2/3/19

சர்ச்சைகளில் சிக்கும் புன்னகை அரசி



இதுவரை  உலகில் மனிதன் வரைந்ததிலேயே மிகச் சிறந்த ஓவியம்' என்றும், மிக விலை உயர்ந்தது என்றும் தினசரி பல ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது  என்று  வர்ணிக்கப்படுகிறது  பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திலிருக்கும்
மோனாலிசா ஓவியம்

.அந்த மகத்தான ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஓவிய மேதை  லியான்ட்ரோ டாவின்சி. இந்த ஓவியம் 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.500  ஆண்டுகளுக்குமேலாக போற்றப்படும் இந்த ஓவியம் பாராட்டுக்களைப் போலவே  தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.

இரண்டுமுறை திருடப்பட்டு தேடிக்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை  இந்த ஓவியம். திருடியவரை இரண்டு ஆண்டுகள் கழித்து  கண்டுபிடித்தபோது அந்த இத்தாலியருக்கு கடும் தண்டனை எதுவும் கொடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில்   “இந்த ஓவியம் எங்கள் நாட்டு ஓவியர் எழுதிய கலைச்செல்வம் அது பிரான்ஸில் இருப்பதை நான் விரும்பவில்லை.  எங்கள் தாய்நாட்டில் வைப்பதற்காகத்தான் திருடினேன்” என்று அவர் சொன்ன பதில் தான் காரணம்.  இரண்டாம் முறை திருட்டு சொத்தாக கைப்பற்றப்பட்டது ஆனால் திருடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இன்று பல லட்சம் டாலர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த ஓவியம்  துப்பாக்கி குண்டுகள் துளைக்கமுடியாத கண்ணாடிகளால் பாதுகாக்கப்படுகிறது. 

-என்ன மாதிரியானது என்று கண்டேபிடிக்கமுடியாத அதன் புன்னகை தான் இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாக ஓவிய வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  ஓவியத்தில்  உதடுகள் வரைந்திருக்கும் முறை,கண்களின் ஓரத்தில் செய்யப்பட்டிருக்கும் கருப்பு ஷேட் போன்றவற்றினால் அந்தப் புன்னகை தனித்துவம் பெற்றிருக்கிறது.  அந்தப் புன்னகை சொல்வது சந்தோஷமா? சோகமா? நையாண்டியா எனப் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது. 

லியான்ட்ரோ டாவின்சி  ஓவியர் மட்டுமில்லை கணிதம் விஞ்ஞானம்  அறிந்த மேதை. இவ்வளவு பெரிய அறிவாளியைக் கவர்ந்த, ஓவியமாகத் தீட்ட வைத்த முகம் யாருக்குச் சொந்தமானது, அது ஆணா, பெண்ணா? ஒருவேளை அது டாவின்சியாகவே இருக்குமோ? அதற்கு ஏன் புருவங்கள் இல்லை?  டாவின்சி  அந்த அழகுத் தேவதையை எங்குச் சந்திருப்பார்  எனப்  பல கேள்விகளும் அதற்குப் பதிலாக யூகங்களும் சர்ச்சைகளும் நீண்ட நாள் தொடர்ந்தன. இதற்கு முக்கிய காரணம் . டாவின்சி அவரது எல்லா ஓவியத்திலும்  ஏதேனும் குறிப்பை விட்டுச் சென்றிருக்கிறார் ஆனால் இதில் எதுவுமில்லை.

ஓவியத்திலிருப்பது  லிசா டெல் கியோகாண்டோ. அவர் , பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டுவியாபாரி பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி என்கிறது ஒரு குறிப்பு. ஆனால் இதை ஏற்பவர்களைவிட மறுப்பவர்களே அதிகம்..


சில ஆண்டுகளுக்கு முன்  இத்தாலிய ஓவிய ஆராய்ச்சியாளர்  சில்வானோ வின்செடி என்பவர் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று  சொல்லி ஓவிய உலகத்தையே திடுக்கிட வைத்தார்.  அவர் தனது ஆய்வு முடிவில் உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனாலிசாவுக்கு போஸ் கொடுத்தவர் கியான் கியாகோமோ காப்ரோட்டி என்னும் ஆண். அவர் சுமார் 20 ஆண்டுகளாக லியோ நார்டோ டாவின்சியிடம் உதவியாளராக இருந்தார். அவரை முன்மாதிரியாக வைத்துத் தான் மோனாலிசா வரையப்பட்டுள்ளது என்றார்..நீண்ட நாள் சர்ச்சையிலிருந்த இந்த  விஷயம் பின்னர் ஒய்ந்துவிட்டது. 

ஒவியம் எழுதப்படும்போது அந்த மாடல் கர்ப்பணியாக இருந்திருக்கிறார் என்பது அவரது கன்னங்களில் தெரிகிறது என்று கூட சொல்லப்பட்டது. இப்படி   ஒவியத்தின் சிறப்புகளைவிட அந்தமாடலைப்பற்றி பேசப்பட்டது தான் அதிகம் 

லியான்ட்ரோ டாவின்சியின் ஓவியங்களிலேயே மிக அதிகமான விலை மதிப்புள்ள ஓவியம் மோனாலிசா . இந்த ஓவியத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது.? 


.இந்த ஓவியத்தில்  மோனோலிசாவின் புன்னகை  எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.. “உண்மையிலேயே புன்னகை இருக்கும்-  ஆனா இருக்காது” டைப். புன்னகைப்பது போல் தோன்றும்- ஆனால் தோன்றாது.   பார்ப்பவர் மனசுக்கேற்றார் போல் மாறும் மந்திரப் புன்னகை.  

