பயணங்களில் பார்த்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணங்களில் பார்த்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24/4/11


அமைதியின் ஓசை கேட்கிறது இங்கே ......
திருவண்ணாமலையிலிருந்து பங்களூரு செல்லும்  பரப்பான  சாலையிலிருக்கும் அந்த இடத்தில் நுழைந்தவுடனேயே   அமைதியும்  பசுமை சூழலும் நிறைந்த ஒரு அழகான கிரமத்திற்குள் வந்து விட்டதைப்போல உணர்கிறோம்.  வாயிலில் நிழல் பரப்பி  நிற்கும் அந்த வயதான வேப்ப மரம் பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போல நம்மையும் பார்த்து மெல்ல தன்  இலைகளை அசைக்கிறது. ஒருபுறம் அலுவலகங்களும், புத்தகசாலையும் மறுபுறம் உயர்ந்த தென்னைகளுடன் பசுஞ்சோலையாக பரந்து கிடக்கும் தோட்டம்.கீரிச்சீடும் பறவைகள், மற்ற இடங்களில் அபூர்வமாகவே காணப்படும் வெள்ளை மயில்கள்.  இடையிலிருக்கும் அநத அகன்ற பாதையை கடந்து கோவிலாகாவே நிறுவபட்டிருக்கும் ரமண மகரிஷிகள் வாழும் சமாதியை தரிசிக்க  செல்கிறோம்  இடது புறமுள்ள  அந்த ரமணர் சன்னதியின் வாயிலுக்கு  நுழையும்  முன் அந்த காட்சி  நம்மை மெய்மறந்து நிற்க செய்கிறது.
பவித்தரமாக போற்றி பாதுகாக்கபடும் ஆஸ்ரமத்தின் பழைய கட்டிடங்களுக்கும் தென்னங்கீற்றும் வைக்கோலும் மேற்கூரையாக பரப்பிய எளிமையான விருந்தினர் விடுதிக்கும் இடையே பளீரென்று தெரியும் திருவண்ணாமலயின் தரிசனம்.  அந்த தெய்வ மலை  நம்மை கூப்பிட்டு நிற்க வைத்து ஆசிர்வாதம் செய்வதைப்போல ஒரு சிலிர்ப்பு. ரமணர்  சிலகாலம் வாழ்ந்த விருபாட்ச குகை இருந்த அந்த புனித மலையையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் பக்கதர்களுக்கு இந்த தரிசனம் ஒரு பாக்கியம்.
கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சலவைக்கல்தரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட  ஹாலின் மறு முனையில் மகரதபச்சை வண்ணத்தில்  வெள்ளைபூக்களுடன் கம்பீரமாக நிற்கும் மண்டபம். நடுவில் மீளாத்தூக்கத்திலாழ்ந்த ரமணரின் பூத உடல் அன்னை பூமிக்கு சமரிபிக்கபட்ட இடத்தில் எழுப்பட்ட மேடை. தாமரைஇதழ்களின்  நடுவில் லிங்கம்.  பூஜிக்கபடும் அதை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்ப வசதி. அந்த பாதையில்  ஒளியுட்டபட்ட ரமணரின்  வண்ணப் படஙகள்.  அமைதி ஆக்ரமித்திருக்கும் அந்த பெரிய மண்டபத்தில்  ஆங்காங்கே   கண்மூடி பிரார்த்தனையில்   பக்தர்கள்.பல வெளிநாட்டினர்.
அருகில்  பகவான் ரமணர் தன் தயாருக்கு எழுப்பிய ஆலயம்.ஆகமவிதிகளின் படி எழுந்திருக்கும் அந்த ஆலயத்தின் பளீச்சென்ற தூய்மை  அதை பேணுகிறவர்களின் நேசத்தைப் பேசுகிறது. ஆலயத்தின் முகப்பில் பகவான் வாழ்ந்த காலத்தில் வந்தவ்ர்களை சந்தித்த கூடம்.  நடுவே அவர்  அங்கு அமர்ந்திருந்த  நிலையில் எடுத்த படம். அருகில் தியானம் செய்யும் நிலையில் சிலையாக ரமணர், அந்த கண்களில் தெரியும் தீட்சண்யம் நம்மை தாக்குகிறது.  தொடர்ந்து பலர் வந்து தரிசித்து கொண்டிருப்பதினால் அங்கே  எழும்   ஒசைகளினாலும் அசைவுகளினாலும் சற்றும் பாதிக்படாமல் தியானத்திலிருக்கும் சிலர். மெல்ல கோவிலின் வெளிச்சுற்று பாதையில்  நடந்து வரும் நம்  க்ண்ணில் படும் பெரிய மலர்தோட்ட்த்தின் நடுவே அந்த குளமும் அதன அசையாத  நீரில் பிரதிபலிக்கும் அண்ணாமலையின் தோற்றமும் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. பாதை இட்டு செல்லுமிடம் முகப்பில் ஓட்டு கூரையிட்ட  தாழ்வாரத்தினுடனிருக்கும் தியான அறை.  பகவான் வாழ்ந்த காலத்தில் பல நாட்கள் பல மணி நேரங்கள் தியான செய்த பழைய அறை.  சிறிய சதுர கறுப்பு கடப்பா கற்கள் பதிக்கபட்ட அந்த தரை அப்போதுதான் கழுவிவிட்ட்துபோல சில்லென்றிடுக்கிறது. அறையின் ஒரு மூலயில் கால்நீட்டி அவர் அமர்ந்திருந்த அதே சோபாவில் இன்று அந்த நிலையில் பகவானின்  பெரிய படம். நம்முடன் பேசுவதுபோலிருக்கிறது. வெளிச்சம் சற்று குறைவாகயிருக்கும் அந்த அறையில் தியானம் செய்யும் பலர். சிலையாக சமைந்திருக்கும் வெளிநாட்டு பெண்மணி. எவரையும் தியானம் செய்ய தூண்டும் அந்த சூழ்நிலையில் நாமும் சிறிது நேரம் முயற்சிக்கிறோம்.  நம் சுவாசத்தின் மெல்லிய  ஒலி கேட்குமளவிற்கு அமைதி. ஆழ்ந்த மெளனத்திற்கு அழைத்துபோகும் அந்த சீரான ஓசை அந்த நேரத்தில் அந்த இட்த்தில்  எற்படுத்திய  நிச்சலனத்தையும் நிம்மதியையும் உணர்ந்தால் தான் புரிந்த கொள்ளமுடியும்.
தியான அறைக்கு வெளியே சிறிய தோட்டத்தில் ஆடாமல் மெல்ல நடைபழகிக்கொண்டிருக்கும் மயில்கள். தோகைவிரித்து அது ஆடாதா என் காத்திருக்கும் சிலர். மரங்களில் மெள்ள பேசும் கிளிகளை துரத்தும் குரங்குகள். தோட்ட்தின் ஒரு பகுதியில், நம்  புருவத்தை உயர்த்தசெய்யும் சில விலங்குகளின் சமாதிகள்.   பசு லஷ்மி, நாய் ஜாக்ஸன் என்று பகவான் ரமணர் வாழ்ந்த காலததில் அவருடனே சுற்றிகொண்டிருந்த இவர்கள்  அண்ணாமலையில்  வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்.
அருகில்   “போஜனசாலை.  என நீல எனாமல்போர்டில்  பதிபிக்கபட்டிருக்கும்  வார்த்தைகள் அவை தமிழ் வார்த்தைகளாக கருதபட்ட காலத்தில் எழுந்த கட்டிடம் அது எனபதைச் சொல்லுகிறது. பரந்து விரிந்திருக்கும் அந்த கல் கட்டிட கூடத்தில்  சுவர் முழுவதும் படங்கள். அதில் ரமணர் வாழ்ந்த காலத்திலிருந்த அரசியல் பிரமுகர்களை  அரசர்களை காணமுடிகிறது. கூட்த்தின் நடுவில் பகவான் சாப்பிடும் நிலையில் ஒரு படம்.  தரையில் அமர்ந்து  தையல் இலையில் பரிமாறப்படும்  எளிமையான, சுவையான சாப்பாட்டை பிரசாதமாக எற்கிறோம்.
காலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெரும் இந்த ஆசரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தபடுவதில்லை. அரசியலில் சிக்கலான நேரத்தில்  இந்திரா காந்தி  இங்கு வந்திருக்கிறார்.  வருகையைத்தெரிவித்து வரும் அன்பர்களுக்கு அருகிலுள்ள வசதியான கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கும் வசதியும் ஆஸ்ரமத்தில் உணவும் அளிக்கபடுகிறது. கட்டணமாக எதுவும் வசூலிப்பதில்லை. கொடுக்கும் நன்கொடைகள் மற்றுமே எற்றுகொள்ளபடுகிறது.   “ நாங்களாக யாரிடமும் ஆஸ்ரமத்திற்கு நன்கொடைகள் வேண்டுவதில்லை. சில நாட்கள் லட்சகணக்கில் பணம், எதுவுமே இல்லாத சில நாட்கள்  என  இருந்தாலும் பகவானின் அருளினால் இடைவிடாது  ஆஸ்ரமத்தின்  பணிகள் சீராக  இயஙகுகிறதுஎனகிறார் இதன் தலைவர். திரு, வி.எஸ் ரமணன்.  இவர் பொதுத்துறையில் உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். ஐரோப்பா,கனாடா,ஆஸ்திரேலியா என பல நாடுகளில் அன்பர்களால் வழிபாடுமையஙகள் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு. அமெரிகாவில் மட்டும் 20க்குமேல் மையங்கள்.  நவீன தொழில் நுட்பத்துடன் ஜெர்மனி நாட்டு ஆஸ்ரம அன்பர்கள் இங்கு நிறுவியிருக்கும் ஆவண காப்பகம்,அவற்றை இணயத்தில் இ லைப்ரரியில் பார்க்க வசதி, தமிழ்,ஆங்கில,  ஐரோப்பியமொழிகளில் புத்தகங்கள் நிறைந்த நூலகம், புத்தகங்கள் சிடிக்கள் டிவிடிகள் தயாரிக்கும் வசதியுடன்  பதிப்பகம், விற்பனை நிலையம் எல்லாம் எந்த விளம்பர சத்தமும் இல்லாமல், வெளியே ஒரு போர்டு கூட இல்லாமல் அமைதியாக இயங்குகிறது. பயணம் செய்யும் பல இடங்களில் நாம் தங்குவது உண்டு.  அவற்றில் சில இடங்கள் நம் மனதில் தங்கிவிடும்.  திருவண்ணாமலை ரமணாஸ்ரம். அதில் ஒன்று.



