8/8/10
1/8/10
30 கோடி முகங்களுடன் ஒரு புத்தகம்
காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான்? விரக்தியில் தாடி
வளர்ப்பது, சோகத்தில் கவிதை எழுதுவது, என்பதலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒரு
இளைஞனின் முயற்சியில் எழுந்ததுதான் இன்று உலகத்தையே கலக்கிகொண்டிருக்கும் ஃபேஸ்
புக் என்ற சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணையதளம். 2004ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட்
பல்கலைகழக மாணவர் மார்க் ஸூக்கர்பெர்க் (Mark
Zuckerberg) தன் காதலை எற்காமல் போன காதலியின் நினைவுகளை மறக்க எதாவது
சீரியஸாக செய்ய வேண்டும் என்று ஒரு இரவு முழுவதும் யோசித்ததில் பிறந்தது இது..
அமெரிக்க பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை ஒரு முக அளவு போட்டோவுடன் ஒரு “ஃபேஸ்புக்காக” அச்சிட்டு
வெளியிடுவார்கள். மார்க்ஸூக்கர்பெர்க்கு அந்த
காலகட்டதில் பிரபலமாகிக்கொண்டிருந்த இணைய தள அமைப்பில் இதைச் செய்தால் என்ன என்று
எழுந்த எண்ணத்தில் அறை நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ் ப்க் இணய தளமாக மலர்ந்த காதலி
இவள்.. ஹார்வர்ட் பல்கலை மாணவர்களுக்கு மட்டும், என முதலில் துவங்கபட்ட இது
பக்கத்து பல்கலைகழகம்,பக்கத்து மாநிலம், அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு
மட்டும்,பின்னர் உலக மாணவர்களுக்கு எல்லாம்,என்று பல நிலைகளை கடந்து இன்று 13
வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் ஒரு இ மெயில் ஐடி இருந்தால் போதும் இலவசமாக
உறுப்பினாராக முடியும் என்ற பிரமாண்ட எல்லையை தொட்டிருக்கிறது. தொடர்ந்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இதன்
மதிப்பு 300மில்லியன் டாலர்கள்(135 கோடி ரூபாய்கள்) இதே
போல் மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்கள் இருந்தாலும் இதுதான் உறுப்பினர்
எண்ணிக்கையிலும், அதிக முறை அடிக்கடி பார்க்கப்படும் தளங்களிலும்
முதலிடத்திலிருக்கிறது. உலகம் முழுவதும் 30 கோடி பேர் இதை பயன்படுத்துகிறார்கள்.
ஓரளவு முதலீடு செய்திருக்கும் மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்களுக்கு இதன்
மேல் ஒரு கண். வளைத்துபோட்டு இணைத்துகொள்ள தயாராகயிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இந்த இணையதளத்திலிருக்கிறது?
ஒரே வார்த்தையில்
சொல்வதானால்-எல்லாமே. உறுப்பினர்கள் தங்களைப்பற்றிய விபரங்கள், படங்கள், சொந்த,
சமுக பிரச்சனைகள், யோசனைகள்,விமர்சனங்கள்,பராட்டுகள், கவலைகள் படித்தவை,அதில்
பிடித்தவை பார்த்த சினிமா அரட்டை,கோபம் இப்படி எல்லாவற்றையும் பதிவு செய்யலாம். பார்க்கும் உறுப்பினர்கள்
தங்கள் கருத்துகளையும் பதிவு செய்வார்கள், இதனால் புதிய நட்புகள் அரும்புகின்றன.
தொடர்பில்லில்லாத பழைய நண்பர்களையும் இதன்
வழியாக அடையாளம் காணமுடிகிறது. ஒரே துறையை சார்ந்தவர்கள், ஒருமித்த
கருத்துடையவர்கள் குழுவாக இணந்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள், சில இடங்களில்
நேரில் சந்தித்து விவாத கூட்டங்கள் கூட நடத்திக்கொள்கிறார்கள். இளைஞர்களை அதிகமாகவே
ஈர்த்திருக்கும் இன்னும் அவர்களை கவர தொடர்ந்து பல புதிய விஷயங்களை
அறிமுகப்படுத்தி கொண்டேயிருக்கிறார்கள். புறநகர் இளைஞர்கள் இப்போது தாங்கள்
பேஸ்புக்கிலிருப்பதையும் அதை மற்றவருக்கு சொல்லுவதையும் கெளரவமாக
கருதுகிறார்கள். உலகம் முழுவதும் 30
கோடிபேர் பயன்படுத்தும் இதில் ஒருகோடிபேர் இந்தியர்கள்.இந்தியாவில் செல்போன் பயன்
படுத்துவர்களில் 20%க்கும்மேல் ஃபேஸ்புக்
உறுப்பினர்கள். உலகிலேயே செல்போன்
உபயோகிப்போரின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா விரைவில் பிடிக்கும் என்பதால்
இந்த நிறுவனம் இந்தியாவை தனது முக்கிய இலக்காக கொண்டிருக்கிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி,
பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப்
பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்க
ஹைதராபாத்தில் அலுவலகத்தை திறக்கவிருக்கிறார்கள். ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம்
திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான்.
“என் நாய்குட்டி ஜிம்மிக்கு உடம்பு
சரியில்லை.இரண்டுநாட்களாக சரியாக சாப்பிடவில்லை”என்ற செய்தியை நீங்கள்
ஃபேஸ்புக்கில் போட்டால், உடனே ஆறுதல். ஆலோசனை, மருந்து,தொடர்புகொள்ளவேண்டியடாக்டர்,
தங்களின் நாய்க்கு நேர்ந்தது போன்ற செய்திகள் ஒரு 10 நண்பர்களிடமிருந்தாவது பறந்து
வரும். மனித உறவுகள் பலவீனம் அடைந்து
சிறுகுடும்பத்தீவுகளாகிப்போன இன்றய சூழ்நிலையில் இத்தகைய நேசக்கரங்களை
நிபந்தனையில்லமல் நீட்டும் இதன் வசதி
மக்களுக்கு பிடித்திருப்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.
