15/1/14

கங்கைக் கரை ரகசியங்கள்





  இன்னும் இருள் பிரியாத,  ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று மிதந்துபோகும் மெல்லிய பனிப்புகை. கண்ணெதிரே கடலாக விரிந்திருக்கும் கங்கை. அதன்பிரமாண்டம் நம்மை பிரமிக்கசெய்கிறது. மறுகரையே கண்ணில் தெரியாத அந்த மகாநதி அந்த இருட்டிலும்,நிசபத்திலும் தன் கம்பீரத்தை சொல்லுகிறது.  காசி நகரில் புனித கங்கையின் கரையில் அந்த அதிகாலைப்பொழுதில் ஆதவனின் வருகையின் போது தரிசிக்க காத்திருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பலர் துறையின் படிக்கட்டுகளில் நடுங்கும் குளிரிலும் ஆதவனை தரிசித்தபின்  முழ்கிகுளிக்க காத்திருக்கின்றனர். மெல்லிய குரல்களில் பலமொழிகளில் பிராத்தனைகள் ஸ்லோகங்கள் கேட்கின்றன.  “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.  எல்லா குளிக்கும் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகளின் இடையில் நமக்கோர் இடத்தை கண்டுபிடித்து நிற்கிறோம். ஓடும் கங்கையின் வேகத்தை கால்கள் நமக்கு சொல்லுகிறது. மனம் கங்கையில் இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் வாழும் நதியில் இன்று நாமும் இறங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. நிற்கும் படகுக்காரர்களும் அந்த நேரத்தில் நகராத  படகில் உட்கார்ந்து தியானிக்கவிரும்பும்   வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க காத்திருக்கிறார்கள் .பளிச்சென்று பெரிய ஆரஞ்சு வண்ணபந்தாக எழுந்து தங்க தாம்பாளமாக விரிந்து  சிலநிமிடங்களில் ஓளியுடன் உயிர்பிறக்கிறது அந்த நதியில். மெள்ள வளரும் காலை ஓளியில் கங்கையின் வண்ணங்கள் மாறுகின்றன.  அழகான ஒவியமாக பரவும் அந்த சூரியயோத காட்சியில் மனதை பறிகொடுத்து நிற்கும்  நாம் அருகிலிருப்பவர்கள் குளிக்க துவங்கியதைப்பார்த்த பின்னர்தான்  நாம் காத்திருந்ததும் அதற்குதானே என்பது உறைத்து. உடனே மூழ்கி எழுகிறோம். தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கை அன்னையின் அழைப்பு அலைகள். நீண்ட நேரம் நீராடச்சொல்லுகிறது.

.
இரு கைகளால் கங்கயை ஜலத்தை எடுத்து சூரியபகவானுக்கு நதியிலேயே அர்பணம் செய்யும் பலர்,  கூப்பியகைகளை தலைக்குமேல் உயர்த்தி நிஷ்டையில் நிற்பவர்கள், தன் சின்னகுழந்தையை மிக்கவனமாக பிரார்த்தனையோடு குளிப்பாட்டும் அன்னை என அந்த இடமே கங்கயின் நீரைப்போல பக்தியால் நிரம்பியிருக்கிறது.  மெல்லகூட்டம் வரத்துவங்குகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பக்திபாடல்கள் சூழலின் அமைதியைக்கலைக்கிறது படிக்களை கடந்து சாலைக்கு வருகிறோம். காசிநகரம் விழித்துகொள்ள ஆரம்பிக்கிறது. இந்த காசி நகரம் எப்போது உருவானாது? இந்த கேள்விக்கு இன்னும் சரியான விடைகிடைக்கவில்லை.
மனித சமுதாயம் உருவான காலம்தொட்டே உலகில் பல்வேறு நகரங்கள் நாகரீகம் மற்றும் ஆன்மீகத்தின் உச்சியை அடைந்தன.  சில ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன. கிரேக்க, எகிப்து, ரோமாபுரி நாகரீகங்கள் சில உதாரணங்கள். இவற்றிக்கு எல்லாம் முன்பே கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் . தனது மேன்மைக்கு பல இடையூறுகள் வந்தபோதும், ஒவ்வொரு முறையும் சரிவில் இருந்து மீண்டு எழுந்திருப்பது பாரதம்.. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இந்த புண்ணிய பூமியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆயிரம் கோயில்களில் சக்தி அதிர்வுகள் இந்த கலாச்சாரத்தின் வேர்களாக இருப்பது. இவற்றில் மிக முக்கியமான ஷேத்திரமாக திகழ்வது காசி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காசி நகரம் பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகியிருக்க கூடும் என்று சொல்கின்றனர்.