19/9/10

எரியும் திரியின் பின்னே..


எரியும் திரியின் பின்னே..


அருப்புகோட்டை நகரின் தெற்கு தெரு. மாலை நேரம். அன்று மின்வெட்டில்லை ஆனாலும் இருட்டு.
பற்ற வைத்துவிட்டு பரபரவென்று நாம் ஓடிவருவதற்குள் சரசரவென்று தங்கப் பொறியாக நகர்நது பலத்த ஒசையுடன் கிளம்பி வானில் ஒளிப்பூவாய் சிதறும் பட்டாசுகளின் திரிகளின் பிறப்பிடம் அது. இருண்டு கிடக்கும் சிமிண்ட் பூசாத செங்கல்சுவர்களும் ஓட்டுகூரையுமாகயிருக்கும் சின்ன சின்ன வீடுகள். ஒருகாலத்தில் நெசாவளார் வீதியாகயிருந்தது, இன்று ஒரு தறி கூட கிடையாது. மிகக்குறுகிய அந்த தெரு முனைகளில் குவியல்களாக திரி நூல்கள். கந்தக வாசனை.. குடும்பம் முழுவதும் குனிந்த தலை நிமிராமல் பிசியாகயிருக்கிறது. தெரியாதவர்கள் அனுமதிக்கபடாத அந்த தெருவில்நுழைந்த நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் கண்களும் உயரும் புருவங்களும் உடன் வரும் அவர்களின் தலைவர் களின் நண்பரை பார்த்ததும் அமைதியாகின்றன.
மிகமிக ஆபத்தான இந்த பட்டாசு திரி தயாரிக்கும் தொழில், இங்கே 100 வீடுகளில் எந்த அனுமதியுமில்லமல் திருட்டுதனமாக இருட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய நெருப்பு பொறி பட்டால் கூட பெரும் விபத்தாகவிடக்கூடிய அபாயமிருப்பதால் வீடுகளில் சமையல் கிடையாது, பூஜை விளக்கு கூட கிடையாது.. கார்கள் கூட போக முடியாத இந்த தெருக்களில் தீயனைக்கும் வண்டிகள் நுழைவதை நினைத்துகூட பார்க்கமுடியாது.
இந்தியாவின் பட்டாசு நகரமான சிவாசியில் பட்டாசு திரிகள் தயாரிக்கபடுவதில்லை. ஒரு சில பெரிய நிறுவனங்களில் மட்டும் இதற்கு தனி பகுதி வைத்திருக்கிறார்கள். மற்ற ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இங்கிருந்துதான் திரி போகிறது. பொட்டாசியம் நைட்டிரேட், கந்தகம், மற்றும் கரித்தூளில் தோய்த்த கருப்பு நூலும், மெல்லிய பேப்பரும் இவர்களுக்கு வழங்கபடுகிறது. அதை 3 மீட்டர் நீளத்திற்கு வெட்டி டேப்பாக வரும் பேப்பரை அழகாக அதன்மீது சுற்றய பின் ஆண்கள் அதை பெண் தொழிலாளிகளிடம் தருகிறார்கள். அவர் அதை தன் வெற்று தொடையில் திரித்து அளவான திரியாகாக்கி அடுக்கிறார். இந்த வெடி மருந்து பொருட்கள் இப்படி வெற்று உடலில் படுவது ஆபத்து என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதற்காக பவுடராக அரைத்த கரியை பூசிக்கொள்கிறார்கள். அது இன்னும் எவளவு பெரிய ஆபத்து எனபது அவர்களுக்கு தெரியவில்லை. 1500 திரி தயாரித்தால் கூலி 150 ருபாய்கள். வாரத்திற்கு 800 முதல் 1000வரை ஒரு குடும்பம் சம்பாதிக்கிறது. சீஸன் நேரமாதலால் ஓவர் டைம் வேலை செய்கிறார்கள். சில தெருக்கள் தள்ளியிருக்கும் உறவினர்களுக்கும் வேலை கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் பட்டாசு தொழிலில் நிகழும் விபத்துகள் பற்றி கேட்டால் இதுவரை திரி தயாரிப்பில் எதுவும் நடக்கவில்லையே என்கிறார்கள். ஆனால் தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத இவர்களில் சிலருக்கு இது அனுமதியில்லமல் சட்டவிரோதமாக செய்யபடும்தொழில் என்பது தெரிந்திருக்கிறது. “இங்கு போலீஸ், மற்ற அதிகாரிகள் வரமாட்டார்கள்.எங்கள் தலைவர்கள் பார்த்துகொள்வார்கள்” என்று சொல்லும் இவரகளின் இந்த தொழில் இரண்டு பெரிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் ஆசியுடன் இயங்குகிறது. தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள். தமிழகத்தின் மிக முக்கிய ஓட்டு வங்கிகளில் ஒன்று அதை இழக்க எந்த கட்சியும் தயாரில்லை
பலஆண்டுகளாக பலருக்கு வேலைவாய்ப்பு தரும், இருட்டில் திருட்டுதனமாக நடைபெறும் இந்த தொழிலுக்கு தனியாக எல்லாவித பாதுகாப்பு வசதியுடன் அரசு ஒரு ‘வெடிமருந்து பூங்கா' இதே பகுதியில் நிறுவ முடியதா?




ழு படங்களுடன் பேட்டிகள் வெளியானால் அவர்கள் குடும்பத்திற்கு வேலை போய்விடும் என்பதால் படங்கள் எடுக்க அனுமதிக்க படவில்லை.

