருக்கிறது.  அவர்களின் கட்சி ஆய்வின் படி மாநிலங்களில் அவர்களுடைய வாக்கு வங்கி சரிந்ததற்கு காரணம்  பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்பலர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்கு  10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை உடனடியாக கொண்டுவந்து சட்டமாக்கிவிட்டது. இதைத்தான் பாஜக அரசு எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்று ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த சட்டத்திருத்தத்தினால் இப்போது நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா? 
பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படவில்லை. இந்தத் திருத்தம் இப்போதிருந்ததுவரும் வரும் இட ஒதுக்கீடு முறைக்கு.   மாற்று இல்ல.. அது தொடரும். மேலும்  சட்ட வரைவில்." in addition to existing reservations and subject to a maximum of 10 percent of the total seats in each category" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்கும் பெரும்பாலான பார்ப்பனருக்கு   உதவ இந்தத் திருத்தம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே
ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத நிலையில்  இதை தமிழககட்சிகள் . அரசியலாக்க முயற்சிக்கின்றன. பொதுப் பிரிவில் 40க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. அவற்றில் சில: பார்ப்பனர்கள், தாக்கூர்கள் (என்ற ராஜபுத்திரர்கள்) ஜாட்கள், மராத்தாக்கள், பூமிகார்கள், பனியாக்கள், கம்மாக்கள், கப்பூக்கள் எனப்பல சாதிகள் இருக்கின்றன. அனைவருக்கும் பலன் கிடைக்கும் தமிழகத்தில் . பார்ப்பனர்களின் எண்ணிக்கை  மூன்று சதவீதத்திற்கும் குறைவு

இது அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நீண்ட நாட்களாக அரசியல் கட்சிகள் அறிவித்துச் செய்ய முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம் என பாஜக இதைச் சாதனையாகப் பேசும். வட மாநிலங்களில் இந்த சட்டத்திருத்தம் பிரசாரம்  அவர்களுக்குப்  பலனளிக்கலாம்.  ஆனால்  தமிழகத்தில்  இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமூக நீதி  உரிமைகளுக்கு முரணானது என்ற நிலையைத்  திராவிட கட்சிகள்  எடுத்திருக்கிறது.  அதனால் .  அதிமுக வுடன் கூட்டணியை விரும்பும்  தமிழக பாஜக  இதனால்  பெரும் நெருக்கடியைச் சந்திக்கும்.
சட்ட சிக்கல்கள் வருமா? 

இந்தச் சட்டத்திருத்தம் , அரசியலமைப்புச் சட்டம் 15 (4) (இடஒதுக்கீடு தொடர்பானது) பிரிவில் சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்கள் என்பதோடு, பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்கிற பிரிவும் சேர்க்கப்படுகிறது.  மிக முக்கியமான இந்த சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில்  அதை  எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
 கட்சி வழக்கறிஞர்கள் இதை எப்படிப்பார்க்கிறார்கள்?
``இது, வட இந்திய உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகம். நான்கரை ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத இதுபோன்ற இட ஒதுக்கீடு தேவை இப்போது ஏன் வந்தது? இது முற்றிலும் தவறானது; சமூக நீதிக்கு எதிரானது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே தவறு. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது நிலைக்காது. 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சத விகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. முதல் நாளில் அமைச்சரவையில் நிறைவேற்றி, மறுநாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரிய விவாதம் எதுவுமின்றியே நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. அடைந்த தோல்விதான் இத்தகைய மசோதாவைக் கொண்டுவரக் காரணம்.. பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என அளவுகோல் வைத்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவர நேரிடும். இது ஆபத்தாகிவிடும்  1951-ம் ஆண்டு இட ஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தந்தை பெரியார் தலைமையில் 3 லட்சம் பேர் அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராடித்தான், முதலாவது சட்டத் திருத்தத்தைப் பெற முடிந்தது. ஆனால், இன்று முற்பட்ட வகுப்பினர் கேட்காமலேயே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தப் பிரச்னையில் மௌனம் காத்து வருவது தவறான முன்னுதாரணமாகி விடும். சமூக நீதி பேசுவதாகச் சொல்லிக்கொள்கிற பி.ஜே.பி., குறுகிய கால வாக்கு அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பவாத முடிவுதான் இது" உச்ச நீதி மன்றம்  இதை ஏற்காது தடை செய்யும் வய்ப்பு அதிகம் . என்கிறார்  பட்டாளி மக்கள் வழக்கறிஞர் திரு பாலு

