அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/7/14

கறுப்பு பணத்தின் உண்மையான கலர்


ஆழம் ஜூலை இதழலில் எழுதியது 



பதவி ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை  கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு  தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது  தான்.  கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது.  இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க  புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது. மோடியின் அரசுக்கு ஒரு அரசியல்  துணிவு (POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில்  மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா? இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா? இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும்  சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும்? என்ற கேள்விகளுக்கான விடையை பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.
சிறப்பு புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு.  2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர் தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.
உச்ச நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது  சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு  புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு.  யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது. அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு  அமைப்பதை உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது.  பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில் தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும்  இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.
எவ்வளவு கறுப்பு பணம் இருக்கிறது?
ஒரு விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும்.  2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை அறிக்கையை  அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில் சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும் உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”
இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடபட்டது
தொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில் கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.
எவ்வளவு  இந்திய பணம் கறுப்பு பணமாக  வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை  ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக  தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து 2007 வரை  162 நாடுகள் இப்படி செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின்  ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது. இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன் கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால்  குறைந்த பட்சம்  40 ஆயிரம் கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது.  இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின் அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.
வெளி நாட்டில் மற்ற இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர். அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில்  இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது. இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான  கணக்கு விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி.. ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில் கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில் கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,
கறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்
1947லிருந்து இன்றுவரை 40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு,  இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில் ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில் அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்

இந்த புலானாய்வு குழு எவ்வலவு வலிமையானது,?
2ஜி வழக்கில் ஒரு குழு சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற  குழுக்களை நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு  அமைக்க பட்ட குழுவில்  தலவர்  உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ் வங்கி,  அமுலாக்க பிரிவு, உளவுத்துறை வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற நிலையிலிருப்பவர்கள்..  இப்படி இந்த குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை. பிரதமர் அறிவித்தவுடன்   சம்பிரதாயமாக முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன் செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள்.  விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம்.  மேலும் இந்த குழுவின்  செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும்  பொறுப்புகள்(terms of Reference) பற்றியும் தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26 பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாதாதால்  கைவிடபட்டு மற்றவர்களிம் மீது விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு மறுக்கபட்டது.  உச்ச நீதி மன்றத்தில் இரண்டு சீலிட்ட கவர்களில்  தனித்தனியாக அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும் இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய குழுவிற்கு  தனியாக ஆணை இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது.  வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில் ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு  முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை  பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி ஒரு  வலுவில்லாத குழுவை தெளிவில்லாத கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.




கருப்பு பணத்தில்தான் எத்தனை வண்ணம்?
 வருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல் நடக்கும் எந்த ஒரு  செயல் பாட்டிலும் கருப்பு பணம்  பிறக்கிறது. இது சிறிதும் பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில் வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன. ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.
வரிஏய்ப்புக்கு கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை.  நீண்டகால சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால் பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம் கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.
 வரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு  இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும் அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில்  கருப்பு பணம் உருவெடுக்கிறது.  இந்த வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில் பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.
90களுக்கு பின் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன் வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இன்று நம்ப முடியாத அளவில்  வளர்ந்து பெருகி நிற்கிறது.
FDI என்ற நேரிடையான  அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர்,  நமக்கு வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல்  எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின் பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு  இந்த நாடுகளிலிருந்து  மூதலீடுகள் கொட்டியது.  இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம் எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம் செய்யாலாம். அதனால்  உண்மையில்பணம் அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை.  பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன்  அனுப்பிய  அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.
நம் நாட்டின் அரசியல் வாதிகள்  தொடரும் முதலீடுகளின் புள்ளி விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள் தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு மகிழ்கிறார்கள். எல்லாம் சரி? எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா? உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான். கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன.  இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு பிரமிக்கவைப்பவை.  சில நடவடிக்கைகள கண்டு பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி  இதழ்)  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம் இது.

இம்மாதிரி பணபதுக்கலில் நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக  கட்சி பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும் இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது. 





