புதியதலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதியதலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9/4/13

பகல் கனவுகளும், புரியாத கணக்குகளும்




ஏப்பரல் ஆழம் இதழில் பட்ஜெட் பற்றி எழுதியிருக்கும்
கட்டுரை இது 

 மத்திய பட்ஜெட் 2013-14 ஒரு பார்வை

நிதி ஒதுக்கீடு, பற்றாக்குறை, மந்தமானபொருளாதார வளர்ச்சி, பெருகிவரும் பணவீக்கம். தொடர்ந்து வெடித்த ஊழல்கள், எல்லாம் அதிதீவிரமாக நீடித்துகொண்டிருக்கும்  சூழ்நிலையில். இந்த ஆண்டின் பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார். 8 ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்வதை  வழக்கம்போல் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர். ரயில்வே பட்ஜெட் போன்று பொது பட்ஜெட்டில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் ஏதுமில்லாதற்கு முக்கிய காரணம் நிதியமைச்சர்  
சிதம்பரத்தின் துவக்க உரை. மிக நன்றாக தயாரிக்க பட்டிருந்ததும், அதை அவர் அழகாக வாசித்ததும் ஒரு காரண..  மாறிவரும் உலகபொருளாதார சவால்கள், அதை இனி எப்படி இந்தியா எப்படி சமாளிக்க வேண்டும், இனி வரும் 10 ஆண்டுகளில் நாம் எங்கு இருப்போம் என்பதை  நோபல் அறிஞர்களின் கருத்துகள், திருக்குறள், விவேகானந்தரின் வார்த்தைகள் போன்ற மேற்கோள்களுடன் ஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்.  ஆனால் பட்ஜெட்?  ஒரு அற்புதமான டிரையலருக்கு பின்   மோசமான சினிமாவைப் பார்த்தது போல   பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. இந்த பட்ஜெட்டை அலசி பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ் பேக்
2012-`13 பட்ஜெட்
'கருணை உள்ளவனாக மாறுவதற்கு நான் இரக்கமற்றவனாக இருந்தாக வேண்டும்'' என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளைக் கூறி கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிஜமாகவே இரக்கமற்றவராக மாறி அடித்தட்டு மக்களை நேரடியாக தாக்கும் சேவை வரியை பல விஷயங்களுக்கு விஸ்தரித்து, வருமான வரியில் பெண்களுக்கு அளிக்கப்ட்டிருந்த சின்ன சலுகைகளை கூட திரும்ப பெற்றிருந்தார். பட்ஜெட் வெளியான சில தினங்களில்  “பட்ஜெட்டில் வருவாயாக காட்டப்ட்டிருக்கும் பல இனங்களில் அந்த அளவு வருவாய் வருவதற்கு வாய்ப்பில்லை,அதேபோல் செலவுகளும் குறைத்து  மதிப்பிடபட்ட்ருக்கிறது. இது ஆபத்தானது. இதன் விளைவுகள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள்ளாகவே தெரிந்துவிடும்” என்ற கருத்தை தெரிவித்தவர் அரசு நிதித்துறையின்  ஒரு முன்னாள் அதிகாரி. சிதம்பரத்தின் இந்த பட்ஜெட் அவர் கருத்துகள் உண்மை என்பதை உறுதிபடுத்திவிட்டன.


கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிக்கபட்டபின்  எதிர்பார்த்த வருமானத்தை  எட்டமுடியாததால் அதை குறைத்தும்  கட்டுபடுத்த முடியாதாதால் அதிகரித்த செலவுகளுடனும் பட்ஜெட் திருத்தி மதிப்பிடபட்டது. அதன் படி துண்டு விழுந்தது  1,18000 கோடி. இதை அரசு எப்படி சமாளித்தது? அடிப்படை கட்டமைப்புகளுக்கான செலவினங்ளுக்கு ”மூலதன திட்ட செலவு”
என்று பட்ஜெட்டில் ஒவ்வொருஆண்டும் ஒதுக்கபடும். கடந்த ஆண்டு இதற்காக ஒதுக்கபட்டது  4.29 லட்சம் கோடி. இதில் கை வைத்து துண்டுவிழுந்த பட்ஜெட் தொகையை சமாளித்துவிட்டார்கள். புரியும்படி சொல்லவேண்டுமானால் பாராளுமன்றத்தில் அறிவித்து ஒப்புதல் பெற்ற பட்ஜெடில் சொன்ன அடைப்படை கட்டமைப்பு செலவுகளை செய்யாமல்  மக்களை ஏமாற்றி விட்டார்கள்.  இந்த ஆண்டு பட்ஜெட்டை  UPA2 இல்லாத ஒரு அரசு அளிக்க நேர்ந்திருந்தால் இது வெளிச்சதிற்கு வந்திருக்கும்..