இந்தப் புன்னகையை  பல விதமாக  ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.  .சற்றுத் தொலைவைவிலிருந்து  பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி மிக சாமர்த்தியமாக இப்படித் தோன்றுவதற்காகவே வாய் அருகில் சிலவகையான கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்று  சொல்லுகிறார்கள் சில ஓவிய வல்லுநர்கள். ..  இந்த  ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் மோனோலிசாவின் கண்கள் உங்களைப் பார்ப்பது போலிருக்கும் என்பது மற்றொரு சிறப்பாகச்  சொல்லபட்டுவந்தது.



அண்மையில் ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சிக்குழு  ஓராண்டு ஆராய்ச்சிக்கு பின் அறிவித்திருப்பது. “அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. படத்தில் “மோனோலிஸா எபஃகட்” எதுவுமில்லை.. அந்த ஓவியத்தின் கண்கள் வலது பார்ப்பது போல் தான் வரையப்பட்டிருக்கிறது.  யாரோ ஒரு பார்வையாளரின் கற்பனை கருத்தாக சொல்லப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை அந்த நம்பிக்கையுடனேயே பார்வையாளர்கள் இந்த ஓவியத்தை ரசித்திருக்கின்றனர். 
நேரான பார்வையுடன் கூடிய ஒரு  ஓவியத்தின் கண்கள்.. நாம் வலது அல்லது இடது என்று எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மை நோக்குவது போல ஓவியங்களை எழுதுவது ஒரு கலை. இதற்கு “மோனாலிசா எபஃக்ட்” என்று பெயர். ஆனால்  மோனோலிசாவின் ஓவியம் அந்த வகையில் வரையப்படவில்லை என்கிறார்கள் ஜெர்மனியின்  பெய்லபீல்ட் பல்கலைக்கழக (Bielefeld University) ஆராய்ச்சியாளர்கள்.  இந்த ஆராய்ச்சி முடிவை குழு  ஐ பெர்ஸ்ப்ஷன்  (i perception)  புகழ் பெற்ற  ஆராய்ச்சி கட்டுரை இதழலில் வெளியிட்டிருக்கின்றனர்,
உலகம் முழுவதும் உள்ள ஓவியர்கள் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த ஆய்வுக்காக  ஒரிஜினலின் அளவுகளிலேயே   எடுக்கப்பட்ட மோனோலிஸாவின் படத்தை  ஒரு பெரிய கம்யூட்டர் ஸ்க்ரீனில் 2000 பேர்களுக்கு காட்டி   சோதித்திருக்கிறார்கள்.. படத்தை தலையிலிருந்து  கண்கள் வரை 15 பகுதிகளாகப் பிரித்து  வெவ்வேறு தூரங்களிலிருந்து பார்வையாளர்களைப்  பார்க்கச்செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்து சொன்னதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  படத்திலிருந்து அவர்கள் நிற்கும் தூரத்தையும் அளந்து குறித்திருக்கிறார்கள் இதன்மூலம் அவர்கள் நிறுவியிருக்கும் விஷயம் மோனோலிஸாவின் கண்கள் நேராகப்பார்க்கவில்ல. அது பார்வையாளரின் வலது புறம் தான் பார்க்கிறது. இப்படி கண்கள்  நேராகப் பார்க்காத படத்தில் மோனாலீஸா எபஃகெட் கொண்டுவர முடியாது.   இந்தப்படத்தில் அது இல்லை.. அது ஒரு வளமான கற்பனை என்பது தான். 
அறைக்குள் வருபவர்களை அவர்கள்  எங்கிருந்தாலும் மோனாலிஸா  பார்க்கிறாரோ இல்லையோ  ஆண்டுதோறும் உலகெங்கிலிருந்து வரும் அறுபது லட்சம் பார்வையாளர்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தி வெளியானதால் இந்த ஆண்டு அது  இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது  



பேனாக்களும் பேசுகின்றன



ஒருவரின் எண்ணங்களை எழுத்துக்களாக்குவதில்  பேனாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு.. பறவையின் இறகு முனை,  முனை கூராக சீவப்பட்ட கட்டைகள், பொருத்தப்பட்ட உலோக நிப்பை மையில் தொட்டு எழுதும் கட்டைப்பேனாக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சியைம்  நீண்ட சரித்திரத்தையும் கொண்டது  பேனா.  இந்த எழுதுகோல்    இங்க்கையும் நிப்பையும் ஒருங்கே கொண்ட பவுண்டன் பேனாவானது 1867ல் தான். 

ஸ்பிரிங், ரோலர், ஜாட்டர்,  ஜெல் என்று பலவிதமான  பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினரில் பலர் மைநிரப்பி எழுதும் பேனாக்களை பார்த்தே கூட இருக்கமாட்டார்கள். தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்காக,  ஒரு பொட்டுக்கூட சிந்திவிடாமல் பில்லரினால் எடுத்து  பேனாவில் நிரப்பி நிப்பில் இங்க் சரியாக வருகிறதா என்று சோதித்தபின் பூஜையில் வைத்து மாணவர்களுக்குக்  கொடுத்த  சென்ற தலைமுறை பெற்றோர்கள் கூட மறந்து போன இந்தப் பவுண்டன் பேனாக்கள் இன்னும் தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது என்பது தான் ஆச்சரியம்,
பார்க்கர், வாடர்மென், லெமி மான்ட்பிளாங்க் போன்ற உலகப் புகழ்பெற்ற  நிறுவனங்கள் இன்னும்  பவுண்டன் பேனாக்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சாதாரண பேனாக்களை மட்டுமில்லாமல் மிக விலையுயர்ந்த பேனாக்களைத் தயாரிக்கிறார்கள்  வைரங்கள் பதித்தது, தங்கம்,  வைர நிப், கையால் உருவங்கள் செதுக்கப்பட்ட பேனாக்கள். ஒவ்வொன்றிலும் தனித்தனி வண்ண ஓவியங்கள்  இப்படிப்பல வகைப் பேனாக்கள். எழுத மட்டுமில்லாமல் கலைப் பொருளாக சேர்ப்பவர்கள் இந்தப் பேனாக்களை வாங்குகிறார்கள். 