5/7/14

சர்வாதிகாரியின் சாபம்


நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது.  இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.  ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.
ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது ? விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை

 ISIS என்ற இந்த அமைப்பின் தலைவர்  அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ     உருவாக்கியிருக்கிறார். .

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது..  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.


. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.
ஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின்  நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது.,  நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை  பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர்.  அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள்  ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு  அகதிகளாக வெளியேற்ற படலாம்.


8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும்  என் ஆவி என் மக்களை வழி நடத்தும்.  நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.

.... இப்போது போர் நடக்கிறது.


ஆதித்யா (ரமணன்)
கல்கி07/0714 இதழில் எழுதியது

1/7/14

ஆச்சரியமான தாத்தா தான் !



அடுத்த மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்?. சொல்லுங்கள் என  கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும் வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.

அவர் 1989லிருந்து 93 வரை  அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்இவரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால்  இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன.  குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம் சொன்னது “ அன்று  நான் பாரசூட்டின் மூலம் குதிக்க விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்  விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .
அவருக்கு  உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை போன்ற  தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது  அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும் என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.
புஷ் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்., அவரின் உடல் நிலை, வானிலை  போன்றவற்றால் எந்த நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க படவில்லை.  ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம் மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு  பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம் போலிருக்கிறது என  கோடிகாட்டியிருந்தார்.
 பிறந்த நாள் அன்று காலை  அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள், 14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர்  கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த ஹெலிகாப்டரில்  அவரது சக்கர நாற்காலியிலிருந்து ஏற்றபட்டார்.  ஆம்!. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான்.  தக்க உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க தயாராக இருந்தார் புஷ்

  செய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம்  பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில்   ஆவலுடன் மக்கள் கூட்டம்.  வெள்ளை ஆரஞ்சு நிற பாரசூட் வானில் விரிய  ஆரம்பித்ததிலுருந்து இறங்கும் வரை  நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் தொடர்ந்தது. 
பத்திரமாக தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால், அவரால் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார்.  இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர்.  ”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு  பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில் ஒருவர்.
”அப்பா உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன் புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன)   எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
பிறந்த நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு?.  ஜார்ஜ் புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில்  சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின் மூலம் குதித்து  வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர்.  டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது 80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.

 ”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்” என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள்.   95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க போகிறார்” என்று சொன்னவர்  புஷ்ஷின் மனைவி பார்பாரா புஷ்
ரமணன்
(கல்கி 6/7/14)





19/4/14

மெளனம் கலைந்தது….மனைவி இருப்பது தெரிந்தது !



நாடளுமன்றத்தின் 543 சீட்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளார்களில் 5 ல் ஒரு பங்கினர் பிரம்மச்சாரிகள் என்கிறது தேர்தல் கமிஷனின் புள்ளிவிபரம். மிக முக்கிய பிரம்மச்சாரிகள் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும். இப்போது அதில் ஒன்றை குறைத்து கொள்ள வேண்டும்.  மோடி தனக்கு திருமணமாகியிருக்கிறது என்பதை தனது வேட்பு மனுவுடன் சமர்பித்திருக்கும் பிரமாணபத்திரத்தில் தெரிவித்திருக்கிறார், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்
று சொல்லபடுவதுண்டு. மோடிக்கு மனைவி இருக்கிறாரா? என்பதே சந்தேகமாகயிருந்த ஒரு விஷயம்..