பாஜக. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.டி. ராகவன், 
``அனைவருக்குமான வளர்ச்சி என்கிற முழக்கத்தோடுதான் பி.ஜே.பி. அரசு, அனைத்துத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இத்தகைய இட ஒதுக்கீடு பற்றி ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மேலும், 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை செய்யக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) பிரிவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி பொருளாதாரம் என்பதையும் சேர்த்துள்ளோம்.
எனவே, `பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று கூறி, நீதிமன்றம் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் நரசிம்மராவ் ஆட்சியில் வெறும் அரசு உத்தரவாக அது கொண்டு வரப்பட்டது. தற்போது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால் சட்டப்பூர்வமாக அதற்கு மதிப்பு அதிகம். அரசியலமைப்புச் சட்டம் தற்போது 124-வது முறையாகத் திருத்தப்படுகிறது. அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் நீதிமன்றம் ரத்து செய்துவிடவில்லையே. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தையும் நீதிமன்றம் தடை செய்யாது என நம்புகிறோம்.

விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’

உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு  இந்த வழக்கை அனுமதித்து விவாதங்களைக்கேட்டுத் சமூக நீதியுடன் சம நீதியும் வழங்குவது  சரியா என்ற  தீர்ப்பை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வழங்கும் என்பது நிச்சியமில்லை.   ஆனால்  அரசியில்  கட்சிகள்  தேர்தலில் இந்தத் தீர்ப்பை அரசியலாக்கும் என்பது மட்டும்  நிச்சியம்.
ரமணன்

    


விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’


























25/12/18

நீலக்கடலுக்கடியிலும்... வெண்மேகங்களுக்கு மேலும் .


நீலக்கடலுக்கடியில்...
 
சோலார் பேனல் தொப்பிகள் அணிந்திருக்கும் உயர்ந்த தெருவிளக்குகள் அணிவகுத்து நிற்கும்  விசாகபட்டின கடற்கரைச் சாலையில்  செல்லும் நம்மை நிறுத்துவது கடற்கரையிலிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான கறுப்பு சப் மெரின். ஆம். ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கரையில் நிற்கிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா என்ற நீர்முழ்கிகப்பலை தரையில் நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.



  சதாரணமாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலை  உள்ளே சென்று பார்க்க முடியாது என்பதால்,1969லிருந்து 2001 வரை  இந்திய கடற்படையில் ஒரு லட்சம் கிமீக்கும் அதிகம் பயணித்து  ஓய்வு பெற்ற இந்த ரஷ்ய நீர்முழ்கிகப்பலை  ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.
படிகள் ஏறி 300 அடி நீளமுள்ள அந்த நீர் மூழ்கிகப்பலுக்குள் நுழையும் நம்மை வரவேற்று  அந்தக் கப்பலின் கதையை விவரிக்கிறார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 1971 பாக்கிஸ்தான் போரில்  அரபிக்கடலில் ரோந்து பணியிலிருந்தபோது அங்கு நுழைய முயன்ற பாக்கிஸ்தான் கப்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இரண்டு பேர் மட்டுமே நடக்கக்கூடிய  சிறிய பாதை. இரண்டு பக்கமும் பலவகை குட்டி இயந்திரங்கள், கருவிகள். குழாய்கள், வயர்கள் எல்லாம். சற்று வேகமாகத் திரும்பினால் எதாவது ஒரு கருவியில் முட்டிக்கொண்டுவிடுவோம்.  இந்தக்கப்பலில் 67 கடற்படை வீரர்களும் 8 அதிகாரிகளும் மாதக்கணக்கில் வசித்திருக்கிறார்கள். எந்தக் கருவிகளை இயக்கினால் கப்பல்  எந்த வேகத்தில் எவ்வளவு ஆழம் கடலில்  மூழ்கும், எந்த வேகத்தில் வெளியே வரும் என்பதை விளக்குகிறார்கள். பிரமிப்பாகியிருக்கிறது.  நீண்ட நாட்கள் கடலில் மூழ்கியே யிருக்கும் இந்தக் கப்பலில் குறுகலான இடத்தில் அடுக்குப் படுக்கைகள்.  உணவு வேளையில் அதில் ஒன்று  டைனிங்டேபிளாக மாற்றப்படும். இரண்டே டாய்லெட், இரண்டு வாஷ் பேசின்கள் மட்டுமே.  டெலிபோன்பூத் சைஸில்  ஒரு  சின்ன கிச்சன். இவற்றில் நம் வீரர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க அந்தந்த இடங்களில்  வீரர்களின் பைபர்  உருவங்களை  அமைத்திருக்கிறார்கள்.  நமது பாதுகாப்புக்காக இந்தக் கடற்படை வீரர்கள் எத்தனைக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக உணரவைக்கும் காட்சிகள்


ஒரே நேரத்தில் கடலுக்கடியிலிருந்து  ஆறு டார்பிடோக்களை  செலுத்தித்  தாக்கும்  வசதி கொண்ட இந்தக் கப்பலில் அது எப்படி இயங்கும் என்பதை விளக்குகிறார்கள். அந்த டார்பிடோக்களில் ஒன்றும் கப்பலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது. 
ஆசியாவிலேயே இப்படி ஒரு  கப்பலையே அருங்காட்சியகமாக்கியிருப்பது  இங்குத்தானாம், எழுந்த எண்ணத்தைச் செயலாக்கியவர் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதை இப்படி கரையில் இழுத்து  நிறுத்தப் பல பெரிய இயந்திரங்களை  நிறுவி 18 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள்.  செலவு    14 கோடி ரூபாய்கள். 
மறு முனையிலிருந்து படிகளிலிறங்கி கீழே வரும்போது அந்தக்  கம்பீரமான கப்பலை ப்போலவே  நமது கடற்படையின் கம்பீரமும் நம் மனதில் அழியா காட்சிகளாகத் தங்குகிறது.     
  

வெண் மேகங்களுக்கு மேலே ...
 ஒரு நீர்மூழ்கி கப்பலைப்பார்த்த பிரமிப்புடன் வெளியே வரும் நம்மை ஆச்சரியப்படுத்துவது  சாலையின் ,மறுபக்கத்தில்  நிற்கும் ஒரு போர் விமானம்.  அது  TU142 என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் விமானம். அதன் பணி கடலுக்கடியில் நகரும் சப்மெரின்களை  ஒலியின் மூலம் கண்காணித்து அறிந்து அதிரடி வேகத்தில் தாக்குவது. ரஷ்யத்தயாரிப்பான  இது இந்திய வான் படையில்  30000 மைல்கள் பறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றிருக்கிறது.
இதை இங்கு நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கவேண்டும் என்ற யோசனையும் அன்றைய முதல்வர்  திரு சந்திரபாபுவுடையது தான். கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். திறந்துவைத்திருக்கிறார்.
  ஒரு விமானத்தின் உள் பகுதியைப் போலவே ஒரு காட்சிகூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் அந்தக்கூடத்தில் விளக்கப் படங்கள், காணொளி காட்சிகள் போர் விமானத்திலிருந்து வீசும் குண்டுகள் பாரசூட், உடைகள்  எல்லாம்  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விமானியின் காக்பிட் சீட்டில்  அறையில் நாமே உட்கார்ந்து பார்க்கலாம்.
.  பாரசூட்டுகளை  திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது இங்கு தொட்டுப் பார்க்கும் அளவில் பெரிய கூடாரம்  விரித்துவைக்கப்பட்டிருக்கிறது..விமானம் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது எங்காவது மோதி தரையிறங்கிவிட்டால் காப்பற்றிக்கொள்ள கருவிகள் அடங்கிய அலமாரி,மருந்துபெட்டகம் இப்படி பல.