25/7/10


பிரார்த்தனைகளின் சங்கமம்                                

சற்றே சரிவாக வழுக்கும் ஈரக்களிமண்ணாகயிருக்கும் அந்த பாதையில் மிக கவனமாக நம்மை நடத்தி  நதியின் கரையிலிருக்கும் படகுக்கு அழத்து செல்லுகிறார் அந்த முதியவர்.  செம்மண் நிறத்தில் ஒரு ஏரியைப் போல் சலனமில்லாமல்    அமைதியாகயிருக்கிறது கங்கை.  படகு  மெல்ல செல்லுகிறது பத்து நிமிடப் பயணத்தில் சட்டென்று  நதியின் நிறம் மாறுகிறது. அதன் வேகத்தை படகிலிருக்கும்  நம்மால் உணரமுடிகிறது. இங்குதான் யமுனை கங்கா மாதாவுடன் சேருகிறார்,  
கண்ணுக்கு தெரியாமல் சரஸ்வதி நதி  இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் என்கிறார் படகுகாரார்.  வெளிர்நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும் அதைத்தொட்டு   சிறகடித்துபறக்கும் வெள்ளைப்பறவைகளும் அந்த  காலைப்பொழுதை ரம்மியமாக்கின்றன. தொலைவில் நிற்கும் நிறைய படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ண  கொடிகள்.
அருகில் போனபின் தான் அந்த இடம்தான்  திரிவேணி சங்கமம் என அறிந்துகொள்ளுகிறோம் .கங்கையும், யமுனையும், கண்ணுக்தெரியாத சரஸ்வதியும்  ஒன்றாக இணைந்து சங்கமிக்கும்  உன்னதமான இடம். இந்த இடத்தில் நீராடுவதும் வழிபடுவதும் மிகபுண்ணியம் என இந்தியாவின் எல்லா பகுதிகளிருக்கும் இந்துக்களாலும் போற்றப்படும் புனிதமான இடம்.. மாறுபட்ட திசைகளிலிருந்து வேகத்தோடு  நதிகள் இணையும்  அறுபது அடி ஆழமிருக்கும்,அந்த நடு ஆற்றில்  எப்படி நீராடமுடியும். என திகைத்துகொண்டிருக்கும், நாம் செய்யப்பட்டிருக்கும் எற்பாடுகளை பார்த்து அசந்துபோகிறோம். சங்கமம் என அடையாளம் காணப்பட்டிருக்கும் அரைகிலோ மீட்டர் பகுதியில் பல  பெரிய படகுகள் நங்குரமிடபட்டிருகின்றன. அவைகள் ஜோடிகளாக  இரண்டிற்குமிடையில் 6அடி இடைவெளி இருக்கும் வகையில் இரண்டு மூங்கில்களால் இணைக்கபட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில்  நாலு பக்கமும் பிடித்துக்கொள்ள வசதியான ஃபிரேமுடன் ஒரு சதுர மேடை தொங்குகிறது. கவிழ்த்து போடப்பட்ட  மேஜை போன்ற   தொட்டி. நதியின் உள்ளேமுழ்கியிருக்கும் இதை   இணைக்கும் நீண்ட நைலான் கயிறுகளை படகிலிருக்கும் உதவியாளார்கள் இயக்க   நதியில் மிதக்கும் அந்த குளிக்கும் மேடையில் இறங்கி  நாம் நீருக்குள் முழுகுகிறோம். முதல்  முழுகலில் பயம் தெளிந்து அமைப்பின் பாதுகாப்பு புரிந்திருப்பதால், பலமுறை ஆனந்தமாக முழ்கி திளைக்கிறோம். குளிக்கும்போது உள்ளே யமுனைநதிநீர்   மேல்பரப்பு செல்லும் திசைக்கு குறுக்காக பாய்ந்து செல்வதை உடல் நமக்குச்சொல்லுகிறது. வெளியே ஒரு படகில் பளபளக்கும் பித்தளை தட்டில் சாமந்தி பூக்களுடனும், பூஜை சாமான்களுடனும் காத்திருக்கும் பண்டா  ஈர உடைகளுடனேயே பிராத்தனை செய்ய அழைக்கிறார். பக்கத்து படகுகளில் அணிந்திருக்கும் சபாரி உடையின் மீதே பூணுலும், மாலையை அணிந்தமஹராஷ்ட்டியர், கைநிறைய வளையல்கள் அணிந்த ராஜஸ்தான் பெண்கள், பஞ்சகச்ச வேஷ்டியில் கையில் ஸ்படிக மாலையுடன்  தெனிந்தியர் என பலபேர். அந்த இடமே பிராத்தனைகளின்        சங்கமாகயிருக்கிறது.   மற்றொரு படகில் பக்கங்களும் மேற்கூரையும் பிளாஸ்டிக் துணியால் முடப்பட்ட டிரெஸ்சிங் ரூம். கண்ணாடி கூட வைத்திருக்கிறார்கள். அந்த படகின் நடுவில் குஷன்கள் இடப்பட்ட பெஞ்ச் நாற்காலியில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் படகின் சொந்தக்காரர். அவரது ஆசனத்தின் பின் நிற்கும் கம்பத்தில்தான் கொடிபறக்கிறது. இது போல பல படகுகள். பல வண்ணகொடிகள்.  கரையிலிருந்து நம்மை அழைத்து வரும் சின்ன படகுகாரர்களுக்கு அவர்களின்  குரூப் அடையாளம் தெரிவதற்காக இந்த  கொடிகளாம். வருபவர்களுக்கு நல்ல வசதிகள் செய்துதரும் இந்த படகுக்காரர்கள் ஒடும் நதியில் பகுதிகளை பிரித்து பங்கிட்டு உரிமை கொண்டாடி சம்பாதிக்கும்  சாமர்த்தியசாலிகள். நீராடித்திரும்பும் போது பின் காலைப்பொழுதாகவிட்டதால்,யமுனைநதி நீரின் உயரமும் வேகமும் அதிகரித்திருப்பதால் படகு சீக்கிரமாக கரையைத்தொடுகிறது.

 மொகலாய கட்டிடக்கலையின் மிச்சங்களை ஆங்காங்கே அடையாளம் காட்டும் அலகாபாத் இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று. பெரிய பல்கலைகழகம்,மாநில தலைநருக்கு வெளியே  துவக்கப்பட்ட ஹைகோர்ட் என பல கெளவரவங்களை பெற்றிருந்தாலும், நகரம் என்னவோ களையிழந்துதான் காணப்படுகிறது. பளபளக்கும் வண்ணத்துணியில்  பூ வேலைகளுடன் வட்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான  மேல்கூரையும் பின்திரையுமிட்ட சைக்கிள் ரிக் ஷாக்கள்களை ஒட்டும் சட்டையணியாத ரிக் ஷாகாரர்கள், மேற்கூரையில் பயணிகளுடன் மினிபஸ் போன்ற வினோதங்களை ரசித்தவண்ணம் விசாரித்து வழியறிந்து நாம் செல்லுமிடம் ஆனந்த பவன்.
பரந்த பசும்புல்வெளியின் மறுகோடியில் வெளிர்மஞ்சள் நிறத்தில்  நிற்கும் கம்பீரமான இந்த இரண்டு அடுக்கு மாளிகையில் தான், மூன்று தலைமுறையாக நேரு குடும்பத்தினர் வாழ்ந்திருக்கின்றனர். இந்திரா காந்தி இதை அரசுக்கு நன்கொடையாக தந்து அருங்காட்சியகமாகயிருக்கிறார். அண்ணல் காந்தியடிகள் பலமுறை வந்து தங்கியிருக்கும் இந்த மாளிகையின் அறைகளை அந்த காலகட்டதிலிருந்தது போல், பயன் படுத்திய பொருட்களுடன்  நிர்மாணிக்கபட்டிருக்கும் அறைகளைப் பார்க்கிறோம். மாடியில் .நேருவின் படுக்கை அறையில் அலமாரியிலிருக்கும் புத்தகங்களின் முதுகில் அச்சிடபட்டிருக்கும் பெயர்களைக்கூட படிக்க முடிகிறது. எழுதும் மேசையிலிருக்கும் பார்க்கர் பேனாவும், வெளிநாட்டு தயாரிப்பான சின்ன சூட் கேஸும் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.  இந்திராவின் எளிமையான அறை, அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்தை நடத்திய இடம், எல்லாவற்றையும் பார்த்தபின் கிழே வரும் நம்மை, கவர்வது  கிழ்தளத்தின் வராண்டாவில், ‘இந்திராவின் திருமணம் நடைபெற்ற இடம்’ என்ற அறிவிப்புடனிருக்கும் ஒரு சின்ன மேடை. திருமணம், மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது எனபதை கண்காட்சியிலுள்ள படம் சொல்லுகிறது.
 அல்லிதாடகம், அழகான பூச்செடிகள்,அருமையாக பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்த சூழலை ரசித்தவண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது,  முகப்பில் காவிவண்ணத்தில் நிற்கும்   ஒரு பெரியபாறையும், அதில் நேர்த்தியாக பொருத்தபட்டிருக்கும் பட்டயமும் தான். பட்டயதில்  “செங்கலாலும்,சுண்ணாம்பாலும் எழுப்பட்ட வெறும் கட்டிடம் மட்டுமில்லை இது. தேசத்தின் சுதந்திர போராட்டத்துடன் மிக நெருங்கிய உறவு கொண்டது. இதன்  சுவர்களக்கிடையே மிகமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.” என்ற பித்தளை  எழுத்துகள் மின்னுகின்றன.
மனதைத் தொட்ட மணியான வாசகங்கள்.
 படங்கள் ரமணன் (அன்னை இந்திராவின் திருமணப்படம் அருங்காட்சியகத்தில் வாங்கியது)
(25.07.10)




11/7/10


அழைத்து அருள் தரும் தேவி..

மெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகபரபரப்காக இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரபட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில்  இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம் நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள் என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது. ஜம்மூவிலிருந்து   50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே.  தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்' என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்
இமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200  அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து  துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும் இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷுயுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் சுவுண்ட்டர் கணணீமயமாக்பபட்டிருப்பதால். பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள் அதிகபட்சம் 22000  பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால்.தரிசனம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே  புதிய அனுமதி சீட்டுகள்  வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின்  நடந்தோ, குதிரையிலோ. பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ   பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது. பெரும்பா¡லான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள். குடும்பங்கள். உரசிக்கொண்டு போகும்குதிரைகள் இவர்களுக்கிடையே  நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கிழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாசியமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள், கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனலாய்ங்களில் மலிவான விலையில் சாப்பாடு ஓய்வெடுக்ககூடங்கள் என  பல வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்ட்டர் வசதியிருப்பது  என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது.பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை,,தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும்  படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது. சிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும்,தவத்தை கலைக்க முயற்சித்த காலபைரவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம்.பிராதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் சன்னதியில் தேவி தன்னை மூன்று  பிண்டிகளாக (சுயம்புக்களாக) தன்னைவெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.சிலைகளோ அல்லது மூர்திகளோ கிடையாது.எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன்  அந்த பிண்டிகளை  கவனமாக பாருங்கள் என்ற அறிவிப்பு காணப்படும் அந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட  6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும்   சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதிசீட்டிற்கான குருப் எண்ணைப் பெற்று  வரிசையில் காத்திருக்கிருக்கும்போதுதான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்சர்க்கூயூட் டிவியில்  காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதி வரை அனுமதிக்கபட்டிருக்கிறது என்பதுதெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுகொண்டிருக்கிறோம்.
வரிசையிட்டுச்செல்லும் வழியின் இறுதியில் கண்னாடிசுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப்பட்டுகொண்டிருக்கின்றன.,அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை. சில காலம்முன்வரை தவிழ்ந்து செல்லவேண்டிய குகையாகயிருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன்   சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.


அந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை அதில்தான் சன்னதி, அடுத்தவரின் கழுத்துஇடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்தசில வினாடிகளுக்குள் அவசரபடுத்துகிறார்கள்.சரியாகபார்ப்பதற்குள் நமது தலையில் கையைவத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்கள்.நுழைந்தமாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம். கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள் என்று ஆங்கிலத்தில்   யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில்விழுகிறது.ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம்    வழியிலுள்ள  காலபைரவர் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார்  ஒரு பக்தர்.  அவரையும்தரிசித்துவிட்டு  மற்றோர்பாதைவழியாக  கத்ரா திரும்புகிறோம்.

கத்ராவிலிருந்து ஜம்மூவிற்கு  வந்து  நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது  சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த  சிலை.நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம்.  நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை.1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு  தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது. அதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாததகா இருந்தாலும்காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது
 அரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான முனைவர் கரன்சிங்(முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார்.ஒரு அறகட்டளை நிர்வகிக்கும்  இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம்.அரச குடும்பத்தின்  தலைமுறைகள் சேர்த்த   பலவையான  அற்புதமான ஓவியங்களும்  அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன. தர்பார் ஹாலில் மன்னர் குடும்ம்ப படங்களைத்தவிர, மினியெச்சர்
என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல்   காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக்கண்டு வியந்துபோகிறோம். 60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக்கொண்டிருக்கும்  நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வசெழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது.முதல் தளத்தில் 25000புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷ்ய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது.
 “மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள் என்ற வாசகம் நினைவிற்கு வந்தது,
 (கல்கி11.07.12)

                  

6/6/10

வரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி



மாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும்  அனுமதியில்லாதால்ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும்  உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்டநம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.
8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த  குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்)  குட்டி தலைநகர் காண்டாக்.  தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது.  மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன
பளிங்குவெள்ளையாய் பனி மூடிய  கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில்  பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த  மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன சின்ன சத்தமில்லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும்  அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்காமக்கள் மாலைப்பொழுதை  நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும்  நடந்தே  4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி  அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது  பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த  கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர்   ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.
மறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு  உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.
நகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை  நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்

நீங்கள் பார்க்கப்போவது  புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும்.  இந்த மடத்தின்  இன்றைய  தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.”  அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.என்ற  அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில்  மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து  சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன்  நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன்  உயர்ந்து நிற்கும்  ஒருகல் தூண். மறுகோடியில்   திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு  அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்தின்  குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை  எப்போது செய்யப்போகிறார்களோ என்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள் என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்பது இவர்களைப் பற்றிதான் என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு  அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்
புத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு  கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள்.  தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை  இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது  மடத்தின்  தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர்  எரிக் தந்தபோது  சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன்  பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.
திடுமென  உரத்து சங்கு ஒலிக்கிறது.  மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும்  மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து  முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.என்று விளக்குகிறார் எரிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள்! ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.
பிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா?” என்ற நமது கேள்விக்கு எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லை என்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.
மெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம்.  பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது .  தொப்பி இருக்கும் விபரத்தைதான் சொன்னே தவிர  பார்க்க முடியம் என்று    சொல்லவில்லையே   என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர்  கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள் என்றார்.
நம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.
(கல்கி 06.062010)

பார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்
                                                     ரமணன்



                                                                     


                                                                      

