10/9/13

உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் அம்மா

  கோக்கோலா விற்கு போட்டியாக பானம் தயாரித்து விற்கும் கம்பெனியாக துவங்கி இன்று அதனுடன் பலவித ஸ்நாக்களையும், உணவு பொருட்களையும் உலகில் 200 நாடுகளில் தயாரித்து, விற்று தன் வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் பெப்ஸி கோ.  உணவுப் பொருள் வணிக நிறுவனங்களின் பட்டியலில் உலகளவில் இரண்டாம் இடம். கடந்த ஆண்டின்  பிஸினஸ் 66000 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒருபில்லியன்= 100கோடிகள்) மொத்த பணியாளர்கள்   2 லட்சத்துக்கும்மேல். இதன் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருப்பவர் ஒரு இந்தியப் பெண். பெயர் இந்திரா நூயி.  அவர்  ஒரு தமிழ்ப் பெண். என்பதால் நாம் சற்று அதிகமாகவே பெருமைபட்டுக்கொள்ளலாம். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பெண் தலைமைஅதிகாரியும் இவரே
.
 சென்னை தியாகராயநகர் வாசியான கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் மகளான இந்திரா அங்குள்ள ஹோலிஏஞ்சல் பள்ளியிலும், பின் கிருத்துவகல்லூரியிலும் படித்தவர். கணிதம், பெளதிகம்  பட்டம் பெற்றபின்  கல்கத்தா ஐஐஏம்பில் எம்பிஏ படித்தவர். இந்தியாவில் தன் தொழில் வாழ்க்கையை  ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக துவங்கியவர். 1978ல் அமெரிக்க யேல் பலகலைகழகத்தில் மேனெஜ்மெண்ட் படிக்கும் வாய்ப்புகிடைத்ததினால் அமரிக்கா சென்றார். படிக்கும்போதே பாஸ்டன் கன்ஸ்லட்டென்ஸி என்ற நிறுவனம் வேலைக்கழைத்தது.  அதன் பின் பல அமெரிக்க முன்னணி கார்ப்பேர்ட்களில் உயர் பதவி.. 1994ல் பெப்ஸி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர் 7 ஆண்டுகளில் அதன் தலைமை  நிதி அலுவலாரக உயர்ந்தார்.,.  அந்த பதவியில்  இவர் இருந்த போது கம்பெனியின்  வருமானம் 72% அதிகமானது. லாபம் இருமடங்காகியது.  கார்ப்ரேட் உலகம் இவரை கவனிக்க ஆரம்பித்தது. போட்டி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள்.  ஆனால் இந்திரா பெப்ஸியை உலக முன்னணி நிருவனங்களில்  ஒன்றாக்குவதில் உறுதியாக இருந்தார். அதேப்போல் அதை சாதித்தும் காட்டினார். பெப்ஸியின் நிர்வாக குழு ஒருமனதாக  இவரை 2006ல் பெப்ஸிகோவின் தலைவராக நியமித்தது. முதல் முறையாக ஒரு பெண்,  அதுவும் அமெரிக்கர் அல்லாத ஒருவர் அந்த பதவியில் நியமிக்கபட்ட சரித்திர சம்பவம் அது.  சம்பளம் ஆண்டுக்கு 17 மில்லியன் டாலர்கள் (ஒரு மில்லியன் = 10 லட்சம்)   இவர் தலைமையில் இப்போது பெப்ஸிகோ இன்னும் வலுவாகிகொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம்  இவரால் எப்படி முடிகிறது?
 ”உலகம்முழுவதிருக்கும் என் டீமுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறேன். வெற்றியின் பெரும்பங்கு அவர்களுடையது.  எந்த விஷயத்தையும் பெப்ஸி நிர்வாகிகள்  மாறுபட்ட கோணங்களில் பார்க்க பழக்கபடுத்தபட்டிருக்கிறார்கள்  என்று சொல்லும் இவர் ஒருநாளில் 20 மணிநேரம் வேலை செய்கிறார். மாதத்தில் இரண்டுவாரம் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.   வெறும் கோலா பான விற்பனையைமட்டுமே எப்போதும்  செய்து கொண்டிருக்கு முடியாது என்பதனால்   சிப்ஸ் போன்ற பலவகை உணவுபொருட்களை விற்கும் ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கியதும் , அதற்காக  உலகின் பலபகுதிகளில் இருந்த அத்தகைய கம்பெனிகளை பெப்ஸி நிருவனத்துடன் இணைத்ததும் தான் இவரது சாதனைகளில் மிகப்பெரியது.,
கணவர் ராஜ் நூயி (Raj K. Nooyi) மைசூரில் படித்தபின் அமெரிக்காவில் எஞ்னியரிங்கும், எம்பிஏ யும் படித்தவர். பல நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். இப்போது  தனது நிர்வாக ஆலோசகனை நிறுவனத்தின் தலைவராகயிருக்கிறார். இரண்டு பெண்கள். இந்திய இசையை விரும்பும் இந்திரா தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இன்னும் மறக்கவில்லை. தன்   அலுவலக அறையில் சிறிய வினாயகர் சிலை வைத்திருக்கிறார்.


