அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14/2/14

மன்மோகன் சிங்

New post on ஆழம்

மன்மோகன் சிங் பாவங்களும் சிலுவைகளும்

by ரமணன்
பிரதமர் கனவு இல்லாத ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டச் சொன்னால் நாம் திணறவேண்டியிருக்கும். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடங்கி சிறையில் இருக்கும் அந்தப் பழம்பெரும் அரசியல்வாதி வரை அனைவரும் பிரதமர் பதவியையே குறிவைத்து கனவு கண்டு வருகிறார்கள். ஒரே விதிவிலக்கு அந்தப் பதவியில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் மன்மோகன் சிங். சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்றதால் கலைந்துவிட்ட கனவல்ல இது. மாறாக, தொடக்கம் முதலே மன்மோகன் சிங் பதவியாசை இல்லாதவராகவே இருந்திருக்கிறார். இருந்தும் அவருடைய விருப்பத்துக்கு மாறாக சூழ்நிலைகள் அவரை இந்த  அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. மீண்டும்,  அவர் விருப்பத்துக்கு மாறாக அதே சூழ்நிலைகள் அவரை இப்போது படுகுழியிலும் தள்ளியிருக்கின்றன. இதற்கு ஒருவகையில் அவரும்கூட காரணம். இந்திய அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான, விநோதமான கதை அவருடையது.
1991ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது மன்மோகன் சிங் அரசியல் களத்திலேயே இல்லை. இருந்தும் அவரைச் சென்று சந்தித்து, பிரதமர் உங்களை நிதியமைச்சராக நியமிக்க விரும்புகிறார், தயாராக இருங்கள் என்று காபினட் செயலர் சொல்லியிருக்கிறார். மன்மோகன் சிங் இதை நம்பவில்லை. மறுநாள்  நரசிம்ம ராவ் நேரடியாக மன்மோகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நேற்று ஏன் என்னைச் சந்திக்க நீங்கள் வரவில்லை? மதியம் அசோகா ஹாலுக்கு வந்துவிடுங்கள். பதவியேற்புக்குத் தயாராகிவிடுங்கள். அப்போதும் மன்மோகன் சிங்குக்குப் புரியவில்லை. எதற்காக இந்தத் திடீர் அழைப்பு? எதற்காகப் பதவி நியமனம்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நிதித்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறார் மன்மோகன் சிங்.
தான் அரசியல்வாதியான கதையை 2005ல் பிபிசிக்கு விவரித்தபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். ஓர் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்தும் நேரடியாக நிதியமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கமுடியும். அவருடைய கூர்மையான அறிவுத் திறன்.
மிக எளிமையான குடும்பப் பின்னணி அவருடையது. பள்ளியிலிருந்தே எல்லா வகுப்பிலும் முதல் மாணவர். அதனால் கிடைத்த ஸ்காலர்ஷிப்புகள் வாயிலாக கல்லூரியில் இணைந்தார். பிஏ பல்கலைக்கழக முதல் மாணவனாக தங்கப் பதக்கம் வாங்கியதால் எம்ஏ படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கியதால் லண்டன் கேம்பிரிட்ஜில் முழு ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்தது. அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று இந்தியா திரும்பினார். தனது மாநிலமான பஞ்சாபில் ஒரு கல்லூரியில் இணைந்தார். இதுதான் அவருடைய கனவு.
மூன்றாண்டு பேராசிரியர் பணிக்குப் பின்னர், மேற்கொண்டு படிக்கும் உந்துதலில் மன்மோகன் 1960ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பில் இணைந்தார். அதையும் வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பி டெல்லியில் தன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். லண்டனிலுள்ள  கேம்பிரிட்ஜ் பேராசிரியரின் சிபாரிசால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுஎன்டிஏசிடியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியைத் திறம்படச் செய்துவந்த சமயத்தில் எல்.என். மிஸ்ரா என்ற மத்திய அமைச்சரை அவர் அடிக்கடி சந்தித்து வந்தார். மன்மோகனின் திறமையைக் கூர்ந்து கவனித்த அவர் தன் அமைச்சரவைக்கு ஆலோசகராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்பொதெல்லாம் அரசாங்க ஆலோசகர் என்பது இன்றுபோல செயலாளருக்கு நிகரான பொறுப்பல்ல. ஆனாலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மன்மோகன் இந்த அழைப்பை ஏற்றார்.  அரசியல்வாதியாக இல்லாமலேயே பின்னாளில் அமைச்சரானதைப்போல ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமலேயே அதிகாரிகள் வர்க்கத்தில் அவர் அன்று நுழைந்தார். தொடர்ந்து பல அமைச்சகங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி பலருடைய கவனத்தை ஈர்த்தார்.
ஒரு கட்டத்தில் நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவருக்கு உயர்வு கிடைக்கிறது. 1976ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படுகிறார். இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம். நாட்டின் பொருளாதார நிலைமை சீராகவில்லை, அதை சரிசெய்ய மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று துணிச்சலுடன் அரசுக்குச் சொன்ன முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் இவரே. அதனாலேயே அந்த வழிமுறைகளை அரசுக்கு அதிகாரபூர்வமாகச் சொல்ல திட்ட கமிஷனின் உதவித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நெருக்கத்தை வளர்க்க உதவியது.
அதே சமயம், இந்தியா கிட்டத்தட்ட திவாலாகிக்கொண்டிருக்கிறது என்று அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மன்மோகன் சிங். பொறுப்புக்கு வந்தவுடனேயே மிக மோசமான ஒரு செய்தியை அறிவிக்கவேண்டிய நிர்பந்தம். மிகப் பெரிய அடிப்படை மாற்றங்களைக் கொள்கையளவில் கொண்டுவந்தாலொழிய மீள்வது சிரமம் என்பதே மன்மோகன் சிங்கின் ஆலோசனையாக இருந்தது. அதை அவர் தயங்காமல் நரசிம்ம ராவிடம் பகிர்ந்துகொண்டார். நரசிம்ம ராவும் தயாராகவே இருந்தார். தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான உரிமை மன்மோகனுக்கு வழங்கப்பட்டது.
சுதந்தர இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியை மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உலகமே பார்த்து வியந்த ஒரு விஷயம் இது.  வெளி நாடுகளிலிருந்து, பன்னாட்டு நிதி ஆணையங்களில் இருந்து கடன் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் இருந்த இந்தியா ஐந்தே ஆண்டுகளில் முதலீட்டுக்கான ஒரு நல்ல களமாக மாறிப்போனது. காரணம், மன்மோகன் சிங்.
பொருளாதாரம் மளமளவென்று வளரத் தொடங்கியது. இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு உலக வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது என்னும் நிலைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இந்தியாவைப் பொருட்படுத்தியே தீரவேண்டிய அவசியத்துக்கு வல்லரசுகள் வந்து சேர்ந்த காரணம், மன்மோகன் சிங்.