விமான விபத்து ஏற்படும் போதெல்லாம் செய்திகளில் அடிபடும் “பிளாக் பாக்ஸ்”  இருக்கிறது. பெயர்தான் கருப்பு பெட்டியே தவிர அது ஒளிரும் ஆரஞ்சு வண்ணத்திலிருக்கிறது. எளிதில் எங்கிருந்தும் அடையாளம் காணமுடியும் என்பதற்கான வண்ணமாம் அது 
பார்ப்பவற்றை எளிதில் புரிந்துகொள்ள நுழைந்தவுடன் ஒரு ஸ்மார்ட் போன் தருகிறார்கள்  அதன் ஹெட்போன்களை  காதில் பொருத்திக்கொண்டு பார்க்கும் படங்களிலிருக்கும் எண்ணைப் போனில் அழுத்தினால்  தெளிவான ஆங்கிலத்தில் அழகான குரலில் விபரம் கேட்கிறது..  சுந்தரத் தெலுங்கும் பேசுகிறது
ஆல்பட்ராஸ்(ALBATROSS) என்பது ஒரு கடல் வாழ்பறவை. மிக அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை. ஒரு நாளைக்கு 1000 கிமீக்கள் கூட பறக்கும் சக்திகொண்டது. அந்த பறவையின் வடிவில்  இந்த விமானம் அமைக்கபட்டிருப்பது என்பதை விளக்க  அதன் வடிவத்தின் நிழல் இந்த விமானம்போல் விழுவதைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
அந்த விமானம் தன் பணிக்காலத்தில் செய்த சாதனைகளையும் அதைச்செய்த வீரர்களின் படங்களையும் விமான வால் பகுதியைப்போலவே வடிவமைத்து  வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட் செய்துவிட்டு  வெளியே வந்தால் நாம் இத்தனை நேரம் பார்த்து விவரங்கள்  அறிந்த விமானமே நிற்கிறது. அதன் உள்ளே சென்று பார்க்கிறோம். இத்தனை சின்ன  இடத்திலா இவ்வளவு விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள் என்று எழும் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

விமானத்தைச்  சுற்றி  நடந்து வரும்போது  திறந்திருக்கும் அதன் அடிவயிற்றுப் பகுதியிலிருந்து தான்  எதிரியின் இலக்கைத் தாக்கும் குண்டுகள் பாயும் என்பது புரிகிறது.  வயதானாலும் விமானத்தைப் புத்தம் புதிது போல சீராக்கி பாரமரிக்கிறார்கள். விமானத்தைப்  பல பகுதிகளாகப் பிரித்து இங்குக் கொண்டுவந்து  இணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சி அமைக்கச் செலவு 14 கோடி என்கிறது தகவல் பலகை. 
நம் வான்படையின் வலிமையை  நாமும் நமது மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு  பெருமிதம் அடைய இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது ஒரு  நல்ல முதலீடுதானே  என்று தோன்றிற்று.
ஒரே நாளில் நமது கடற்படை, வான் படையின் வலிமையை,  பெருமைகளை அறிய  ஒரு  வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறோம்.