 இந்திரா நூயிக்கு  பல அமெரிக்க பல்கலகழகங்கள் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கிறது. நம் நாட்டின் பத்மபூஷன் விருது பெற்றவர்,  ஆனால் இவர் பெரிதும் மதிப்பது அமெரிக்காவின் ”சிறந்த அம்மா” (Best moms)க்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தான். எவ்வளவு பிஸியாக இருந்தாலும்,தனது மகள்களின் படிப்பிலும் வளர்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர் இவர். இன்று அவர்கள் அம்மா படித்த யெல் பல்கலைகழகத்தில் பிஸினஸ் மேனெஜ்மெண்ட்படிக்கிறார்கள்.




30/8/13

இன்னும் ஒரு ராமனுஜம்


உலகின்மிகச் சிறந்த கணித மேதைகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒருவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இவரது பெற்றோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தந்தையின் ஊர் கும்பகோணம், தாய் தஞ்சையை சேர்ந்தவர். புதுடெல்லியில் 1981ல் பிறந்த அக்‌ஷ்ய் ஆரம்ப கல்வியை அங்கே   துவங்கி தந்தையின் பணிமாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் தொடர்ந்தவர். அந்த சிறுவனுக்கு புதிய இடம், புதிய மொழி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் முதல்..  ஆஸ்திரேலிய பள்ளிகளில் இம்மாதிரி திறமையான மாணவர்களை “கிஃபட்டட் சில்ரன்” என்று அடையாளம் காணப்பட்டு விசேஷ பயிற்சிகள்  தந்து ஊக்குவிப்பார்கள்.  அக்‌ஷ்ய்யின் பள்ளியில் அந்த வாய்ப்பின் மூலம் பயிற்சி பெற்று  சர்வதேச ”பிஸிக்ஸ் ஒலிம்பியார்ட்”டில் பங்கு பெற்று பதக்கம் பெற்றார் அப்போது அவருக்கு வயது 11. ஓலிம்பியார்ட் என்பதுஉலகளவில்  ஒரு பாடத்தில் மிகச் சிறந்த மாணவனை தேர்ந்தெடுக்கும் கடினமான போட்டி. முதலில் மாவட்ட அளவில், பின்அவர்களிலிருந்து மாநில அளவில் தேர்ந்தெடுக்கபட்டு அவர்களில் சிறந்தவர்கள் இறுதியில் தேசத்தின் சார்பாக சர்வதேச  அளவில் பங்குகொள்ளும் போட்டி.  இதில் 1993ஆம் ஆண்டு மூன்றாம் இடம் பெற்ற  அக்‌ஷ்ய் அடுத்த ஆண்டு பிஸிக்ஸில் முதலிடத்திற்காக போட்டியிடுவதற்கு பதிலாக கணித ஒலிம்ப்யார்ட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவித்து உதவி செய்ய 1994ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்ப்பியார்ட்டில் தங்கபதக்கம் வாங்கினார். தொடர்ந்து அடுத்த அடுத்த ஆண்டுகளில் இப்படி ஒலிம்யார்ட் பதக்கங்கள்  அதுவும் வெவ்வேறு பாடங்களில் வாங்கியது இதுவரை யாரும் இல்லை. இந்த அங்கீகாரங்களின்மூலம் பள்ளியில் கிடைத்த பிரோமோஷன்களினால் பள்ளி இறுதியாண்டை 13 வயதிலேயே முடித்து விசேஷ அனுமதிகள் மூலம் 14 வயதில்  கல்லூரியில் கால்வைத்தவர் இவர்.  ஆஸ்திரேலிய பலகலைகழகத்தில் இந்த வயதில்  எவரும் இந்த சாதனையை செய்த்தில்லை. நாலு ஆண்டு கணித ஹானர்ஸ் படிப்பை இரண்டே ஆண்டில் முடித்து  17 வது வயதில் அந்த பல்கலைகழகத்தின் முதன்மை மாணவராகவும் முதல் இளம்வயது ஹானர்ஸ் பட்டதாரியாகவும்  வெளிவந்தார். இந்த காலகட்டத்தில் இவர் எழுதிய ஆராய்ச்சிகட்டுரைகளுக்கு பல பரிசுகளும் ஸ்காலர்ஷிப்புகளும் கிடைத்தது மட்டுமில்லாமல்   வெளிநாட்டு, உள்நாட்டு பலகலை கழகங்கள் ஆராய்ச்சி படிப்பை தொடர இவரை அழைத்தது. ஆனால் அக்‌ஷய்  அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில்  தான் குருவாக மதிக்கும் கணித மேதை திரு பீட்டர் ஸ்நாரக் என்பவரின் கீழ் பணிபுரிந்து ஆராய்ச்சி செய்யவே விரும்பினார்.  2002ல் தனது 21ஆவது வயதில்  பிஹெச் டி பட்டம் பெற்ற இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை கவனித்த MIT என்று உலகம் முழுவது அறியபட்டிருக்கும் புகழ் பெற்ற ’மாஸாசுஸுஸ்ட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி’ பேராசிரியர் பணி தந்து அழைத்தது. மிகப்பெரிய கவுரமான இதை ஏற்று  தன் ஆசிரிய பணியையும் ஆராய்ச்சிபணியையும் தொடர்ந்தார். ஆண்டுதோறும்  உலகின் பல பல்கலைகழகங்களிலிருந்தும், ஆராய்ச்சி மையங்களிலிருந்தும் விருதுகளும், பரிசுகளும் குவிகிறது. கணித துறையை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக செய்யப்படாத பல ஆராய்ச்சிகள் இவரால் குறுகிய காலத்தில் செய்து முடிக்கபட்டிருப்பதாக புகழாராம் சூட்டுகின்றனர்
.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம் 2008 ஆண்டு  சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசையும் பரிசுபணமாக 10,000 அமெரிக்க டாலர்களையும் மேதை ராமானுஜத்தின் ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வ தேச கணித கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது.  இந்த பரிசுக்கு இவரை தேர்ந்தெடுத்தது,ஐந்து பெரிய அமெரிக்க பல்கலைகழகங்களின் மூத்த பேராசிரியர்கள்.