ஆனால் இதை அடைய உள்நாட்டில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பல்வேறு சந்தேகங்களை அவர் கடக்கவேண்டியிருந்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மீண்டும் அமர்ந்ததற்குக் காரணமாக இருந்தார் மன்மோகன் சிங். அன்று மீடியாவின் டார்லிங் அவர்தான்.
எந்த மீடியா அவரை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்ததோ அதே மீடியா இன்று அவரை எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது. அவரது முழுமுற்றான வீழ்ச்சியை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. எந்தப் பொருளாதாரப் புரட்சியை அமைதியாக அவர் அரங்கேற்றினாரோ அந்தப் புரட்சியின் நோக்கங்கள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. மன்மோகனின் அமைதியான அணுகுமுறை அன்று பாராட்டப்பட்டது. இன்று  அவருடைய அமைதி கேலி செய்யப்படுகிறது. அதிகம் சாதிக்காத பிரதமர் என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறது வாஷிங்டன் போஸ்ட்.
ஏன் ஏற்பட்டது இந்த நிலைமை? ஆழ்ந்து நோக்கினால் மூன்று காரணங்கள் தெளிவாகப் புலப்படும்.
1) தேசமல்ல, கட்சியே பிரதானம்!
இதற்கு இன்னொரு பெயர் அதர்மம். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருந்தது. தேசத்தின் நலன் முக்கியமா அல்லது ஆட்சியில் நீடிப்பது முக்கியமா என்னும் கேள்வியை காங்கிரஸ் எழுப்பியதாகவே தெரியவில்லை. அதற்கான விடையை அது தெளிவாகவே அறிந்திருந்தது. கூட்டணி கட்சிகளின் பேரங்கள் அனைத்துக்கும் செவிகொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் கட்சியின் தலைவர் சோனியா காந்திதான் என்று ஒருவர் சொல்லிவிடலாம். ஆனால் அமைதியாக இருந்து அனைத்தையும் அனுமதித்த ஒரே காரணத்துக்காக மன்மேகன் சிங்கும் இதற்கு காரணமாகிறார் என்பதை மறுக்கமுடியாது.
இந்தியாவின் பிரதமராக அல்லாமல், கட்சியின் காவலராகவே மன்மோகன் சிங் கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். தேசத்தின் குரலைவிட தன் கட்சித் தலைவரின் குரல் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது. தேசத்தின் தேவைகளைவிட கட்சியின் தேவைகள் முக்கியமாகிவிட்டன. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவந்த நிலையிலும்கூட மன்மோகன் சிங் கட்சியைக் காக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டார். தேசத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அல்ல.
2)நாற்காலியை விடமாட்டேன்!
அவரை மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும்கூட மன்மோகன் சிங்கை ஊழல் கறை படியாதவர் என்று ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். நிலம், பூமி, காற்று என்று தொடங்கி பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் ஊழல்கள் பல செய்தபோதும் தனிப்பட்ட முறையில் குற்றமற்றவராகவே மன்மோகன் சிங் பலரால் பார்க்கப்படுகிறார். இது ஆச்சரியம்தான். அதே சமயம், கட்சியின் தவறுகளுக்குத் தார்மிக அளவிலாவது பொறுப்பேற்று அவர் ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்னும் கேள்வியை எழுப்பாதவர்களே இல்லை.
ஏன் கட்சி மேலிடத்தை எதிர்த்து ஒருவார்த்தைகூட அவரால் பேசமுடியவில்லை? தன்னளவில் சுத்தமாக இருந்தும் களங்கப்பட்டுப்போன தன் கட்சியை ஏன் அவரால் எதிர்க்கமுடியவில்லை? அவர் ஒரு பலிகடாவாக மாற்றப்பட்டுவிட்டாரா? அல்லது தானாகவே முன்வந்து இந்தப் பதவியையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டாரா?
இரண்டாவதுதான் சரி என்று தோன்றுகிறது. காங்கிரஸும் குறிப்பாக சோனியா காந்தியும் தனக்கு அளித்த மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் அவர் இன்னமும் மறக்கவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்னும் உணர்வை அவரால் உதறித் தள்ளமுடியவில்லை. தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, கட்சியை மீட்டெடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும்.
3)தலைமைத்துவம்
அறிவாற்றல்மிக்க பொருளாதார நிபுணர்தான் என்றபோதும் தேசத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தனிச்சிறப்பான இயல்புகள் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கட்சியின் தவறுகளை அவரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தவறிழைத்த அமைச்சர்களைக் கேள்வி கேட்க இயலவில்லை. தறிகெட்டு ஓடும் நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அமைச்சரவை கூடி எடுத்த முடிவொன்றை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் கிழித்தெறிந்து பேசியபோதும்கூட மன்மோகன் சிங் அமைதியே காத்திருக்கிறார். இதை அவருடைய மாண்பாகவும் நல்லியல்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றபோதும், ஒரு தலைவராக அவருடைய தோல்வி பளிச்சென்று புலப்படுவதை அவராலும் தடுக்கமுடியவில்லை.
1999ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோற்றார் மன்மோகன் சிங். அப்போது தேர்தல் செலவுக்காக குஷ்வந்த் சிங்கிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். அதை மறுநாளே தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த மன்மோகன் சிங்கை ஆச்சரியமான மனிதன் என்று அழைக்கிறார் மன்மோகன் சிங். இத்தகைய பல அபூர்வமான விஷயங்களைப் பலர் அவரிடம் கண்டடைந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் மன்மோகன் சிங் அபூர்வமானவர் என்பதில் மாற்று கருத்தில்லை. இருந்தும் அவர் இன்று வருத்தப்பட்டு சுமக்கும் பாரங்கள் தனிப்பட்ட முறையில் அவரை அழுத்திக்கொண்டிருக்கின்றன, கீழே கீழே பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றன.
நடப்பு அரசியல்வாதிகளோ ஊடகமோ எதிர்க்கட்சிகளோ அல்ல, வரலாறு என்னை மதிப்பிடும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங். உண்மைதான். கால ஓட்டத்தில் அவர்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் தூசுகள் உதிர்ந்துபோகக்கூடும். அவர் செய்தவை அல்லது செய்யத் தவறியவை மன்னிக்கப்படலாம். ஆனால் அவருடைய சாதனைகள், குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அவர் பெயரை உயர்த்திப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. அப்போது அவர் புத்துயிர் பெறுவார்.
ரமணன் | February 13, 2014 at 2:50 pm | URL: http://wp.me/p2eZn6-Zr