9/11/18

நம்மை அழைக்கும் நாச்சியார் மாளிகை


  

" மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
  வில்லிப்புத் தூருறை...
என்று தன் பிறந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்துரை பெருமையுடன் நாச்சியார் திருமொழியிலும்
விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
என்று பெரியாழ்வாரும் அ/றிமுகப்படுத்தும் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நாச்சியார் திரு மாளிகை என அழைக்கப்படும் ஆண்டாள் கோவிலைக்காண பயணித்துக் கொண்டிருக்கிறோம் ந்தக் கோவில் தமிழகப் பழமையான கோவில்களில் ஒன்று. பரவலாக அது ஆண்டாள் கோவில் என்று அறியப்பட்டாலும் உண்மையில் அந்தக்கோவில் வடபத்ரசயனர் கோயில். இந்தப் பெருமாளுக்குத் தான் ஆண்டாள் தன் மாலையைச் சூடிக்கொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இந்த வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம் மிகப்பெரியது. நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம். . தமிழகக் கோவில்களின் கோபுரங்களிலியே மிக உயரமானது .
இந்த ராஜகோபுரம் பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாகவும்,. இந்தக் கோபுரத்தின் விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை தொடர்ந்து திருப்பணி செய்துள்ளதற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் பேசுகின்றன..
.கவிச்சக்கரவர்த்திக் கம்பன் இந்தக் கோபுரத்தை மேரு மலைக்கு இணையானது என்று பாடியிருக்கிறார். அந்தப் பாடலின் கல்வெட்டும் இங்கு இருக்கிறது.
கோபுரம் அண்மையில் நடந்த கும்பாபிஷகத்தினால் பலவண்ண எனாமல் பெயிண்ட்டில் மின்னுவதால் அதன் தொன்மையைச் சற்று இழந்து நிற்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்தி செல்கிறான். அவனைப் புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர்த் தாம் இங்குக் 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப்போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். சிறிய கோவிலாக ஒரு குளத்தின் நடுவில் எழுந்த அதற்கு, பின்னாளில் ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான பெரியாழ்வார் தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்றுசொல்லுகிறது ஸ்தல புராணம்.
. அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிக் கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாகச் சொல்கிறார்கள். .
இந்த வடபத்ரசயனர் கோவிலுக்கும் அதன் ஒரு பகுதியாக இப்போது ஆண்டாள் சன்னதி இருக்கும் கோவிலுக்கும் இடையிலிருந்த நந்தவனத்தில் தான் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு. பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள் கோதை. பெருமாளுக்குச் சாற்றப்படும் மலர் மாலையை, அவள் ஒவ்வொரு முறையும் அணிந்து அழகு பார்த்ததற்குப் பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு அந்த மாலையைச் சாற்றுகிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதைத் தவிர்த்து வேறு மாலையைச் சூட்டினார்.
உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்குச் சூட்டுஎன்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுகிறது.

ராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் வலது புறம் இருப்பது வடபத்ரசயனர் போவில் நேர் எதிரே இருப்பது ஆண்டாளின் சன்னதி. அது நேர் எதிரில் கண்ணில் பட்டதால் எல்லோரும் செய்வது போல நாமும் அங்கு தான் முதலில் செல்கிறோம்.
நுழையும் பந்தல் மண்டபத்தின் மேற்கூரை மூங்கில்களினால் எழுப்பி அதன் மீது ஓலைக்கூரை வேய்ந்ததைப் போலவே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடு. எத்தனைபேர் எவ்வளவு காலம் உழைத்தார்களோ?
அந்த மண்டபத்தின் முழுவதும் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்க முடியாமல் கடைகளின் ஆக்கிரமிப்பு...
பந்தல் மண்டபத்தைக் கடந்து கல்யாணமண்டபத்திற்குள் நுழைகிறோம். கம்பீரமாகப் பிரம்மாண்ட உயரமாக நாயக்கர்கால இராமாயண ஓவியங்களுடன் பெரிய யாழித்துண்களுடனும் இருக்கிறது. இங்குதான் பங்குனி மாதத்தில் ஆண்டாளுக்குக் கல்யாணவைபவம் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து நுழையும் துவஜஸ்தம்ப மண்டபம் என்ற கொடிமர மண்டபத்தில் கொடிமரம் தங்க முலாமுடன் மின்னுகிறது. அதில் பதிக்கப்பட்டிருக்கும் ராஜ கோபுரத்தின் சிறிய வடிவம் நம்மை நிறுத்துகிறது. .கொடிமர மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் தூண்களிலிருக்கும்  கலை நயம்மிக்க பெரிய ராம லஷ்மண, சரஸ்வதி. வேணு கோபாலன், மோகினி சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்மை  மாளிகைக்குள் அழைக்கின்றன.  