காசி என்ற பெயருக்கு பிரகாசமானது என்று பொருள். ஸ்கந்தபுராணத்தில்  பதினைந்தாயிரம் பாடல்கள் பாடப் பெற்றது காசி. நூற்றுக்கணக்கான  சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு க்தி வளையமாக திகழ்கிறது  ஆயுர்வேதம் காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

 காசி நகரமே ஒரு யந்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த வடிவில்
நானூற்றி அறுவத்தெட்டு முக்கிய கோவில்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாக கொண்டு இக்கோயில்கள் ஐந்து அடுக்குப் பாதைகளில் அமைந்திருக்கின்றன. காசி காண்ட புராணத்தில் காசி நகரமே சிவனுடைய திரிசூலத்தின் மீது இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. திரிசூலத்தின் மூன்று முனைகளை போல், காசியின் சக்தி வடிவத்திற்கும் மூன்று கோயில்கள் மையமாக இருக்கின்றன. இவை வடக்கில் ஆம்கார் ஈஸ்வரர், மையத்தில் விஸ்வநாதர் மற்றும் தெற்கில் கேதார் ஈஸ்வரர். இந்த ஒவ்வொரு கோயிலும் தனியாகவும், ஒன்று சேர்ந்தும் தங்களுடைய சக்தி பிரவாகத்தை வெளிப்படுத்துகின்றன  இந்த  பயணத்தில் இந்த கோவில்களில் நல்ல தரிசனம் கிடைக்கவேண்டும் என்று எண்ணியபடியே சாலையில் நடக்கிறோம். கங்கைநதியின் படித்துறைகளுக்கு வரும் நகரின் அந்த சாலைகளில் எந்த வாகனங்களுக்கு அனுமதியில்லாதால் சாலை முழுவதும் மக்கள். வேகமாக நதியையை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள். பலமாநில முகங்கள், மொழிகள். குறிபிட்ட இடம் வரை நடந்தபின்னர் சைக்கிள் ரிக்‌ஷாவில் நாம் தங்கியிருக்குமிடத்திற்கு திரும்புகிறோம். காசியில் தினசரி வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கைவிட அதிக அளவில் இருப்பது சைக்கிள் ரிக்‌ஷாக்கள்.பல இடங்களில் இவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறாமல் நீங்கள் காசியில் எதையும் பார்க்கமுடியாது. கட்டணபேரம் சண்டை சத்தம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டுகார்களுக்கு அநியாயத்துக்கு குறைந்த கட்டணமாக இருக்கிறதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவில்தான் கேட்கிறார்கள்.:. நீங்கள் அதிகம் கொடுக்க விரும்பினாலும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்றுகொள்பவர்கள் மிகுந்த பணிவுடன் பலமுறை நன்றி சொல்லுகிறார்கள். ஹோட்டலுக்கு வந்த பின்னர் நம்மோடு இந்த பயணத்தில் பங்கு  கொள்ள வந்துசேர்ந்திருக்கும் புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.
ஈஷா அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக புனித பயணங்கள் (Sacred walks) என்ற திட்டத்தில் அதன் உறுப்பினர்களை இந்த தேசத்தின்  மிகபுனிதமான இடங்களான கைலாஷ். காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.ஏதோ மத நமபிக்கைகளின் அடிப்படையில் வெறும்சடங்குகள், சம்பிராத்யங்களை மட்டுமே நோக்கமாய் கொள்ளாமல் அந்த இடத்தின் பெருமை, சக்தி அதை முழுமையாக உணர பயிற்சி போன்ற விஷயஙகளுக்கு சத்குருவின் வழிகாட்டுதலுடன் இந்த  புனித பயணங்கள் நடத்படுகின்றன. இந்த ஆண்டு  200க்கும்மேற்பட்டவர்களுடன் கங்கையின் கரையில் காசிக்கும் தொடர்ந்து அங்கிருந்து புத்தரின் தேசத்திற்கும்  பயணம் செய்தகுழுவுடன் இணைந்து நாமும் இந்த புனித  பயணத்தில் பங்குகொள்ள போகிறோம்.
பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள் நிறைந்த பெரிய குழு அது. அனைவரும் ஒரே இடத்திற்கு அழைக்கபட்டு இந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்காக சத்குரு பேசிய விடியோ காட்டபடுகிறது.  பின் குழுதலைவர் ஸ்வாமி பிரோபோதா பயணத்தில் குறிப்பாக காசியில் செய்யவேண்டியது கூடாது பற்றி விளக்குகிறார்.  அன்றிரவு 2.30 மணிக்கு எல்லோரும்  காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போகப்போவதையும் அதற்காக எல்லோரும் இரவு 1.30க்கு பஸ்சில் இருக்கவேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார்.  இரவு 1.30க்காக? ஏன் அந்த நேரம்? என அந்த கூட்டத்திலிருந்த  எவரும் கேட்கவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புகூட இல்லை. காரணம் அவர்கள் ஈஷாவில் பயிற்சிபெற்றவர்கள். நேரதிட்டமிடலின் அவசியத்தையும் சத்குரு தீர்மானித்திருக்கும் நேரத்தின் அருமையையும் உணர்ந்தவர்கள். அன்றிரவு 1.30க்கு  5 பஸ்களிலும் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தனர். ஒரு பஸ்சின் டிரைவர் மட்டும் வராததால் காத்திருக்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சத்குரு, வாழ்க்கையில் ஒரு முறையாவது  காசிக்கு போகவேண்டும் என சொல்லுகிறீர்கள். எதற்காக அங்கு  போகவேண்டும் ?