மோடி பிரம்மச்சாரி இல்லை அவருக்கு ஒரு மனைவி  கிராமத்தில் இருக்கிறார் என அவ்வப்போது  மிடியாக்களில் செய்தி அடிபட்டதுண்டு..  ஆனால் ஒரு முறை கூட மோடி அதை ஏற்றோ, மறுத்தோ பேசியதில்லை. கடந்த தேர்தல்களில் 2001,2002,2007, மற்றும் 2012 தேர்தல்களின்போது  இணைக்கப்படும் பிராமணப் பத்திரத்தில்  மனைவியின் பெயர் என்ற பகுதியில் வெற்றிடமாக விட்டுவந்தார்., இப்போது முதல் முறையாக தன்  மனைவியின் பெயர் ஐஷோட பென் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் சொத்து பற்றிய விபரங்கள் பகுதியில் “தகவல் இல்லை” no information என குறிபிட்டிருக்கிறார்.
திருமதி ஐஷோட பென், ஓய்வு பெற்ற குழந்தைகள் வகுப்புகான ஆசிரியை, மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் இருந்து 35 கீமீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்,  வயது 62,
நரந்திர மோடியின் மனைவி நான்தான் என சொல்லிகொண்டிருந்த இவரின் பள்ளி ஆவணங்களில் திருமதி ஐஷோட பென் நரேந்திர மோடிபாய் என்றுதான் இருக்கிறது.  அதனால் இவர்தான் மோடியின் மனைவி என்று சில மஹராஷ்டிர ஊடகங்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிவந்தன. ஆனால் ஐஷோபென் பத்திரிகையாளர்களை சந்திக்க  தொடர்ந்து மறுத்துவந்தார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்டவுடன் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் சந்தித்தபோது முதல் முறையாக பேட்டிக்கு ஒப்புகொண்டவர் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பு  பேட்டி பற்றி மோடி – மெளனத்தையே தன் பதிலாக தந்தார்.
தனது 17 வது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு பின் 3 மாதங்கள் மட்டுமே அவருடைய குடும்பத்தாருடன் இருந்தேன். அந்த மூன்று மாதத்திலும் பல நாட்கள் மோடி வீட்டில் இருக்கமாட்டார். நான் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தேன். மோடி என்னை அப்பாவீட்டிற்கு போய் படிப்பை தொடர சொன்னார்..  அவரது குடுமப்த்தினர் என்னை  வெறுக்க வில்லை. ஆனால் மோடிபற்றி மட்டும் எதுவும் பேசமாட்டர்கள், அப்போது இங்க்கெ வந்ததுதான். அப்பா, அண்ணனின் உதவியுடன், பள்ளிப்படிப்பையும், தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து உள்ளூர் பள்ளியில் வேலைக்கு சென்றேன், இப்போது ஒய்வும் பெற்றுவிட்டேன். என்று சொல்லும் ஐஷோட பென் தன் 14000ருபாய் பென்ஷனில் சிறிய வீட்டில் மிக சிம்பிளான வாழ்க்கையை  பலமணிநேரம் துர்க்கா பிராத்தனை மற்றும் மாணவர்களுக்கு டியூஷன் என கழிக்கிறார்..  திருமணமாணவுடனேயே கணவனை விட்டு பிரிந்து வாழவேண்டும் என்பது என் தலைவிதியானால் யார் என்ன செய்யமுடியும்? என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார்.  பிரதமரானபின் டெல்லிக்கு  போய் அவருடன் வாழ்வாரா? அவர் விரும்பாத எதையும் நான் செய்யதயாராக இல்லை. எனப்து தான் இவர் பதில்
இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது மோடி ஏன் இந்த விஷயத்தை பகிரங்கபடுத்தியிருக்கிறார்? சமீபத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள் எழுதியிருப்பவர்களிடம் கூட இந்த திருமணம்,தனியாக வாழும் மனைவி பற்றி பேசியதில்லை. எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லாதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்.
இப்போது இப்படி அறிவிக்க வேண்டியது அரசியலினால் அவசியமாகிவிட்டது. மக்கள் பிரநிதி சட்டம் 1951ன்படி வேட்பாளார்கள் தங்களது, தங்கள் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறது,  தவறாண் தகவல் தரப்பட்டால் வேட்பாளர் மனு நிராகரிக்கபடும் ஆபத்துடன் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கபடும் ஆபத்தும் இருக்கிறது. திருமணமானவரா என்ற கேள்வி இல்லை ஆனால் மனைவியின் பெயர், மற்றும் சொத்துவிபரம் கேட்கபட்டிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மோடியின் திருமண வாழ்க்கையை  ஒரு பிரச்னையாக்கி கொண்டிருக்கிறது. தன் திருமணத்தை மறைத்து, சொந்த மனைவியை ஒதுக்கிவைத்து அநீதி  இழைக்கும் இவர் எப்படி இந்திய தாய்குலத்தின் நலனில் அக்கரை காட்டுவார் என்றெல்லாம்  கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் மனுச்செய்த பின் இதை ஒரு ஆயுதமாக காங்கிரஸ் கையிலெடுக்கும். தேசிய அளவில் மகிளிர் அமைப்புகள் அதற்கு ஆதரவு கொடுக்கும் என்ற நிலையை தவிர்க்கவே இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது பரவலான கருத்து.  முந்தைய வேட்பு மனுக்களில் மறைக்கபட்டிருப்பது குற்றமாகாதா? தேர்தல் சட்ட நிபுணர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இப்படி இளம்வயது திருமணம் சகஜம்.  எங்கள் ஏழைப்பெற்றோர்கள் படிக்காதவர்கள். அந்த சிறுவயதில் நாங்கள் பெற்றோர் சொன்னதைத்தான்  செய்வோம். இந்த திருமணமும் அப்படி நடந்த ஒன்று. சமூகதிற்காக செய்யபட்ட சடங்காக செய்யபட்ட நரேந்திரனுக்கு இஷ்டமில்லாத இந்த கல்யாணத்திலிருந்து உடனே ஒதுங்கிவிட்டான்.  என்கிறார் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய். இந்த அறிவிப்பு பிஜெபி அலுவலகதிலிருந்து மீடியாக்களுக்கு வந்தது.
பொதுவாக வேட்பாளார்களின் பிரமாணபத்திரங்களின் நகல்கள்  மனுத்தாக்கல் முடிந்தவுடன் நோட்டிஸ்போர்டில் போடப்படும் . ஆனால் வடோதரா தேர்தல் அதிகாரி  அவரின் மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னரே இதை வெளியிட்டார்.
செய்தி வெளியானதிலிருந்து திருமதி மோடியை மீடியாக்கள்  துரத்துகின்றன. ஆனால் அவர்கிராமத்தில் இல்லை. கட்சியால மோடி பிரதமர் வேட்பளாராக அறிவிக்கபடவேண்டும் என 1 வாரம் செருப்பணியாமல் நடந்தது, அரிசி சாதம் சாப்பிடாமல் விரதம் இருந்தது போல இப்போது தேர்தல் வெற்றிகாக பத்ரி- கேதார்- முக்திநாத் புனித பயணம் போயிருக்கிறார் என்கிறார்கள் அந்த கிராமத்தினர். ”இல்லை அவர்  மீடியாவை சந்திக்க முடியாமல் முதல்வரால் பாதுகாக்கபடுகிறார்” என்கிறது அபியான் என்ற குஜராத் பத்திரிகை.
ஆதித்யா
கல்கி 26/04/14