பிரபலமான விஷயங்களில் எதாவது பிரச்சனையிருக்கும்
என்பதற்கு இது விதிவிலக்கில்லை.நம் சொந்த விஷயங்கள் எளிதாக எல்லோருக்கும்
கிடைப்பதினால் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகளும் உண்டு. இன்றைய இளைஞர்கள் இந்த
தளங்களை பாதுகாப்புடன் கையாளுவது பற்றியும் அறிந்திருக்கிரார்கள்.இப்போது
உறுப்பினர்களின் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை அவர்களே முடிவுசெய்யலாம்.
உங்கள் வீட்டில் இண்டர்நெட்டும்,15 வயதுக்கு மேல் குழந்தைகளும்
இருந்தால் அவர்கள் ஃபேஸ்புக்கிலிருப்பார்கள் என்ற நிலையை தாண்டி வேலையிருந்துஓய்வு
பெற்றவிட்ட உங்கள் 65 வயது அப்பாவும்
அம்மாவும் ஃபபேஸ்புக்கில் மெம்பர் என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆமாம்.
இப்போது வயதானவர்களுக்கு போரடிக்காமலிருக்க கிடைத்த வரப்பிரசாதங்களில் இதுவும்
ஒன்று.
K(கல்கி01.08.10)
முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"
-பாரதியார்
25/7/10
பிரார்த்தனைகளின்
சங்கமம்
சற்றே சரிவாக வழுக்கும் ஈரக்களிமண்ணாகயிருக்கும் அந்த பாதையில் மிக கவனமாக
நம்மை நடத்தி நதியின் கரையிலிருக்கும் படகுக்கு
அழத்து செல்லுகிறார் அந்த முதியவர். செம்மண்
நிறத்தில் ஒரு ஏரியைப் போல் சலனமில்லாமல்
அமைதியாகயிருக்கிறது கங்கை. படகு மெல்ல செல்லுகிறது பத்து நிமிடப் பயணத்தில் சட்டென்று நதியின் நிறம் மாறுகிறது. அதன் வேகத்தை படகிலிருக்கும் நம்மால் உணரமுடிகிறது. இங்குதான் யமுனை கங்கா மாதாவுடன்
சேருகிறார்,
கண்ணுக்கு தெரியாமல் சரஸ்வதி நதி இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் என்கிறார் படகுகாரார். வெளிர்நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும் அதைத்தொட்டு சிறகடித்துபறக்கும் வெள்ளைப்பறவைகளும் அந்த காலைப்பொழுதை ரம்மியமாக்கின்றன. தொலைவில் நிற்கும் நிறைய படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ண கொடிகள்.
கண்ணுக்கு தெரியாமல் சரஸ்வதி நதி இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் என்கிறார் படகுகாரார். வெளிர்நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும் அதைத்தொட்டு சிறகடித்துபறக்கும் வெள்ளைப்பறவைகளும் அந்த காலைப்பொழுதை ரம்மியமாக்கின்றன. தொலைவில் நிற்கும் நிறைய படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ண கொடிகள்.
அருகில் போனபின் தான் அந்த இடம்தான் திரிவேணி சங்கமம் என அறிந்துகொள்ளுகிறோம் .கங்கையும்,
யமுனையும், கண்ணுக்தெரியாத சரஸ்வதியும் ஒன்றாக
இணைந்து சங்கமிக்கும் உன்னதமான இடம். இந்த
இடத்தில் நீராடுவதும் வழிபடுவதும் மிகபுண்ணியம் என இந்தியாவின் எல்லா பகுதிகளிருக்கும்
இந்துக்களாலும் போற்றப்படும் புனிதமான இடம்.. மாறுபட்ட திசைகளிலிருந்து வேகத்தோடு நதிகள் இணையும் அறுபது அடி ஆழமிருக்கும்,அந்த நடு ஆற்றில் எப்படி நீராடமுடியும். என திகைத்துகொண்டிருக்கும்,
நாம் செய்யப்பட்டிருக்கும் எற்பாடுகளை பார்த்து அசந்துபோகிறோம். சங்கமம் என அடையாளம்
காணப்பட்டிருக்கும் அரைகிலோ மீட்டர் பகுதியில் பல
பெரிய படகுகள் நங்குரமிடபட்டிருகின்றன. அவைகள் ஜோடிகளாக இரண்டிற்குமிடையில் 6அடி இடைவெளி இருக்கும் வகையில்
இரண்டு மூங்கில்களால் இணைக்கபட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில் நாலு பக்கமும் பிடித்துக்கொள்ள வசதியான ஃபிரேமுடன்
ஒரு சதுர மேடை தொங்குகிறது. கவிழ்த்து போடப்பட்ட
மேஜை போன்ற தொட்டி. நதியின் உள்ளேமுழ்கியிருக்கும்
இதை இணைக்கும் நீண்ட நைலான் கயிறுகளை படகிலிருக்கும்
உதவியாளார்கள் இயக்க நதியில் மிதக்கும் அந்த
குளிக்கும் மேடையில் இறங்கி நாம் நீருக்குள்
முழுகுகிறோம். முதல் முழுகலில் பயம் தெளிந்து
அமைப்பின் பாதுகாப்பு புரிந்திருப்பதால், பலமுறை ஆனந்தமாக முழ்கி திளைக்கிறோம். குளிக்கும்போது
உள்ளே யமுனைநதிநீர் மேல்பரப்பு செல்லும் திசைக்கு குறுக்காக பாய்ந்து
செல்வதை உடல் நமக்குச்சொல்லுகிறது. வெளியே ஒரு படகில் பளபளக்கும் பித்தளை தட்டில் சாமந்தி
பூக்களுடனும், பூஜை சாமான்களுடனும் காத்திருக்கும் பண்டா ஈர உடைகளுடனேயே பிராத்தனை செய்ய அழைக்கிறார். பக்கத்து
படகுகளில் அணிந்திருக்கும் சபாரி உடையின் மீதே பூணுலும், மாலையை அணிந்தமஹராஷ்ட்டியர்,
கைநிறைய வளையல்கள் அணிந்த ராஜஸ்தான் பெண்கள், பஞ்சகச்ச வேஷ்டியில் கையில் ஸ்படிக மாலையுடன் தெனிந்தியர் என பலபேர். அந்த இடமே பிராத்தனைகளின் சங்கமாகயிருக்கிறது. மற்றொரு படகில் பக்கங்களும் மேற்கூரையும் பிளாஸ்டிக்
துணியால் முடப்பட்ட டிரெஸ்சிங் ரூம். கண்ணாடி கூட வைத்திருக்கிறார்கள். அந்த படகின்
நடுவில் குஷன்கள் இடப்பட்ட பெஞ்ச் நாற்காலியில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார்
படகின் சொந்தக்காரர். அவரது ஆசனத்தின் பின் நிற்கும் கம்பத்தில்தான் கொடிபறக்கிறது.