மான்ட்பிளாங்க்  என்ற நிறுவனம் மிக விலையுர்ந்த பேனாக்களைத் தயாரிப்பவர்கள். (இந்தியாவில் குறைந்த பட்ச விலை ரூ51,575)  ஆண்டு தோறும் தேசியத்தலைவர்கள், புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்கள்,  எழுத்தாளர்களை கௌரவிக்க அவர்கள் பெயர், அல்லது கையெழுத்துப் பொறிக்கப்பட்ட  “லிமிட்டட் எடிஷன்” என்று அழைக்கப்படும் பேனாக்களைக் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே  வெளியிடுகிறார்கள். மிக விலையுயர்ந்த இந்தப் பேனாக்களை  வாங்க   உலகின் கோடிஸ்வர வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி காத்திருக்கிறார்கள் .
இந்த ஆண்டு 17ஆம் நூற்றாண்டு சீன மன்னரின் நினைவாக  5 தங்கப்பேனாக்கள் மட்டும் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பேனாவின் விலை   12 கோடிக்கும் மேல்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மான்ட்பிளாங்க் நிறுவனம்  இம்மாதிரி  விசேஷ பேனாக்கள் வாங்கியவர்களை உலகின் பல பகுதிகளிலிருந்தும்  சுவிஸ்ர்லாந்துக்கு விருந்தினர்களாக அழைத்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வைத்து   தங்கள் தொழிற்கூடத்தை காட்டினார்கள். 
ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோவிலிருந்து அதிபர் ஒபாமா வரை  நினைவுப்பரிசாக லிமிட்டட் எடிஷன் பேனாக்கள் தயாரித்திருக்கும் இவர்கள்  சில  பிரச்சினைகளிலும் சிக்கியிருக்கிறார்கள்.  
2010ஆம் ஆண்டு அண்ணல் காந்தியின்  தண்டி யாத்திரையின் நினைவாக  மஹாத்மா காந்தி 241  என்ற பேனாவை வெளியிட்டார்கள். 241 என்பது அவர் தண்டி யாத்திரையில் பயணம் செய்த மைல்களைக் குறிப்பது. அந்தப் பேனாவின் தங்க நிப்பில் காந்தி கைத்தடியுடன் நடக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. பேனாவின் விலை 14 லட்சம்.
‘எளிமையான வாழ்க்கையின் சின்னமாக வாழ்ந்த காந்தியின் பெயரால் இப்படி ஒரு ஆடம்பரப் பேனா வெளியிட்டிருப்பது  அவரது கொள்கைகளுக்கு முரணாது மட்டுமில்லை அவரை அவமதிக்கும் செயல்  என்பதால் இந்த நிறுவனம் பேனாக்களை தயாரிப்பதையும் விற்பதையும் தடைசெய்ய வேண்டும்’ என கேரள நீதி மன்றத்திலும்  உச்ச நீதிமன்றத்திலும்  வழக்குகள் தொடரப்பட்டன.  மான்ட்பிளாங்க் நிறுவனம் இந்தப் பேனாக்களின் விற்பனை மூலம்  9 லட்சம் டாலர்கள்  அரசு சொல்லும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்க இருப்பதாகத் தெரிவித்தது  ஆனாலும் வழக்கை விசாரித்த  நீதி மன்றம் பேனாக்களைத்  தடைசெய்துவிட்டது.  நீதிமன்றம் தடையாணையில்  சொன்ன  காரணங்களில் ஒன்று  காந்தியின் உருவம் 1950 சட்டங்களின் படி  தவறாகப் பயன்படுத்தக்கூடாத  தேசிய சின்னம். அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தமுடியாது. என்பது.   மான்ட் பிளாங்க் நிறுவனம் மன்னிப்பு கோரி பேனாக்களின்  தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்திவிட்டது. 
அண்ணல் காந்தி நீண்ட நாட்களுக்கு  மெல்லிய கட்டையின் நுனி கூராக்கப்பட்ட மைதொட்டும் எழுதும் பேனாவைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.  மவுன்ட் பேட்டனுக்கு கூட அந்தப் பேனாவினால் தான் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் நான் எழுதும் அழுத்தத்தில் நிப்புகள் வளைந்து போகின்றன. இது வசதியாகயிருக்கிறது என்பது தான். 
ஆந்திர மாநில ராஜமந்திரியில் தங்க ஆபரணங்கள் செய்து கொண்டிருந்த கே.வி ரத்தினம் என்பவர் 1932ல் பேனாக்கள், நிப்புகள்  தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார். காந்திக்கு எபொனைட் என்ற பொருளில்(பிளாஸ்டிக் அப்போது வரவில்லை)  தாங்கள் தயாரித்த பேனாவை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார்.  அதைப்பயன் படுத்திய காந்தி அதன் நிப்பு வளையாமலும், பேனாவின் வடிவம் எழுத வசதியாகியிருப்பதாகவும் ரத்தினத்துக்குக் கடிதம் எழுதினார்.  இன்று பேனாக்களும், பால்பாயின்ட் பேனாக்களும் தயாரிக்கும் அந்த நிறுவனம் இந்தக் கடித்ததை தங்கள் ஷோரூமில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்   தன் வாழ்நாளின் இறுதிவரை ராஜமந்திரி ரத்தினம் தயாரித்தப் பேனாக்களைத்தான் காந்தி பயன்படுத்திக்கொண்டிருந்தார்.,  அந்தப்பேனாக் களில் சிலவற்றை இன்றும் காந்தி மியூசியங்களில் பார்க்கலாம்.
காந்தியைப்போலவே  ராஜாஜி  இந்திராகாந்தி  போன்ற பல தலைவர்கள் ஒரே மாதிரியான பேனாக்களைத்தான் தொடர்ந்த பயன் படுத்தியிருக்கின்றனர்.  சௌகரியமா, சென்டிமென்டா என்பது தெரியாவிட்டாலும் அந்தப்பேனாக்கள்  அவர்களின் அடையாளமாகிப்போய்விட்டது. 
கலைஞர் கருணாநிதி  பால்பாயிண்ட் உபயோகித்து இல்லை.    சென்னை பிராட்வே பகுதியில் இருக்கும் ஜெம்&கோ  விற்பனை செய்யும்  வாலிட்டி(Walilty) பேனாக்களை மட்டுமே எப்போதும் பயன்படுத்தி வந்தார். எழுதிக்கொண்டிருக்கும்போது இங்க் தீர்ந்தால் அவர் எழுதும் வேகம் தடைப்படும் என்பதால்  அருகிலேயே இரண்டு பேனாக்கள் தயாராகயிருக்கும். .சற்று கனமான பேனாவாகயிருந்தாலும் கலைஞருக்கு நெருக்கமான விஷயங்களில்  இந்தப் பேனாக்களும் ஒன்று.  இதை அவரிடமே பரிசாக கேட்டுப்பெற்றவர்களில் சிலர்  கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் இந்துமதி.
அவரது இறுதியாத்திரையின் கடைசிக் கட்டத்தில்  எப்போதும் தாத்தாவின்  சட்டைப்பையிலிருக்கும் பேனா மிஸ்ஸிங் என்பதைக்கவனித்த பேரன் ஆதித்தியா (கனிமொழியின் மகன்), ஓடிப்போய் ஒரு பேனாவை அவரின் சட்டைப்பையில் சொருகிய நெகிழ்ச்சியான காட்சியை டிவியில் பார்த்தது நினைவிருக்கலாம். 
பேனாக்கள் தனிமனித உணர்வுகளில் மட்டுமில்லை நாடுகளின் சரித்திரங்களிலும்  முக்கிய இடம்பெற்றவை.  
இந்திய அரசியல்  அமைப்புச்சட்டதின் இறுதி வடிவம்  முடிவானதும் அதன் முதல் பிரதியை அழகான கையெழுத்தில் தயாரிக்கும் பணி  பிரேம் பெஹாரி ரெய்ஸ்டா என்ற கையெழுத்துக் கலைஞருக்கு(calligraphist ) வழங்கப்பட்டது. இதற்காக பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பெரிய கெளரவமாக்கருதி  ஆறு மாத காலம் உழைத்த  இந்த  கலைஞர் அதை எழுதப் பயன்படுத்தியது வெவ்வேறு 254  பேனா நிப்புகள். இந்த நிப்புகளையும், அதுபொருத்தப்பட்ட பேனாக்களையும் டெல்லி அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
உலகின்  பல சுவையான வரலாறுகளை எழுத உதவிய கருவியான  பேனாவின் வரலாறும் சுவாரஸ்யமாகத்தான்  இருக்கிறது,