இந்த மண்டங்களைகடந்து சன்னதிக்குள் நுழையும் நம்மை வரவேற்பது தங்க வண்ணத்தில் பளிச்சென்று மின்னும் வெள்ளிக்குறடு என்ற ஊஞ்சல் மண்டபம். வெள்ளி தோறும் ஆண்டாள், தரிசனம் கொடுக்குமிடம். அதன் பின்னே அர்த்த மண்டபத்தில் குறுகிய வாயிலுடன் கர்பகிரஹம். உற்சவ மூர்த்திகள் பெரிய அளவில் பிரமாதமான அலங்காரத்தில் முன்னால் இருப்பதால் மூலவரைச் சட்டென்று முழுவதுமாகக் காண்பது சற்றுச் சிரமாகயிருக்கிறது ஆனால் அதற்குத் தீபாரதனை காட்டும் போது செங்கோல் ஏந்திய ரங்கமன்னாரின் வலது புறம், தன்இடது தோளில் கிளியுடனும் சாய்ந்த கொண்டையுடனும் ஆண்டாளும் அருகில் கருடாழ்வாரும் மின்னும் தங்ககவசங்களில் ஜொலிக்கிறார்கள். கண்டது சில நிமிடங்கள் என்றாலும் அந்தக் கம்பீரமான காட்சி கண்ணை விட்டு அகல வெகுநேரமாகிறது. இந்தக் கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்குப் பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்..

சன்னதியை விட்டு வெளியே வரும் போது ஆண்டாள் நீரில் தன்னை அழகு பார்த்துக்கொண்ட கிணறு. இப்போது தங்களை அதில் பார்க்க விரும்புகிறவர்கள் எட்டிப்பார்த்து காசுகளை வீசி எறிந்து பாழ் பண்ணுவதால். கிணற்றைகண்ணால் மூடி அதைச்சுற்றி அருகில் போட்ட காசு தெரிய ஒரு கண்ணாடி உண்டியலை அமைதிருக்கிருக்கும் நிர்வாகத்தின் சாதுரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த ஆண்டாள் கோவிலை நாச்சியார் திருமாளிகை என்று
அழைக்கிறார்கள். அண்மையில் நடந்த ஆண்டாள் கோவில் திருப்பணிகள் ஒன்று தங்கவிமானம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவிமானத்தைவிடப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. நின்று இதை நன்றாகப் பார்த்து தரிசிக்கப் பிரஹாரத்தில் தரையில் ஒர் இடம் குறித்திருக்கிறார்கள்.. பளிச்சென்ற சூரிய ஒளியில் தகதகக்கும் தங்க கோபுர தரிசனம்.
இந்தக்கோவில் தனியாகபிரசித்திப் பெற்றிருப்பதுடன் மற்ற பல முக்கிய வைணவத்தலத்தின் வழிபாடுகளிலும் இணைந்திருக்கிறது. திருப்பதி பெருமாளுக்குப் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்குச் சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். அவர் வைகையாற்றில் இறங்கும் போது அணியும் வண்ண வஸ்திரம் இங்கிருந்து தான் போகிறது.