28/3/10

உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி


உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி                                                                                               

சிக்காகோ நகரின் யூனியன் ஸ்டேஷனில் புறப்படத்தயாராகயிருக்கும்  அந்த மின்சார ரயிலை பிடிக்க ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் அந்த அவசரத்திலும் அந்த கடையின் ‘ரஷ்’ கவுண்ட்டரில்  கார்டைக்காட்டி ஒரு  கப்  காபி வாங்குகிக்கொண்டு ஓடுகிறார். நியூயார்க் நகருக்கு வெளியே செல்லும் அந்த நீண்ட ஹைவேயில்  சென்றுகொண்டிருக்கும் கார் வலது புறம் தெரியும் அந்த போர்டை பார்த்தவுடன் வேகம் குறைந்து அந்த ட்ரைவின் கவுண்ட்டர் அருகே செல்லுகிறது.ஒட்டுவரின் கரம் நீண்டு காரின் சீட் அருகே பொருத்திக்கொள்ளும் வசதியுள்ள கப்பில்  ஒரு காபி வாங்கிக்கொண்டு பறக்கிறது. ஸான்ஸ்பிரான்ஸிஸ்கோ  நகரின் பரபரப்பின்  சந்தடி எதுவும் கேட்காத அந்த பாரிஸ்டாவில் தனது லாப்டாபில் முழ்கி கிடக்கும் அந்த இளைஞைன் அருகில் ஒரு பெரிய கோப்பை காபி. இப்படி அமெரிக்க தேசமே இந்த ஸ்டார்பக் நிறுவனத்தின் காஃபிக்கு அடிமையாகி  கொண்டிருக்கிறது.
காஃபி பயிரே விளயாத தேசமான அமெரிக்கா தான்  உலகில் அதிகம்பேர் காஃபி அருந்தும் நாடு . கடந்த 10 ஆண்டுகளில் காஃபி குடிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை  உயர்த்தியதில் (87% மக்கள்) ஸ்டார் பக் நிறுவனத்திற்கும் ஒரு  கணிசமான பங்கு உண்டு. தேர்ந்தெடுத்த காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து கொடுக்க, டீ  மற்றும் வாசனைத்திரவியங்கள் விற்கும் கடையாக துவங்கிய நிறுவனம் இது. வாடிக்கையாளருக்கு ருசி காட்ட  அதன் வாசலில் ஒரு சின்ன காபி கடை திறக்கலாம் மகன்கள் சொன்ன  யோசனையை நிராகரித்து, “காஃபி என்பது வீட்டில் தயாரிக்க வேண்டியது. அப்படி எதாவது ஆரம்பித்தால், நமது முக்கிய வியாபாரம் பாதிக்கும்” என்று சொன்னவர் இதன் நிறுவனர். ஆனால் அடுத்த தலைமுறையினர் துவக்கிய இந்த காஃபி கடை தொழில் இன்று மிக பிரமாண்டமாக வளர்ந்த. அமெரிக்கா முழுவதும் 11200    கடைகளும்    உலகின் 43    நாடுகளில் பல கிளைகளுடன் ஒரு தனி சாம்ராஜ்யமாகியிருக்கிறது
 “சூட ஒரு கப் காஃபி கொண்டுவாங்க” என்று இவர்கள் கடையில் ஆர்டர் செய்ய முடியாது. 20வகையான காபியை 160 வித முறைகளில் தயாரிக்கிறார்கள். அமெரிக்க தேசத்தின் பல பகுதி மக்களின் ருசிக்கேற்ப பல  காஃபி வகைகளை பட்டியலிட்ருக்கிறார்கள்.அந்த மெனுவிலிருந்து தேர்ந்தெடுப்பதை உடனடியாக  தயாரித்துக் கொடுக்கிறார்கள், இதற்ககாக இந்த நிறுவனத்தின் கல்லூரியில் பயிற்சிபெற்று ‘காஃபி மாஸ்டர்’ பட்டம் பெற்றவர்கள் பணியிலமர்த்தப்ப்ட்டிருக்கிறார்கள். கடைகள் நகரின் முக்கியமான இடங்களில்,  எர்கண்டிஷன், எளிதான(வயர்லெஸ்)இண்டர்நெட்வசதி,வசதியான இருக்கைகள், இனியஇசை போன்ற வசதிகளுடன் இருப்பதால் கடைகளில் எப்போதும் கூட்டம். அதிக காஃபி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை மறுக்கும் இவர்கள் தங்கள் தாயரிப்பில் எந்த வகையில் எந்தமாதிரிப் பாலில் எவ்வளவு கொழுப்பு,எவ்வளவு சக்கரை, எவ்வளவு கார்போஹைரேட் என்பதை பட்டியிலிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யுங்கள் என்று வாடிக்கயாளருக்கு அறிவுறுத்துகிறார்கள். “60லிருந்து110  வரையிலான கலோரியில் ,11கிராம் கொழுப்புசத்துடன்,திக்காக  சக்கரை போடாமல் ஆனால் திதிப்புடன்,கொஞ்சம் விட்டமின் D சேர்க்கப்பட்ட ஆர்கானிக் பாலில் ஒரு சின்ன கப் காஃபி தாருங்கள்” என்று கூட ஆர்டர் செய்யலாம். இதற்காக இவர்கள் விற்கும்  காஃபிகளில் இருக்கும்  கலோரி,கொழுப்பு,சோடியம், சக்கரை, கால்சியம், இரும்பு,  காஃபைய்ன் போன்றவைகளின்  அளவுகளை குறிப்பிட்டு டைட்டியிஷயன்  தருவது போல சார்ட் தருகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து மண்டையை உடைத்துக்கொள்ளும் கஸ்டமர்களுக்கு உதவி செய்ய  தனி பணியாளார்களுமிருக்கிறார்கள். இதைத்தவிர சட்டென்று தேர்ந்தெடுக்க 200 கலோரிகளுக்கு குறைவான 20சுவை யான தேர்வுகள் என்ற குட்டி லிஸ்ட்டும் தருகிறார்கள்.

வேலைசெய்ய சிறந்த பணியிடம் என ஃபார்ச்சூன்100 நிறுவனத்தால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் வேலை செய்வோர் 1 லட்சத்திற்கும் மேல். கடந்த ஆண்டின் வர்த்தகம் 10,000பில்லியன் டாலர்களுக்கும் மேல்.   இந்த நிறுவனம் பற்றியும்,இதில் பணி புரிவர்களுக்கு  தரப்படும் சிறந்த பயிற்சி பற்றி யும் பல புத்தங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றியைப் பற்றிய கேஸ் ஸ்டெடியை  உலகெங்கும் MBA மாணவர்கள் படிக்கின்றனர்.

 சில ஆண்டுகளுக்கு வேலை நேரத்தை நீடித்து தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள், லாபபணத்தை இஸ்ரேல்    ராணுவத்திற்கு போருக்காக உதவ அனுப்புகிறார்கள் போன்ற சர்ச்சையில் சிக்குண்டு சற்று ஆட்டம் கண்ட இந்த நிறுவனம்  அதை மறுத்து தங்கள தரப்பு நிலையை விளக்க ,’வதங்திகளும்,உண்மைகளும்’ என்ற இணையதளத்தை துவக்கி நிலமையை பிரமாதமாக சாமாளித்தது..
இதை விட பிரபலமனாது  திருமதி ஓஸாமா அணியும் உடையிலிருந்து,குளோபல் வார்மிங்  வரை அலசப்படும்  ஸ்டார்பக் காஃபி ரசிகர்களின் ‘காஸிப்” என்ற இணையதளம்தான். ஸ்டார்பக் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாமல் தனித்து இயங்கும் இதில் வெளியாகும் விஷயங்கள் மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் இதை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
மானேஜ்மெண்ட் குரு பீட்டர் டெரெக்கர்  “ஒரு வியாபார நிறுனத்தின்குறிக்கோள் வாடிக்கியாளர்களை உருவாக்கி அவர்களை தக்க வைத்துக்கொள்வது தான்” என்கிறார். ஸ்டார்பக் நிறுவனம் அதை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.


V

21/2/10

அமெரிக்க தபால்தலையில் பிள்ளையார்


அமெரிக்க தபால்தலையில் பிள்ளையார்.

பிள்ளையார் மட்டுமில்லை! சீனிவாஸ பெருமாள்,கிருஷ்ணர், முருகன்  என்று நம்மூர் தெய்வங்களெல்லாம், 44செண்ட் தபால் தலையாக (ஒரு சாதாரண கவருக்குரியது)  அமெரிக்காவில் இப்போது கிடைக்கிறது.
மிக வேகமாக அதிகரித்துவரும்  ஈ மெயில், குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவை, இவைகளினால் தபால் அனுப்புவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதனால்  அமெரிக்க அஞ்சல்துறை தங்கள் சேவையை பிரபலமாக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2006ல் அமெரிக்க தபால் சட்டம் திருத்தப்பட்டபின் நிறைய மாற்றங்கள். தபால் நிலையங்ககளில் நிறைய வசதிகள். சிறிய நரங்களில் காரில் வரும் தபால்காரர் வந்த தபாலைக்கொடுத்துவிட்டு நம்மிடம் எதாவதிருந்தால் வாங்கிப்போகிறார்கள்.இரவு திறந்திருக்கும் தபால் நிலையம், ஆங்காங்கே ஸ்டாம்புகள் விற்கும் மிஷின்கள் அஞ்சல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் என  படிப்படியாக பல மாற்றங்கள். இந்த கடைகளில் பரிசுப்பொருட்கள்,கீரிட்டிங் கார்டுகள்விற்கிறார்கள்.அனுப்பவேண்டியவற்றை அழகாக பாக்கிங் செய்துகொடுக்கிறார்கள். சரியான அளவில் பெட்டி, கவர் எல்லாம் கிடைக்கும்.கட்டணம் அதிகமில்லை. உடன் வந்த நண்பர் தமது உறவினருக்கு அனுப்ப வேண்டிய வடகத்தை காட்டியதும்  உள்ளே குமிழ் குமிழான (bubble) பிளாஸ்டிக்கவர் ஒட்டிய அட்டைப்பெட்டியிலிட்டு, விலாசத்தோடு ‘உணவுப்பொருள்-கவனம்” என கம்யூட்டரில் அச்ச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்தார்கள்.
ஸ்டாம்ப் வாங்க தபால் நிலயம் போக வேண்டாம்,நமக்கு வேண்டிய தபால்தலைகளை ஆர்டர் செய்தால் வீடிதேடி வருகிறது. அதைவிட அழகான வசதி தேர்ந்தெடுத்த நம் குடும்பத்தினரின் படத்தை கம்யூட்டரில் அவர்கள் இணைய தளத்தில் அப்லோட் செய்தால்  அனுப்பிய படங்களை ஸ்டாம்ப் ஆக செய்துதருகிறது அங்கீகரிக்கபட்ட கம்பெனிகள். இந்த ஸ்டாம்ப்களை போஸ்ட்டாபீஸ்களில் வாங்கிய ஸ்டாம்ப்களைப்போல பயன் படுத்தலாம். பண்டிகை காலங்களில் குடும்பபோட்டோ,  திருமண அழைப்பிற்கு மணமக்கள், பிறந்த நாள் அழைப்பிற்கு குழந்தையின் படம் என இந்த ஸ்டாம்புகள் இப்போது பிரபலமாகிவிட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே  தனியார் நிறுவனங்களை இதுபோல ஸ்டாம்ப் தயாரித்து விற்க அனுமதிருக்கிறார்கள் என்றாலும் இதை முதலில் செய்திருப்பது அட்லாண்டாவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான கம்பெனிதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்து கடவுள் பட ஸ்டாம்ப் இப்போது  அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகவும் பிரபலம். இங்கிலாந்து, ஜெர்மனியில் வசிப்பவர்கள் கூட நண்பர்களுக்கு நினைவுப்பரிசாக அனுப்ப ஆர்டர் செய்கிறார்களாம்.
இணைப்பில் படங்கள்.
21/02/10 கல்கி