27/1/19

அலஹாபாத் அழகாகிக்கொண்டிருக்கிறது


4 நகரங்கள்,  இரண்டுகோடி. பக்தர்கள் ஒரே திருவிழா

கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும்  சங்கமிக்கும்  இடத்தில் 1580ஆம் ஆண்டு, மன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு 'இலாஹாபாத்' என்று பெயரிட்டார். பின்னர்,  அது ஷாஜகான் காலத்தில் 'அலகாபாத்' என்று மாற்றப்பட்டதாக வரலாறு  சொல்லுகிறது. இப்போது. அதன் புதியபெயர்  பிரயாக்ராஜ்:

இந்த பிரயாக்ராஜ் இப்போது மிக அழகாகிக்கொண்டிருக்கிறது. புதிய சாலைகள்,, பாலங்கள் கட்டிடங்கள் மட்டுமில்லை. எப்போதும் சற்று அழுக்காகவே இருக்கும் நகரின் பல தெருக்களின் சந்துகளின் சுவர்களைக்கூட அழகான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பெரிய அளவில்  தெய்வ, மற்றும் இயற்கை காட்சிகள் வண்ணப்படங்களுடன் ஒரு  ஓவியகண்காட்சி போலிருக்கிறது.






12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா என்ற திருவிழா இதை  ஆர்த கும்பமேளா அல்லது  பூர்ண கும்ப மேளா என்கிறார்கள்  6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது. அர்த்த கும்ப மேளா.  இந்த கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகப் புண்ணியம்  என்பதால்   பிரயாக்ராஜ் நகரின்(அலஹாபாத்) விழா மிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு அர்த்த கும்ம மேளா  ஜனவரி 15  மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில்  பக்தர்கள்,,சாதுக்கள் என 2 கோடி பேரின்   புனித நீராடலுடன் தொடங்கியிருக்கிறது என்கிறது கும்பமேளா ஆணையம். இந்த விழா மார்ச் 4ஆம் தேதிவரை  நடைபெறும்.


இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது? என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த நகரங்களில் மட்டும்  அமுதம் சிந்தியிருக்கிறது. . புராணக் கதையில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்தச் சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.. அதனால் அங்குள்ள நதியில் குறிப்பிட்ட நாட்களில்  நீராடினால் புண்ணியம் என்று நமப்ப்படுகிறது


உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும்  இந்த நிகழ்விற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்திருக்கிறது.