ல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் சத்குரு ஏன் காசி யாத்திரை செய்யச் செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை?
இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம்.
படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்என்று சொல்லலாம். காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் காஸ்மாஸ்என்றால் ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுஎன்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது.கிரேக்க நாட்டில் டெல்ஃபி நகரில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன.
காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்?

கல்கி 18/01/14


I

13/1/14

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த அபூர்வராகம்


11-1-14


இன்று கீரின் ஏக்கர்ஸ் கிளப் பில் சக்தி பாடினார். ஒரே வார்த்தை அற்புதம். 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்த  அருமையான கச்சேரி. தமிழ் பாடல்,கன்னட கீர்த்தனை என எல்லாமே சூப்பர்.  ஆங்கில ஒப்ரா (OPERA) பாடலைப் பாடி அதை ஒரு கர்நாடக ராகத்துடன் தமிழ்பாடலாக பாடி முடித்தார்.  . இந்த பெண்ணிடம் நிறைய விஷயமிருக்கிறது. AR ரஹ்மான்  கேட்கவேண்டும்.  கச்சேரியின் கடைசியில்  
முத்தைத் தரு பக்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முக்திக்குஒரு வித்து குருபர என ஓதும்

என்ற அருணகிரிநாதரின் திருப்புகழலிலிருந்து பாடியது தான் ஹைலைட். தமிழ்பாடகர்களே பல்லை உடைக்கும் இந்த பதிகத்தை பாடத்தயங்கும் ஒரு  பாடல் இது. இதை இந்த ஆஸ்திரேலிய பெண் அனாயசயமாக பாடியது ஆச்சரியமான விஷயம் 