10/12/13

சபாஷ் சுஜாதா !

இதாண்டா போலீஸ் 


பரபரப்பான மும்பாய் நகரின் சயான் பகுதியின் முக்கிய வீதி.   முந்திய கார்களின் பம்பரை தொட்டு முண்டிக்கொண்டிருக்கும் நெருக்கமான  டிராபிக். வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு கார்  வேகம் தணிந்து மெதுவாக ஒதுங்கி   நிற்கிறது, பின்னல் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக நிற்கும்  அந்த காரைக்கண்டு  எரிச்சல் அடைந்த  போக்குவரத்து போலீஸ்கார்   நெருங்கி பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். காரை ஓட்டி வந்தவர்  ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்கிறார். உடல் முழுவதும் வேர்வையினால் நனைந்திருக்கிறது. மனிதருக்கு மாரடைப்பு என்பதை புரிந்து கொள்கிறார். உடனே அருகில் இருக்கும் சிக்கனிலில் பணியிலிருக்கும்தன்  இன்ஸ்பெக்டர் சுஜாதாவிற்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தருகிறார்.கான்ஸ்டபிள்  குமார்தத் அடுத்த நிமிடம் அங்கு வந்த சுஜாதா, கன்ட்ரோல் ரூமுக்கு சொல்லி, லீலாவதி ஆஸ்பத்திரி வரையில் சாலையில் போக்குவரத்தை ஓரமாக தள்ளுமாறும் சிக்னல்களை பச்சையில் நிறுத்தி வைக்குமாறும் வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி, ஆஸ்பத்திரி வரை அந்த காரை ஓட்டி வருமாறு  அதன் டிரைவரை கேட்டுக் கொள்கிறார்.  அந்த காரில் வந்த மாரடைப்பால் தாக்கபட்டிருப்பவரை   பத்திரமாக  அணைத்து பிடித்து,  அவர் மார்பை மசாஜ் செய்தபடி வருமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிடுகிறார்.

  தனது போலிஸ்ரோந்து காரை  முன்னால் வேகமாக  செலுத்தி வழி ஏற்படுத்திய படி 12 நிமிடங்களில் ஆஸ்பத்திரியை அடைகிறார். போகும்போதே இவர் கண்ட்ரோல் மூலம் சொன்ன தகவலினால் தயாராகயிருந்த டாக்டர்கள் சிகிச்சையை துவக்குகின்றனர்..  காரில் இருந்தவரின்  பிஸினஸ் கார்டை பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்திருந்தனால் அவரின் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டிருந்தார்.  
அந்த மனிதர் உயிர் பிழைத்து கொண்டார்.
அவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீர்ர் வினோத் காம்ப்ளி.
அடாவடி, அத்துமீறல், அற்பமான கையேந்தல், அதிகாரத்துக்கு அடிபணிதல்,பிரச்சனைகள் வரும்போது மேல் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே செயல் படுவது என்ற போலீஸ் அதிகாரிகளிடையே,  மாறுபட்டு சமயோசிதமாக மின்னல் வேகத்தில் இயங்கிய பெண்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா. இவருக்கு ஒரு சபாஷ் சொன்னால என்ன?
 இவரைபோல  எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தால் இந்தியா எப்படி இருக்கும்? 

ரமணன்


5/10/13

ஒபாமாவின் அதிரடியினால் ஆடிப்போன அமெரிக்கா !

அமெரிக்க அதிபர் ஒபமா அறிவித்திருக்கும்ஷட்-ட்வுன்”  மூலம் 8 லட்சம் பேர் ஒரேநாளில் வேலையிழந்திருக்கின்றனர்  அமெரிக்கபொருளாதாரம் ஆடிப்போயிருக்கிறது ஏன்?
 --ஒரு அலசல்

உலக பொருளாதாரத்தையே மாற்றியமைக்ககூடிய சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்க நாட்டின் அரசாங்கம் ஒரே இரவில் செயலிழந்து நிற்கிறது. வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பலர்  வேலை போன செய்தியை காலையில் டிவியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்., காரணம்.  அதிபர் ஒபாமாவினால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறமுடியவில்லை.



 அரசின் கஜானாவிலிருந்து அரசாங்கத்தினால் பணம் எடுக்க முடியாத நிலையில் அரசின் பலதுறைகள்  இழுத்து  மூடபட்டு    8 லட்சம் நேரடிஊழியர்களுக்கும் 10 லட்சம் பகுதிநேர ஊழியர்களுக்கும் அடுத்த 6 மாதம் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிக்கபட்டிருக்கிறது. முதியோர் பென்ஷன்கள் நிறுத்திவைக்கபட்டிருக்கிறது.

ஏன் பட்ஜெட் நிறைவேறவில்லை?                    

அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுசபைகள். ஓன்று நமது மக்களவைக்கு நிகரான பிரதிநிதிகளின் சபை. இதில் குடியரசு கட்சிதான் மெஜாரிட்டி. மற்றொன்று நமது மேலவைக்கு நிகரான செனட், இதில் ஒபாமாவின் கட்சியான ஜனநாயக கட்சிக்குதான் மெஜாரிட்டி.  கடந்த அதிபர் தேதலில் ஒபாமா முன்வைத்த ஒரு விஷயம். நமது அரசு காப்பீட்டு வசதி.போல  ”ஒபாமா ஹெல்த்கேர்” என்ற சாமானியனுக்கு மருத்துவ இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.  மருத்துவ செலவு மிகமிக அதிகமாகயிருக்கும் அமெரிக்காவில் இந்த இன்ஷ்யூரன்ஸ் அரசு, தனியார்பணியிலிருப்பவர்கள் மற்றும்  வேலையில்லாத, எளிய மக்களுக்கு உதவப்போகும் என்பதினால்  மக்களிடம் ஆதரவு இருந்தது ஒமாபா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.   ஆனால்  வரி பணத்தை வரியே செலுத்தாதவர்களுக்கு சமூகநலதிட்டங்கள் என்ற பெயரில் செலவழிப்பதை  குடியரசு கட்சி எதிர்த்தது. அதிபர் தேர்தலில் அதன் கட்சி வேட்பாளார்  வெற்றிபெறாதாதால் இந்த திட்ட்த்திற்கு தங்கள் எதிர்ப்பை காட்ட ஒரு  சந்தர்ப்பதிற்காக காத்திருந்தது. அதனால் பட்ஜெட்டை நிறைவேற்றாமல் இழு பறி செய்தது கொண்டிருந்தது.
நிதிமசோதா நிறைவேறவேண்டுமானால் ”ஒபாமாகேர்” திட்டத்தில் திருத்தங்கள் அல்லது ஒராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை  எதிர்கட்சியான குடியரசு கட்சி கொண்டுவந்து தன் மெஜாரிட்டி பலத்தால் நிறைவேற்றியும் விட்டது.
 ஆனால்   ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி தாங்கல் மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்தது..  நிதியாண்டின் கடைசி நாளான செப் 30ல். வருடாந்திர பட்ஜெட் நிறைவேறாவிட்டால், குறுகிய கால அவசர செலவிற்காக அரசுக்கு நிதிதர நாடாளுமன்றம் அனுமதி தரவேண்டும். தங்கள் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதில் கடுப்பாகிபோன குடியரசு கட்சி இந்த தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் காப்பீட்டு திட்ட செலவை  குறையுங்கள்  அல்லது ஒராண்டு தள்ளிப்போடுங்கள் என மிரட்டியது   ஒபாமா பணிய மறுத்து நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனையை மக்களிடம் கொண்டுபோவேன் என பதிலுக்கு மிரட்டினார்.
  . செப் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடித்த இந்த போராட்டம் முடிவுக்கு வருவதற்குள் நிதியாண்டு முடிவுக்குவந்துவிட்டது. ஆளும் கட்சி காலியான கஜானாவுடன் ஆட்சியை தொடரவேண்டிய நிர்பந்தம். அதன் விளைவுதான் இந்த ஷட்-டவுன்”அறிவிப்பு. சுருக்கமாக சொன்னால் இரண்டுகட்சிகளும் தங்கள் கொள்கையை விட்டுகொடுக்க மறுத்த அகம்பாவத்தின் விளைவு இது.