தற்போது அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் 32 வயதிலேயே மூத்தபேராசியாரக அங்கீகரிக்க பட்டு தன் ஆராய்சியை தொடரும் அகஷ்ய் இந்தியா வருவரா? ”2015 வரை என் பயணங்கள் முடிவு செய்யபட்டுவிட்டன,அதன்பின் பல்கலைகழகங்கள் அழைத்தால் வருவேன்” என்கிறார்.


24/8/13

நிழலின் இசையை ரசித்த மரங்கள்.



”நிழல்”இயற்கையின் கொடையான மரங்களின்,தாவரங்களின், சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்லி அவைகளை சேசிக்க சொல்லிகொடுக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு விரும்பும் ஆர்வலர்களை அழைத்து சென்று அவைகளை அறிமுகபடுத்தும் “டீரி வாக்” (Tree walk) நடைப்பயணங்களை அவ்வப்போது நடத்துபவர்கள். இந்த ஆண்டு சென்னைநகரின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து சென்ற இடம் கலாஷேத்திரா.


இசையையும் நடனத்தையும் மரபு வழுவாத பாரம்பரியத்துடன் கற்பிக்க திருமதி ருக்மணி அருண்டேல் உருவாக்கிய கலாஷேத்திரத்தாவில் நுண்கலைகளுடன் மரங்களையும் செடிகளையும் நேசித்து வளர்த்தார். அவைகள் இன்று அழகான ஒரு காடாகவும்,பூஞ்சோலையாகவும் மலர்ந்திருக்கிறது. மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத இந்த அழகான அமைதி சொர்க்கத்திற்கு சிறப்பு அனுமதியுடன் இசைக்கலைஞர் செளமியாவுடன் அங்குள்ள மரங்களை சந்திக்க. அழைத்து போனார்கள் நிழல் அமைப்பினர். இந்த பயணத்தில் ஒவ்வொரு மரத்தின் கீழும் அதன் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை, இயற்கையை காக்க அவைகள் செய்யும் பணிகளை,நமது வழி பாடுகளில் அவற்றிற்கு இருக்கும் முக்கியத்துவம பற்றி எல்லாம் சொல்லபட்டபின்னர் செளமியா அந்த மரம் குறித்த, அல்லது அதன் பெயர் இடம் பெற்ற பாடல்களின் சில வரிகளை பாடிகாட்டினார். ஒவ்வொரு மரத்திற்கும் அது அந்த பாடலில் இடம் பெற்றிருப்பதற்கான சிறப்பான காரணம், அந்த பாடலை எழுதியவர் ராகம் எல்லாவற்றையும் பிரமாதமாக விளக்கி சொல்லிவிட்டு பாடலை பாடினார். சிறிய தம்பூராவை ஒருகையில் வைத்து மீட்டியவண்ணம் பாடலின் சிலவரிகளை பாடினார். ”மைக் வேண்டாம்அமைதியாக கவனமாக இருந்தால்கேட்கும்” என்று சொல்லி  சிலப்பதிகாரம், தியாகையர், தீட்சதர்பாடல்கள்,தேவாரம், திருவாசம் என  பலவற்றிலிருந்து  தேர்ந்தெடுக்கபட்ட வரிகளை அந்தந்த மரத்தின் கீழ் பாடினார்.  முழுவதும் பாடமாட்டாரா? என எண்ணவைத்த 
செளமியா  டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இசையிலா?  பாட்டினி பாடத்திலா? என ஆச்சரியப்படும் அளவிற்கு இதற்காக ஹோம் ஒர்க் செய்திருந்தார்.. தன்கைப்பட எழுதிய பேப்பரிலிருந்து பார்த்து பாடும் செளமியா ஐ பேடில் பாடலைத்தேடி கண்டுபிடித்து பாடும் அடுத்த தலைமுறைகலைஞர்களான சீடர்களையும் உடன் அழைத்து ஊக்கபடுத்தியது   ஒரு மகிழ்ச்சியான காட்சி.
வம்சம்தழைக்க உதவும் மருத்துவ சக்தி வாய்ந்ததால்தான் கல்யாணமுருங்கை திருமணங்களில் மூஹூர்த்தகால் மரங்களாக நடப்படுகிறது, மலர்ந்து உதிர்ந்த மகிழம்பூக்கள் சருகானாலும் மணம் பரப்புவதை நிறுத்துவதில்லை. ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடினால் அதற்கு மிகவும்வலிக்கும். மரங்களில் வண்ணவிளக்குகள் போட்டால் அதிலிருக்கும் பறவைகள் அன்று தங்கஇடமில்லமல் தவிக்கும் போன்ற பல செய்திகளை செளமியாவின் இசையுடன் நமக்கு சொன்னவர்கள் நிழல் உறுப்பினர்களான திரு பாபுவும், திருமதி லதா நாதனும்.
கலாஷேத்திராவில் ஒரு மரத்தில் வண்ணத்து பூச்சிகள் தேனடையில் தேனிக்கள் இருப்பது போல மொய்த்துகொண்டிருந்தன. அது ”டீரி ஆப் லைப்” என்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்வகை என்றும் சொன்னார்கள். ஒரே மரத்தில் இத்தனை வண்ணத்துபூச்சிகளை பார்த்ததைவிட ஆச்சரியம் அவை அனைத்தும் பறக்காமல் அங்ககேயே இருந்தது தான். ஒரு வேளை அவைகளும் செளமியாவின் பாடல்களினால் மெய்மறந்து பறக்க மறந்துவிட்டனவோ ?