31/1/10

புனிதமான போர்க்களம்


புனிதமான போர்க்களம்                      

இந்திய தேசிய நெடுஞ்சால எண் ஒன்று  என்ற கெளவரத்தைப் பெற்றிருக்கும்  பரபரப்பான டெல்லி -ப்தான்கோட்  6 வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கும் நம்மைக் சட்டென்று கவரும் அந்த பிரமாண்டமான நுழைவாயிலும் அதன் மீதிருக்கும் கீதோ உபதேச சிற்பமும் நாம் பார்க்க போய்க்கொண்டிருக்கும் ‘குருஷேத்திரா’ நகர் அதுதான் என்பதைச் சொல்லுகிறது. பல பஞ்சாப்-ஹ்ரியான கிராமங்களைப்போல குருஷேத்திராவும் மெல்ல தனது கிராம முகத்தை இழந்து நகரமாகிக் கொண்டிருப்பது  அதன் வீதிகளில் தெரிந்தாலும், நகர் முழுவதிலும் சாலைச் சந்திப்புகளில் (*)  காணப்படும் அர்ஜுனன்சிலை, விஷ்ணுசக்கரம் தாங்கிய பகவானின் விரல், கீதையின் வாசகங்கள் பாதிப்பிக்கபட்ட பாறைகள் அந்த இடத்தின் பாரம்பரியத்தை அழகாகச் சொல்லுகிறது.
“புனித கீதை பிறந்த இடத்தைப் பார்க்க எப்படி போகவேண்டும்?” என்ற நமது கேள்விக்கு “அதற்கு 10கீமீ போகவேண்டும் -எங்களூரில்அதைத்தவிரவும் பார்க்கவேண்டிய பல முக்கிய இடங்களிருக்கிறது பார்த்து விட்டு அங்கே போங்களேன்”  டைட்டான ஜீன்ஸும்,முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அந்த பஞ்சாபி பெண் சொன்ன போது முகத்தில் சொந்த மண்ணின் பெருமை தெரிந்தது.
அவர் தந்த பட்டியலில் முதலிடம் இந்த தீர்த்தம்.(*)  1800 அடிநீளம் 1800அடி அகல பரப்பில் பறந்து விரிந்திருக்கும்  இந்த பிரம்மஸரோவரைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.(ஸ்ரோவர்என்றால் கடல்.)நீண்ட படித்துறைகள் அகன்ற பாதை, உடைமாற்றிக்கொள்ள வசதியாக கட்டப்பட்ட மண்டபங்களால் இணைக்கப்பட்ட  சுற்று புற பிராகாரம் அதன் மேல் தளத்திற்குப் போக படிகள்  அங்கே வசதியாக உட்கார்ந்து இந்த அழ்கான அமைதிக்கடலை ரசிக்க ஆசனங்கள் எல்லாவற்றிக்கும்மேல் பளிச்சென்ற பராமரிப்பு. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவுமிருக்கிறது. (*)கிரகணகாலங்களில் இங்கு நீராட பல லட்சம் பத்தர்கள வருகிறார்கள் என்ற தகவல் பிரமாண்டத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது. தீர்த்தின் நடுவே ஒரு சிவன் கோவில். தீவாகயிருந்த இதற்கு  இப்பொது எளிதில் போக ஒரு சின்ன பாலம். ஏரியில் நீர் ஏறினாலும் உள்ளே நீர் புக முடியாத வகையில் அமைக்கபட்டிருக்கிருக்கும்  அழகிய அந்த சின்னஞ்சிறு கோலில்  பெரிய நீர் பரப்பில் மிதக்கும் சின்ன படகைப்போலிருக்கிறது.
இந்த புனித நீராடுமிடம் நகரின் நடுவிலிருப்பதால் விழாக்காலங்களில் மட்டும்  வாகனங்கள் பயன் படுத்த கரைகளை இணைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த பெரிய பாலத்தில், நீர்பரப்பைத்தழுவி வரும் குளிர்ந்த காற்றில் நடந்து மறுபுறம் வரும் நம்மை தாக்கும் மற்றொரு ஆச்சரியம்  அங்கே கம்பீரமாக நிற்கும்  பிரமாண்டமான  அந்த வெண்கல சிற்பம். குழம்பிய முகத்துடன் நிற்கும் அர்ஜுனன்,  வலது கரத்தில் குதிரைகளின் கடிவாளங்களை லாகவமாக பிடித்தபடி முகத்தை சற்றே திருப்பி அவருடன் பேசும் கண்ணண், சிறீப் பாய தாராகயிருக்கும் குதிரைகள் என்று ஒவ்வொரு அங்குலத்திலும்  உயிரோட்டத்தைக் காட்டும் அந்த பிரமாண்டமான கீதாஉபதேச காட்சி சிற்பத்தின் செய்நேர்த்தி நம்மை அந்த இடத்திலியே கட்டிப் போடுகிறது.. ஓடத் துடிக்கும் நான்கு குதிரைகள் காட்டும்  வெவ்வேறு முக பாவனைகள்,  பறக்கும்கொடிதாங்கிய ரதத்தின் குடையின் முகப்பில் சிறிய ஆஞ்னேயர் உருவம்,குடையிருந்து தொங்கும் சிறுமணிகள்(*) போன்ற சின்னசின்ன விஷயங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்டிருப்பதில் உருவாக்கிய கலைஞர்களின் ஆத்மார்த்தமான உழைப்பை உணருகிறரோம்.. எத்தனைபேர், எத்தனை நாட்கள் உழைத்தார்களோ. என்று வியக்கிறோம். (*)அந்த வாளகத்தைவிட்டு வெளியே வந்து நடக்கும்  வீதி முழுவதும் பல அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் கீதா மந்திர்கள். அம்புப்படுக்கையில் கிடக்கும் பிஷ்மருக்கு தன் பாணத்தல் அர்ஜுனன்,  நீலத்திலிருந்து நீர் வழுங்கும் காட்சியையும், தன் குருதியாலேயே  முதியவருக்கு கர்ணன்   தானம் தரும் காட்சியையும் சிலைகளாக்கி முகப்பில் நிறுத்தியிருக்கும்  அந்த பிர்லா அறக்கட்டளையின் மந்திருக்குள் நுழைகிறோம்.(*) நிறுவிய காலகட்டதில் நவீன மாகயிருந்திருக்கும் நகரும் பொம்மைகளாலான மாஹபாரதகாட்சிகள் இன்று பொலிவிழந்தும் செயலிழந்துமிருக்கிறது.