 மக்கள் வேலையிழப்பு ஏன்?

அமெரிக்க நாடாளமன்ற நடைமுறைப்படி பட்ஜெட் நிறைவேறாதுபோனால் உடனே அரசு ராஜினாமா செய்யவேண்டியதில்லை. 6 மாதத்திற்குள் எப்படியாவது சமாளித்து பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டும், அதுவரை செலவினங்களை குறைக்கவேண்டும். எளிதான வழி அரசு பணியாளார்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை. அதைத்தான் இப்போது ஒபாமாவின் அரசு செய்திருக்கிறது. தொழிற்சங்கங்கள் கொதித்து எழதோ?  அமெரிக்க அரசுபணியில் இருப்பவர்கள் அரசாங்கம் பொருளாதார, மற்றும் போர் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தால் இம்மாதிரியான நிர்பந்தளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பணியமர்த்தபடுகிறார்கள்.  இம்மாதிரி நெருக்கடிகளில் அரசாங்கபணிகளை அவசியமானவை, அவசியமில்லாதவை என வகைப்படுத்தி அதை அறிவித்துவிடுவார்கள். நள்ளிரவுக்கு பின் எடுக்கபட்ட பல அதிரடி முடிவுகள் அதிகாலையில் அமுல்படுத்தபட்டன,  பல அரசு அலுவலகங்கள்,தேசியபூங்காக்கள்,மியூசியங்கள்,  நியூயாரக் சுதந்திர தேவி சிலை, வாஷிங்டனிலுள்ள ஸ்மித்ஸன்யன் மீயூசியம், நினைவு சின்னங்கள் எல்லாம் மூடபட்டன.




இவைகள் ஈட்டும் வருவாயை விட இதன் நிர்வாக செலவு அதிகமாம்.  நாஸாவில் மட்டும் 97 % (18000க்கும்மேல்) பணியாளர்களுக்கு லீவு. வருமானவரி துறையில் பணீயாளர்கள்  இல்லாததினால் வரி வருமானம் குறையும். அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும்,பங்குசந்தை தடுமாறும். அதன் தாக்கம் மற்றநாடுகளின் பங்கு சந்தைகளில் எதிரொலிக்கும்.

இது புதிதில்லை

அமெரிக்க அரசியலில்  இப்படி அரசை முடக்குவது என்பது இதற்கு முன்பே 17 முறை நிகழந்திருக்கிறது. ரீகன், புஷ், கார்ட்டர் காலங்களிலும் ” அரசு மூடல்” நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் சில நாட்களிலேயே சரியான விஷயம், 17 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா சந்திக்கும் இந்த அதிர்ச்சி சில வாரங்களாவது நீடிக்கும் என்பது வல்லுனர்களின் மதிப்பிடு. அதுவரை அமெரிக்க பொருளாதாரம் இழக்கபோவது வாரத்துக்கு நூறுகோடி டாலர்கள்!

 அரசியல் நாடகமா?

அடுத்த சில மாதங்களில் பிரநிதிகள் சபை தேர்தல் வருகிறது. அதிலும் தன் கட்சி மெஜாரிட்டியை பிடிக்க,  இம்மாதிரி ஒரு சூழ்நிலைக்கு பொறுப்பில்லாத, மக்கள் நலம் விரும்பாத குடியரசு கட்சிதான் காரணம் என்பதை மக்கள் உணர்ந்து அவர்கள் மீது வெறுப்பு அதிகரித்து அவர்களுக்கு ஓட்டு அளிக்கமாட்டார்கள் என்பதற்காக  ஒபமா நடத்தும் அரசியல் நாடகம் இது. இந்த நாடகத்தில்  அரசு ஊழியர்களை பகடைக்காயாக்கிவிட்டார். ஒபாமா கேர் திட்டத்தை எதிர்க்கபோய் எதிர்பாராதவிதமாக குடியரசு கட்சி சிக்கிகொண்டு திண்டாடுகிறது என்றும் சில அமெரிக்க தினசரிகள் எழுதிகின்றன.

இந்தியா பாதிக்கபடுமா?

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்க பெடரல் அரசின் பணிகளை அதிகம் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் நிலமை நிடித்தால் அரசாங்க பணிகளை செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கபடும். என்கிறார். சோம் மிட்டல் இவர்  இந்திய கம்ப்யூட்டர் தொழில் கூட்மைப்பின் தலைவர். அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு அதிகம் மருந்து ஏற்றுமதி செய்வது நாம் தான். பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனால்  மிக பாதிப்புக்குள்ளாகும்..  
எப்போது நிலமை சரியாகும்?
இரண்டு கட்சிகளும் கூடிப் பேசி நிலைமை சரி செய்து பட்ஜெட்  நிறைவேற்றவேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகும்? என்பது எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி. ஆனால் 1996ல் கிளிண்ட்னை  மண்டியிட குடியரசுகட்சி இதே முறையை கையாண்டதில் மக்கள் வெறுப்புற்று கிளிண்டனை ஆதரித்தார்கள். அதேபோல் பல முனைகளில் தோல்வியை சந்தித்து மக்களின் செல்வாக்கை இழந்துவரும் ஒபாமா விற்கு அதை மீட்க குடியரசு கட்சியின் இந்த பிடிவாதம் உதவபோகிறா?  உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.
கல்கி 13/10/13


26/9/13

செவ்வாயில் ஒரு சின்ன வீடு


”உங்கள் ஊரில் வீட்டுமனைகளின் விலை ஏறிவிட்தா?  வாங்க முடியாமல் போய்விட்டதே என வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு 10 ஏக்கர் வாங்கிப்போடுங்கள். ஒரு ஏக்கர் 69 டாலர்கள் தான் இன்றே  பதிவு செய்யுங்கள்”  என்று அமெரிக்காவின் பல  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் விளம்பரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய விளம்பரங்கள் பற்றி பேசபட்டாலும் இப்போது அமெரிக்கா தனது செவ்வாய் கிரக பயண ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ”க்யூராஸிட்டி” கலத்தை அங்கு வெற்றிகரமாக தரையிறக்கியபின்னர் இந்த  மாதிரி விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன.
வேற்று கிரகங்களின் நிலம் யாருக்கு சொந்தம்? முயற்சி செய்து முதலில் இறங்கிய நாட்டிற்கா? அல்லது ஆராயச்சி செய்து கொண்டிருந்த அத்தனை நாடுகளுக்குமா?  1967 லியே ஐக்கிய நாடுகள் சபை இதற்காக ஒருஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறது. 102 நாடுகள் கையெழுத்திடிருக்கும் இந்த சாஸனத்தின் படி வேற்று கிரகங்களின் நிலங்கள் உலக மனித குலத்திற்கே சொந்தம் எந்த ஒரு தனி நாடும் அது அந்த கிரக ஆராயச்சியில் வெற்றிகண்டு முன்னணியில் இருந்தாலும் கூட உரிமை கொண்டாட முடியாது. அப்படியானால் எப்படி இவர்கள் விற்கிறார்கள்?  இந்த வியாபாரத்தை அட்டகாசமான விளமபரங்களுடன் செய்யும்  பை மார்ஸ். காம்(buy mars.com) இந்த ஒப்பந்தம் நாடுகளை தான் கட்டுபடுத்தும், எங்களைபோன்ற நிறுவனங்களை இல்லை என்கிறது. இது தான் எங்கள் தொழில் என்று அமெரிக்க சட்டங்களின் பதிவு செய்திருக்கிறோம். இதுவரை எவரும் எங்களை தடுக்க வில்லை என்று சொல்லிக்கொள்கிறது. இவர்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதை   இந்த மாதிரி விற்பனைகளை பதிவு செய்வதற்காகவே நிறுவியிருக்கும் இன்னொரு நிறுவனத்தில் பதிவு செய்து பத்திரத்தை பிரேம் போட்டு  தருகிறார்கள்  ஸ்டாண்டர்ட், பிரிமியம், டிலெக்ஸ் என்று பேக்கேஜ் கள் வேறு.