கல்கி 01/09/13

19/8/13

பென்ஸ் காரின் விலையில் ஒரு எருமை

ஆதித்தியா
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை  லட்சுமி என பெயரிட்டு அன்புடன்  வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட பால் கறக்கும்   அந்த இனத்தை சேர்ந்த லட்சுமி நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..


லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் ”அழகி போட்டி” அதிக அளவு பால் வழங்கும் எருமை” போன்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால் இந்த கருப்பு அழகி  மாநிலம் முழுவதும் பாப்புலர்..

 பலர் விலைக்கு கேட்டும் தர மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   மிக அதிக விலையாக லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக  விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார்.  ராஜீவ் அதை தர சம்மதித்து உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,   இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார். 

 
அதை தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார்.   அருகிலுள்ள கிராம மக்களும் பங்கு கொண்ட  அந்த விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநில கால்நடைத்துறையின் மூத்த அதிகாரி இம்மாதிரி நிகழ்ச்சிகள் மேலும் பல விவசாயிகள் இத்கைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க தூண்டும்  என்று சொல்லுகிறார். நிகழச்சியை பிபிசி டிவி கவர் செய்திருக்கிறது.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம்.  தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவிலிருந்து அரியான  வந்து  ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த  எருமை மாட்டை வாங்குகிறார் ?  2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும் கால்நடை கண்காட்சியில்  தேர்ந்தெடுக்கபடும்  சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும் பரிசு   ஒரு கிலோ தங்கமாம்.



ஆதித்தியா

12/8/13

"பேசும்” பொன்னியின் செல்வன்


 ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது.  கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா  தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில்.  கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக  சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.  
ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர்.  ”ஸ்ரீ” என்று  பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.  நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில்  நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற  எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட  40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன்.   நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள்.   75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது.  இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்  ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே  ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.



   ஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்  போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது? உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள்  வாங்குகிறார்கள். விற்பனையைவிட  “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்”  ஆடியோ புத்தகத்தை கேட்ட  என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற  வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின்  பணி மகத்தானது.

-ஆதித்தியா (ரமணன்)