இது போல பல படகுகள். பல வண்ணகொடிகள். கரையிலிருந்து
நம்மை அழைத்து வரும் சின்ன படகுகாரர்களுக்கு அவர்களின் குரூப் அடையாளம் தெரிவதற்காக இந்த கொடிகளாம். வருபவர்களுக்கு நல்ல வசதிகள் செய்துதரும்
இந்த படகுக்காரர்கள் ஒடும் நதியில் பகுதிகளை பிரித்து பங்கிட்டு உரிமை கொண்டாடி சம்பாதிக்கும் சாமர்த்தியசாலிகள். நீராடித்திரும்பும் போது பின்
காலைப்பொழுதாகவிட்டதால்,யமுனைநதி நீரின் உயரமும் வேகமும் அதிகரித்திருப்பதால் படகு
சீக்கிரமாக கரையைத்தொடுகிறது.
மொகலாய கட்டிடக்கலையின் மிச்சங்களை
ஆங்காங்கே அடையாளம் காட்டும் அலகாபாத் இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று.
பெரிய பல்கலைகழகம்,மாநில தலைநருக்கு வெளியே
துவக்கப்பட்ட ஹைகோர்ட் என பல கெளவரவங்களை பெற்றிருந்தாலும், நகரம் என்னவோ களையிழந்துதான்
காணப்படுகிறது. பளபளக்கும் வண்ணத்துணியில் பூ வேலைகளுடன் வட்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான மேல்கூரையும் பின்திரையுமிட்ட சைக்கிள் ரிக் ஷாக்கள்களை
ஒட்டும் சட்டையணியாத ரிக் ஷாகாரர்கள், மேற்கூரையில் பயணிகளுடன் மினிபஸ் போன்ற வினோதங்களை
ரசித்தவண்ணம் விசாரித்து வழியறிந்து நாம் செல்லுமிடம் ஆனந்த பவன்.
பரந்த பசும்புல்வெளியின் மறுகோடியில் வெளிர்மஞ்சள் நிறத்தில் நிற்கும் கம்பீரமான இந்த இரண்டு அடுக்கு மாளிகையில்
தான், மூன்று தலைமுறையாக நேரு குடும்பத்தினர் வாழ்ந்திருக்கின்றனர். இந்திரா காந்தி
இதை அரசுக்கு நன்கொடையாக தந்து அருங்காட்சியகமாகயிருக்கிறார். அண்ணல் காந்தியடிகள்
பலமுறை வந்து தங்கியிருக்கும் இந்த மாளிகையின் அறைகளை அந்த காலகட்டதிலிருந்தது போல்,
பயன் படுத்திய பொருட்களுடன் நிர்மாணிக்கபட்டிருக்கும்
அறைகளைப் பார்க்கிறோம். மாடியில் .நேருவின் படுக்கை அறையில் அலமாரியிலிருக்கும் புத்தகங்களின்
முதுகில் அச்சிடபட்டிருக்கும் பெயர்களைக்கூட படிக்க முடிகிறது. எழுதும் மேசையிலிருக்கும்
பார்க்கர் பேனாவும், வெளிநாட்டு தயாரிப்பான சின்ன சூட் கேஸும் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.
இந்திராவின் எளிமையான அறை, அண்ணல் காந்தியடிகள்
காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்தை நடத்திய இடம், எல்லாவற்றையும் பார்த்தபின் கிழே
வரும் நம்மை, கவர்வது கிழ்தளத்தின் வராண்டாவில்,
‘இந்திராவின் திருமணம் நடைபெற்ற இடம்’ என்ற அறிவிப்புடனிருக்கும் ஒரு சின்ன மேடை. திருமணம்,
மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது எனபதை கண்காட்சியிலுள்ள படம் சொல்லுகிறது.
அல்லிதாடகம், அழகான பூச்செடிகள்,அருமையாக
பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்த சூழலை ரசித்தவண்ணம் வெளியே வரும் நம் கண்ணில்
படுவது, முகப்பில் காவிவண்ணத்தில் நிற்கும் ஒரு பெரியபாறையும்,
அதில் நேர்த்தியாக பொருத்தபட்டிருக்கும் பட்டயமும் தான். பட்டயதில் “செங்கலாலும்,சுண்ணாம்பாலும் எழுப்பட்ட வெறும்
கட்டிடம் மட்டுமில்லை இது. தேசத்தின் சுதந்திர போராட்டத்துடன் மிக நெருங்கிய உறவு கொண்டது.
இதன் சுவர்களக்கிடையே மிகமுக்கிய முடிவுகள்
எடுக்கப்பட்டிருக்கின்றன.மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.” என்ற
பித்தளை எழுத்துகள் மின்னுகின்றன.
மனதைத் தொட்ட மணியான வாசகங்கள்.