12/1/14

உலகளவில் தமிழ் -புதிய பார்வை

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் தாயகம் கடந்த தமிழ் என்ற அனைத்துலக மாநாடு கோவையில் ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அமைப்புக்குழு தலைவராக எழுத்தாளர் மாலன் உள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து
இந்த மாநாடு எதற்காக?
தமிழ் என்பது இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழ் என்று பேசும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் நாம் அதன் இலக்கியத்தை குறித்துப் பேசுகிறோம். ஆனால் மொழி என்பது இலக்கியம் மாத்திரம் அல்ல. தமிழர்களின் பாரம்பரியத் தாயகங்களான தமிழகத்திலும்   இலங்கையிலும், அந்தத் தாயகங்களுக்கு அப்பாலும் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அது தளராமல் தாங்கி நிற்பது இலக்கியம், ஊடகம், கல்வி, தொழில்நுட்பம் ஆகிய நான்கு தூண்களே. இந்தத் துறைகளில் கணிசமான பங்களித்தவர்கள் கூடிக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம். இந்தத் துறைகளில் முன்னேறிச் செல்ல இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் பயனளிக்கும் என எண்ணுகிறோம். ஒரு வேளை இதன் காரணமாக இந்தத் துறைகளிடையேஓர் கூட்டாற்றால் (synergy) ஏற்படவும் கூடும் என்றும் நம்புகிறோம்

இந்த மாநாட்டில் நீங்கள் எப்படி ஈடுபட்டுள்ளீர்கள்?
ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் பத்துப் பனிரெண்டு ஆண்டுகளாக தமிழிலக்கியம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் மாத்திரமல்ல என்ற கருத்தைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் நோக்கில்  திசைகள் என்ற மின்னிதழை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து வெளியிட்டுள்ளேன். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் அது. 2004ல் அயலகத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து சிங்கப்பூர் தேசியப் பலகலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், தேசிய கலைமன்றம் இவற்றின் ஆதரவில் நடத்தப்பெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளேன். இந்த மாநாட்டின் அமைப்புக் குழு தலைவராக உள்ளேன். அயலகத்தில் உள்ள கட்டுரை வாசிப்போரைத் தேர்ந்தெடுப்பது,  கட்டுரை பெறுவது, மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது, கட்டுரைகளுக்கு நூல் வடிவம் அளிப்பது ஆகியவை என் பணிகளாக அமைந்தன

இந்த மாநாட்டினால் என்ன பயன்?
தமிழ் மக்கள் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி ஆகியவை குறித்த ஓர் புதிய பார்வையும் பெருமிதமும் பெறுவார்கள். மாநாட்டுக் கட்டுரைகள் நூலாக வெளியாகின்றன. அவை ஆய்வு மாணவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

சந்திப்பு 

ஆதித்யா

(கல்கி19/01/14)

10/1/14

கலக்குகிறார் கலாவதி

”அப்பா ! இன்று எதலெல்லாம்  விற்கலாம் , புதிதாக எதை வாங்கலாம் என லிஸ்ட் எழுதி வைத்திருக்கிறேன். மார்கெட் ஒப்பன் ஆனதும் உடனே செய்து விடுங்கள். நான் குறித்திற்கும் விலைக்கு மேல் போனால் வாங்கவேண்டாம். எனக்கு இன்று டெஸ்ட் இருக்கிறது வரட்டுமா? “ என்று சொல்லி விட்டு ஸ்கூலுக்கு போகிறார்    9ம் வகுப்பு படிக்கும் கலாவதி. அவரின் தந்தை திரு பாண்டியன் அவர்சொன்னது போல  செய்துவைக்கிறார்.  மாலையில் பள்ளியில் இருந்து திரும்பிய பின் செய்த  டீலிங்களை தனது கம்ப்யூட்ரில் பதிந்து கொள்ளுகிறார். அடுத்த  இரண்டு மணிநேரம் அன்று நாள்முழுவதும்  நடந்த டிரேடிங் பேட்டர்னை அலசுகிறார். தன் கையில் இருக்கும் ஷேர்களில்  விற்க வேண்டியவைகளையும் புதிதாக வாங்க வேண்டியவைகளையும் பட்டியில் இடுகிறார். பின்னர் ஸ்கூல் பாடங்களை முடித்துவிட்டு டிவி பார்க்கிறார். இதுவரை  ஷேர் மார்கெட்டில்  குறைவாக இழந்து நிறைய சம்பாதித்திருக்கிறார். இந்த வயதில் இந்தியாவில் இதை செய்தவர் இவர் மட்டுமே