16/4/14

திடுக்கிடும் விபத்தா? திட்டமிட்ட சதியா?


  



டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு  வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்பது.
கோப்ரா போஸ்ட்
என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.


வர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  டின் டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
            பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.

மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில்  5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள் கோவிலை காப்போம் என ராமர்  மேல் சத்தியம் செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.
சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும்  பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.

 ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர்  உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் ந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்  என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
 இந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் “சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

                                                                                                    
இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..
                     
செய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட்.
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.


-ஆதித்யா
கல்கி 20/04/14







         

19/3/14

தெலிங்கானா மலர்ந்தது.


ஆழம்  மார்ச் மாத இதழில் எழுதியது.


New post on ஆழம்

தெலங்கானா மலர்ந்தது

by ரமணன்
இந்திய நாடாளுமன்றம் இதுவரை சந்திக்காத சில அபூர்வமான காட்சிகளுக்குப் பின்னர் ஒரு வழியாகப் 29வது மாநிலமாக தெலங்கானா பிறந்துவிட்டது.  ஐம்பது ஆண்டு கால விவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு தெலங்கானா பிரச்னை ஒரு முடிவை நோக்கி நகர்ந்திருக்கிறது. துயரங்களையும் கசப்புகளையும் கொண்டு வராத பிரிவினை ஏதேனும் வரலாற்றில் பதிவாகியுள்ளதா என்ன? தெலங்கானாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்திய அரசியல் களத்தில் இதற்கு முன் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தெலங்கானா அவற்றில் இருந்து வேறுபடுகிறது. பதிவாகியுள்ளபடி 904 மரணங்கள் தெலங்கானாவுக்காக நிகழ்ந்துள்ளன. 100 கோடிக்கும் மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று புதிய கட்சிகள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தின. வேறு எந்த மாநிலப் பிரச்னையின்போதும் இவ்வாறு நிகழவில்லை.
ஒரு புதிய மாநிலம் சட்டபூர்வமாக பிறப்பது என்பது  ஒரு சரித்திர நிகழ்வு. ஆனால் தெலங்கானா நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியபிறகே உதயமாகியிருக்கிறது. ஆந்திரப் பிரசேம் மறுச்சீரமைப்பு மசோதா உருவான கதை கிட்டத்தட்ட போர்க்களத்தை நினைவுபடுத்துகிறது. 13 பிப்ரவரி 2013 அன்று தெலங்கானா தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் எழுந்தது. ஆந்திரப் பிரிவினையைத் தடுக்க முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி கையோடு கொண்டு வந்திருந்த மிளகு ஸ்ப்ரேயை அடித்தார். சிலரிடம் கத்தி இருந்தது. மசோதாவை வாசிக்கவிடாமல், விவாதங்களை நடத்தவிடாமல் இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும் சபாநாயகர் மீராகுமார் சொன்னதைப் போல் வெட்கித் தலை குனிய வைக்கக்கூடியவை.
ஒரு கோரிக்கையாக இருந்த தெலங்கானா பின்னர் சட்டமாக உருவான தருணங்களில் தொலைக்காட்சி காமிராக்கள் இயங்கவில்லை. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இதனை பலர் ஏற்கத் தயாராக இல்லை. இதற்கிடையில், மிளகு தூவிய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லகடபதி ராஜகோபால் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தெலங்கானா மசோதாவுக்கு எதிராக சீமாந்திரா உறுப்பினர்கள் நீண்ட காலமாக கட்சி வித்தியாசமின்றி குரல் கொடுத்து வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
தெலங்கானாவின் மற்றொரு முக்கிய அம்சம் இது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு தெலங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரித்தெடுப்பதற்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இன்னமும் கட்சிக்கு உள்ளேயே இந்த முடிவுக்கு முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை. உச்சகட்டமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வரே இந்த முடிவை எதிர்த்து ராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான பாஜக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விசித்திரம்தான், இல்லையா?
காலச்சுவடுகள்