படங்கள் ரமணன் (அன்னை இந்திராவின் திருமணப்படம் அருங்காட்சியகத்தில்
வாங்கியது)
(25.07.10)
கால் பந்தாட்டத்தின் கதாநாயகன் பால்
உலக கோப்பை
கால் பந்தாட்டத்தின் கதாநாயகன் பால்
உலக காலபந்துதிருவிழாவில் போட்டியிட்ட 204 நாடுகளில் தகுதியான 32 நாடுகளுக்கான
இறுதி சுற்று போட்டிகள் ஒருமாதமாக தெனாப்ரிக்காவில்
நடந்தன. 30 நாட்கள் 30 லட்சம் பேர் நேரிலும் பலகோடி மக்கள் உலகம்முழுவதிலும் டிவியிலும்
பார்த்துகொண்டிருந்த இந்த விளையாட்டுகளின்
கதாநாயகன் ஒரு ஆட்டகாரரோ அல்லது கோச்சோ இல்லை. பால்(PAUL) என்ற ஆக்டோபஸ் தான். கடல் வாழ் உயிரினமான
ஆக்டோபஸுக்கும் கால்பந்தாட்டதிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?- அது சொன்ன ஆருடம்
தான்.
மேற்கு ஜெர்மனியில் ஓபர்ஹௌசென்(Oberahausen) நகரிலிருக்கும் ஸீ லைஃப்(sealife) என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண் காட்சி உலகப்புகழ்பெற்றது.
3000 சதுர மீட்டர்பரப்பில் 20000க்கும் மேற்பட்ட கடல்வாழ் இனங்கள் சின்ன நத்தையிலிருந்து திமிங்கலங்கள் வரை இந்த பிரம்மாண்ட
உலகில் வாழ்கிறது.. கண்ணாடி சுவர்களாலான அதன் நீண்ட குகைப்பாதையில் போகும்போது
அத்தனைவிதமான கடல்வாழ் இனங்களும் தொட்டுவிடும் தூரத்தில் நீந்திக்கொண்டிருப்பது
பார்ப்பவர்களுக்கு நனையாமல் கடலுக்குள்ளேயே நடந்து போகும் உணர்வைத்தருவதால் உலகெங்குமிருந்து
டூரிஸ்டுகள் வருகிறார்கள்.. இந்த கண்காட்சியில் இருக்கும் ஒரு ஆக்ட்டோபஸ் தான் ‘பால்’. ஜெர்மனி ஆடிய அத்தனை மாட்சிகளின்
முடிவையும் முன்கூட்டியே சொன்ன ஜோஸ்யர். எப்படி இது ஆருடம் சொல்லுகிறது? ஒரு நீண்ட
கம்பியின் முனையில் இரண்டு சிறிய கண்னாடி பெட்டிகள் பொருத்தப்படிருக்கும் கண்ணாடி பலகையை
ஆக்டோபஸ் வாழும் கூண்டின் அடிப்பகுதிக்கு இறக்குகிறார்கள்,
மூடப்பட்டிருக்கும் அந்த பெட்டியின் பக்கங்களில் போட்டியிடும் நாடுகளின் கொடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
கூண்டின் தரைப்பகுதியில் கடல் தாவரங்களுடன் ஒரு சின்ன புட்பாலும் இருக்கிறது. கண்ணாடி பெட்டியின் உள்ளே ஆக்டோபஸுக்கு உணவு இருக்கும். அந்த பெட்டிகளை
வைத்தவுடன் ஆக்டோபஸ் சில நிமிஷங்கள் ஆராய்ந்து ஒருபெட்டியின் மூடியை திறக்கும். முதலில்
திறக்கப்படும் பெட்டியில் எந்த நாட்டின் கொடியிருக்கிறதோ அது தான் அன்றைய போட்டியில் ஜெயிக்கும். ஜெர்மனி, இங்கிலாந்து,
தைவான் நாடுகளில் இது டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது
நாலுஜோடி கரங்களுடனும்(கால்களும் அதுதான்)இரண்டுகண்களுடனும் இருக்கும்
ஆக்டோபஸ்களில் 300 வகைகள் இருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களிலியே மிக புத்திசாலிகளாக
கருதப்படுபவை.ஒலி, ஒளி வண்ணம் எல்லவற்றையும் உணரும் சக்திஉள்ளவை,அவைகளால் யோசிக்கமுடியும்
என்றெல்லாம் பல ஆராய்சிகளில் கண்டுபிடித்திருக்கிரார்கள். ஆனாலும்
‘அதற்கு ஜோஸ்யம் சொல்லும் அளவிற்கெல்லாம் திறமை கிடையாது. இதெல்லாம் தற்செயல்’
என்று சொல்லுபவர்களால் ‘அப்படியானால் 2008ல்
நடந்த ‘யூரோ’ என்ற போட்டி ஆட்டங்களில் ஒரே ஒரு முடிவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் இதே மாதிரி கணித்து சரியாக சொல்லிற்றே அது எப்படி?’
என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லமுடியவில்லை. உலககோப்பை செமிபைனல் ஆட்டத்தில் ஜெர்மனி
ஸ்பெயினுடன் மோதியது. அந்த ஆட்டதில் ஸ்பெயின் ஜெயிக்கும் என்று ஆக்டோபஸ் சுட்டிகாட்டியதை
கண்டு அதிர்ந்தபோனார்கள் ஜெர்மன் மக்கள். “ஆக்கடோபஸ் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது”
நன்றாக ஆடுங்கள்” என்ற உற்சாக பேனருடன் காலரியில் காத்திருந்தனர் .ஆட்டம் துவங்க சில
மணிநேரங்களுக்குமுன் இந்தியாவில் ஆங்கில சானலுக்கு(NDTV)
பேட்டியளித்த இந்தியாவின் ஜெர்மன் தூதுரும் மிக உற்சாகமாக ஜெர்மனி ஜெயிக்குமென்றார்.இவர்
முன்னாள் கால்பந்தாட்ட வீரர். பேட்டிகண்டவர் ஆக்டோபஸின் ஆருடம் பற்றி கேட்டார். 2008ஆண்டு
மாதிரி ஒரு தவறு செய்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில்
நாங்கள் ஜெயிக்கிறோம் என்றார். ஆனால் ஜெயித்தது என்னவோ ஆக்டோபஸ்தான். அது ஆருடம் சொன்னபடி
ஸ்பெயின்தான் செமிபைனலில் ஜெயித்தது.