 எப்படி எங்கே இதையெல்லாம் கற்றார்?  என்று ஆச்சரியபடுத்தும்  இந்த
பெண்ணின் குடும்பத்தில் யாரும் ஷேர் பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் இல்லை. தந்தை பாண்டியன்   நிறுவனங்களுக்கு தரசான்றிதழ்  பெற, தர நிர்ணயம் உறுதி செய்யும் நிருவனத்தை நிர்வகிப்பவர். தாய் இல்லத்தரசி.
”அப்பா வீட்டில் கம்பெனிகள் பிராண்டுகள் எல்லாம் பற்றி பேசுவார். அதில் ஷேர்களில் முதலீடு அதன் மூலம் கம்பெனியின் லாபம் நமக்கு வரும் என்பது எனக்கு இண்ட்ரஸ்ட் ஆன விஷயமாகயிருந்தது. அதை பற்றி அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்துகொண்டிருந்தேன். நிறைய சொன்ன அவர் கேப்பிட்டல் மார்கெட் பத்திரிகையை படிக்க வாங்கி தந்தார். முதலில் புரியாத விஷயங்களை திரும்ப திரும்ப படித்து புரிந்து கொண்டேன். நெட்டில்  மணி கண்ட்ரோல் என்ற தளத்தில் நிறைய படித்து தெரிந்து கொண்டேன். போனவருடம் 8ம் கிளாஸில் இருக்கும் போது முதல் ஷேரை வாங்கினேன். இப்போது  நான் நிறைய வாங்கி விற்கிறேன். என்கிறார் கலாவதி.
 ”ஹர்ஷெத் மேத்தா காலத்தில் ஷேர்மார்கெட்டில் மூதலீடு செய்து கையை சுட்டுகொண்டவன் நான். பெரிய நஷ்டத்தை சந்தித்த பின்  நமக்கு இதெல்லாம் சரிஇல்லை என ஒதுங்கியவன் நான்.  இந்த பெண்ணின் ஆர்வமும் சாமர்த்தியமும் எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது என்கிறார் தந்தை பாண்டியன். சிறு பெண்ணாக இருப்பதால் அவர் பெயரில்  வங்கியில் டி மாட் (ஷேர் மார்க்கெட் மூதலிட்டு இது அவசியம்) கணக்கு துவங்க முடியாதாலால் என் பெயரில் கணக்கை  துவங்கி அவர் அதை கையாளுகிறார். இந்த பெண்ணுக்காக நான் டிமேட் கணக்கு பற்றி முதலில்  தெரிந்துகொண்டேன்.  எல்லா முடிவுகளும் அவருடையதுதான்.  டிரெண்ட் அனலைஸ் என்பது ஒரு நிறுவனஷேர் கடந்த  வாரம், கடந்த மாதம், கடந்த ஆண்டு எப்படியிருந்தது என்பதின் அடிப்படையில் இன்றைய நிலையையும் அடுத்து எந்த கட்டத்தில் விலைஉயரும் அல்லது குறையும் என்பதை கணிப்பது. அதை இவர் மிக பிரமாதமாக செய்கிறார். ஒரு சில கம்பெனிகளின் கிராப் களின் மூலம் நமக்கு டெமோவே காட்டுகிறார். எல்லா வல்லுனர்களின் கருத்தையும் அப்படியே ஏற்க கூடாது. சிலர் சொல்லுவதை மாற்றி விற்க சொன்னால் வாங்க  வேண்டும் என அவர்களின் பட்டியலும் வைத்திருக்கிறார்.
உன்னுடைய கணிப்புகளை யாருக்காவது டிப்ஸ் கொடுத்திருக்கிறயா? என கேட்டால் என் பள்ளியில் ஸ்டாக் மார்கெட் பற்றி ஒரு முறை பேசினேன். யாருக்கும் புரியவில்லை. என் குளோஸ் பிரண்ட்ஸ்க்கு நான் டிரேடிங் செய்வது தெரியும் ஆனால் என்ன என்பது விபரமாக தெரியாது என்று சொல்லும் கலாவதிக்கு கணக்கு பாடத்தில்  அவ்வளவு இஷ்டமில்லை  இங்கிலீஷ், சயின்ஸ்தான் பிடித்திருக்கிறது.   சராசரி 75% மார்க்குகள் வாங்கும் இந்த மாணவிக்கு பிடித்த மற்றவிஷயங்கள் பாடுவது,
சினிமாபார்ப்பது. இந்த உலக சாம்பியன் போட்டிக்கு பின் செஸ்.
படிப்பை முடித்தபின் என்னவாக எண்ணம்.?  “ தெரியவில்லை அங்கிள்! நிச்சியமாக டாக்டர், எஞ்சினியர் ஆக மாட்டேன். ஷேர் புரோக்கராகவும் மாட்டேன்.  மார்கெட் அனலிஸ் செய்வது பிடித்திருக்கிறது அதில் ரிசர்ச் செய்ய முடியுமா என்பதை அப்பாதான் சொல்ல வேண்டும். என்கிறார்.
கலாவதி ஒர் அதிர்ஷ்டகாரபெண். ஷேர்மார்கெட்டில் லாபம் சம்பாதிப்பதினால் மட்டுமில்லை. எல்கேஜி படிக்கும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என திட்டமிட்டு அதை குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர்களிடையே  தங்கள் மகள் விரும்புவதை செய்ய அனுமதித்து  அதை ஊக்கபடுத்தும் பெற்றோர்களை அடைந்திருப்பதிலும்தான்.