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போதே தெலங்கானா தனி மாநில கோரிக்கை உயிர் பெற்றுவிட்டது. 1946 தொடங்கி 1951 வரை ஹைதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன்  நடைபெற்ற விவசாயிகள் எழுச்சி இந்தியாவின் பார்வையை தெலங்கானாவை நோக்கி திருப்பியது. மத்திய அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி இந்த எழுச்சியை அடக்கியது. தெலுங்கு மொழி ஆந்திர மக்களை ஒன்றிணைக்கும், பிரிவினை கோஷத்தைக் காலப்போக்கில் அடக்கிவிடும் என்று பலர் நினைத்தாலும் அன்றைய பிரதமர் நேரு தெலங்கானாவின் இயல்பை நன்றாகவே அறிந்திருந்தார். விவாகரத்து உரிமை பெற்ற திருமணம் என்றே ஆந்திராவுடனான தெலங்கானாவின் இணைப்பை 1956ல் அவர் வர்ணித்தார்.
இருந்தும் அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்கள் தெலங்கானா கோரிக்கையைப் புறந்தள்ளி அதனை ஒரு பிரிவினைவாதக் கோஷமாகவே கண்டனர். 2004ல் வலுவான அரசியல் பிரச்னையாக தெலங்கானா எழுந்தபோது, காங்கிரஸ் தனித் தெலங்கானா தருவதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்களித்தது. ஆனால் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் வசதியாக இந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. அல்லது, வெறுமனே காலம் தாழ்த்திவிட்டது.
இனியும் அது சாத்தியமில்லை என்னும் விதமாக ஆந்திராவில் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் போராட்ட அலைகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுந்தபோது முடிவு எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. வேறு வழியின்றி, தனித்தெலங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கவேண்டி வந்தது.  ஜூலை 2013ல் காங்கிரஸ் பிரிவினைக்கு ஆதரவாக முடிவெடுத்தது. அக்டோபர் 2013ல் மந்திரிசபை கூட்டத்தில் இது முடிவாக, டிசம்பரில் வரைவு மசோதா தயாரானது. கூடவே புதிய பிரச்னையும் தொடங்கியது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்துக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன் விரும்பியபடி அவரை முதல்வராக்காமல் கிரண்குமார் ரெட்டியைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கினார் சோனியா காந்தி. தெலங்கானா பிரிந்தால் காங்கிரஸ் செல்வாக்கு பறிபோகும் என்று கருதிய கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்க மறுத்தார். அதனால் மத்திய அரசின் வரைவு மசோதாவை மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றாமல் திருப்பியனுப்பினார்.
அவரைப் பதவி நீக்கம் செய்து மற்றொரு முதல்வரை நியமித்து அவர்மூலம் மசோதாவை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் தலைமையால் முடியவில்லை. கட்சிக்குள் பிளவைத் தவிர்க்கவே பொறுமை காத்தோம் என்று பேட்டியளித்தார் ப. சிதம்பரம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாமல் போகவே, பிளவு பயத்தையும் மீறி மசோதாவில் உறுதியாக நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மசோதாவை நேரடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தது.
காரணங்கள், கணக்குகள்
ஏன் இந்த அவசரம்? ஒன்றுதான். வாக்கு வங்கி அரசியல். மசோதாவைக் கொண்டுவராமல் முன்னர் நாள்களைக் கடத்தியதற்கும், தாமதமாகக் கொண்டுவந்ததற்கும், ஆதரித்தற்கும், எதிர்த்ததற்கும், பின்னர் வலுவாக ஆதரித்ததற்கும்கூட வாக்கு வங்கிதான் காரணம். எதை எப்போது செய்தால் ஆதரவு கிடைக்கும், எதைச் செய்தால் கிடைக்காது என்னும் கணக்குதான் இங்கே காங்கிரஸுக்கு முக்கியம்.
இப்படி அவசரக்கோலத்தில் தெலங்கானா பிரச்னையைத் ‘தீர்த்து வைத்ததில்’ யாருக்கு என்ன லாபம்?
சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால், நமது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே இந்த விளையாட்டில் கணக்குப் போட்டு ஈடுபட்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் பெரிய மாநிலம் ஆந்திரா. ஆனால் தெலங்கானாவுக்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் அதில் கிட்டத்தட்ட சரிசமமாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.  மொத்தமுள்ள 42 எம்.பி சீட்டுகளில் 31 காங்கிரஸ் வசமிருக்கிறது. அதில் 17 தெலங்கானா பகுதியிலும் 19 சீமாந்திராவிலும் இருக்கிறது. ஆக எப்படி முடிவெடுத்தாலும் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
காங்கிரஸ் வேறு கணக்கு போட்டது. தெலங்கானாவை அறிவித்தால் அதற்காகப் போராடும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிடுவதாக முன்பு கூறியிருந்தார். காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவை முற்றிலும் இழந்துவிடுவோம் என்னும் அச்சத்தில் சந்திரசேகர் ராவின் டிஎஸ்ஆர் கட்சியின் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆதரவுடன் 17 எம்.பி சீட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள கணக்குப்போட்டது காங்கிரஸ். தெலங்கானா எதிர்ப்பு சீட்டுகளை இழக்க நேரிட்டாலும் இதை வைத்து சரிகட்டிவிடலாம் அல்லவா? சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கிவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் அவரது கட்சியை இணைத்துவிடலாம் அல்லவா?