கொதித்துபோன ஜெர்மன் ரசிகர்கள் அதை கடலில்போடுங்கள்,கறிபண்ணி சாப்பிடுங்கள்
(எப்படி பண்ணலாம் என்ற ரெசிப்பிவேறு) என்றெல்லாம் வலைபூக்களில் எழுதித்தள்ளிவிட்டார்கள்.
‘ஐயோ அப்படியெல்லாம் எதாவது பண்ணித்தொலைத்துவிடாதீர்கள். எங்களிடம் கொடுங்கள் நாங்கள்
பாதுகாக்ககிறோம் என்று ஸபெயினின் பிரதமர் ரேடியோவில் பேசினார்.. கால்பந்துவிசிறிகள் மட்டுமில்லாம் பிரதமர்கள்,,தூதர்கள்
என்று எல்லோராலும் பேசப்படுமளவிற்கு ஆக்டோபஸ் ‘பால்’ உலகப்புகழ்பெற்றுவிட்டது. மூன்றாவது
இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியும் இறுதிஆட்டத்தில் ஸ்பெயினும் ஜெயிக்கும் என்று இது சொல்லியிருந்தபடியே அந்த விறுவிறுப்பான ஆட்டங்களின்
இறுதி நிமிடங்களில் நடந்தது.
ஆக்ட்டோபஸ் பால் புத்திசாலியோ இல்லையோ ஆனால் அதன் மூலம் உலகின் கவனத்தை தங்கள் பக்கம்
திருப்பிய ஜெர்மனி ஸீ லைஃப் கண்காட்சி நிர்வாகிகள் நிச்சியமாக புத்திசாலிக
|
|
11/7/10
அழைத்து அருள் தரும் தேவி..
மெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும்
அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகபரபரப்காக இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்தியாவின்
பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரபட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு
படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில் “இன்றைக்கு என்னவோ இவ்வளவு
கூட்டம் நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்” என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது. ஜம்மூவிலிருந்து 50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா
நகரின் பஸ் நிலையத்திருக்கருகே. ‘தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்' என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும்
வைஷ்னோ தேவி கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும்
அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்
இமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200 அடி உயரத்திலிருக்கும்
இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து
துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது.
பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும் இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு
பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷுயுரஸ்
பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் சுவுண்ட்டர் கணணீமயமாக்பபட்டிருப்பதால். பிரமாதமாக
நிர்வகிக்கிறர்கள் அதிகபட்சம் 22000 பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால்.தரிசனம்
செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே புதிய அனுமதி சீட்டுகள் வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது.
மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின் நடந்தோ, குதிரையிலோ. பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும்
அந்த 12 கீமீ பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது. பெரும்பா¡லான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும்
அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள். குடும்பங்கள்.
உரசிக்கொண்டு போகும்குதிரைகள் இவர்களுக்கிடையே
நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கிழிருந்துதான்
போகவேண்டுமாதாலால் அவற்றை அனாசியமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும்
இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள், கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனலாய்ங்களில் மலிவான
விலையில் சாப்பாடு ஓய்வெடுக்ககூடங்கள் என பல
வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்ட்டர் வசதியிருப்பது என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம்
தெரிகிறது.பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை,,தொடர்ந்து செய்யப்படும்
துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும் படு
சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது. சிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன்
உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும்,தவத்தை கலைக்க முயற்சித்த
காலபைரவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம்.பிராதான கோவிலின் முகப்பிற்கு
1கீமீ தூரத்தில் “சன்னதியில் தேவி தன்னை மூன்று பிண்டிகளாக (சுயம்புக்களாக) தன்னைவெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.சிலைகளோ
அல்லது மூர்திகளோ கிடையாது.எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன் அந்த பிண்டிகளை கவனமாக பாருங்கள்” என்ற அறிவிப்பு காணப்படும் அந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது.
நீண்ட 6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய
கூடம். இங்கு மீண்டும் சோதனைகளுக்கு பின்னர்
நமது அனுமதிசீட்டிற்கான குருப் எண்ணைப் பெற்று
வரிசையில் காத்திருக்கிருக்கும்போதுதான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்சர்க்கூயூட்
டிவியில் காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த
குரூப் வரை சன்னதி வரை அனுமதிக்கபட்டிருக்கிறது என்பதுதெரிவதால் நமது முறைவரும் நேரத்தை
கணக்கிட்டுகொண்டிருக்கிறோம்.
வரிசையிட்டுச்செல்லும் வழியின் இறுதியில் கண்னாடிசுவர்களாலான
அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப்பட்டுகொண்டிருக்கின்றன.,அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில்
சன்னதி. மீண்டும் ஒரு சோதனை. சில காலம்முன்வரை தவிழ்ந்து செல்லவேண்டிய குகையாகயிருந்தை
இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன் சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல
நகர்கிறது.
அந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில்
ஒரு சிறுகுகை அதில்தான் சன்னதி, அடுத்தவரின் கழுத்துஇடுக்குவழியாக
பார்த்துகொண்டே அருகில் வந்தசில வினாடிகளுக்குள் அவசரபடுத்துகிறார்கள்.சரியாகபார்ப்பதற்குள்
நமது தலையில் கையைவத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்கள்.நுழைந்தமாதிரியே
மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம். “கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை
அழைத்திருக்கிறாள்”
என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில்விழுகிறது.ஒரு
வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம் வழியிலுள்ள
காலபைரவர் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் ஒரு பக்தர்.