இந்த பட்ஜெட் ”தேர்தல் பட்ஜெட்டா?”
வருமான வரி விலக்கு 9 லட்சமாக உயர்வு. பெண்களுக்கு முழு விலக்கு. விவசாய கடன் ரத்து. கார், டீவி, கம்ப்யூட்டர், செல்போன் வரிகள் பாதியாக குறைப்பு. பங்குச் சந்தையில் ஈட்டும் லாபத்துக்கு வரி இல்லை. வங்கிகளில் யார் வேண்டுமானாலும் ஜாமீன் இல்லாமல்  10 லட்சம் வரை 6 சதவீத வட்டியில் தனிநபர் கடன் பெறலாம். எந்த ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை…இது போன்ற புரட்சிகரமான அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் ஆவேசமாக விமர்சிக்கும். இந்திய பொருளாதாரம் இனி அவ்வளவுதான் என்று தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர்கள் குமுறுவார்கள். மக்கள் மனதை மன்மோகன் அரசு எப்படி புரிந்து கொண்டிருக்கிறது, பாரென்று நடுத்தர வர்க்கம் கரகோஷிக்கும்.எவருக்கும் அந்த வாய்ப்பை அளிக்காமல் ஏமாற்றி விட்டார் நிதியமைச்சர் சிதம்பரம். அவர் சமர்ப்பித்த எட்டாவது பட்ஜெட்டை பாராட்டுவதா கண்டிப்பதா என்று தெரியாமல் எதிர்கட்சி தலைவர்கள் தவித்தினர். ஏன் சிதம்பரம் இப்படி செய்திருக்கிறார் ?. இங்கே தான் அவரது அனுபவமும், சாணக்கியம் வெளிப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எதிர் பார்க்கபடும் வருவாய் 10.56 லட்சம் கோடிகள். இது கடந்த ஆண்டின் பட்ஜெட்டைவிட 1.84 லட்சம் கோடி அதிகம். ஏற்கனவே துண்டுவிழுந்திருக்கும் பகுதியையுடன் இந்த நிதியாண்டின் செலவுகளை சமாளிக்க இந்த வருவாய் போதாது. அதனால்  எந்த பாப்புலர் திட்டத்தை அறிவித்தாலும் செய்ய முடியாது எனபதை உணர்ந்து  குறிப்பிட்டு சொல்லுகிற மாதிரி வரிகள் விதிக்காமல் 18000 கோடி வருமானத்திற்கு வழி வகுத்திருக்கிறார். இந்த சாமர்த்தியம் பாராட்டபடவேண்டிய விஷயம். ஆனால் இதன் மேலும் துண்டுவிழப்போகும் பணத்தை எங்கிருந்து கொண்டுவரபோகிறார் என்பது அமைச்சர் மட்டுமே அறிந்திருக்கும் சிதம்பர ரகசியம்.
புரியம் கனவுகளும் புரியாத கணக்குகளும்
வரும் நிதியாண்டில்  நாட்டின் பல இனங்களில் அடையக்கூடிய வளர்ச்சி வீதங்களை பொருளாதார வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செய்யபடும் கணிப்பு இது. இது பல முறை தவறாகவும் ஆகியிருக்கிறது. ஆனாலும் கணக்கிடும் முறைகளுக்கும் வரிவிதிப்புகளுக்கும் இது தான் அடிப்படையாக உதவுகிறது. இதன் படி வரும் ஆண்டில் வளர்ச்சி 5% வீதமாகவும், பணவீக்கம் 8% வீதமாகவும் இருக்கும் என மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த அளவுகள் சரி என்று ஏற்றுகொண்டால் வரிகள் மூலம் 13% தான் அதிகமாக கிடைக்கும், ஆனால் அமைச்சர் திட்டமிட்டிருப்பது 20% அதிக வரி வசூல். எப்படி இது சாத்தியம்? என்று தான் புரிய வில்லை.
 இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு, உரம்,எரிபொருள் இவற்றிற்காக ஒதுக்கபட்ட மான்யம் 5.92 லட்சம்கோடி, ராணுவத்திற்கு ஒதுக்கபட்டிருப்பது 2.04 கோடி. ஆக இதற்கு மட்டுமே தேவையானது 7.96 லட்சம் கோடிகள். வரிகள் மூலம் எதிர்பார்க்கபடுவது 10.56 லட்சம் கோடி. இதில் நிதிகமிஷனின் சிபார்சின் படி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பிடுகளை கழித்தால்  மீதமிருக்கபோவது 88000கோடிகள் மட்டுமே. இதைவைத்துதான் மற்ற திட்டங்கள் அரசின் செலுவினங்கள் எல்லாம் சமாளிக்க பட வேண்டும்.  நிச்சியமாக புதிய கடன் சுமைகளை ஏற்றாமல் இது முடியாது. இந்த பட்ஜெட்டில் நம்முடைய தற்போதைய கடனுக்கு வட்டியாக  கட்டவேண்டியதாக காண்பிக்கபட்டிருப்பது 3.71 லட்சம் கோடிகள். இது இன்னும் உயர்ந்தால் எப்படி பணவீக்கம் குறையும்? நாட்டின் வளர்ச்சிவீதம்  எப்படி அதிகரிக்கும்?. நிதி வர்த்தகம் என இரு பிரிவிலும் பற்றாகுறை பயமுறுத்தும் இந்த நேரத்தில்  சிதம்பரம் எந்த தைரியத்தில் செலவுகளை அதிகரிக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சிக்கனம் பற்றி அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வரும் நிதியமைச்சர், விவசாயம் ஊரக வளர்ச்சி ராணுவம் போன்ற துறைகளுக்கு இவ்வளவு தாராளமாக  ஒதுக்குவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராணுவ துறையில் ஊழலின் நிழல் நீளமாகிகொண்டுவரும், ஊரக வளர்ச்சி திட்ட்தின் ஒரு அங்கமான 100 நாள் வேலை திட்டம் கடுமையாக விமர்சிக்க படும் இன்றைய சூழல்நிலையில் இத்தகைய அறிவிப்பு ஆச்சரியைத்தான் தருகிறது. மேலும்  வருவாயை அதிகரிக்க அவர் அறிவித்திருக்கும் திட்டங்களும் நம்பிக்கை தருவதாக இல்லை. பொதுத்துறை பங்குகளை விற்றும் டெலிகாம் லைசன்ஸ் கட்டணங்கள் மூலமும் திரட்டக்கூடிய தொகையாக ஆண்டைவிட இரு மடங்கு வருமானம் கிடைப்பது நிஜமாகப் போவதில்லை என்பது நிச்சியம்.வருமான வரி விலக்கு வரம்பு ஒரு அங்குலமாவது உயரும் என்று சம்பளதாரர்கள் வழக்கம்போல எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு 2,000 இனாம் வழங்கிவிட்டு, கோடீஸ்வரர்கள் பாக்கெட்டில் கைவைத்துள்ளார்.
நாட்டில்  ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு (சூப்பர் ரிச்)  10 % கூடுதல் வரி என அறிவித்திருக்கிறார். ஆனால்  அவர்களின் எண்ணிக்கை வெறும் 42,800 என்ற சொல்லபட்டதுதான் ஆண்டின் நல்ல ஜோக். அதைவிட சிறந்த ஜோக் ”சூப்பர் ரிச்சுக்கு வரியை ஏற்றி சமானியனுக்கு எந்த வரியும் போடத பட்ஜெட்” என மீடியாக்கள் வர்ணித்ததுதான். பட்ஜெட்க்கு முன்தினம் நிதி அமைச்சகம் அவர்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் நாட்டின் தற்போதைய பொருளதார நிலைமையை விளக்கும் அறிக்கையில் நாட்டில் 5 கோடிக்கு மேல் நிகர மதிப்பாக சொத்து வைத்திருப்பவர்கள் (அறிவிக்க பட்ட கணக்கின்படி) 1,25,000பேர்கள்  என்றும் மிக விலையுர்ந்த ஆடம்பரகார்களின் விற்பனை கடந்தஆண்டு 27000 எனவும் சொல்லுகிறது. இதை அடிப்படையாக எடுத்துகொண்டால் கூட1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் நிச்சியம் அதிகம் இருப்பார்கள். மேலும் இவர் கண்க்கின் படி 40000 பேர் என்று வைத்துகொண்டால் கூட இந்த கூடுதல் வரிமூலம் எவ்வளவு அதிகம் திரட்டி விட முடியும்.? அவர்களுக்கு ஒரு கோடிக்கு சற்றே குறைவாக வருமானத்தை காட்ட சொல்லிகொடுக்கூடிய ஆடிட்டர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்.?
பட்ஜெட்டினால பலனே இல்லயா?
பட்ஜெட்டை ஆழந்து நோக்கினால் நாட்டின் எதிர்காலபொருளாதார நிலை ஆபத்தான் கட்டத்திற்கு போய்கொண்டிருக்கிறதோ? என்ற அச்சத்தை தான் தருகிறது  வரும் ஆண்டுகளில் அதிக அளவில் கடன் சுமை நிச்சியமாக அதிகரிக்க போவதையும் அது நாட்டின் வளர்ச்சி வீதங்களை பாதிக்க போவதையும் மறைமுக அபாய அறிவிப்பாக இந்த பட்ஜெட் சொல்லுகிறது.
 கட்டமைப்பு துறைகளை அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட்டால் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறார்.அமைச்சர். பொருளாதார மற்றும் , சமூக ரீதியாக எழும் இதன் பின் விளவுகளின் தாக்கம் நீண்ட நாட்கள் இருக்கும் என்பது அவருக்கு புரிந்திருந்தாலும் இதை செய்தே ஆக வேண்டிய அரசியல் நிர்பந்தத்தினால் இதை அறிவித்திருக்கலாம்.
பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி துவங்குவதைஅறிவித்திருக்கிறார். எந்தவித பயனையும் அளிக்க போகாத ஸ்ட்ண்ட் இது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் சேர்மன் ஆக பதவிஉயரும் அளவிற்கு வஙகிகளில் திறமையான பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. வங்கிகள் மூலம் உதவி பெற்ற பல கோடி பெண் பயனாளிகள் இருக்கிறர்கள். நாடாளுமன்றத்தில் இன்னும் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கிட்டை சட்டமாக்க முடியாத நிலையையில் நாங்கள்தான் பெண்களுக்காக இதை செய்தோம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்து கொள்ள வேண்டுமானால் பயன் படுமே தவிர பெண்களின் வாழ்க்கை தரம் உயர இது தனியாக பெரும் அளவில் உதவ போவதில்லை..
 பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு,.
‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
 தூக்கங் கடிந்து செயல்‘‘
என்ற திருக்குறளை வாசித்தார் அமைச்சர் சிதம்பரம்.
தெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.
இதை சரியாகத்தான் செய்திருக்கிறார் சிதமபரம்.
செய்ய துணிந்திருப்பது வருமானத்தை பெருக்க வழிகள் சொல்லாது, 
காலம் கடத்தாமல் உடனே செய்திருப்பது செலவுகளை அதிகரித்திருப்பது.


உரையின் இறுதியாக, ”நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள்” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் 
உண்மைதான் இம்மாதிரி தொடர்ந்து துண்டுவிழும் மோசமான பட்ஜெட்களையும் அதனால் ஏற்படும் கடன் சுமைகளினால் உருவாகும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளையும் சந்திக்கும் வலிமை   சாமனிய இந்தியனுக்குதானே உண்டு.

19/2/13

மனித உரிமைகளை காக்க போராடும் அமெரிக்காவின் மறுபக்கம்



உலக  அளவில் மனித உரிமைமீறல்கள், சமூக அநீதிகள் சர்வதேச விதிகள்மீறல்கள் குற்றவியல் சட்டங்களை தவறாக பயன்படுத்தல்  போன்றவைகள் நிகழும் நாடுகளில் அவற்றை ஆராய்ந்து  கண்டறிந்து  வெளிச்சதிற்கு கொண்டுவந்து நீதி கேட்டு போராடும்  ஒரு அமைப்பு ஓப்பன் சொஸைட்டிஸ் ஃபவுண்டேஷன் (OPEN SOCIETY FOUNDATION). 14 நாடுகளில் அலுவலகங்களுடன் இயங்கும் இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறது.