ஏற்கனவே இது மாதிரி நிலவில் நிலம் விற்று கொண்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் மார்கெட்டில் குதித்திருக்கிறார்கள். போலி கம்பெனிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள் என்று அறிவிப்புகள் வேறு.  இவைகள் சட்டபூர்வமானதில்லை என தெரிந்தும் எப்படியும் எதாவது பலன் பின்னால் இருக்கும் என நம்பும் பல அமெரிக்கர்கள் பணம் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
இந்த விளம்பரங்களை தொடர்ந்து எழுந்திருக்கும் இன்னொரு பிசினஸ் அலை செவ்வாய்கிரகத்திற்கு பயணம். இன்னும்  அங்கு மனிதனை அனுப்புவதில் முதல் நிலையை கூட எட்டாத இந்த கட்டத்திலேயே  முன் பதிவுகளை துவக்கியிருக்கிறது ஒரு டென்மார்க் நாட்டு  நிறுவனம்  பயணமே இரண்டாண்டு காலம் இருக்கும் இந்த பயணத்தில் முதலில் 4 பேர் அனுப்படுவார்களாம். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நான்குபேர் அணிகளாக (இரண்டு பெண் இரண்டு ஆண்) அனுப்புவார்களாம். அங்குபோய் இவர்கள் ஒரு புது உலகத்தை உருவாக்குவார்களாம். அங்கேயே வாழப்போவதால் ஒரு வழி டிக்கெட் தான் வழங்கபோகிறார்களாம். முதல் பயணம் 2023ல் இருக்கும் அதற்கு இப்போதே  முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் தேர்வு செய்யபோகிறார்களாம். இந்த கதைகளை கேட்டு புக் செய்திருப்பவர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள்.  நமது ஐஎஸ்ஆர்வோ வின் செவ்வாய் ஆராய்ச்சிகளும் அறிவிப்புகளும் ஒரு காரணம்.
கண்ணில் தெரியும் எவருக்கோ சொந்தமான நிலத்தை மற்றொருவருக்கு விற்கும் நம்மூர் கில்லாடிகளைப்போல கண்ணுக்கே தெரியாத வெற்றுகிரகத்தின் நிலத்தை விற்று கொண்டிருக்கிறார்கள் இந்த சூப்பர் கில்லாடிகள். விரைவில் இவர்களின் எஜெண்ட்கள்  உங்கள் ஊரில் கடைபோட்டாலும் ஆச்சரியமில்லை. ஜாக்கிரதையாக இருங்கள்

ஆதித்தியா (ரமணன்)
கல்கி8/9/13

13/7/13

மோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்


அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு  கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலைஎன்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.
 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதுன்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில்  பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று  தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு  தீர்ப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில்.  அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய  தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது.  என்றும் மனுவில் சொல்ல பட்டது.
உண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது..  குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது.  கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து  இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என  சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த  நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று என்கவுண்ட்டர்பாணியில் குஜராத் போலீஸ்  தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் என்கவுண்ட்டரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம்  கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த என்கவுண்ட்டருக்குஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி.  இந்த அடையாளாங்கள்  குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.
 ஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக  ஒரு  டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி   “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.
மற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி  என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும்   மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும்   அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும்  தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது.  இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை.  எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி.   உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள்  எதுவும் எடுக்காமல் விடப்பட்டால்  பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும்  கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.
சிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான  இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா?
நிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம்.   அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு   போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது

-ஆதித்யா 
கல்கி  21/07/13 இதழலில்

30/4/13

இந்திய ”ஸ்வாமி”யிடம் ஜோசியம் கேட்ட இங்கிலாந்தின் எதிர்கட்சி தலைவர்’



இங்கிலாந்தின் முதல் பெண்பிரதமர்திருமதி. மார்ரெட் தாட்சர். ”இரும்பு மனிஷி”யாக அறியபட்ட இந்த பெண்மணிஇங்கிலாந்தின்
பொருளாதர முகத்தை மாற்றியவர். நீண்ட நாள் பதவிவகித்த பிரதமரும் கூட. தனது 87 வயதில் கடந்த வாரம் காலமானார்..

===

 அயலுறவு துறையில் செயலராகயிருந்து ஒய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சாராக பணியாற்றியவர் நட்டுவார் சிங்.
நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பவர். அவரது “புலிகளுடன் வாக்கிங்- ஒரு ராஜதந்திர கடந்த கால கதைகள்
“Walking with lions-Tales from a diplomatic past )என்ற புத்கத்திலிருந்து…