அவரையும்தரிசித்துவிட்டு மற்றோர்பாதைவழியாக கத்ரா திரும்புகிறோம்.
கத்ராவிலிருந்து ஜம்மூவிற்கு வந்து நகரை
சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது சாலை
சந்திப்பில் கம்பீரமான அந்த சிலை.நம்மை கவர்கிறது.
அது 18ம் நூற்றாண்டில் பல சிறு
ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும்
அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம். நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல்
பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை.1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது.
அதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும்
அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும்
பொருந்தாததகா இருந்தாலும், காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது
அரச குடும்பத்தின்
வழித்தோன்றலின் கடைசி வாரிசான முனைவர் கரன்சிங்(முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை
கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார்.ஒரு அறகட்டளை நிர்வகிக்கும் இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம்.அரச குடும்பத்தின் தலைமுறைகள் சேர்த்த பலவையான
அற்புதமான ஓவியங்களும் அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன.
தர்பார் ஹாலில் மன்னர் குடும்ம்ப படங்களைத்தவிர, மினியெச்சர்
என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி
சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும்
கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல்
காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக்கண்டு வியந்துபோகிறோம். 60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு
படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக்கொண்டிருக்கும் நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது
மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின்
செல்வசெழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது.முதல் தளத்தில்
25000புத்தகங்களுடன் நூலகம்.
புகழ்பெற்ற பெர்ஷ்ய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது.
“மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான்
உண்மையான நினைவுச்சின்னங்கள்”
என்ற வாசகம்
நினைவிற்கு வந்தது,
(கல்கி11.07.12)
27/6/10
செம்மொழியின் காதலர்கள்
or
செம்மொழியை
உலகறியச்செய்தவர்கள்
ஐரோப்பிய
நாடுகளிலிருந்து 17, 18 நூற்றாண்டுகளில் மதத்தொண்டாற்றவந்த
போதகர்களிலிருந்து இன்றைய வெளிநாட்டு ஆராய்ச்சிமாணவர்கள்
வரை
தொடர்ந்து
செம்மொழியின் பெருமையை உலகிற்கு
அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில சில முன்னோடிகளை
இந்த
தருணத்தில்
நன்றியோடு
கல்கி நினவுகூறுகிறது
பார்தோலோமீயூஸ்
செயான்பலங் (ஜெர்மனி)
செம்மொழியை தம்மொழியாக நேசித்து
அதில் அரும் இலக்கிய பணியாற்றியிருப்பவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர் ஒரு
ஜெர்மானியர் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அறியப்பட்டிருக்கிறது. ஜியூ
போப்பையும், கால்ட்வெல்ட்யும்,வீராமாமுனிவரையும் அறிந்த தமிழுலகம் அவர்களுக்கு முன்னதாகவே தமிழகம் வந்த பணியாற்றியிருக்கும்இவரை
அறிந்திருக்கவில்லை. காரணம் இவரது பணி ஜெர்மானியாரலேயே
மிக தாமதமாகத்தான் அறியப்பட்டிருக்கிறது. இந்திய மொழியான சமஸ்கிருத்தை ஜெர்மனியர்கள்
அறிந்து ஆராயும் 100 ஆண்டுகளுக்குமுன்னமே இவர் தமிழிற்கு அரும்தொண்டாற்றியிருக்கிறார்.
டேனிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி தரங்கபாடி கடல்பகுதியை தஞ்சை மன்னரிடமிருந்து
விலைக்கு வாங்கியருந்தது. பின்னர் அது டென்மார்க்
அரசின் பகுதியாக அறிவிக்கபடுகிறது.பின் டென்மார்க மன்னர் அந்த பகுதியில் கிருத்துவ
மதத்தை பரப்ப போதர்களை அனுப்ப முடிவு செய்தார். டேனிஷ் நாட்டவரில் யாரும் “மலேரிய பூமியான
மலபார் இந்தியாவிற்கு” (அப்போது ஐரோப்பாவில் இந்தியா அப்படித்தான் அறியப்பட்டிருந்தது
)தயாரகயில்லை. அண்டை நாடான ஜெர்மனியிலிருந்து
டென்மார்க் மன்னரின் விருப்பதிற்காக செய்தவர். பார்தோலோமீயூஸ் செயான்பலங் Bartholomaeus
Ziegenbalg .போகுமிடத்தில் முதலில் மொழியை நன்கு கற்று கொண்டு பிராசாரம் செய்து மக்களை மதம்
மாற்றுங்கள் என்ற கட்டளையுடன் 1706ல் வந்தவர் ,வந்த இடத்தில் கற்ற தமிழ் மொழியின்
அழகில் மயங்கி இராண்டாண்டில் அதில் செய்திற்கிற பணி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 2000
வார்த்தைகளுடன் 1708ல்தமிழின் முதல் சொல் அகாராதியை
17000 வார்த்தைகளுடன் (ஜெர்மனியில் அச்சிட்டுவந்திருக்கி/றது) உருவாக்கியிருக்கிறார்.
இது தான் பின் வரும் பல சொல் அகாராதிகளுக்கு முன்னோடியாகயிருந்திருக்கிறது. தொல்காபியம்,
கொன்றைவேந்தன் நீதிவெண்பா போன்றவைகளை 119 ஒலைச்சவடியிலிருந்து படித்து மொழிபெயர்ததிருக்கிரார்.
அதை எளிய தமிழ் நடையிலும் சிறு புத்தனக்கள்கவும்
எழுதியிருக்கிரார்.
இலக்கியத்தைதாண்டி இவர் எழுதிய குறிப்புகளில்
அன்றைய காலகட்டதிலிருந்த நமது வாழ்க்கைமுறையை ஜெர்மன் மொழியில் பதிவு செய்திருக்கிறார்.