ஜார்ஜ் ஸொரோஸ்(GEROGE SOROS) என்ற செல்வந்தரால் அரசாங்களின் ஆதிக்கத்தினால் மனித உரிமைகள் அழிக்கபடாமல் காப்பற்ற பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1979ல்  துவக்கபட்ட  ஒரு அறகட்டளை இது. இன்று  ஒரு மிகப்பெரிய  சர்வ தேச அமைப்பாக  உயர்ந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கிறது. இந்த அமைப்பின்   நீதி மற்றும் சட்டபிரிவு சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருகிறது.. அமெரிக்க அரசின் வலிமைமிகுந்த உளவுத்துறையான சிஐஏ விசாரணை என்ற பெயரில் பல இஸ்லாமியர்களை வழக்குகள், கோர்ட் ஆணைகள் எதுவுமில்லாமல்  பிடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்துகொண்டிருக்கிறது.. பல கொலைகளும் அடங்கிய இந்த மிருகத்தனமான சித்தரவதைகள் செய்யபட்டது  அமெரிக்காவில் இல்லை. உலகின் மற்ற பல நாடுகளில், சிஐஏ நடத்தும் அதிகார பூர்வமற்ற ”கறுப்பு சிறை”களில். இந்த மாதிரி சித்திரவதைகளை அமெரிக்க அரசு செய்ய ஆரம்பித்ததின் நோக்கம்,  இந்த சிறைகள் இருக்கும் நாடுகள், இதுவரை கொடுமைபடுத்தபட்டவர்களின்  எண்ணிக்கை ஆகியவைகளை மிக தெளிவாக விரிவாக பதிவு செய்திருக்கிறார் இந்த அறிக்கையை தயாரித்தவர்.216
பக்கங்களில்1600 க்கும் மேற்பட்ட ஆவணங்களின் சான்றுகளுடன் புத்தகமாக வெளிவந்திருக்கும்  இந்த அறிக்கையின் சிலபகுதிகளை அதுவும் சித்தரவதைகள் செயப்பட்ட முறைகளை அனுபவித்தவர்களின் வார்த்தைகளில் பதிவு செய்யபட்டிருப்பதுபடிப்பவரின் மனதில் வலியை உண்டாக்கும்..அறிக்கையில் பாக்கிஸ்தான் உள்பட இம்மாதிரி கறுப்பு சிறைகள் இருக்கும் 54 நாடுகள் பட்டியிலிடப் பட்டிருக்கிறது.  ஆப்கானில் துவங்கி அகரவரிசையில் பட்டியலிடபட்டிருக்கும் நாடுகளில் அதிகம் அறிமுகம் இல்லாத குட்டி நாடுகளிலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி டென்மார்க் போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகளும் அடக்கம். அதில் இந்தியாவின் பெயர் இல்லாததில் ஒரு நிம்மதி.  இல்லாதிருப்பதின் காரணம் நமது அரசின் ராஜதந்திரமா அல்லது நம்நாட்டின் மீது அமெரிக்காவிற்கு நமபிக்கையில்லையா? என்பது தெரியவில்லை.
 இந்த சிறைகளில் சித்தரவதைக்குள்ளான 136 பேர்களின் பெயர்,பின்னணி, எங்கே எப்படி கைது செய்யபட்டு, எந்த சிறைக்கு என்று கொண்டு செல்லபட்டார்கள் போன்ற விபரங்களையும் அவர்கள் அனுபவித்த தண்டனைகளையும்  இந்த அறிக்கை விவரிக்கிறது..  
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த அதிபயங்கர தீவிர வாத தாக்குதலின் பின்விளைவாக  அமெரிக்க அரசு எடுத்த முடிவுகளில் ஒன்று சிஐஏக்கு வழங்கபட்ட  சில சிறப்பு அதிகாரங்கள்.  உலகம் முழுவதும் இருக்கும் தீவீரவாதிகளை அந்த நாட்டு அரசுகளின் உதவியுடன் சிஐஏ தேடிகண்டுபிடித்து விசாரணை குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை  ஒரு ரகசிய சிறையில் சிஐஏ  தீர விசாரித்து யார் அந்த தீவிர வாதி,யார் அந்த குழுவின் மூளை எனபதை கண்டறிந்து தண்டிக்கும். இதற்காக சிஐஏ மேன்மைபடுத்த பட்ட சில விசாரணை டெக்னிக்களை கையாளாலாம். என்பது தான் அந்த ரகசியமாக வழங்கபட்ட  சிறப்பு அதிகாரம். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆல் வழங்கபட்டது. கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்த இந்த விசேஷ அதிகாரத்தை மேலும்  நீட்டிப்பு செய்திருப்பவர் ஒபாமா.
இதைப் பயன் படுத்தி உலகின்  பல பகுதிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இயங்கும் தீவீரவாத அமைப்புகளுக்கு உதவுபவர்களை கண்காணித்து அவர்களை குண்டுகட்டாக  தூக்கி இரவோடு இரவாக ஒரு தனிவிமானத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலிருக்கும் கறுப்பு சிறைக்கு “விசாரணைக்கு” கொண்டு போய்விடுவார்கள். இந்தமாதிரி சிறைகள் அந்த நாடுகளில் அடர்ந்த காட்டு பகுதிக்குள்ளாகவோ, அல்லது ஆளரவமற்ற ஒரு தீவுபகுதியிலோ இருக்கும். அந்நாட்டினருக்கே இப்படி பட்ட  சிறைகள்  தங்கல் நாட்டில் இயங்குவது தெரியாது.    தான் எங்கே கொண்டுவரபட்டிருக்கிறோம்  என்பது அப்படி கொண்டுவரப்பட்டவருக்கு தெரியாதது மட்டுமில்லை, அந்த கருப்பு சிறை இருக்கும் நாட்டின் அரசுக்கு கூடகொண்டுவரபட்டிருப்பவர்கள் யார் என்று தெரியாது. காரணம் எங்கும் இவர்களின் பயணம் பதிவு செய்யபடுவதில்லை.  இரவு நேரங்களில் விசேஷ அனுமதியுடன் தரையிறங்கும் சிஐஏயின் விமானம் அங்கிருந்து ”சிலசரக்குகளுடன்” திரும்பியதாக விமான நிலையங்களில் பதிவு செய்யப்படும். தேச பாதுகாப்பை காரணம் காட்டி அந்த  விபரங்கள் கூட வெளியே அறிவிக்கபடுவதில்லை. அரசாங்கள் செய்யும் பயங்கரமான ஆள் கடத்தல்கள் இது என சொல்லுகிறார் புத்தக ஆசிரியர்.  கறுப்பு சிறையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளும்.சிஐஏ அதிகாரிகளும் விசாரணைய தொடர்வார்கள். மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள். சித்திரவதைகள் இங்கே அரங்கேறும். நிர்வாணமாக நிற்க வைத்து அடிப்பது, நாய்களை கடிக்க விடுவது,   உடலில் வயர்களை இணைத்து தொடர்ந்து மெல்லிய மின்சாரம் செலுத்தி நீண்ட நேரம் நிற்க செய்வது போன்ற பல தண்டனைகள். சிலர் இத்தகைய கொடுமைகளுக்கு பின்னர் தவறாக கொண்டுவரபட்டவர்கள் என முடிவு செய்யபட்டு  விடுதலையும் செய்யபட்டு கொண்டு வரப்பட்டதைபோலவே திருப்பி கொண்டுவிடபட்டும் இருக்கிறார்கள்
தீவிர வாதிகளை கண்டுபிடிக்க அமெரிக்க அரசு செய்யும்  இந்த சட்ட விரோதமான மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு  எப்படி பல நாடுகள் -கிட்டதட்ட உலகின் கால்பங்கு நாடுகள்= ஆதரவளிக்கின்றன் என்பது ஒரு ஆச்சரியம். செப் 11 நிகழ்விற்கு பின்னர் உலகம் முழுவதும் தீவிர வாதம்  மிகவேகமாக தலையெடுத்து கொண்டிருக்கிறது. அடுத்த இலக்கு உங்கள் நாடாகவே இருக்கலாம்  என்று  பெரிய நாடுகளை நம்ப வைத்திருக்கும்,    உலக அமைதியை காக்கும்  போலீஸ்காரனாக தன்னை சித்தரித்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர டெக்னிக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. சிறிய நாடுகள் பொருளாதார ரீதியில் அச்சுறுத்தபடுகின்றன. அண்டை நாடுகளுடன் போரிடும் நாடுகளுக்கு ஆயூதங்கள் வழங்கி  அமெரிக்கா தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.. சட்டம் நீதி ஆகியவைகளின் வரம்புகளை தாண்டி அமெரிக்க அரசு  இப்படி செய்வதை அந்த மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?  மாற்றம் வரும் என் முழங்கி முதல் முறை ஆட்சிக்கு வந்த ஒபாமா ஆப்கானிஸ்தானலிருந்து, ஈராக்கிலிருந்து போர்ப்டைகளை வாபஸ் பெறுவேன் என அறிவித்ததற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.  ஆனால் அதைமுழுவதுமாக இன்னும் செய்யவில்லை. இரண்டாம் முறை வெற்றிக்கு பின் உலக அமைதிக்காக அமெரிக்கா செய்யவேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது என்று தன் நன்றி அறிவிப்பில் சொல்லியது, -தங்கள் பாதுகாப்புக்காக தங்கள் அரசாங்கம் என்ன செய்தாலும் பரவயில்லை- என்ற பெரும்பாலான அமெரிக்க மக்களின் எண்ணங்களின்  பிரதிபலிப்பு தான்
அதனால் இப்படி உலகம்முழுவதும் அமெரிக்கா தன் சித்தரவதைடெக்னிகளை பரப்பிகொண்டிருக்கிறது என்பதால் தன் புத்தகத்திற்கு ”உலகமயமாகும்  சித்திரவதைகள் என பெயரிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர். முழு அறிக்கையியும்XXXX இணைய தளத்தில் படிக்கலாம்
  2009ல் வெளிவந்து உலகையே உலுக்கிய இராக்கின் போர்கைதிகள் அபு கரீஹி(Abu ghraih)  என்ற சிறையில்  மிக மோசமாக சித்தரவதை செய்யப்பட்ட போர்க்கைதிகளின் படங்களும் வீடியோக்களும் நினைவிருக்கிறதா? அதையும் அது சம்பந்தபட்ட அத்தனை ஆவணங்களையும்  அமெரிக்க அரசின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  பல கோர்ட்களில் போரடி அதிகாரபூர்வமாக பெற்று  வழக்கு தொடர்ந்து அந்த சிறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிகொடுத்த வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.  அதன் தொடர் விளவாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுந்ததுதான்  இந்த புத்தகம்.. உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நபரை சித்தரவதை செய்வது என்பது அமெரிக்காவில் மட்டுமிலை எந்த நாட்டிலும்  சட்டபடி குற்றம். கடந்த 10 ஆண்டுகளாக அதை பயன்படுத்தி பெரிய உண்மைகளை  எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என்பதையும், மாறாக இத்தகைய சித்திரவதைகளினால் தீவிரவாதம் உலகம் முழுவதும் வேகமாக வளர்கிறது என்பதையும்  முன்னாள் சிஐஏ அதிகாரிகளின், செனட்டர்களின் பேட்டிகள் மூலம் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு  இந்திய பெண். பெயர் திருமதி அம்ரித் சிங். அடே! சபாஷ் என நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் ஆச்சரியமான அடுத்த செய்தி அவர் நம் பிரதமர் மன்மோஹன் சிங்கின்  இளைய மகள்.