ஓவ்வொரு கும்ம்மேளாவிற்கும் பாதுகாப்பு, மற்றும் சுகாதார ஏற்பாடுகளுக்காக மாநில அரசுதான் செலவிடும் என்றாலும், இந்த ஆண்டு யோகி ஆதித்தனார் அரசு  4300 கோடி பட்ஜெட்டில் திட்டங்களை உருவாக்கிக் கடந்த ஆண்டு முழுவதும் 1000 கணக்கான அதிகாரிகளுடன்  அதைச்செயலாற்றிக்கொண்டிருக்கின்றது புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், 6 வழிச்சாலைகள் மேம்பாலங்கள் என்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நகரம் முழுக்க சாலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன, மேம்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. மேளா நடைபெறும் பகுதிக்குள் 300 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் நகரம் முழுக்க பெரிய கார் நிறுத்தும் வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட ‘கும்ப்நகரி' என்ற தற்காலிக  பெரிய  கூடார நகரம் உருவாக்கப் பட்டுள்ளது.  பாதுகாப்பு தேவைகளைக் கையாள்வதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. விழா நாட்களில்  நகரில் அசைவம் சாப்பிட  அனுமதியில்லாதால் . இவர்களுக்கும்  அனுதியில்லை 
•ஏழு வார காலத்திற்கு நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழாவில் 2 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு வந்த ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

இந்த கும்மமேளாவிற்காக  இமயமலைப்பகுதிகளிலிருந்து சாதுக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்களில்  பல குழுக்கள். பிரிவுகள். அரை ஆடைஅணிந்தவர்கள்,, அதுவுமில்லாதவர்கள்  ஆயுதங்களுடன், வாதியங்களுடன்  இப்படி பலவகையான குழுக்கள். இவர்கள் கங்கைக்கரையிலேயே 50 நாளும் தங்கிவிடுவார்கள்.


இவர்கள் தங்க வசதியாக தனித்தனிக் கூடாரங்கள்,  அதில் மின் வசதி நீண்ட வரிசையில்  டாய்லெட்கள். சுத்தமான குடி நீர்  போன்ற எல்லா வசதிகளையும்  செய்திருக்கிறார்கள்.  இந்த சாதுகளுக்கும், மதம் சார்ந்த குழுவினர்களுக்கும்  அவர்களே உணவு தயாரித்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்காகவே  முகாமில் 160 நியவிலைக்கடைகள். இதில் மத முகாம்களுக்கு இலவசம். மற்ற பத்தர்களுக்கு நியாவிலையில்  அரிசி கோதுமை மாவு சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்காகத் தற்காலிக ரேஷன் கார்ட்கள் தரப்பட்டிருக்கின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கான சப்ளைகளைத்தர உள்ளேயே ஒரு கோடவுனுமிருக்கிறது.


100க்குமேற்பட்ட மருத்துவர்களுடன் 10 சிறு மருத்தவ மனை  எக்ஸ்ரே எடுக்கும் வசதிகள், பல் மருத்துவர்கள்,  தவிர 80 ஆயுர்வேத மருத்துவர்களும் தயாராக யிருக்கின்றனர். இவர்களைத்தவிர 80 ஆம்புலன்ஸ்கள்   நதியையில் மிதக்கும் 9  ஆம்புலன்ஸ், ஒருவிமான ஆம்புலன்ஸ்  எல்லாம்  அவசரத்தேவைகளை  சமாளிக்கக் காத்திருக்கிறது..



இம்முறை உபி   முதல்வரின் நேரடிப் பார்வையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அமைச்சர்களும், பல விஐபிகளும் விழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..

வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு  கூடாரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்தச் சொகுசு குடில்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை கட்டணம் 

சுருக்கமாகச் சொல்வதானால் கும்மமேளாவிற்காக அலகபாத் நதிக்கரையில்  சகலவசதிகளுடன் ஒரு நகரையே நிர்மாணித்திருக்கிறார்கள்..


கும்பமேளா காலத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடியவர்களுக்குப் புண்ணியம் சேருகிறதோ என்னவோ  அலஹபாத் நகரம்   இப்படி ஒரு புதிய பெயருடன் புதுப்பொலிவைப்பெற  நிச்சியமாகப் புண்ணியம் செய்திருக்கிறது

கடவுள்களாக வாழும் கலைஞன்



இன்று  நம் மனதில் பதிந்திருக்கும்,வழிபடும் சரஸ்வதி, லஷ்மி முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களை இந்த உலகுக்கு அந்த வடிவில் அறிமுகப்படுத்தியவர் இராஜா ரவிவர்மா.
தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருப்பதாகச்   சொல்லப்படும் இந்த ஓவியனின் அத்தனைப் படைப்புகளைப் பற்றிய விபரங்கள் இன்று ஒரே இடத்தில் இல்லை. மஹாபாரதம், இராமாயணம், புராணக்கதை மாந்தர்களைத்தவிர அவர் எண்ணற்ற படங்களை  வரைந்திருக்கிறார். அவை இவர் பெயர் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல அரண்மனைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சாகுந்தலம் போன்ற காவியத்தின் காட்சிகள் இவரது ஓவியங்கள் மூலம் கவிதைகளாயின.  இவர் வரைந்த பெண்களின் கண்கள் உணர்ச்சிகளை மட்டுமில்லை,அந்த உருவங்களும் பெண்ணின்உடல் மொழியைப் பேசின.  இவரது ஓவியங்களில் அந்த இடத்தின் சூழல், அணிந்திருந்த ஆடைகள், தரை, சுவர் ஒளி நிழல் என எல்லாம் மிக நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும்.  அழகான பெண் என்றால் அவர் ரவி வர்மாவின் ஓவியம் போல என வர்ணிக்கப்பட்டார். இதை வரைய எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்ற எண்ணவைக்கும் பல படங்களை இவர் சிலமணி நேரங்களில் வரைந்து தள்ளியிருக்கிறார். அதனால் தான் வாழ்நாளில் அத்தனை படங்களை வரைய முடிந்திருக்கிறது.