ஆண்டாள் கோவிலில் இருந்து வெளியே வந்து ராஜ கோபுரத்துகருகிலிருக்கும் வடபத்திரசயனர் சன்னதிக்குச் செல்லுகிறோம். மற்ற வைஷ்ண கோவில்களிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது. கோவிலின் தரைதளத்தில் நம்மாழ்வாரும் இராமானுஜரும் இடது புறமும், பெரியாழ்வார் வலதுபுறமும் இருக்கச் சன்னதியில் நரசிம்மர். அருகில் அதன் வழவழப்பில் பதிந்த பலகோடி பாதங்களின் அடையாளத்தையும், காலத்தையும் சொல்லும் படிகளேறி முதல் தளத்தை அடைந்துதான் மூலவரைத் தரிசிக்க வேண்டும். பெருமாள் சயனக்கோலத்தில் ஶ்ரீ தேவி பூதேவியுடன் தரிசனம் தருகிறார். சுற்றிலும் நிறையச் சுதையிலான உருவங்கள்

சன்னதியின் வெளியே வந்து நாம் நிற்குமிடம் வசந்த மண்டபம். இந்த இடத்தில் தான் ஆண்டுத் தோறும் அரையர் சேவை என்ற வழிபாடு நடைபெறுகிறது. ஒரு பழைய தேரிலிருந்து எடுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்களை அழகாகப் பொருத்திச்செய்யப்பட்ட மேற்கூரையுடைய பெரிய கூடம் அது.

அங்கு . அரையர் பரம்பரையின் இன்றைய அரையரான பாலமுஹூந்தாச்சாரியார் ஸ்வாமிகளைச் சந்திக்கிறோம். பிரபந்தங்களையே எப்போதும் சுவாசிக்கும் அவரிடம் அரையர் சேவை பற்றிக் கேட்கிறோம்.சிவந்த மேனி நல்ல உயரம். மெல்லிய குரல்

நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ராகத் தாளத்தோடு ஆடிப் பாடி வழிபடுவது தான் அரையர் சேவை. பலநூற்றாண்டுகளாக 108 திவ்ய தேசங்களிலும் நடைபெற்று வந்த இந்த விசேஷ வழிபாடு இப்போது ஶ்ரீவிலிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி, ஶ்ரீரங்கம் ஆகிய மூன்று கோவில்களில் மட்டுமே நடைபெறுகிறது. இது ஆடல் பாடல் வழி பாடுதான் என்றாலும் எல்லோரும் இதைச் செய்ய முடியாது. இதனைப் பரம்பரையாகச் செய்துவரும் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே செய்யமுடியும். இதன் தாளங்களும், நடன முத்திரைகளும் பாவங்களும் சாஸ்திரிய நடனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. விரும்பினாலும் நாங்கள் மற்றவர்களுக்குக் கற்று கொடுக்கும் வழக்கமில்லை.
 திருமதி அனிதா ரத்தினம் கூட இங்கு வந்து இதை ஆராய்ந்தார். . ஆனால் அவர் விரும்பியபடி அதை முறையாகக் கற்றுக்கொடுக்க இயலவில்லை. கமலஹாசன் தன்னுடைய தசாவதாரம் படத்தில் அரையர் காட்சிகளைப் புகுத்த விரும்பி என்னை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நல்ல சன்மானம் தரமுடியும் என்றும் அணுகினார். நான் ஏற்கவில்லை. இது பணத்துக்காகச் செய்யும் கலையில்லை. பகவானுக்குச் செய்யும் வழிபாடு.. கோவிலில் கூட நாங்கள் ஊழியர்களோ அர்ச்சகர்களோ இல்லை. எங்களுக்குக் கோவிலிலிருந்து சம்பளமோ சன்மானமோ கிடையாது. பரம்பரையாக நாங்கள் செய்யும் இறைப்பணி இது. நான் எங்கள் பரம்பரையில் 49வது தலைமுறை இதை எனக்குப் பின் என் பிள்ளை தொடர்வார்