தன் தந்தையைபோல, தன் மூத்த இரண்டு சகோதரிகள் போல(ஒருவர் பேராசியர்) நிறைய படித்தவர் கேம்பிரிட்ஜிலும், ஆக்ஸ்போர்டிலும் பொருளாதாரம் படித்த இவர்  சர்வ தேச நிதி ஆணையத்தில் எக்கானமிஸ்டாக பணிபுரிந்த பின் யேல் பல்கலைகழகத்தில் சட்டம் படித்து நியூயார்க் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். 2009ல் இந்த அமைப்பில் நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் தீவீரவாத தடுப்பு பற்றி ஆராயும் பிரிவில் மூத்த சட்ட வல்லுனராக பணியாற்றுகிறார்.
பின்விளைவுகளை எதிர் நோக்கும் துணிவுடன் அமெரிக்காவின் அருவருப்பான மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியிருக்கும் திருமதி அம்ரித் சிங் தான் உண்மையான சமூக நீதி காக்கும் விராங்கனை.

புதிய தலைமுறை 14/2/13 






23/9/12


மனது வைத்தால் நிச்சயம் மாற்றம் இங்கே சாத்தியம்

புதியதலைமுறை 20/9/12 இதழ்






இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்







இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்

குஜராத் மாநிலத்தில் ஒரு சிறு கிராமம். அங்கிருந்த விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை. தங்களது பசு, எருமை மாடுகளிடமிருந்து கறந்துகொண்டு வரும் பாலை போல்சன் டைரி என்ற நிறுவனத்திடம் விற்பனைக்காக ஒப்படைப்பார்கள். ஆனால் பணம் வராது. காரணம், விற்பனைக்காக மும்பைக்கு அனுப்பப்படும் அந்தப் பால் மும்பை போய்ச் சேர்வதற்குள் திரிந்துவிடும். கெட்டுப்போன பாலுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

அந்த மக்களுக்கு உதவ விரும்பினார், சர்தார் வல்லபாய் படேலின் சீடரான திருபுவன்தாஸ் படேல். அந்த மாவட்டத்தில் இருந்த விவசாயிகளைக் கொண்டு கூட்டுறவுப் பால்பண்ணை ஒன்றை உருவாக்கினார். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. அங்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டார். ‘பாலை நீங்கள் பதப்படுத்தினால்தான் அது விரைவில் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் பிளேட் பாஸ்ட்ரைசர் என்ற ஒரு இயந்திரத்தை வாங்க வேண்டும்’ என்றார் இளைஞர். ‘ஆனால் அது உங்களால் முடியாது’ என்றார். ‘ஏன்?’ என்றார் திருபுவன்தாஸ். ‘அதன் விலை 60 ஆயிரம் ரூபாய்’ என்றார் இளைஞர். 1949ல் அறுபதினாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை. ‘முடியும், நம்மால் முடியும்’ என்ற திருபுவன்தாஸ், கிராமத்து மக்களிடம் பேசினார். நூறு, இருநூறு எனச் சிறுகச் சிறுக ஒவ்வொருவரும் பங்களித்தனர். அந்த இளைஞர் அசந்து போனார். எளிய மக்களைக் கொண்ட கூட்டுறவு இயக்கம் எத்தனை வலிமையானது என அவருக்குப் புரிந்தது. பயிற்சி முடிந்து ஊரைவிட்டுக் கிளம்பவிருந்த அவர், அங்கேயே தங்கி அந்த இயந்திரத்தை நிறுவினார். அதன் பின் கடந்த ஞாயிறன்று தனது 90வது வயதில் இறந்து போகும்வரை அதுவே அவரது வாழ்விடமாயிற்று.

பாலைப் பதப்படுத்த முடியும் என்று தெரிந்ததும், பால்வரத்து அதிகமாயிற்று. அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. திரவமாக இருப்பதால்தானே பால் கெட்டுப் போகிறது, அதைப் பவுடராக்கி விட்டால்? என அவர் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஐரோப்பாவிலும், நியூசிலாந்திலும் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இங்கு அதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஐரோப்பாவில் கொழுப்புச் சத்து குறைந்த பசும்பாலில் இருந்து பவுடர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இங்கு கிடைப்பது எருமைப்பால்.

அந்தக் கிராமத்தில் உருவாகி இருந்த நவீன பால் பதப்படுத்தும் நிலையத்தைப் பார்வையிட வந்திருந்த நியூசிலாந்து நாட்டின் பால்வள ஆராய்ச்சி நிலையத் தலைமை அதிகாரி, அதன் கட்டமைப்பைக் கண்டு அசந்துபோனார். நிலையத்தின் நிர்வாகியாகயிருந்த அந்த இளைஞரைப் பெரிதும் பாராட்டி, ‘இவ்வளவு புத்திசாலியாகயிருக்கும் நீ ஏன் முட்டாள் தனமாக, உலகில் யாராலும் செய்ய முடியாத திட்டத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டபோது அந்த இளைஞர் சொன்ன பதில், ‘இதை நான் செய்து காட்டுவேன்.’