திருவனந்தபுரம் அருகிலிருக்கும் கிளிமானுர் ஒரு சின்ன ஜமீன். அன்றைய திருவிதாங்கூர் ராஜ வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்ற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் 1848ல் பிறந்தவர் ரவி வர்மா. மிகச்சிறு வயதிலேயே கிளிமானுர் அரண்மனைச்சுவர் முழுவதும் கரித்துண்டால் படங்களாக வரைய முயன்றுகொண்டிருந்த இவரின் ஆர்வத்தையும் ஓவியத் திறனையும்  கண்டுபிடித்தவர் இவரது மாமா ராஜா வர்மா. அவரது ராஜா பட்டம் தான்  மறுமக்கத்தாயம் என்ற தாய்வழி மரபுப்படி பின்னாளில் இவரை  அடைந்தது.

மாமா  ராஜ ராஜா  வர்மாவே ஒரு ஓவியராக இருந்ததால், ஓவியத்தில் மிக ஆவர்வம் கொண்ட மருமகனை திருவிதாங்கூர்  மன்னர்  ஆயில்யம் திருநாளிடம்  14 வது வயதில் ஒப்படைத்தார். அங்கு அரண்மனை  ஓவியராக இருந்த தமிழர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் கற்றபின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடம் தைல வண்ண ஒவியநுணுக்கங்களை கற்றார். உலகம் வியந்த இந்தக் கலைஞனுக்கு குருவாகயிருந்தவர்கள்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.



திருவிதாங்கூர் மன்னரின் ஆதரவுடன்.   இளம் வயதிலேயே இவரது படங்கள் வெளிநாட்டு ஓவிய கண்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது  ஓவியத்தில் தீராத ஆர்வம் கொண்ட ரவி வர்மா ஒரு காலகட்டத்துக்குப்பின் தானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அந்தக் காலகட்டத்தில் இந்திய ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ணங்களை ஓவியங்களில் பயன்படுத்தி வந்தனர் அந்த உத்திகளைத் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர்  1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
 தேடித்தேடிச் சேகரித்த ஐரோப்பிய ஓவியங்கள், புத்தகங்கள் இவருக்கு உதவின.  வண்ணங்களின் கலவை, ஓவியத்திலிருக்கும் உடல் பரிமாணம் இவைகள் தான் ஒரு ஓவியத்தின் கலைநயத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்த ரவி வர்மா அதை தன் ஓவியங்களில் ஐரோப்பிய முப்பரிமாண ஓவியப்பாணியை புகுத்தி தனக்கென ஒரு ஓவியப்பாணியை உருவாக்கிக்கொண்டார்.  முதல் முறையாக இந்திய ஓவியங்களில் முப்பரிமாணத்தில் கடவுளர், இதிகாசக்காட்சிகள் தைல  ஓவியங்களாயின.

 10 ஆண்டுகளுக்குமேலாக தன் கிளிமானூர் அரண்மனையிலேயே படங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருந்த ரவிவர்மாவுக்கு  பரோடா மன்னர். சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும்  மிகப்பெரிய அரண்மனையின்  கூடங்களை ரவி வர்மாவின் ஓவியங்களால்  அலங்கரிக்க விரும்பினார்.. அதற்காக அந்த அரண்மனையில் 10 ஆண்டுகள் தங்கி ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தின் அழைப்பு. இப்படி மன்னர்கள், பிரபுக்களின் ஆதரவுடன் அவர்கள் படங்களையும் ,ஆங்கிலேயே அதிகாரிகளையும் வரைந்து கொண்டிருந்தாலும், அவரது சில சிறந்த படைப்புகள் அரண்மனைகளில்தான்  பிறந்தவை என்றாலும்  தன் படைப்புகள் சதாரண மனிதர்களை அடையவில்லையே என்ற ஆதங்கம் ரவி வர்மாவுக்கு இருந்தது.  அப்போது அவருக்கு எழுந்த எண்ணம் தான் அன்று ஜெர்மனியில் அறிமுகமாயிருந்த கான்வாஸில்  . வரைந்த ஓவியங்களை அதே வண்ணங்களுடன் காகிதத்தில்  அச்சிடும்  முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தன் படங்களை அச்சிடவேண்டும் என்பது.
தன் சேமிப்பு அனைத்தையும் மூதலீடு செய்து 1894ல் பம்பாயில் ஒரு அச்சகத்தைத் நிறுவினார்.அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல்  ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்.



 அழகான படங்கள் நிறைய அச்சிடப்பட்டும் அச்சகம் லாபத்தில் இயங்கவில்லை. 1896ல் அதை புனா அருகிலுள்ள ஒரு சின்ன நகருக்கு   மாற்றியும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது அந்த அச்சகம்.  அச்சு இயந்திரங்களை நிறுவியபோது அவரிடம் பணியிலிருந்த ஜெர்மனியாருக்கே அதை விற்றுவிட்டு தனது ஊரான கிளிமானுருக்குத்   வருத்தத்துடன்  திரும்பிய  இந்த ஓவிய மேதையின் இறுதிக்காலம் ஒரு மோசமான ஓவியத்தைப்போலத்தான் இருந்தது.



ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று பிரபல ஓவியர்களைச் சந்திக்க வேண்டும்  என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை.  அந்த நாட்களில் கடல் தாண்டி பயணம் செய்தால் திரும்பியபின் கோவில்களுகச் செல்லும் உரிமை தடை செய்யப்படும்  என்ற சமூக நிராகரிப்பைச் சந்திக்கவிரும்ப வில்லை அவர்..
அச்சகத்தை வாங்கியவருக்கு தன் கடவுளர் படங்களை அச்சிடும் உரிமையைக்கொடுத்திருந்தார். அதன் விளைவாகத்தான் கடந்த நூற்றாண்டில் காலண்டர்களாகப் பிறந்து பல இந்துக்குடும்பங்களின்  பூஜை அறையில் தெய்வங்களாக இடம்பெற்றிருக்கிறது இவரது ஓவியங்கள்.