தினசரி தமது டைரியில் பார்த்தது, பாதித்தது, படித்தது போன்றவற்றை மிகத்தெளிவாக பதிவு
செய்திருக்கிறார். நமது திருமண முறைகள்(பல வித தாலி வகைகள் !) செருப்பணிந்து பல்லக்கிலிருக்கும்
மனிதனை செருப்பாணியாதவர்கள் தூக்கிப்போகும்
சமுகமுறை, சாதி ஆதிக்கம் திருவிழாக்கள் சடங்குகள்
அதற்காகவே ஆச்சரகோவை புத்தகம் ஒன்றிருப்பது இப்படி பல. தமிழரின் பண்பாடுகளை காட்டும் கால கண்னாடியாகயிருக்கும் இந்தகுறிப்புகளை
அவர் அவ்வப்போது ஜெர்மனிக்கு அனுப்பிவைத்டிருக்கிறார்.அவை இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
“தமிழர்களின் கலாச்சாரம் மிகபாரம்பரியமானது,
அவர்களின் மிகதொன்மையான மொழியில் பல அறிய இலக்கியங்கள் படைக்கபட்டிருக்கின்றன. இந்த
மொழி நமது பல்கலைகழகங்களில் போதிக்க்ப்படவேண்டும்,இது மலேரிய தேசமில்லை.மூடத்தடமான
சில்ச் மதச்சடங்க்குகளை பின்பற்றினாலும் வானசாஸ்திரம் கட்டிடக்கலை வரை பலவிஷயங்கள்
அறிந்தவர்கள் தமிழர்கள். இதை ஐரோப்பியர்களுக்கு தெரியபடுத்துங்கள்” என தன்னை இந்த பணிக்கு
அனுப்பிய பேராசிரியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் பணியை
மட்டும் செய்யுங்கள் என்று சொல்லி அந்த கடித்தை வெளியிடவேஇல்லை.
இவருடன் கூடவே இருந்து உதவிய தமிழ் இளைஞர்
தமிழர் மாலிய்ப்பன். மதம் மாறி பீட்டர் மாலியப்பன் ஆகிறார். அவர் இவரைவிட கில்லாடியாக்யிருந்திருக்கிறார்
என்பது இவர் குறிப்பிலிருந்து தெரிகிறது. சிலநாளிலியே ஜெர்மன் மொழியையை கற்று கொண்ட
அவர், பணிக்காலம் முடிந்து திரும்பிய பார்தோலோமீயூஸுடன் டென்மார்க் போய் அங்கு மன்னரின் அவையில்
ஜெர்மன் மொழியில் தமிழின் சிறப்புபற்றி உரையாறியிருக்கிரார்.
“அருமயாக பேசினார்” என்று தனது குறிப்பில்
எழதியிருக்கிறார் பார்தோலோமீயூ. செம்மொழிக்கு
ஜெர்மானியர்கள் ஆற்றிய பனிகள் குறித்து 2லட்சத்திற்குமேலான ஆவணங்கள் ஜெர்மன் ஹாலே நகரில்
பிரங்களின் பவுண்டேஷன் Francken's Foundation Archives in Halle, ஆவணக்காப்பகத்திலிருக்கிறது.
இவற்றில் பல இதுவரை தொடப்படாடதவை. தமிழின்,தமிழரின்
பெருமையை சொல்ல காலம் காலமாக ஆராய்சியாளார்களின் கண்னில்பட காத்திருக்கின்றன.
படம்:
கமில்வெய்த்
செல்லிபல்
செக்கோஸ்லோவிக்கியா (இப்போது செக்)வில் செம்மொழி ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது
என்பதைவிட அதற்கு வித்திட்டவர் செய்திருக்கும் தமிழ்ப்பணி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
செக் பலகலை கழகத்தில் 1952ல் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம் படிக்க துவங்கிய அந்த இளைஞனை மிக கவர்ந்தது
துணைப்பாடங்களில் ஒன்றான தமிழால் ஈர்க்கபட்டு, அதையே முழுவதுமாக கற்றிந்த இவர்
1959ல் அதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பல இந்திய மொழிகளையும் ஆர்வத்துடன்
கற்றிருக்கிறார்.திராவிட மொழிகளின் ஒற்றுமையை, தமிழ் பல பகுதிகளில்ம மாறுபட்டு பேசப்படுவது,பிற
மொழிச்சொற்களின் கலப்பு பற்றியெல்லாம் ஆரய்ந்திருக்கிறார். கமில்வெய்த் செல்லிபல்(Kamil
Veith ZVELEBIL)
தமிழக காட்டுபகுதிகளில் பயணம்செய்து அவர்கள் பேசும்தமிழ்,வரிவடிவம் இல்லாது
வழக்கிலிருக்கும் தமிழ். போன்றவகளை ஆராய்ந்து இவர் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கியமானது.
நீலகரி மலைப்பகுதி இருளர்கள் பேசும் மொழி தனியான ஒரு மொழி அது தமிழல்ல என்பது. இத்தகைய
ஆராய்சிகளுக்காக இவர் செலவிட்டது 5 ஆண்டுகள். செக்கொஸ்லோகியாவில் 1968ல் உள் நாட்டுப்போர்
துவங்கி ரஷ்ய படைகள் நுழைந்து அறிவுஜீவிகளுக்கு
ஆபத்து என்ற நிலை உருவானபோது அமெரிக்கா போன இவர் அங்கும் சிக்ககோ பலகலகழகத்தின் தமிழ்துறையில்
பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பல்கலைகழகங்களில் பணியாற்றியபோது
ஜெர்மன் பல்கலை கழகங்களில் விஸிட்டிங் பேராசிரியாராக தமிழ் கற்பித்திருக்கிறார். போர்நிலவரம்
சரியானபின் தாய் நாட்டில் மீண்டும் தன் தமிழ் பணியைத் தொடர்ந்திருக்கிறார்
1970களில் தமிழ் பற்றிய இவரது
கட்டுரைகள் செக்மொழி மட்டுமில்லாமல் போலிஷ் மொழியிலும் வெளியாகி தமிழ்மொழிக்கும்,
தமிழர்களுக்கும் ஒரு பெருமையான அடையாளாத்தை அளித்திருக்கிருக்கிறது. சமகால இலக்கியங்கள்.சிறுகதைகள்,கவிதைகள் என பல மொழிபெயர்ப்புகளை
செக்க் மொழியில் அளித்திருக்கிறார். தமிழ் சார்ந்த 500க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருந்தும்,
தமிழ்கூறும் நல்லுகில் அதிகம் அறியப்படாத இவரை செக் அரசும், பலகலைகழகங்களும் பராட்டி
பட்டங்களும் பதக்கங்களும் தந்து கெளரவித்திருக்கின்றன.