சொன்னபடியே செய்துகாட்டி, உலகிற்கே அந்த விஷயத்தில் வழிகாட்டினார் அந்த இளைஞர். அவர் வர்கீஸ் குரியன், செய்த விஷயம், எருமைப்பாலைப் பயன்படுத்தி பால் பவுடர் தயாரிப்பது. இன்று இந்தியா ஆண்டுக்கு 65,000 டன் பால் பவுடர் தயாரிக்கிறது. இது நியூஸிலாந்து தயாரிப்பதைவிட பல மடங்குகள் அதிகம்.

பால் விநியோகம், பால் பவுடர் என வர்த்தகம் விரிந்து கொண்டிருந்தபோது, அவர் அந்தக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களிடம் சொன்னார்: ‘நாம் இப்படியே பாலை வாங்கி விநியோகிக்கிற அமைப்பாகவே இருந்தால் முன்னேற முடியாது. நாம் மார்க்கெட்டிங்கில் இறங்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ‘பிராண்ட்’ வேண்டும்.’ அப்போது உருவானதுதான் அமுல். Anand Milk Union Limited என்பதன் சுருக்கம்தான் அமுல். ஆனந்த் என்பது அந்தக் கிராமத்தின் பெயர்.

அமுல் செய்த புரட்சி ஒரு வரலாறு. நெஸ்லே, பிரிட்டானியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு தன் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது அமுல். இன்று இதன் வெற்றியை கோ ஆப்ரேட்டிவ் கேபிடலிசம் என வகுப்பறைகளில் போதிக்கிறார்கள்.

ஆனால் அமுலின் உண்மையான வெற்றி, கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகளை ‘முதலாளி’களாக்கியது. இன்று இந்தியாவிலேயே பாலுக்கு அதிகக் கொள்முதல் விலை கொடுப்பது, குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்புத்தான். 1948ல் 430 பேரிடமிருந்து நாளொன்றுக்கு 5,000 லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருந்த அமுல், இன்று 30 லட்சம் பேரிடமிருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்கிறது.
 

அமுலின் பிசினஸ் மாடல் இன்று இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் இன்று இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.
 

ஆச்சரியமான விஷயம்... ஓசையில்லாமல் இந்தப் புரட்சியை நிகழ்த்திய குரியன் பால் அருந்துவதில்லை. ‘எனக்குப் பால் பிடிக்காது என்பார் அவர். குரியன் சென்னையில் படித்தவர். 1940ல் சென்னை லயோலா கல்லூரியிலும் பின், கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்த இவர், வெளிநாட்டில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தாத்தா ஜான் மத்தாய், இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். அவர், டாடா குழுமத்தைச் சேர்ந்த டிஸ்கோவின் தலைவராக இருந்தபோது குரியனுக்கு டிஸ்கோவில் வேலை போட்டுக் கொடுத்தார். அந்த வேலையையும் பின், யூனியன் கார்பைடில் கிடைத்த வேலையையும் விட்டுவிட்டு அந்த குஜராத் கிராமத்திலேயே தன் வாழ்நாள் முழுதும் தங்கி விட்டார்.

அதன் பலன் அந்தக் கிராமத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கிடைத்தது. இளைஞர்கள் மனது வைத்தால் இந்தியாவை மாற்ற முடியாதா என்ன?










19/8/12


அந்த 7 நிமிடங்கள்..

23/08/12 புதிய தலைமுறை இதழில் எழுதியது


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஏஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவாய் கிரக ஆராய்ச்சி நிலையம். பூமியிலிருந்து பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்கான மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது இது. 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த கூடத்தில் பல இந்தியர்கள் பணியிலிருக்கின்றனர்.. கடந்த 7 ஆண்டுகள் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவந்தன, முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது “கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   மேற்கூறையில்லாத காரைப்போல் ஒருடன் எடையில் அமைக்கபட்டிருக்கும் இது அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு குட்டி  நடமாடும் லாபரட்டிரி. செய்வாயின் நில பரப்பில் கிடைக்கும் சாம்பிள்களை அதன் உள்ளேயே சோதனையிட்டு முடிவுகளை பூமியிலுள்ள மிஷின் கண்ட்ரோலுக்கு  உடனுக்கு உடன் அனுப்பும் வசதிகளை கொண்டது. 13 கேமிராக்களுடன் 6 சக்கரங்களுடன் இருக்கும் இது தரையிலிருக்கும் கட்டுபாட்டில் இயங்கும்.  8000 விஞ்ஞானிகள், பொறியாளார்களின் 7 ஆண்டு கடின உழைப்பில் உருவான இதற்கான செலவு 13000கோடி ரூபாய்கள். 2009ம் ஆண்டு இதில் ஒரு சின்ன சிப்பில் (சிம்கார்டுபோன்றது)  விரும்புகிறவர்கள் பெயர்களை அனுப்பினால் பதிவு செய்து அனுப்ப போகிறோம் என்ற இவர்களது அறிவிப்புக்கு வந்தகுவிந்த பெயர்கள் ஒரு கோடிக்கும் மேல்.   செவ்வாய்கிரகம்  சந்திரனைவிட மிக தொலைவிலிருப்பதால் அந்த நீண்ட பயணத்தை தாங்கதேவையான பல வசதிகளுடன் அமைக்கபட்டிருந்த இது கடந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தபட்டது. அதன் 8 மாத பயணத்தை மிக கவனமாக தினசரி கண்காணித்துவந்தனர் கண்ட்ரோல் ரூமிலிருந்த ஸ்பெஷலிஸ்ட்கள். மிக கடுமையாக உழைக்கும் இவர்கள் மீடியாவை கவனமாக தவிர்ப்பவர்கள். பயணம் திட்டமிட்டபடி போய்கொண்டிருப்பதில் சந்தோஷமாகயிருந்தாலும்  அதன்  கடைசி கிளைமாக்ஸான   ஆகஸ்ட் 5 தேதிக்காக காத்திருந்தார்கள். அன்று செவ்வாய் கிரகத்தில் இறங்கி விடும் என்பது கணிக்கபட்டிருந்தாலும், காலையிலிருந்தே அனைவருக்கும் பரபரப்பு.. ஆகஸ்ட் 5 என அச்சிடபட்டிருந்த நீலவண்ண டி ஷர்ட் அணிந்தவர்கள் நிரம்பியிருந்த அந்த அறை   டென்ஷனலில் உறைந்திருந்தது. கியூரியாஸிட்டி செவாய்கிரகத்தை மெல்ல நெருங்கியதை ஸ்கிரினில் பார்த்த்தும்  கைதட்டியவர்களை மிஷின் டைரக்டர் கையை உயர்த்தி அமைதிபடுத்தினார்.   அடுத்து சில நிமிடங்களில்  41 அடி விட்ட பெரிய பாரச்சூட் மெல்ல விரிய அதிலிருக்கும் கியூராஸிட்டி  மிதந்து செவ்வாயின் மண்ணை  தொட்டதும். அந்த அறை சந்தோஷத்தின் உச்சத்தில் அதிர்ந்தது. வாழ்த்துக்கள்  அணைப்புகள் முத்தங்கள் என ஒரே ஆரவாரம். இந்த  இறுதிதரையிரங்கல்தான் திட்டத்தின் முக்கிய கட்டம். ஈர்ப்பு சகதி இல்லாத நிலையில் அது கடினமான ஒரு பாறையில் மோதி நொறுங்கிவிட்டால் இத்தனைபேருடைய கடின உழைப்பும் வினாடியில் விணாகிவிடும் தரையில் உட்கார வைத்திருக்கிறார்கள்.   திட்டமிட்டபடி வெற்றிகரமாக  கலம் தரையிறங்கியதை திரையில் பார்த்ததும் நீர் நிறைந்த கண்களுடன்   “  ” “இப்போது நிம்மதியாகயிருக்கிறது. அந்த கடைசி 7 நிமிடங்கள் பயங்கரமானது’’”  வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. “  என்று சொன்னவர் இந்த தரையிறங்கலை மிக கவனமாக  திட்டமிட்டு தந்த வல்லுனர் குர்கிர்பால்சிங்.(Dr.Gurkirpal Singh)   இவர் ஒரு இந்தியர், என்பதை அறிந்து  நாசாவின் உதவியுடன்  உடனடியாக புதிய தலைமுறைக்காக போனில்  தொடர்பு கொண்ட   பேசிய போது...