1975ஆம் ஆண்டு நான் லண்டனில் துணைஹைகமிஷனராக இருந்த போது ஒரு நாள் அப்போது இங்கிலாந்து வந்திருந்த சந்திராஸ்வாமியிடமிருந்து போன் வந்தது. அவரை வந்து சந்திக்க வேண்டினார். “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் தூதரகத்திற்கு வரலாம் என்று சொல்லிவிட்டேன். காவி உடை, கழுத்தில் பெரிய உத்திராட்ச மாலை நீண்ட தண்டம் சகிதம் மறுநாள் என்னை ஆபிஸில் சந்தித்த அவர் உரையாடலின்போது பல இந்திய அரசியல் பிரபலங்களின் பெயர்களை உதிர்த்தார். கிளம்பும் முன் அவர் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய பெயர்களை குறிப்பிட்டு சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டினார். இவரை என்னை சந்திக்க சொன்னவரின் மேல் நான் கொண்டிருந்த நன் மதிப்பால் நேரிடையாக பதில் சொல்லாமல் சமாளித்தேன். (டிப்ளமேட் இல்லையா?) சில நாட்களில் அன்றைய அயலுறவு அமைச்சர் ஒய்,பி, சவாண் அமெரிக்க போகும் வழியில் லண்டன் வந்தார். அவரிடம் சந்திரா ஸ்வாமி பற்றி சொல்லி அவர் மெளண்ட் பேட்டனையும், எதிர்கட்சி தலைவர் மார்கரெட் தாட்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்லுகிறாரே, செய்யலாமா என்றேன். செய்யுங்களேன், அவர் சந்திப்பினால் பிரச்னை ஒன்றும் இல்லையே என்ற அவரது பதில் எனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் அளித்தது. நல்ல வேளையாக மெளண்ட்பேட்டன் விடுமுறைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாதால் சந்திப்பு இயலாது என்று சொல்லிவிட்டார். தாச்சர் எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்கு நிகரானவர் என்பதால் நேரில் சந்தித்து பேசினேன்.. மறுவாரம் 10 நிமிடம் சந்திக்க சம்மதித்தார். இந்த ஆள் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால் எனக்குதான் பிரச்சனை என பயந்துகொண்டே இருந்தேன். பாரளமன்ற வளாகத்தில் நுழைந்த்திலிருந்தே மற்றவர்கள் கவனத்தை கவர ஏதாவது செய்துகொண்டு என்னை சங்கடபடுத்திக்கொண்டே வந்தார் ஸ்வாமி ”என்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற தாட்சரின் கேள்விக்கு “சீக்கிரமே உங்களுக்கு தெரியும்” என்று ஹிந்தியில் சொன்னதை நான் மொழிபெயர்த்தேன், (ஆசாமிக்கு ஆங்கிலத்தில் ஒரு அட்சரம் தெரியாது) ஒரு பெரிய வெள்ளை பேப்பர் கேட்டார் அதை 5 நீள துண்டுகளாக கிழித்தார். மார்கரெட் தாட்சரிடம் கொடுத்து அதில் 5 கேள்விகள் எழுத சொன்னார். சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவர் எழுதினார். அவைகளை கசக்கி சின்ன பந்துகள் போல் செய்து தாச்சரிடம் கொடுத்து ஏதாவது ஒன்றை திறந்து பார்க்க சொன்னார் சந்திராஸ்வாமி. அவர் பார்த்துகொண்டிருக்கும்  கேள்வியை என்னிடம் இந்தியில் சொன்னார், நான் மொழிபெயர்த்தேன். சரி என்பது தாட்சரின் கண்ணிலேயே தெரிந்தது.அடுத்தடுத்த கேள்விகளும் சரியாகவே சொன்னார். தயக்கத்திலிருந்து ஆச்சரியமாக மாறியிருந்த தாட்சர் இவர் தெய்வீகசக்தி வாய்ந்தவர் என எண்ண ஆரம்பித்தது  எனக்கு புரிந்தது, சோபாவின் நுனிக்கே வந்து விட்ட தாட்சர் மேலும் சில கேள்விகளை கேட்க பதில்கள் சொன்ன பின்னர் சட்டென்று எழுந்து சூரியன் அஸ்தமித்துவிட்டான். நான் இனி இன்று பதில் சொல்ல முடியாது என்றார். உங்களை எப்போது மீண்டும் சந்திக்கலாம்? என கேட்ட தாச்சருக்கு ”வரும் செவ்வாய்கிழமை 2.30க்கு நட்வார்சிங் வீட்டில்” என்றார். ஆடிபோனேன். என்வீட்டிலா? நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒரு தூதுவர் வீட்டிற்கு வருவதில் பல சம்பிராதயபிரச்னைகள் என்பதால் நான் இதை மொழிபெயர்த்து சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். ”சொல்லிய பின் பாருங்கள்” என்று அவர் சொல்லிகொண்டிருந்த போதே மார்கரெட் என்னவென்று விசாரித்தார்.. நான் சொன்னவுடன், ”மிஸ்டர் ஹைகமிஷனர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?” எனகேட்டாரே பார்க்கலாம். விடைபெற எழுந்தபோது சடென்று ஒரு தயாத்தை வரவழைத்து வரும்போது இதை கையில் கட்டிகொண்டு சிவப்பு ஆடை அணிந்து வாருங்கள் என்றார். ஒருபெண் அணீய வேண்டிய ஆடையைபற்றி யெல்லாம் சொல்லுவது இங்கிலாந்தில் அநாகரிகம். எனபதால் சொல்ல மறுத்தேன். மீண்டும் தாட்சர் என்ன என்று கேட்டதனால் தலைகுனிந்துகொண்டே சொன்னேன். தாயத்தை வாங்கிகொண்டார்.
சொன்னபடி செவ்வாய் மதியம் மார்ரெட் தாட்சர் சிவப்பு உடையில் கையில் கட்டிய தாயத்துடன் வந்தார். நிறைய கேள்விகள் கேட்டார், அதில் முக்கியமானது, நான் நாட்டின் பிரதமர் ஆவேனா? எப்போது? ”நிச்சியம் இன்னும் 4 ஆண்டுகளில் என்ற ஸ்வாமி 9. 11.அல்லது 13 வருடங்கள் பிரதமாக இருப்பீர்கள்” என்றார். ஒரு நாள் பிரதமராவோம் என நம்பிய மார்கெட் தாட்சர் நீண்ட வருடங்களை நம்பவில்லை.
சந்திரா ஸ்வாமி சொன்னது பலித்தது. மார்கரெட் தாட்சர் 1979லிருந்து 1990 வரை  11 வருடம் பிரதமாரகயிருந்தார்.


9/4/13

பகல் கனவுகளும், புரியாத கணக்குகளும்




ஏப்பரல் ஆழம் இதழில் பட்ஜெட் பற்றி எழுதியிருக்கும்
கட்டுரை இது 

 மத்திய பட்ஜெட் 2013-14 ஒரு பார்வை

நிதி ஒதுக்கீடு, பற்றாக்குறை, மந்தமானபொருளாதார வளர்ச்சி, பெருகிவரும் பணவீக்கம். தொடர்ந்து வெடித்த ஊழல்கள், எல்லாம் அதிதீவிரமாக நீடித்துகொண்டிருக்கும்  சூழ்நிலையில். இந்த ஆண்டின் பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார். 8 ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்வதை  வழக்கம்போல் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர். ரயில்வே பட்ஜெட் போன்று பொது பட்ஜெட்டில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் ஏதுமில்லாதற்கு முக்கிய காரணம் நிதியமைச்சர்  
சிதம்பரத்தின் துவக்க உரை. மிக நன்றாக தயாரிக்க பட்டிருந்ததும், அதை அவர் அழகாக வாசித்ததும் ஒரு காரண..  மாறிவரும் உலகபொருளாதார சவால்கள், அதை இனி எப்படி இந்தியா எப்படி சமாளிக்க வேண்டும், இனி வரும் 10 ஆண்டுகளில் நாம் எங்கு இருப்போம் என்பதை  நோபல் அறிஞர்களின் கருத்துகள், திருக்குறள், விவேகானந்தரின் வார்த்தைகள் போன்ற மேற்கோள்களுடன் ஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்.  ஆனால் பட்ஜெட்?  ஒரு அற்புதமான டிரையலருக்கு பின்   மோசமான சினிமாவைப் பார்த்தது போல   பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. இந்த பட்ஜெட்டை அலசி பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ் பேக்
2012-`13 பட்ஜெட்
'கருணை உள்ளவனாக மாறுவதற்கு நான் இரக்கமற்றவனாக இருந்தாக வேண்டும்'' என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளைக் கூறி கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிஜமாகவே இரக்கமற்றவராக மாறி அடித்தட்டு மக்களை நேரடியாக தாக்கும் சேவை வரியை பல விஷயங்களுக்கு விஸ்தரித்து, வருமான வரியில் பெண்களுக்கு அளிக்கப்ட்டிருந்த சின்ன சலுகைகளை கூட திரும்ப பெற்றிருந்தார். பட்ஜெட் வெளியான சில தினங்களில்  “பட்ஜெட்டில் வருவாயாக காட்டப்ட்டிருக்கும் பல இனங்களில் அந்த அளவு வருவாய் வருவதற்கு வாய்ப்பில்லை,அதேபோல் செலவுகளும் குறைத்து  மதிப்பிடபட்ட்ருக்கிறது. இது ஆபத்தானது. இதன் விளைவுகள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள்ளாகவே தெரிந்துவிடும்” என்ற கருத்தை தெரிவித்தவர் அரசு நிதித்துறையின்  ஒரு முன்னாள் அதிகாரி. சிதம்பரத்தின் இந்த பட்ஜெட் அவர் கருத்துகள் உண்மை என்பதை உறுதிபடுத்திவிட்டன.


கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிக்கபட்டபின்  எதிர்பார்த்த வருமானத்தை  எட்டமுடியாததால் அதை குறைத்தும்  கட்டுபடுத்த முடியாதாதால் அதிகரித்த செலவுகளுடனும் பட்ஜெட் திருத்தி மதிப்பிடபட்டது. அதன் படி துண்டு விழுந்தது  1,18000 கோடி. இதை அரசு எப்படி சமாளித்தது? அடிப்படை கட்டமைப்புகளுக்கான செலவினங்ளுக்கு ”மூலதன திட்ட செலவு”
என்று பட்ஜெட்டில் ஒவ்வொருஆண்டும் ஒதுக்கபடும். கடந்த ஆண்டு இதற்காக ஒதுக்கபட்டது  4.29 லட்சம் கோடி. இதில் கை வைத்து துண்டுவிழுந்த பட்ஜெட் தொகையை சமாளித்துவிட்டார்கள். புரியும்படி சொல்லவேண்டுமானால் பாராளுமன்றத்தில் அறிவித்து ஒப்புதல் பெற்ற பட்ஜெடில் சொன்ன அடைப்படை கட்டமைப்பு செலவுகளை செய்யாமல்  மக்களை ஏமாற்றி விட்டார்கள்.  இந்த ஆண்டு பட்ஜெட்டை  UPA2 இல்லாத ஒரு அரசு அளிக்க நேர்ந்திருந்தால் இது வெளிச்சதிற்கு வந்திருக்கும்..