5/1/14

ஒரே இரவில் 85000 ரூபாய் !

மனதில் பதிந்த பதிவுகள்

 


இ.ரா மணிகண்டன் என்பவரின் வலைப்பூ(BLOG)  ”நிசப்தம்” பார்த்தது, படித்தது,.கேட்டது,ஆபிஸ்,  அடுத்தவீட்டுகாரன்,  சினிமா, புத்தகம், வம்பு அரசியல், பயணங்கள்  என்று எதைப்பற்றியாவது   படிக்க ஆர்வம் மூட்டும் வகையில் தினமும் எழுதி தள்ளிக்கொண்டிருப்பவர். கொங்குநாட்டு வாழக்கைமுறை, சாப்ட்வேர்துறை ஆகியவைகளின்  தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிறந்த வலைப்புக்கான சுஜாதா விருதை 2013ம் ஆண்டில் பெற்ற இவர் தளத்தில் தன் படத்தை கூட போட்டுகொள்ளாத எளிய மனிதர். பங்களூரில் வசிக்கிறார்.
பாலாஜி சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முழுஸ்காலர்ஷிப்பில் ரோப்டிக்ஸில் ஏம் டெக் படிக்கும் ஒரு மாணவர்.  மிக எளிய குடும்ப பின்னணியுள்ள இவருக்கு  ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.
இவருக்கு ஜப்பானில் நடைபெறும் ஒரு சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கிறகுற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் போவதற்கு முயற்சி எடுக்க கூட  முடியவில்லை காரணம் டிக்கெட்டுகான பணம். தன்னுடைய பிளாக்கில் மணிகண்டன் இதை எழுதி உதவி செய்யமுடியுமா? என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம்  85000 ரூபாய்கள்.! அமெரிக்காவிலிருந்து 50000, கத்தாரிலிருந்து 30000 என்று சிலமணிநேரங்களில் பணம் வங்கி கணக்கில் சேர்ந்தது.. இவர்களில் யாரையுமே இதுவரை மணிகண்டன் நேரில் பார்த்ததில்லை என்பது  ஒரு முக்கியமான விஷயம்.


 இதற்காக தன் நன்றியை  சொல்லும் மணிகண்டன் “இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன்என்று தன் பதிவில் எழுதுகிறார்.  உதவிக்கு நன்றி சொல்லும் பாலாஜி இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்.இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்கஎன்று மணிகண்டனுக்கு சொல்லியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தபடும் அவலம், ஆபத்துகள் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்ற நேரத்தில் இம்மாதிரி மாறுதலான செய்திகள் ஆறுதலாக இருக்கிறது.  சமூக பொறுப்புடன், மனித நேயத்தோடு எழுதும் பதிவர்களும், அதை மதிக்கும் வலைப்பூ வாசகர்களும்  உலகில் எங்கோ ஒரு மூலையிலும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது.
ஆதித்யா (ரமணன்)

மணிகண்டனின் நிசப்தம் லிங்க்