.  

இந்த வரலாற்று சாதனை வெற்றியில் உஙகள் பணியும் முக்கியமானது என்று அறிகிறோம். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.  உங்களது பூர்வீகம்,  இளமைக்கால  இந்திய வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.
 லூதியானவில் பிறந்தவன் நான். 1976லில் நான் பள்ளி இறுதியாண்டிலிருந்தபோது முதன் முதலில் நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சி  பணிகளை துவக்கியிருந்தது.வைகிங் என்ற குட்டி விண்கலம் ஏவப்பட்டிருந்தது. அந்த செய்திகளால் பிரமித்துபோயிருந்தேன். தொடர்ந்து படித்த, சேகரித்த தவல்களால் ஆர்வம் அதிகரித்து ஏரோநாட்டிகல் என்ஞ்னியராகி எதிர்காலத்தில் நாசாவில் வேலைக்கு சேர்ந்து செவ்வாய்க்கு போக ஒரு விண்வெளிகலம் டிஸைன் செய்ய வேண்டும் என கனவு காண ஆரம்பித்துவிட்டேன். விரும்பியபடி  சண்டிகர் என்ஞ்னியரிங்கல்லூர்யில் ஏரோநாட்டிக்கில் சீட் கிடைத்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைகழகத்தில் 1984லில் எம்.எஸும், 1988ல் பிஹெச்டியும் முடித்தேன். என் வாழ்க்கைகனவான நாசாவில் 1989ல் பணிசெய்யும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கே பணியிலிருக்கிறேன்.
எந்த மாதிரியானது உங்கள் பணி.?
கலிபோர்னிய மாநிலத்தில் பஸாடினா எனற இடத்தில் செவ்வாய் கிரக் ஆராய்ச்சிகளுக்கென்றே  நாசாவால் துவக்கபட்டது மார்ஸ் சைன்ஸ் லேபரட்டரி (NASA’s Mars Science Laboratory MSL)  அதன் ஒரு அங்கம் நான் பணி செய்யும் ஜெட் ப்ரொப்புல்ஷன் லேபரட்டரி   (Jet Propulsion Laboratory ) ஒரு விண்கலத்தை செலுத்தி அதை அதன் பாதையில் போக செய்ய  கம்ப்யூட்டர்களுகு கட்டளைகளைத் தயாரித்து டிசைன் செய்வது தான் எங்கள் அணியின்முக்கியபணிகலீலியோ,மார்ஸ் பாத்பைண்டர்  காஸினி போன்ற பல பிராஜகெட்களில்  தொடர்ந்து பணியாற்றி இப்போது நாசா நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறேன். என் மாணவ பருவ கனவை நனவாக்கும் வாய்ப்பு  இந்த கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்  கிடைத்திருப்பதால்  இதில் பணியாற்றிகொண்டிருப்பதை எனக்கு கிடைத்தை மிகப்பெரிய  அதிர்ஷ்ட்மாகவே கருதுகிறேன்.
கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்   உங்கள் பஙக்ளிப்பு என்ன எனபதை சுருக்கமாக சொல்ல முடியமா?
ஆகஸ்ட் 5 அது செவாய்யில் தரையிறங்கியதை உலகமே பார்த்தது. மிக சவாலான அந்த விஷ்யத்தை மட்டும்  6 ஆண்டு உழைப்பில் டிசைன் செய்தோம்.  E D L (ENTRY – DESENT- LANDING )  என்று அழைக்கபட்ட இந்த முறையில் தான் கலம் செவ்வாயில் இறங்கியது. இதுவரை முயற்சிக்காத புதிய முறையில் ஒரு பாராசூட்டை பயன்படுத்தி  மிக வேகமாக இறங்கும் கியூரியாஸிட்டி கலத்தின் வேகத்தை கட்டுபடுத்தி அதன் கடைசிகட்டதில் பாராசூட்டிலிருக்கும் ஒரு கிரேன் மூலம்  கலத்தை இறக்கும் முயற்சி அது. இதில் முக முக்கிய சவால்  செவ்வாய் கிரகத்தின் மேல்  ஒரு மைல் உயரத்தில் மணிக்கு 180 மையில் வேகத்தில் இறங்கிகொண்டிருக்கும் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1.7 கீமி வேகத்திற்கு குறைக்க வேண்டும். அதற்கு பாரசூட்டிலிருக்கும் ஒரு குட்டி ராக்கெட்டின் வேகத்தை எதிர்ப்பு விசையில் கட்டுபடுத்தபட வேண்டும். இவை அனைத்தும்  7 நிமிடங்களுக்குள் நடைபெறவேண்டும்.(இதுதான் அந்த 7 நிமிடம்)   எங்களது ஜெ‌பி‌எல் லேப்  தயாரித்து  பல முறை பரிசோதித்துபார்த்த  டிசைனைதான் நாசாவின் மார்ஸ் ஸைன்ஸ் லேபரட்டரி பயன்  இறுதிகட்டத்தில் பயன் படுத்தியிருக்கிறது.
இந்திய விண்வெளிபயண திட்டங்களில் செவாய்க்கு கலம் அனுப்பும் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில் நீங்கள்  பணியாற்றும் வாய்ப்பு உண்டா?
இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் வேர்கள் இந்தியாவிலிருப்பதை மறக்க முடியாது. என் நெருங்கிய சொந்த்தங்கள் டெல்லியிலும் சண்டிகரிலும் வாழ்கிறார்கள். வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியா வருகிறேன். இந்திய விண்வெளி திட்டம் நாசாவுடன் இணைந்த திட்டமாகயிருந்தால் ஒரு வாய்ப்பு கிட்டலாம். கிடைத்தால் மிகுந்த மகிழச்சியுடன் செய்வேன்.
ரமணன்

15/8/12


அழுகையில் அசாம்

(புதிய தலைமுறை19/8/12 கவர் ஸ்டோரிக்காக எழுதியது)

 

 

ஒரே இரவில் 400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள். இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன. என்ன நடக்கிறது அசாமில்?
ஒரே இரவில்-400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள்.
இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன.
கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தார்கள்.
இதையடுத்து அசாம் மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் ரயில்களும் பஸ்களும்  ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊர் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள் 25 ஆயிரம் பேருக்குமேல்.
ஊரடங்கு சட்டத்தின்கீழ் பல நகரங்கள்
போர்க்களத்திற்குப் போவதுபோல ராணுவம்  நகரங்களில் வந்திறங்கியது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இத்தனை பெரிய அளவில் ஓர் இனக்கலவரம் நிகழ்ந்ததில்லை. வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் ஏதோ ஒரு நாள் சிறு நடை நடந்தவர்கள் கூட அவற்றின் சலசலக்கும் நதிகள், மேலே வந்து விழும் சிறு தூறல், மெல்லக் கவியும் மஞ்சு, கம்பீரமான அந்த மலைகள் இவற்றில் தன்னை இழக்காமல் இருக்க முடியாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள் கூட அந்தப் பகுதியின் வரலாற்றை வாசிக்க நேர்ந்தால் மனதில் ஓர் எழுச்சி பிறக்கும். அந்தப் பகுதியின் முக்கிய மாநிலமான அசாமில் இன்று இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சினை?
ஜூலை 20ம் தேதி கோக்ரஜாஹர் என்ற ஊரிலுள்ள பி.கே. சாலை என்ற நெடுஞ்சாலையில் போரோலாந்து விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேரை, இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். போரோலாந்து விடுதலைப்புலிகளுடன் பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

யார் இந்த விடுதலைப்புலிகள்?