இந்த பட்ஜெட் ”தேர்தல் பட்ஜெட்டா?”
வருமான வரி விலக்கு 9 லட்சமாக உயர்வு. பெண்களுக்கு முழு விலக்கு. விவசாய கடன் ரத்து. கார், டீவி, கம்ப்யூட்டர், செல்போன் வரிகள் பாதியாக குறைப்பு. பங்குச் சந்தையில் ஈட்டும் லாபத்துக்கு வரி இல்லை. வங்கிகளில் யார் வேண்டுமானாலும் ஜாமீன் இல்லாமல்  10 லட்சம் வரை 6 சதவீத வட்டியில் தனிநபர் கடன் பெறலாம். எந்த ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை…இது போன்ற புரட்சிகரமான அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் ஆவேசமாக விமர்சிக்கும். இந்திய பொருளாதாரம் இனி அவ்வளவுதான் என்று தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர்கள் குமுறுவார்கள். மக்கள் மனதை மன்மோகன் அரசு எப்படி புரிந்து கொண்டிருக்கிறது, பாரென்று நடுத்தர வர்க்கம் கரகோஷிக்கும்.எவருக்கும் அந்த வாய்ப்பை அளிக்காமல் ஏமாற்றி விட்டார் நிதியமைச்சர் சிதம்பரம். அவர் சமர்ப்பித்த எட்டாவது பட்ஜெட்டை பாராட்டுவதா கண்டிப்பதா என்று தெரியாமல் எதிர்கட்சி தலைவர்கள் தவித்தினர். ஏன் சிதம்பரம் இப்படி செய்திருக்கிறார் ?. இங்கே தான் அவரது அனுபவமும், சாணக்கியம் வெளிப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எதிர் பார்க்கபடும் வருவாய் 10.56 லட்சம் கோடிகள். இது கடந்த ஆண்டின் பட்ஜெட்டைவிட 1.84 லட்சம் கோடி அதிகம். ஏற்கனவே துண்டுவிழுந்திருக்கும் பகுதியையுடன் இந்த நிதியாண்டின் செலவுகளை சமாளிக்க இந்த வருவாய் போதாது. அதனால்  எந்த பாப்புலர் திட்டத்தை அறிவித்தாலும் செய்ய முடியாது எனபதை உணர்ந்து  குறிப்பிட்டு சொல்லுகிற மாதிரி வரிகள் விதிக்காமல் 18000 கோடி வருமானத்திற்கு வழி வகுத்திருக்கிறார். இந்த சாமர்த்தியம் பாராட்டபடவேண்டிய விஷயம். ஆனால் இதன் மேலும் துண்டுவிழப்போகும் பணத்தை எங்கிருந்து கொண்டுவரபோகிறார் என்பது அமைச்சர் மட்டுமே அறிந்திருக்கும் சிதம்பர ரகசியம்.
புரியம் கனவுகளும் புரியாத கணக்குகளும்
வரும் நிதியாண்டில்  நாட்டின் பல இனங்களில் அடையக்கூடிய வளர்ச்சி வீதங்களை பொருளாதார வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செய்யபடும் கணிப்பு இது. இது பல முறை தவறாகவும் ஆகியிருக்கிறது. ஆனாலும் கணக்கிடும் முறைகளுக்கும் வரிவிதிப்புகளுக்கும் இது தான் அடிப்படையாக உதவுகிறது. இதன் படி வரும் ஆண்டில் வளர்ச்சி 5% வீதமாகவும், பணவீக்கம் 8% வீதமாகவும் இருக்கும் என மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த அளவுகள் சரி என்று ஏற்றுகொண்டால் வரிகள் மூலம் 13% தான் அதிகமாக கிடைக்கும், ஆனால் அமைச்சர் திட்டமிட்டிருப்பது 20% அதிக வரி வசூல். எப்படி இது சாத்தியம்? என்று தான் புரிய வில்லை.
 இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு, உரம்,எரிபொருள் இவற்றிற்காக ஒதுக்கபட்ட மான்யம் 5.92 லட்சம்கோடி, ராணுவத்திற்கு ஒதுக்கபட்டிருப்பது 2.04 கோடி. ஆக இதற்கு மட்டுமே தேவையானது 7.96 லட்சம் கோடிகள். வரிகள் மூலம் எதிர்பார்க்கபடுவது 10.56 லட்சம் கோடி. இதில் நிதிகமிஷனின் சிபார்சின் படி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பிடுகளை கழித்தால்  மீதமிருக்கபோவது 88000கோடிகள் மட்டுமே. இதைவைத்துதான் மற்ற திட்டங்கள் அரசின் செலுவினங்கள் எல்லாம் சமாளிக்க பட வேண்டும்.  நிச்சியமாக புதிய கடன் சுமைகளை ஏற்றாமல் இது முடியாது. இந்த பட்ஜெட்டில் நம்முடைய தற்போதைய கடனுக்கு வட்டியாக  கட்டவேண்டியதாக காண்பிக்கபட்டிருப்பது 3.71 லட்சம் கோடிகள். இது இன்னும் உயர்ந்தால் எப்படி பணவீக்கம் குறையும்? நாட்டின் வளர்ச்சிவீதம்  எப்படி அதிகரிக்கும்?. நிதி வர்த்தகம் என இரு பிரிவிலும் பற்றாகுறை பயமுறுத்தும் இந்த நேரத்தில்  சிதம்பரம் எந்த தைரியத்தில் செலவுகளை அதிகரிக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சிக்கனம் பற்றி அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வரும் நிதியமைச்சர், விவசாயம் ஊரக வளர்ச்சி ராணுவம் போன்ற துறைகளுக்கு இவ்வளவு தாராளமாக  ஒதுக்குவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராணுவ துறையில் ஊழலின் நிழல் நீளமாகிகொண்டுவரும், ஊரக வளர்ச்சி திட்ட்தின் ஒரு அங்கமான 100 நாள் வேலை திட்டம் கடுமையாக விமர்சிக்க படும் இன்றைய சூழல்நிலையில் இத்தகைய அறிவிப்பு ஆச்சரியைத்தான் தருகிறது. மேலும்  வருவாயை அதிகரிக்க அவர் அறிவித்திருக்கும் திட்டங்களும் நம்பிக்கை தருவதாக இல்லை. பொதுத்துறை பங்குகளை விற்றும் டெலிகாம் லைசன்ஸ் கட்டணங்கள் மூலமும் திரட்டக்கூடிய தொகையாக ஆண்டைவிட இரு மடங்கு வருமானம் கிடைப்பது நிஜமாகப் போவதில்லை என்பது நிச்சியம்.வருமான வரி விலக்கு வரம்பு ஒரு அங்குலமாவது உயரும் என்று சம்பளதாரர்கள் வழக்கம்போல எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு 2,000 இனாம் வழங்கிவிட்டு, கோடீஸ்வரர்கள் பாக்கெட்டில் கைவைத்துள்ளார்.
நாட்டில்  ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு (சூப்பர் ரிச்)  10 % கூடுதல் வரி என அறிவித்திருக்கிறார். ஆனால்  அவர்களின் எண்ணிக்கை வெறும் 42,800 என்ற சொல்லபட்டதுதான் ஆண்டின் நல்ல ஜோக். அதைவிட சிறந்த ஜோக் ”சூப்பர் ரிச்சுக்கு வரியை ஏற்றி சமானியனுக்கு எந்த வரியும் போடத பட்ஜெட்” என மீடியாக்கள் வர்ணித்ததுதான். பட்ஜெட்க்கு முன்தினம் நிதி அமைச்சகம் அவர்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் நாட்டின் தற்போதைய பொருளதார நிலைமையை விளக்கும் அறிக்கையில் நாட்டில் 5 கோடிக்கு மேல் நிகர மதிப்பாக சொத்து வைத்திருப்பவர்கள் (அறிவிக்க பட்ட கணக்கின்படி) 1,25,000பேர்கள்  என்றும் மிக விலையுர்ந்த ஆடம்பரகார்களின் விற்பனை கடந்தஆண்டு 27000 எனவும் சொல்லுகிறது. இதை அடிப்படையாக எடுத்துகொண்டால் கூட1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் நிச்சியம் அதிகம் இருப்பார்கள். மேலும் இவர் கண்க்கின் படி 40000 பேர் என்று வைத்துகொண்டால் கூட இந்த கூடுதல் வரிமூலம் எவ்வளவு அதிகம் திரட்டி விட முடியும்.? அவர்களுக்கு ஒரு கோடிக்கு சற்றே குறைவாக வருமானத்தை காட்ட சொல்லிகொடுக்கூடிய ஆடிட்டர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்.?
பட்ஜெட்டினால பலனே இல்லயா?
பட்ஜெட்டை ஆழந்து நோக்கினால் நாட்டின் எதிர்காலபொருளாதார நிலை ஆபத்தான் கட்டத்திற்கு போய்கொண்டிருக்கிறதோ? என்ற அச்சத்தை தான் தருகிறது  வரும் ஆண்டுகளில் அதிக அளவில் கடன் சுமை நிச்சியமாக அதிகரிக்க போவதையும் அது நாட்டின் வளர்ச்சி வீதங்களை பாதிக்க போவதையும் மறைமுக அபாய அறிவிப்பாக இந்த பட்ஜெட் சொல்லுகிறது.
 கட்டமைப்பு துறைகளை அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட்டால் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறார்.அமைச்சர். பொருளாதார மற்றும் , சமூக ரீதியாக எழும் இதன் பின் விளவுகளின் தாக்கம் நீண்ட நாட்கள் இருக்கும் என்பது அவருக்கு புரிந்திருந்தாலும் இதை செய்தே ஆக வேண்டிய அரசியல் நிர்பந்தத்தினால் இதை அறிவித்திருக்கலாம்.
பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி துவங்குவதைஅறிவித்திருக்கிறார். எந்தவித பயனையும் அளிக்க போகாத ஸ்ட்ண்ட் இது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் சேர்மன் ஆக பதவிஉயரும் அளவிற்கு வஙகிகளில் திறமையான பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. வங்கிகள் மூலம் உதவி பெற்ற பல கோடி பெண் பயனாளிகள் இருக்கிறர்கள். நாடாளுமன்றத்தில் இன்னும் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கிட்டை சட்டமாக்க முடியாத நிலையையில் நாங்கள்தான் பெண்களுக்காக இதை செய்தோம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்து கொள்ள வேண்டுமானால் பயன் படுமே தவிர பெண்களின் வாழ்க்கை தரம் உயர இது தனியாக பெரும் அளவில் உதவ போவதில்லை..
 பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு,.
‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
 தூக்கங் கடிந்து செயல்‘‘
என்ற திருக்குறளை வாசித்தார் அமைச்சர் சிதம்பரம்.
தெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.
இதை சரியாகத்தான் செய்திருக்கிறார் சிதமபரம்.
செய்ய துணிந்திருப்பது வருமானத்தை பெருக்க வழிகள் சொல்லாது, 
காலம் கடத்தாமல் உடனே செய்திருப்பது செலவுகளை அதிகரித்திருப்பது.


உரையின் இறுதியாக, ”நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள்” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் 
உண்மைதான் இம்மாதிரி தொடர்ந்து துண்டுவிழும் மோசமான பட்ஜெட்களையும் அதனால் ஏற்படும் கடன் சுமைகளினால் உருவாகும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளையும் சந்திக்கும் வலிமை   சாமனிய இந்தியனுக்குதானே உண்டு.