காங்கிரஸ் எதைச் செய்தாலும் எதிர்க்கும் பாஜக ஏன் தெலங்கானா மசோதாவை ஆதரித்தது? அவர்கள் போட்ட கணக்கு இது. காங்கிரஸ் தெலங்கானா மசோதாவைக் கொண்டுவராமல் காலம் தாழ்த்தும் என்று நினைத்து வந்த பாஜக, தெலங்கானாவை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி செய்தது. சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவும் செய்தார். தெலங்கானாவில் பெரும் வியாபார,தொழில் முதலீடுகள் செய்துள்ள சீமாந்திரா பகுதியினரின் ஆதரவு அவருக்குக் கிடைக்க சந்திரபாபு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவர்களைக் கடந்துசெல்லவும் முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணி பற்றி சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய கருத்து இது. ‘தெலங்கானா விவகாரத்தில் பாஜக சரியான வாதங்களை முன்வைக்கவில்லை, இருப்பினும் கூட்டணி விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்து விட முடியாது.‘
காங்கிரஸின் கணக்கு வேறு மாதிரி திரும்பவே பாஜக விழித்துக்கொண்டது. காங்கிரஸ் முன்வைக்கும் தெலங்கானா மசோதாவை ஆதரிக்க மறுத்தால் அதையே காரணமாகச் சுட்டிக்காட்டி பழி போடப்படும் என்று பாஜக அஞ்சியது. தெலங்கானாவை ஆதரிக்க காங்கிரஸையும் சேர்த்து ஆதரிக்க முடிவு செய்தது. நாங்கள் ஆரம்பம் முதலே, அதாவது ஜன் சங் காலம் முதலே தெலங்கானா தனியாக இருப்பதையே விரும்பினோம் என்று தங்கள் ஆதரவுக்கு நியாயமும் கற்பித்தனர். மற்றொரு பக்கம் காங்கிரஸையும் தாக்கியது. காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் தேர்தல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சுமத்தியது. எங்கள் தயவு இல்லாவிட்டால் மசோதா நிறைவேறியிருக்காது என்றும் சொல்லிக்கொண்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகனின் கணக்கு வேறு மாதிரியானது. என்னதான் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காகப் போராடினாலும் உண்ணாவிரதம் இருந்தாலும் பிரிவினை தவிர்க்கமுடியாதது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய இலக்கு ஹைதராபாத் சட்டமன்ற முதல்வர் நாற்காலி. தெலங்கானா பிரிந்தாலும் சீமாந்திராவின் முதல்வராகும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். இதற்கிடையில், தெலங்கானா மசோதாவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளனர்.
மற்றொரு பக்கம், ரெட்டி பிரிவினர்களின் ஆதிக்கத்தில் இருந்து காங்கிரஸ் நழுவிக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸிலிருந்து பிரிந்துவரும் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேசத்துடன் அணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெல்ல முயற்சி செய்து வருகிறது.
இப்படி எல்லோரும் அவரவருக்குத் தோதான கணக்குகள் நிறைவேற காத்திருக்கிறார்கள். நம்முடைய அணுகுமுறையே சரியானது என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கணக்கு யார் போட்டாலும், அதைச் சரிபார்த்து மதிப்பெண் போடப்போகிறவர்கள் மக்கள்தான்.
இனி என்ன?
  • அதிகாரபூர்வமாக ஆந்திரப் பிரவினை ஏப்ரல்&மே மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகே நடைபெறும். சரியான தேதியை மத்திய அரசு குறிக்கவேண்டும்.
  • மக்களவைத் தேர்தலும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் முன்பு நிகழ்ந்ததைப் போலவே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
  • கிரண்குமார் ரெட்டியின் ராஜிநாமா ஏற்கப்பட்டு விட்டது என்றாலும் புதிய அரசு அமையும்வரை பொறுப்பில் நீடிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியே அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
  • தெலங்கானா சாத்தியமானதைத் தொடர்ந்து நாட்டில் பிற மாநிலக் கோரிக்கைகள் வலுவடையும் என்னும் எதிர்பார்ப்பும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. 
  •  தெலங்கானா ஒரு பார்வை
  • பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
  • மக்கள் தொகை 3.5 கோடி (ஹைதராபாத் சேர்த்து).
  • மாவட்டங்கள் : அடிலாபாத், நிஜாமாபாத், கரிம்நகர், மேடக், வாரங்கல், ரங்காரெட்டி, கம்மம், நலகோண்டா, மஹபுக்நகர், ஹைதராபாத்.
  • தெலுங்கு, உருது ஆகியவை முக்கிய மொழிகள். சில பகுதிகளில் மராத்தியும் கன்னடாவும் பேசப்படுகின்றன.
  • இரும்பு, கரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் உள்ளன. மத்திய அரசும் ஆந்திர அரசும் இணைந்து நடத்தும் சிங்கரேனி கொலைரீஸ் இப்பகுதியிலுள்ள முக்கியப் பெரிய நிறுவனமாகும்.
  • புதிய மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக மின்சாரம் இருக்கப்போகிறது என்கிறார்கள்.
  • கோதாவரி, கிருஷ்ணா இரண்டும் முக்கிய ஆறுகள். எண்ணற்ற பல ஏரிகளும் உள்ளன.
  • நக்ஸல் நடவடிக்கைகளின் களமாக இருந்த பகுதி.
ரமணன் | March 19, 2014 at 11:21 am | URL: http://wp.me/p2eZn6-ZX
Comment    See all comments
Unsubscribe to no longer receive posts from ஆழம்.
Change your email settings at Manage Subscriptions.
Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://www.aazham.in/?p=3841