எல்லா நல்ல கலைஞர்களைப்போல பாராட்டுகளுடன் கண்டனங்களையும் சந்தித்தவர் ரவி வர்மா.. மேற்கத்திய பாணியைப்புகுத்தி நம் பாரம்பரிய சித்திரகலையைச்சிதைத்துவிட்டார்,  நமது தெய்வங்களை கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் இந்திய  கலாச்சாரத்தின் வெளிப்பாடற்றவை என்று விவேகானந்தரும், இந்திய ரசனையையும் அதன் கலைப்பண்பாட்டையும் தரம் தாழ்த்தியவர் என்று அரவிந்தரும்  எழுதியிருக்கிறார்கள்.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் சாமானிய மனிதனை ஓவியங்களை ரசிக்க வைத்த கலைஞன் அவன். .இன்றைக்கும் ஓவியராக விரும்புவர்களுக்கு  ஆர்வம்  ரவி வர்மாவின் படங்களிலிருந்துதான் துவங்குகிறது.

ஒரு நல்ல கலைஞனின் படைப்பு காலத்தால் அழிவதில்லை என்பதற்கு, ரவி வர்மா  இறந்து 100 ஆண்டுகளுக்குப்பின்னரும் அவரது படங்கள்  இன்றும் பேசப்படுகின்றன என்பதே சாட்சி.              

அதிரடி 10% இட ஒதுக்கீடு அவசியமா? அரசியலா? – ஓர் அலசல்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜாதி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியைக் காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்சாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையநீண்ட நாட்களாக முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு  அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு. நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து, அதில் அமைச்சரவை முடிவுக்கு, ஏற்றாற்போல  நமது அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இதன்மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 60% ஆக அதிகரிக்கப்படும். ஏற்கனவே நம் நாட்டில்  சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கும்  முறையும் அமுலுக்கு வருகிறது. 
மிக முக்கியமான இந்தச் சட்ட திருத்தத்தை அதிரடியாக கொண்டுவந்தது பாஜக அரசு. முதல் நாள் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்த முடிவு. அவசர, அவசரமாக  மறு நாள் மாலை சட்ட வடிவம் பெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் இதற்காக இரண்டுநாள் சிலமணி நேர நோட்டிஸில் நீடிக்கப்பட்டது. 
.மக்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக 3 வாக்குகளும்,மாநிலங்களவையில் 7 வாக்குகளுமே பதிவாகின. காங்கிரஸ் இத்தகைய ஒதுக்கீட்டைத் தனது தேர்தல் அறிக்கையிலேயே முன் வைத்திருந்தது. கம்யூனிஸ்ட்களும் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லை என்பதால் ஆதரித்தார்கள்.. ஆம் ஆத்மி  திருணாமூல், இடதுசாரிகள்,  ஆதரித்து வாக்களித்திருக்கின்றன, அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் மட்டுமே மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன..இதில் அதிமுக எதிர் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதாவது பெருவாரியான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன‌.  இந்த பல கட்சிகளின்  ஆதரவு நிலையை எதிர்பார்த்து பாஜக  திட்டமிட்டிருப்பது அவர்களின் சாணக்கியம். 

  10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படாது, சபைகள் விடாது, எதிர்க்கட்சிகள் இம்மாதிரி விஷயங்களை ஆதரிக்காது என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்., ஆனால் ஆதரித்து  வாக்களித்த  எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறவே பாஜக அரசு அவசரமாக இந்த நேரத்தில் மசோதாவைத் தாக்கல் செய்கிறது எனக் குற்றம்சாட்டின. ‘இது நள்ளிரவு வழிப்பறி’ என ராஷ்டிரிய ஜனதா தளம் சொல்லுகிறது. , ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்தான். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த உடனேயே இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதுதான் கேள்விக்குறி. இந்த விஷயத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் விதத்தைத்தான் கேள்வி கேட்கிறோம். என்கிறது காங்கிரஸ்.
‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறது. முந்தைய அரசுகளால் நாடாளுமன்றத்தில் சரியான முறையில் இந்த விவகாரம் கையாளப்படாததால் தோல்வியில் முடிந்தது. இந்த மசோதா மூலம் 95 சதவீத மக்கள் பயனடைவார்கள்’’ என்கிறது பாஜக.


.எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல், எந்தப்புள்ளிவிவர தரவுகளும் இல்லாமல் இப்படி  மசோதாவை  அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது  நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடாளுமன்றவிவாதத்தில் குரல் எழுப்பினாலும் அவர்கள் ஆதரவு வாக்களித்தார்கள். காரணம்,அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டைச் செய்வோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது தான்.  ஆதரவு ஓட்டளிக்காவிட்டால் பஜகா அதை  எதிர் வரும் தேர்தலில் தங்களுக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் என்ற நிலை. தான் காரணம்.  இதை எதிர்பார்த்து பாஜக சாதுரியமாக காய்களை  இறுதி நேரத்தில் நகர்த்தி ஆட்டத்தில்  வென்றிருக்கிறது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டால்  உடனே இது சட்டமாகும். 
இரவு வரை நீடித்த பாராளுமன்ற கூட்டத்துக்குப் பின் பிரதமர்  இது இந்திய  சமூக நீதி வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று ட்விட் செய்திருக்கிறார்.  
இந்த நள்ளிரவு காட்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன

ஏன் இந்த அவசரம்?