அதைப் புரிந்துகொள்ள அசாமை சற்று ஆழ்ந்து ஊடுருவிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 350 இனக்குழுக்களைச் சேர்ந்த மூன்றரைக் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தப் பகுதியோ, மியான்மர், சீனா, பூடான், வங்கதேசம் என்ற நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியின் எல்லைகளில் 98 சதவிகிதம் இந்த அண்டை நாடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது. 2 சதவிகிதம்தான் இந்தியப் பகுதிகளோடு இருக்கிறது. இந்த எல்லா நாடுகளும் நிலத்தால் பிணைக்கப்பட்டவை. அசாம் மக்கள் அவ்வப்போது சொல்வதுபோல அவர்களுக்கு, ‘இந்தியாவிற்குப் போவதைவிட வங்கதேசத்திற்குப் போவது எளிது’.
350 இனக்குழுக்கள் என்கிற விஷயம் மானுடவியல் ஆராச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால், நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு அது பெரும் தலைவலி. ஏதேனும் ஒரு குழுவை திருப்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்ற ஐந்து குழுக்களின் கோபத்தை சம்பாதித்துவிடும்.

அசாமில் உள்ள இந்த இனக்குழுக்களில் முக்கியமானது போரோ (ஆங்கிலத்தில் Bodo என எழுதப்படும் இந்தக் குழுவின் சரியான உச்சரிப்பு இதுதான்). இனக்குழுவினர் என்றால் ஏதோ தோலாடையும், இறகுத் தொப்பியும் அணிந்த காட்டுவாசிகள் என நினைத்து விடக் கூடாது. இவர்கள் சமவெளியில் வாழ்கிற பழங்குடி மக்கள். தங்களுக்கென தனி மொழி, கலாசாரம்,வழிபாட்டு முறைகள் கொண்ட இனக் குழுவினர் இவர்கள். வங்க மொழி, பர்மீய மொழி இவற்றின் வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதி வந்த இவர்கள், அண்மைக்காலமாக தேவநாகரி வரிவடிவங்களைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். நெல், தேயிலை இவற்றைப் பயிரிடும் முறைகள், பன்றி, கோழி வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு இவற்றை அசாமில் அறிமுகப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.
அசாம் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் அளவிற்கு உள்ள இந்தக் குழுவினர் பிரம்மபுத்ராவின் வடகரையில், பூட்டான் மலைச்சாரலில் அமைந்துள்ள பகுதிகளில் கணிசமாக வசிக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் பகுதியை போரோலாந்து என்று அழைக்கிறார்கள். கோக்ரஜாஹர் என்ற நகரம்தான் இந்த போரோலாந்தின் தலைநகர்.
இந்தப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தது. உயர்கல்வி நிலையங்கள், வெகு தொலைவிலுள்ள குவாஹாத்தி, ஷில்லாங், திப்ரூகர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. அவ்வளவு தொலைவு சென்று படித்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. எஸ்.டி. பிரிவின்கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது என்றாலும் பல பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த இட ஒதுக்கீட்டினால் அவர்களுக்குப் பலன் கிடைக்கவில்லை. அசாம் மொழி பேசும் மக்களே வேலைகளை ஆக்ரமித்துக் கொள்வதாக இவர்கள் நினைத்தார்கள். அதனால், மாணவர்கள் கொதிப்போடு இருந்தார்கள்.
அவர்களுக்கு முந்திய தலைமுறையினர், 1960களில் தங்களது மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களை, ‘உதயச்சல்என்ற யூனியன் பிரதேசமாகப் பிரிக்கக் கோரி அரசியல் கட்சி அமைத்துப் போராடினர். ஆனால், மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம், இதேபோன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய வேறு ஒரு பழங்குடி மக்களுக்காக அசாமிலிருந்து பிரித்து மேகாலயா என்ற மாநிலத்தை உருவாக்கியது.
ஆத்திரமடைந்த போரோ மக்கள், 1987ம் ஆண்டு, ‘அசாமை இரு சமபாதிகளாகப் பிரிஎன்ற முழக்கத்துடன் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உபேந்திரநாத் பிரம்மா என்பவரின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். போரோ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1993ம் ஆண்டு போரோ மக்கள் வாழும் பகுதிகளின் நிர்வாகத்தை, அசாம் மாநிலத்திற்குள்ளேயே தன்னாட்சி உரிமைகள் கொண்ட போரோ டெரிட்டோரியல் கவுன்சில் (BTC) வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியலின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்கள் கொண்டது. மாநில அரசின் சட்டங்களோ, மத்திய அரசின் சட்டங்களோ, இந்த கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இந்தப் பகுதியில் செல்லாது. மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவின்கீழ் முதன் முதலில் இடம் பெற்ற சமவெளிப் பழங்குடியினர் போரோக்கள்தான்.

முரண்பாடுகளால் மோதல்

முரண்-1

நாளடைவில் அகதிகளாக இங்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்களின் ஜனத்தொகை மெல்ல மெல்லக் கூட ஆரம்பித்து இன்று மாநில ஜனத்தொகையில் அவர்கள் 50 சதவிகிதத்துக்கும் மேல். இவர்களில் பலர் சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள். போரோ மக்கள் அதிகம் வாழும் பகுதியிலும் இவர்களது எண்ணிக்கை போரோ மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது.
இப்போது அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் மூன்றிலொரு பகுதியினர்தான் போரோ மக்கள். மற்றவர்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல். ஆனால் ஆட்சி அதிகாரம், போரோ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிடிசியிடம் இருக்கிறது. இதனால் போரோ இனத்தைச் சேராத மக்களிடம் ஒருவித அச்சமும் சங்கடமும் நிலவுகிறது. அதனால், அவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களை பிடிசியின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதே சமயம் போரோக்கள் தங்களது அதிகாரம் பறி போய்விடுமோ எனப் பதட்டமடைகிறார்கள் .

முரண்-2

இந்தப் பகுதியிலுள்ள நிலங்கள் போரோ இனத்தவருக்கு என  ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் மற்றவர்கள் நிலம் வாங்கத் தடையில்லை. சிறுபான்மை சமூகத்தினர் மெல்ல மெல்ல போரோக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை வாங்க ஆரம்பித்து சில கிராமங்களை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். எந்தக் காரணத்திற்காக பிடிசி உருவாக்கப்பட்டதோ அந்த மூல நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்கிவிட்டது என போரோக்கள் குமுறுகிறார்கள்.
நிலம் வாங்குவது தடை செய்யப்படாததால், அண்டை மாவட்டத்திலிருந்து இந்த மாவட்டத்திற்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்க அண்டை மாவட்டத்தின் எல்லை மூடி, சீல் வைக்கப்பட வேண்டும் என போரோக்கள் கோருகிறார்கள்.
இந்த மாவட்டங்களில்தான் இப்போது வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அந்தியர் தூண்டுதலா?

இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்களாதேசத்திலிருந்து ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் உதவுகிறார்கள் என்று போரோக்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசு அதை மறுத்து வருகிறது.
இந்தப் பகுதியில் இத்தனை கடுமையான இனக் கலவரம் மூண்டிருப்பது எங்கோ வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது பதற்றம் நிறைந்த ஒரு சென்சிட்டிவான பகுதி, அதுவும் அண்டைநாடுகளால் சூழப்பட்டுள்ள பகுதி என்பது அரசுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியும் அது அலட்சியமாக இருந்து விட்டது. காரணம்? வாக்கு வங்கி அரசியல். யார் மீதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அந்த வகுப்பினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் சார்ந்த அரசியல் நோக்கு. இப்படியே போனால்-
அரசியல்வாதிகள் வாக்குகளைக் காப்பாற்றிக்கொள்ள நாம் தேசத்தையே இழந்து விடும் நாள் அதிக தொலைவில் இல்லை.
 ரமணன்


5/12/10


எண்ணங்களின் வரைபடம்

எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் திறமையான திட்டமிடலிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயம். திட்டமிடுவதில்  வெறும் மனத்தளவில், நெருங்கியவர்களின் ஆலோசனையின்படி,  வரிசைப்படுத்தி ஒரு தாளில் அட்டவணையிடுவது  போன்ற பல வகைகள். சமீப காலங்களில் “”  (mind maping) என்ற எண்ணங்களை வரைபடமாக எழுதிக்கொள்வது என்ற முறை பயன் படுத்தப்படுகிறது. பயன் படுத்தி வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் இந்த முறை குறித்து அதிகளவில் புத்தகங்கள் வந்துகொண்டிருகின்றன. சில அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டது.