இவ்வளவு பெரிய அறக்கட்டளை இதையேன் கவனிக்காமல் விட்டிருகிறார்கள் என்று எண்ணிய படியே நகரின் நடுவேயிருக்கும் அந்த உயரமான பெரிய  சிலிண்டர் வடிவ கட்டிடத்திலிருக்கும் “ஸ்யன்ஸ் செண்ட்டருக்குள்” நுழைகிறோம்.(*) முதல் தளத்தின் வட்ட சுவர் முழுவதிலும் தரையிலிருந்து மேற்கூறைவரை வரை 35அடி உயர பாரதப்போரின் காட்சிகள் முப்பரிமாணசித்திரமாக நிற்கிறது. ஓளியமைப்பு, தொலைவில் ஒலிக்கும் மரண ஒலங்கள் மெல்ல கேட்கும் கீதை, சுற்றியிருக்கும்  அந்த 18 நாள் போர்காட்சிகள்,எல்லாம்  நடுவில் நிற்கும் நமக்கு ஒரு போர்களத்திலிருக்கும்.உணர்வை எழுப்புகிறது. அந்த சூழ்நிலைதரும் மனஅழுத்தம் அந்த தரமான ஒவியங்களை ரசிக்க முடியாமல் செய்கிறது.
தரைத்தளத்திலிருக்கும் அந்த கருவூலத்தைப் பார்த்தபின் தான் பாண்டவ, கவுரவர்களின் மூதாதையர்களான குரு வம்சத்தினரரின் முதல் அரசர் தவமிருந்து வரம்பெற்று உருவாக்கியது தான் பரத நாடு, குருஷேத்திற்கு வந்த சீன யாதிரிகர் யூவான் சூவாங் தனது குறிப்பில் இந்த நகரைப் புகழ்ந்திருப்பதும், இந்த இடம் முகமதியர், சீக்கியர்  புத்த மத்தினருக்கும்  முக்கியமான வழிபாட்டுதலம், கெளதம புத்தர், குரு கோவிந்தசிங், வந்திருக்கிறார்கள், போன்ற பல வியப்பான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
நகரில் 300மேற்பட்ட கோவில்களிருப்பதைவிட ஆச்சரியம் அவற்றில் தினசரி வழிபாடு நடைபெறுவதுதான், புனிதமான் கீதைபிறந்த இடத்தைப்பார்க்க பயணத்தை தொடரரும்  வழியில் நாம் நிற்கும் இந்த பத்திரகாளிகோவில் தான் மிகமிக பழமையான சக்திபீடம். கிருஷ்ணரே வழிபட்டதாக அறியப்பட்டது. வேண்டிக்கொண்டபடி போரில் வெற்றி அருளியதால் பாண்டவர்கள் தங்கள் குதிரைகளையே அன்னைக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.இன்றும் வேண்டுதல் பலித்தால் பத்தர்கள் சிறிய மண்குதிரை பொம்மையை காணிக்கையாக படைக்கிறார்கள். சன்னதியில் மலர்ந்த தாமரையில் நிற்கும் ஒரு தூண்டிக்கப்பட்ட கால், தேவியின் உடல் வெட்டி வீசப்பட்டு விழுந்தஇடங்கள் எல்லாம் சக்திபீடங்கள் என்றும் இங்கு விழுந்தது கால் என்றும் அறிகிறோம்.(*) இப்படி தனியாக அங்கம் மட்டும் வேறுஎங்காவது பூஜிக்கப்படுகிறதா என எண்ணிக்கொண்டே பயணத்தைத் தொடர்கிறோம்.
அறுவடைமுடிந்து காய்ந்து கிடக்கும் நிலங்களையும் குடிசை  வடிவில் அடுக்கபட்டிருக்கும் வைக்கோல் போர்களையும், நகரநாகரிகத்தின் நிழல்படாத சில அசலான ஹ்ரியானா கிராமங்களையும் கடந்து நாம் வந்திருக்குமிடம் ஜ்யோதிஷர்.     
 மாங்கனி வடிவத்தில் பச்சை வண்ணத்தில் நீர் நிறைந்த ஒரு குளம். ஒரு புறத்தில் அல்லி பூத்திருக்கிறது, அதன் ஒரு கரையில் வழவழப்பான தரையுடன் பெரிய அரை வட்ட மேடை..அகலமான படிகள். நடுவே  வலையிட்டு மூடிய ஒரு ஆலமரம்.(குளத்தில் அதன் இலைகள் விழாமலிருக்கவும் பறவைகள் வந்து அமைதியைக்குலைத்து விடாமலிருக்கவும்) மரத்தைச் சுற்றி   வெண்சலவைக்கல் மேடை. அதன் மீது  கண்ணாடி கதவிடப்பட்ட சிறு மண்டபம்.உள்ளே சலவைக்கல்லில்  கீதா உபதேசகாட்சி. மலர்கள் பரப்பிய  தரையில் எரியும் ஒற்றை அகல். மரத்தின் அடியில் நடப்பட்டிருக்கும்  சிறு கல். கொண்டுவந்த சிறு கீதைப்புத்தகங்களை மரத்தின் அடியில்வைத்து பூஜிப்பவர்கள்.சற்றுதொலைவில் அமர்ந்து கீதை வாசிப்பவர்கள். தியானம் செய்பவர்கள். சன்னமான  ஒலியில் ஸ்லோகம். என அழகான அந்த இடம் ஒரு தெய்வசன்னதியைப்போல இருக்கிறது. கீதையின் முதல் ஸ்லோகத்தின் முதல் வரியில் சொல்லபட்டிருக்கும்“தர்மஷேத்திரம்” இதுதான். இந்த குளமும். ஆலமரமமும் தான் நடந்த பாரதப்போருக்கும், பஹவான் கிருஷ்ணர் அர்ஜுனனக்கு கீதையை உபதேசித்தற்குமான சாட்சி.. அந்த மரத்தின் விழுதுகளில்   வழித்தோன்றலாக எழும் மரங்களை பலஆயிரமாண்டுகளாக போஷித்து பாதுகாத்துவருகிறார்கள். தொடர்ந்து  பராமரிக்கபடும் குளத்தையும், மரத்தையும் தரிசிப்பதை புண்ணியமாக கருதி வருபவர்களுக்கு, அருகிலேயே கீதைபிறந்த கதையை  தினசரி இரவில் ஒலி,ஒளிக்காட்சியாக   காட்டுகிறர்கள்(*)
ஒருபுறம் ஆராய்ச்சியாளார்கள் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தை  நிருபிக்க சான்றுகளைத் தேடி சர்ச்சை செய்துகொண்டிருப்பதையும், மறுபுறம் காலம் காலமாக செவிவழிசெய்தியாகச் சொல்லபட்ட இந்த  சாட்சிகளே தெய்வமாக மதிக்கபடும் வினோதத்தையும்  என்ணிக் கொண்டே திரும்புகிறோம்..   “ கீதை எப்போது சொல்லபட்டது என்பது நமக்கு முக்கியமில்லை.அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்” என்ற விவேகானந்தர் எழுதியிருப்பது நினைவிற்கு வந்தது. எவ்வளவு அற்புதமான வாசகங்கள்.!                                     