உலகின் தமிழ் சம்மந்தப்பட்ட பல
அமைப்புகளின் பணிகளுக்கு உதவியிருக்கும் இவர்
அந்த காலகட்டதில் சென்னையிலிருந்த தமிழ் மொழி ஆரய்ச்சி அமைப்பிலும்,தமிழ் கலாச்சார
மையத்தின் பணிகளிக்கும் பங்களித்திருக்கிறார்.
சென்புத்தமதத்தத்வதில் தீவிர நாட்டம்கொண்டு பிரான்ஸ் நாட்டில் தங்கி அதுபற்றிய
ஆராய்சியிலிடுபட்டிருந்த கே.வி செல்லிபெல் K. V.ZVELEBIL கடந்தாண்டில்(2009ல்) காலமானார். உலகமறிந்த ஒரு சிறந்த
மொழியில் அறிஞரை இழந்து விட்டோம். இது பேரிழப்பு என செக்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்தது.
இழப்பு அவர்களுக்கு மட்டுமில்லை தமிழுக்கும்
தான்.
படம்:
டாக்டர்
பிரான்கோஸ் கோர்ஸ் (பிரான்ஸ்) Dr. Francois Gros
பிரான்ஸ்
நாட்டின் லாயன்ஸ் பல்கலை கழகத்தில் பிரென்ச்.,சமஸ்கிருதம்,லத்தின் கீரிக் மொழிகள் கற்று
MA பட்டம் பெற்ற பின் பாரீசுக்கு வந்து தமிழ் கற்றவர் பிரான்கோஸ்.தமிழையையும்.தமிழ்கலாசாரத்தையும்
தன்க்கு அறிமுகபடுத்திய தன் பேராசிரியரை இன்றும்
நினைவுகூறும் இவருக்கு வயது 75. பாண்டிச்சேரியில் பிரென்ச் இன்ஸ்ட்டிடுய்டில் ஆராய்ச்சி
பணியை தொடர்ந்த இவர் சிலப்பதிகாரம்,பரிபாடல்,பத்துபாட்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்,
சமகால தமிழ் இலக்கியங்கள் பற்றி- தலித் இலக்கியங்கள் உள்பட பலவற்றை நன்கு அறிந்திருக்கும்
இவர் பரிபாடலை பிரெஞ்ச் சில் மொழிபெயர்த்திருக்கிறார். 8 ஆன்டுகள் செலவிட்டு செய்த
அந்த பணி பிரெஞ்ச் மொழியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான பரிசைப்பெற்றிருக்கிறது. திருக்குறள்.
காரைகால் அம்மயார் சரிதம் சைவசித்தாந்தகள் போன்ற் பலவற்றை பிரஞ்ச் மொழியில் மொழிப்யர்த்திருக்கிறார்.
சமகால இலக்கியத்திலிருந்து நிறைய தமிழ் சிறு கதைகளை கண்னன் என்ற ஆராய்சியாளரின் உதவியோடு
மொழிமாற்றம் செய்து அதை புத்தகமாக வெளியிட்டு தனக்கு முதலில் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர் முனிசாமிநாயிடுவிற்கு அர்பணித்திருக்கிறார். திருவண்ணாமலை,உத்திரமேருர்
கல்வெட்டுகளை ஆராய்ந்து பிரெஞ்ச் மொழியில் எழுதியிருக்கிறார். தலித் தமிழிலக்கியம்
பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். டாக்டர் பிரான்கோஸ்
கோர்ஸ் ( Dr. Francois Gros)
தமிழ்தாத்தா உ. வே சாமிநாதர்களின் சீடர்களான கிவாஜ, ஆர்வி
சுப்பிரமணிஅய்யர் போன்றவர்களை நன்கு அறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த இவர், தமிழாராய்சியாளாராக
இல்லாத அவர்களைப் போன்றவர்கள் தமிழுக்குசெய்திருக்கும் பணியை வியந்து போற்றுகிறார்
தமிழைச் செம்மொழியாக்கி கெளரவித்தால் மட்டும்
போதாது. பெரிய அளவில் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், அதற்கு
நிறையஆராய்ச்சி, வெளிநாட்டவருக்கு தமிழ் கற்பிக்கும் முறை, எளிய வகயில் கற்க வசதியான
புத்தகங்கள் இப்படி பல விஷயங்கள் செய்யப்படவேண்டும்
எனசொல்லும் டாக்டர் பிரான்கோஸ்
கோர்ஸ் 1974ல் இலங்கையில்
நடந்த மாநாட்டை தவிர இதுவரை நடந்த எல்லா தமிழ் மாநாடுகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
தமிழைகற்பிப்பவர்கள் மொழி மட்டுமில்லாமல் தமிழ் கலாசாரம்,சரித்திரம் பற்றியெல்லாம் கற்பிக்கவேண்டுமென்கிறார். தான் கிரேக்க மொழி கற்றபோது
அகழ்வாராய்ச்சி செய்ய்மிடத்திற்கே சென்று அறிந்ததை நினைவு கூறுகிறார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் தமிழையும், தமிழ்கலாசாரத்தையும்
நேசிக்கும் இவர் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையும் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் அக்டோபர்
வரையும் பாண்டிச்சேரியில் தங்கி ஆராய்ச்சியை தொடர்கிறார்.
படம
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)