எண்ண ஓட்டங்களை வெறும் வரி வடிவமாக மட்டுமில்லாமல், ஒரு வரைபடமாக வடிவமைத்தால் முளையில் ஆழமாக பதிந்துவிடும்.  அது செயலாற்ற மிக உதவியாகயிருக்கும் என்பது இந்த முறையின் அடிப்படை தத்துவம்.  சிறந்த ஒவியர், கட்டிடகலைநிபுணர், இயந்திர வடிவமைப்பாளார் என்று பலகலை மேதையாக அறியபட்டிருக்கும் லீயோனார்டாவின்ஸி,  படைப்புகளின்  பல குறிப்புகளில் பல  இந்த முறை பயன் படுத்தப்பட்டிருப்பதை  இன்று பார்க்கமுடிகிறது. இதைப்போல் 17ம் நூற்`றாண்டில் வாழ்ந்த மேதை கலீலியோ, மற்றும் “குவாண்டம் எலெட்ரோ டயனமிஸம்” என்ற பெளதிக தத்வத்தை உருவாக்கி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஃபெயின் மென் , விஞ்ஞானி, ஆல்பர்ட் அயின்ஸ்டின் போன்ற பலரும் பயன்  படுத்தியிருக்கும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் திரு. டோனி புஸ்ஸன்.(tony buzan) 100க்கு மேற்பட்ட நாடுகளில் 30 மொழிகளில் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கபடுகிறது. மைக்க்ராஸாப்ட், போயிங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகயிருக்கும் இவரது சமீபத்திய புத்தகத்தில் இந்த  மைண்ட் மாப்பிங்கை  எப்படி தனி நபர் மேம்பாட்டிற்கு பயன் படுத்தமுடியும் என்பதினை விவரிக்கிறார்.
 ஒரு நகரின் பல பெரிய வீதிகளும்  சிறிய கிளைதெருக்களும் வளைந்து நெளிந்து நகரின்  மத்திய பகுதியை அடைவதைப்போல,    நமது எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அடையும் பல வழிகளாக     வரைபடமாக்கி கொள்ளும்  பயிற்சி,    எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுகொள்ள, திட்டமிட, பல விஷயங்களை முளையில் சேமித்துக்கொள்ள அவற்றை வகை பிரித்துக்கொள்ள, நமக்கு வேண்டிய பொழுது அவற்றை உடனடியாக நினைவிற்கு கொண்டுவர, என பல வகையில் உதவும். மாணவர், நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியவர், பெரிய நிறுவனத்தின் பல பிரிவுகளை நிர்வகிக்கும் நிர்வாகி,, ஒரு கூட்டத்தை அல்லது நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இப்படி எவரும்   தங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்த முடியும்.
ஒரு நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியிருந்தால் இந்த முறையை நீங்கள்  எப்படி பயன் படுத்தலாம்?
முதலில் எதெல்லாம் அவசியம் என ஒரு தாளில் எழுதுங்கள். இது வரிசைப்படி அமைய வேண்டியதில்லை. தோன்றும் போதெல்லாம் தோன்றுவதயெல்லாம் குறித்துகொண்டேவாருங்கள்.தேர்விற்கு போகவேண்டிய நிறுவனத்தைப் பற்றிய விபரங்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்கள், போட்டியாளார் பற்றிய தவல்கள் இப்படி எல்லாச் செய்திகளையும் திரட்டி குறித்துக்கொள்ளுங்கள்.
   எல்லா நேர்முகத்தேர்விலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்டகப்படும் என்பதை எளிதாக யூகிகக்கமுடியாது என்பது உண்மையானலும் இந்த 4 கேள்விகள் பல மாறுபட்ட வடிவங்களில் எல்லா  நேர்முக தேர்வுகளிலும் கேட்கப்படுகிறது.
1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
இதைத் தவிர இந்த 5 கேள்விகளும் அனேகமாக எல்லாயிடங்களிலும் கேட்கபடுகிறது.
1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்?
இந்த கேள்விகளை  முக்கிய வீதிகளாகவும் நீங்கள் சேகரித்த தகவல்களை  சிறு துணை வழிகளாகவும்அமைத்து வரைபடத்தை அமைக்க வேண்டும்
எப்படிச்செய்வது?
ஒரு வெள்ளைதாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை குறுக்கு வசத்தில் (Landscape size) பயன் படுத்தவேண்டும் (இது முக்கியமானது)

நீங்கள் பங்கேற்கபோவது ஒரு ஆடை வடிவமைக்கும் நிறுவனம்  என்றால் அதன் மையப்பகுதியில் ஒரு வட்டமிட்டு அதில் ஒரு ஆயுத்த ஆடையையோ, அல்லது அந்த கம்பெனியின் சின்னத்தையோ வரைந்துகொள்ளுங்கள். அந்த வட்டத்தை சுற்றி வளைந்த பாதைகளாக கேள்விகளை வண்ண மார்க்கர்களை பயன்படுத்தி எழுதுங்கள்.முக்கியமாதற்கு அழுத்தமான வண்ணங்களைப் பயன் படுத்துங்கள்..சேகரித்த தகவல்களை  அலசி அது எந்த கேள்விக்கு பொருந்துமோ அங்கே கிளைத்தெருவாக  வரையுங்கள். இந்த பயிற்சியின் போது உங்களுக்கு புதிய கேள்விகள் தோன்றலாம். இருக்கும் விஷயங்களுக்கு கேள்விகள் இல்லாமலிருக்கலாம்.அப்போது அவசியமானால் கேள்விகளை மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது எதிர்பார்க்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தயாரித்துவிட்டீர்கள்.ஒருமுறைக்கு இருமுறை பரீசலனை செய்து அவசியமான மாற்றங்கள் செய்து ஒரு தெளிவான பிரதியை வண்ணங்களில் தயாரித்துக்கொள்ளுங்கள்.
ஏன் வண்ண மார்க்கர்கள் பயன்படுத்தவேண்டும்?
மனித முளையின் இடதுபுறம் வார்த்தைகளும் வலதுபுறம் வண்ணங்களும் பதிகிறது,இரண்டும் இணைந்து செயல்படும்போது இரண்டும் மறக்காமல் நினைவிற்கு வரும் என்பது ஆராய்சிகளின் முடிவு. இப்போது இந்த வரைபடத்தை மனதில் நிறுத்தும் பயிற்சியைத் துவக்குங்கள். தினசரி அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள். கேள்விபாதை, பதில் கிளைபாதை எல்லாம் மனதில் பதிந்துவிடும். தேர்வில் அமர்ந்திருக்கும்போது கண்முன்னே வரைபடம் விரியும் அருகருகே பல விஷயங்களை குறித்திருப்பதால்  கேள்விகள் மாறினாலும் பதில்கள்  பளிச்சென்று நினைவிற்கு வரும்.
ஒரு முறை இந்த பயிற்சியை செய்துபழகிவிட்டால் இதை மற்ற பல விஷயங்களுக்கும் எளிதாக பயன் படுத்தலாம். முயற்சிசெய்து பாருங்களேன்.
 இணைத்திருக்கும் மாதிரிப்படத்தைப்போல வண்ணத்தில் இந்த கேள்விகளுடன் படம் எழுத வேண்டும்

1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
     -அனுபவம்
     -ஆர்வம்
    - தகுதி
    -சொந்த ஊர்.           
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
அதிக ஆர்டர்கள்
புதிய வாடிக்கையாளர்கள்
புகார் இல்லாத சேவை
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
-ஆர்வமிக்கவர்
-எளிதில் கோப படாதவர்
-நட்பாக பழகுபவர்
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
கவரும் உருவம்
என் அனுபவம்
திறமையில் நம்பிக்கை
நிறைய தொடர்புகள்

1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
படிப்படியான பதவி உயர்வு
ஒரு கிளயின் முதல் நிலை மேலாளர்
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
பலம் நிறைய நண்பர்கள்
பலவீனம்=முறயான மார்கெட்டிங் பட்டமில்லாதது
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
குடும்பம்
படிப்பு
முன் அனுபவம்
தொடர்புகள்
ஆர்வம்
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
திறமை மதிக்கபடவில்லை/எற்ற வேலையில்ல
நிர்வாக மாற்றத்தினால்

5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்
கடந்த ஆண்டின் சாதன
ISO தர சான்று பெற்ற விபரம்
புதிய கிளைகள்திறப்பு
வேகமாக வளரும் நிறுவனம்
வெளிநாட்டு ஒப்பந்தம்