விவசாயிகள் போராட்டம்', `பெட்ரோல், டீசல் விலையேற்றம்', `ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு' என மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசைக் குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் நடந்த மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த  பாஜக.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதில் . மிகவும் தீவிரமாக இருக்கிறது.  அவர்களின் கட்சி ஆய்வின் படி மாநிலங்களில் அவர்களுடைய வாக்கு வங்கி சரிந்ததற்கு காரணம்  பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்பலர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்கு  10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை உடனடியாக கொண்டுவந்து சட்டமாக்கிவிட்டது. இதைத்தான் பாஜக அரசு எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்று ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த சட்டத்திருத்தத்தினால் இப்போது நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா? 
பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படவில்லை. இந்தத் திருத்தம் இப்போதிருந்ததுவரும் வரும் இட ஒதுக்கீடு முறைக்கு.   மாற்று இல்ல.. அது தொடரும். மேலும்  சட்ட வரைவில்." in addition to existing reservations and subject to a maximum of 10 percent of the total seats in each category" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்கும் பெரும்பாலான பார்ப்பனருக்கு   உதவ இந்தத் திருத்தம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே
ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத நிலையில்  இதை தமிழககட்சிகள் . அரசியலாக்க முயற்சிக்கின்றன. பொதுப் பிரிவில் 40க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. அவற்றில் சில: பார்ப்பனர்கள், தாக்கூர்கள் (என்ற ராஜபுத்திரர்கள்) ஜாட்கள், மராத்தாக்கள், பூமிகார்கள், பனியாக்கள், கம்மாக்கள், கப்பூக்கள் எனப்பல சாதிகள் இருக்கின்றன. அனைவருக்கும் பலன் கிடைக்கும் தமிழகத்தில் . பார்ப்பனர்களின் எண்ணிக்கை  மூன்று சதவீதத்திற்கும் குறைவு

இது அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நீண்ட நாட்களாக அரசியல் கட்சிகள் அறிவித்துச் செய்ய முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம் என பாஜக இதைச் சாதனையாகப் பேசும். வட மாநிலங்களில் இந்த சட்டத்திருத்தம் பிரசாரம்  அவர்களுக்குப்  பலனளிக்கலாம்.  ஆனால்  தமிழகத்தில்  இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமூக நீதி  உரிமைகளுக்கு முரணானது என்ற நிலையைத்  திராவிட கட்சிகள்  எடுத்திருக்கிறது.  அதனால் .  அதிமுக வுடன் கூட்டணியை விரும்பும்  தமிழக பாஜக  இதனால்  பெரும் நெருக்கடியைச் சந்திக்கும்.
சட்ட சிக்கல்கள் வருமா? 

இந்தச் சட்டத்திருத்தம் , அரசியலமைப்புச் சட்டம் 15 (4) (இடஒதுக்கீடு தொடர்பானது) பிரிவில் சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்கள் என்பதோடு, பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்கிற பிரிவும் சேர்க்கப்படுகிறது.  மிக முக்கியமான இந்த சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில்  அதை  எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
 கட்சி வழக்கறிஞர்கள் இதை எப்படிப்பார்க்கிறார்கள்?
``இது, வட இந்திய உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகம். நான்கரை ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத இதுபோன்ற இட ஒதுக்கீடு தேவை இப்போது ஏன் வந்தது? இது முற்றிலும் தவறானது; சமூக நீதிக்கு எதிரானது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே தவறு. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது நிலைக்காது. 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சத விகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. முதல் நாளில் அமைச்சரவையில் நிறைவேற்றி, மறுநாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரிய விவாதம் எதுவுமின்றியே நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. அடைந்த தோல்விதான் இத்தகைய மசோதாவைக் கொண்டுவரக் காரணம்.. பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என அளவுகோல் வைத்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவர நேரிடும். இது ஆபத்தாகிவிடும்  1951-ம் ஆண்டு இட ஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தந்தை பெரியார் தலைமையில் 3 லட்சம் பேர் அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராடித்தான், முதலாவது சட்டத் திருத்தத்தைப் பெற முடிந்தது. ஆனால், இன்று முற்பட்ட வகுப்பினர் கேட்காமலேயே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தப் பிரச்னையில் மௌனம் காத்து வருவது தவறான முன்னுதாரணமாகி விடும். சமூக நீதி பேசுவதாகச் சொல்லிக்கொள்கிற பி.ஜே.பி., குறுகிய கால வாக்கு அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பவாத முடிவுதான் இது" உச்ச நீதி மன்றம்  இதை ஏற்காது தடை செய்யும் வய்ப்பு அதிகம் . என்கிறார்  பட்டாளி மக்கள் வழக்கறிஞர் திரு பாலு

பாஜக. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.டி. ராகவன், 
``அனைவருக்குமான வளர்ச்சி என்கிற முழக்கத்தோடுதான் பி.ஜே.பி. அரசு, அனைத்துத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இத்தகைய இட ஒதுக்கீடு பற்றி ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மேலும், 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை செய்யக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) பிரிவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி பொருளாதாரம் என்பதையும் சேர்த்துள்ளோம்.
எனவே, `பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று கூறி, நீதிமன்றம் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் நரசிம்மராவ் ஆட்சியில் வெறும் அரசு உத்தரவாக அது கொண்டு வரப்பட்டது. தற்போது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால் சட்டப்பூர்வமாக அதற்கு மதிப்பு அதிகம். அரசியலமைப்புச் சட்டம் தற்போது 124-வது முறையாகத் திருத்தப்படுகிறது. அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் நீதிமன்றம் ரத்து செய்துவிடவில்லையே. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தையும் நீதிமன்றம் தடை செய்யாது என நம்புகிறோம்.

விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’

உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு  இந்த வழக்கை அனுமதித்து விவாதங்களைக்கேட்டுத் சமூக நீதியுடன் சம நீதியும் வழங்குவது  சரியா என்ற  தீர்ப்பை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வழங்கும் என்பது நிச்சியமில்லை.   ஆனால்  அரசியில்  கட்சிகள்  தேர்தலில் இந்தத் தீர்ப்பை அரசியலாக்கும் என்பது மட்டும்  நிச்சியம்.
ரமணன்

    


விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’