இதே மண்டபத்தில் பல நூற்றாண்டுகளாகப் பகல் பத்து என்ற உற்சவத்தின் போது பக்தர்கள் இருபுறமும் உட்கார்ந்திருக்க நடுவில் எங்கள் முன்னோர்கள் பாசுரத்தை அபிநயங்களுடன் பாடியிருப்பதைப் போலவே இன்றும் நாங்கள் செய்கிறோம். மைக், விசேஷலைட் எதுவும் கிடையாது. ஊசிவிழுந்தால் ஓசை கேட்கும் அளவுக்கு அமைதிகாத்துக் கேட்பார்கள்.  என்கிறார் அரையர் ஸ்வாமிகள்
வருமானத்துக்காகக் கோவில்கள் வணிகமயமாகிவரும் இந்த நாளில் வருமானம் எதுவும் பெறாமல் தெய்வப்பணியாகத்தான் இதைச்செய்கிறோம் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இவர்.. இந்தச் சேவையின் போது இவர்கள் துணியாலான ஒரு விசேஷ கீரிடம் அணிகிறார்கள். மற்ற நேரங்களில் அது அவர் வீட்டில் பூஜையில் வைத்து வழி படப்படுகிறது என்பதிலிருந்தே அதன் புனிதம் புரிகிறது.
.
இந்தக் கோவிலின் தேரோட்டம் மிகப்பழமையானது. அதைப்பற்றி இந்த நகரில் பலஆண்டுகளாக வாழும் பக்தர் திரு ரத்தின வேல் அவர்களிடம் பேசிய போது
ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த பழைய தேரில் சாலிவாஹன் சகாப்தம் 1025 என்று பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பழமையானது. கலைநயமிக்கப் பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்குச் சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்பக் கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடங்களும் இருக்கும். தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரத்தில் 5 மைல் வரை தேர் எந்த ரதவீதியில் நிற்கிறது என்று தெரியும்.
தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர முடியாதபோது தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர்.(நெம்பு தடி) எண்ணைத் தடவிய கனமான மர சற்றுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வார்கள்.. முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி இழுத்து நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும்.
காலப்போக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிகச் செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்றாகச் சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரைச் சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்குச் சாரம், கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்ப்பலி நேர்ந்தது. அதனால் பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிச்சட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்துத் தேர் நவீனப்படுத்தப்பட்டது.
இப்போது தேரை உந்தித் தள்ள ஜேசிபிக்கள் பயன்படுத்துகிறது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே) என்று சொல்லும் திரு. ரத்தின வேல் இப்போது தேர் நாளில் பெருமளவில் இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியாகியிருக்கிறது என்கிறார்.

செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். இங்கு ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கிறது. ஏன் கிளி? ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் சொல்லுகிறது.
இந்தக் கிளி ஆண்டாளுக்கு அணிகலகனில்லை. மாலைகளைப் போலத் தினமும் புதிதாகச் செய்யது அணிவிக்கப்படுகிறது . . கிளியின் மூக்கு மாதுளம் பூ, மரவள்ளிக்கிழங்குச்செடியின் இலையில் கிளியின்உடல்;, – நந்தியாவட்டை இலை,பனைஓலையில் இறக்கைகள் கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் பயன் படுத்தியும்,  கிளியின் கண்களுக்குப் பளபளக்கும் மைக்கா துண்டுகளைப் பயன்படுத்தியும். கிளியைத் தினசரி மாலை நேர பூஜைக்காக ஒரு குடும்பத்தினர் உருவாக்குகின்றனர்.. இந்தக் கிளியை மறுநாள் காலை பூஜைகள் முடிந்தவுடன் அகற்றிப் பிரசாதமாக வழங்குவார்கள்என்கிறார் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வரும் பக்தரும் , கோவிலிலும், நகரிலும் பலரை அறிந்திருப்பவருமான திரு. அழகர் ராஜா


திரும்பும் பயணத்தில் நீண்ட நேரம் கண்ணில் தெரிந்துகொண்டிருந்த அந்தக் கம்பீரமான கோவில் மெல்ல மறைகிறது. ஆனால் நாடு முழுவதும் மார்கழி காலைகளில் ஒலிக்கும் இனிய திருப்பாவையை அருளிய ஆண்டாளை அவரது மாளிகையிலேயெ கண்குளிர தரிசித்தது மனதில் மறையாமல் நிற்கிறது.