27/12/09

தேவதாரு காடுகளின் தேவதைகள்


     இங்கே....1
              

     தேவதாரு காடுகளின் தேவதைகள்
     பசுமையான மரங்கள் அடர்ந்துபரவியிருக்கும் அந்த மலச்சரிவுகளுக்கிடையே மரகதப்பச்சை வண்ணத்தில்     அமைதியாக அழகாக பரந்து விரிந்திருக்கும்  நைனிதால் ஏரியும் அதன் மீது  அமர்வதற்காக மெல்ல      மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்கள், அழகான வண்ண பாய்மரப்படகுகளை ஒளித்து   காட்டி  ஆடும் கண்ணாமூச்சி  ஆட்டம் இந்த உயரத்திலிருந்து பார்க்க மிக அழகாகயிருக்கிறது.  ஏரியின் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் கொடியும் தெளிவாக தெரிகிறது அதன் அர்சகர் சொன்னது போல நைனிதால் ஏரி ஒரு கண் வடிவிலிருப்பது புரிகிறது. "இது மற்ற இந்தியகோடை வாஸஸ்தலம் போல வெள்யைர்களால் கண்டுபிடிக்கபடவில்லை. இந்த பகுதி முழுவதும் இந்து மத புராணங்களுடன் சம்பந்தபட்டது, தெய்வங்களும், தேவர்களும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்கு மேலுள்ள மலத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  சந்தன்  வம்ச     மன்னர்களின் ஆட்சியில்      மக்கள்   சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள்  இந்த ஏரி தக்ஷினன் யாகத்தில் பங்கேற்தற்காக     கோபத்தில் சிவ பெருமான் தேவியை வெட்டியபோது   பார்வதிதேவின் கண் விழுந்த இடம். அதனல்தான் நைனிதால்     எனப்பெயர்.  100மைல்      தூரத்தில் 12 ஜோதிலிங்கங்களின் ஆதி ஜோதிலிஙமிருக்கிறது.      போய்பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் சொன்னதைத் தொடர்ந்து சேகரித்த தகவல்களில் புரிந்து கொண்ட விஷயம்- உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து உருவாக்கபட்ட இந்த உத்திராஞ்சல்  மாநிலத்தின்                      
மலைப்பகுதி   ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமி     என்பதையும் சுற்றிருக்கும் 7 மலைகளில்          அழகான ஏரிகள் மட்டுமில்லை. வீரம், கல்வி,நீதி, கலை, செல்வம் போன்றவகளை காக்கும் தேதைகளின்
கோவில்களிலும், மிகப் பழமையான, ஜோதி லிங்ககளின் ஆதி லிங்கமும் இன்றும் வழிபடப்படுகிறது         என்பதையும்தான்.   இப்போது ஜோகெஷ்வரை தரிசிக்க போய்க்கொண்டிருக்கிறோம்.  ஒரு மாநிலத்தலைநகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத அந்த சின்னஞ்சிறிய ஊரின் நடுவே இருக்கும்     நைனிதால் ஏரியின்    கரையின் ஒரு புறம் தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே.நடக்கமுடியாதவர்கள்க்கு சைக்கிள் ரிக்ஷா வசதி. அதற்கு Q வில் நின்று 3 ரூபாய்  டோக்கன் வாஙகவேண்டும். (பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!)     அந்த சாலையில் பொது வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.  வாகனங்களுக்கு  என ஒதுக்கபட்ட 'ஒரு வழிபாதை'யில் கட்டணம் செலுத்தி (மாலைநேரங்களில் இரட்டிப்பு கட்டணம்) நகரை ஒரு சுற்று சுற்றி     வந்து கிளம்பிய இடத்தின் மிக அருகிலிருக்கும் பாதையில் பயணத்தை துவக்கிறோம்.வழியில்  தூரத்தில்
மலையிருக்கும்   ZOO என்று ராட்சத  பெயர்பலகை அடர்ந்த மரங்களுக்கிடையே பளிச்சென்று தெரிகிறது.  இந்த மலை வாஸஸ்தலத்தில் ஒரு ஜுவா? எனஆச்சரியத்துடன் உள்ளே போன நமக்கு மேலும் பல ஆச்சரியங்கள்.   இயற்கையான வனச்சூழலில் படுசுத்தமாக இருக்கும் அந்த அழகிய பூங்காவில்
அபூர்வமான விலங்குகள்.  இந்தியாவில் பார்க்கமுடியாத பனிலைக்காடுகளில் மட்டுமே காணமுடியும்   சைபீரியன் புலிகள்,      பனிகரடிகள் எல்லாம் கம்பீரம்மாக நம்மைப்பார்த்து சந்தோஷப்பட்டு      போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறது. என்ன-பார்க்க முழங்காலை முறிக்கும்  200 படிகள் ஏற வேண்டும்          அவ்வளவுதான்.
         
 வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின்  இரண்டுபுறமும்   பளபளக்கும்          பெரிய பச்சை கார்பெட்     விரித்ததுபோல பசுமையான காடு.  பார்க்குமிடமெல்லாம் நின்தன் பச்சைநிறம்         தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க்கொண்டிருக்கும் நம்மை பள்ளதாக்கில் தெரியும்   அந்த  கிராமம் சட்டென்று கவர்கிறது.   அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில்      ராமகிருஷ்ண  மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில்இறங்கினால்.அழகான பள்ளத்தாக்கை நோக்கி  எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம்.மற்ற          ராமகிருஷ்ண ஆஸ்ரமங்களைப்போலவே அமைதியும்,அழகும் மிளிரும் வழிபாட்டுகூடம். புத்தங்களும், ராமகிருஷ்ண           மடத்தலைவர்களின் பெரிய படங்களும் நிறைந்த   அந்த      தலைவரின் அறையின் ஜன்னல்கள் வழியே தெரியும்        பள்ளதாக்கு      ஒரு ஒவியம் போலிருக்கிறது.  காத்திருந்த முன்பின் தெரியாத   நம்மை கனி¢வுடன்


கூட்டதில் பேச     அழைக்கபட்ட சுவாமி விவேகானந்தர் பார்த்தவுடன் இந்த இடம் தியானசெய்ய சிறந்த இடம்  என தேர்ந்தெடுத்து மடம்      நிறுவ ஏற்பாடு செய்து,.அல்மோடாவிற்கு இரண்டுமுறை வந்திருக்கிறார்.அண்ணல் காந்திஅடிகள்இந்த அருமையான        இடத்தைவிட்டுவிட்டு நம் மக்கள் உடல் நலம்பேண ஏன் ஐரோப்பாவிற்கு போகிறார்கள்? என எழுதியிருக்கிறார்           நேரு அன்னி   ய ஆட்சியில் இங்குள்ள சிறையில்சிறை வைக்கபட்டிருக்கிறார். தாகூர் பல கோடைகாலங்களில் தங்கி          நிறைய எழுதியிருக்கிறார். நடன மேதை உதய்சங்கர்  இங்கு திறந்தவெளி நடனப்பள்ளி     நிறுவியிருக்கிறார்.       இசைமேதை பண்டிட்    ரவிசங்கர் இந்த ரம்மியமான சூழ்நிலையில் புதிய ராகங்களை உருவாக்கியிருக்கிறார். - இப்படி          பல  ஆச்சரியம்மான தகவல்களை  தந்து,நாம் பார்த்துகொண்டிருக்குமிடம் அழகானது மட்டுமில்லை             வரலாற்று முக்கியமானது     என்பதை புரியவைக்கிறார்..   



5000அடி உயர்த்தில் ஓரு மாவட்ட தலைநகரமாக       உருவாகியிருக்கும்      இது இப்போது அண்டைய மலைப்பகுதிகளின் விளைபொருட்களான பலவகை பழங்களுகான      பெரிய மார்க்கெட்டாகி வருகிறது.  சாலை ஒரக்கடைகளில் கூட  இதுவரை நாம் பார்க்காத பல பழங்கள் கூட மிக மலிவாககிடைக்கின்றன. ஆண்டுமுழுவதும் 18வகை    பழங்கள் கிடைக்குமாம்.
         
மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும்  ஒரு வினோதமான வானிலையில்       பயணத்தை     தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும்பெரிதுமாக கோவில்கள்.உள்ளுர் காவல் தெய்வங்களலிருந்து சிவபெருமான்
வரை பலவிதமான கோவில்கள். அதில் ஓன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில். வித்தியாசமாக           இருக்கிறது. நுழைவாயில்,பாதை,மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள்          கொத்துகொத்தாக     தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,
வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேராத ஒப்பந்தங்கள் போன்றவைகளின்,நகலுடன்  ஒரு சிறிய மணியை இனைத்து கட்டி,        நல்ல முடிவு வேண்டி பிரார்த்தித்து, வேண்டுதல்  நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்று
தெரிந்தது. அரசு முத்திரைத்தாளில் எழுதப்பட்ட ஒரிஜினல் காப்பி ஆவணத்தை     ஒரு தம்பதியினர் பூஜித்தபின் கட்டி வைப்பதை பார்க்கிறோம்'     கோவில் வாசலில் பூஜைப்பொருட்களுடன் சிறிய பெரிய மணிகள்விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அதிக அளவில் கட்டப்பட்டிருக்கும்      பெரிய மணிகளின் எண்ணிக்கையிலிருந்து கோவிலின் கூட்டத்திற்கான காரணம் புரிகிறது.  இந்த     கோவிலினால் நீதிமன்றத்திற்கு வெளியே முடிக்கபடும் வழக்குகள் அதிமாகியிருக்கிறதாம்.
         
பல மலைச்சரிவுகளையும் ஏற்றங்களையும்  கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது.       சந்தன காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஒங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் வீசும்      குளிர்ந்த காற்றும்   அதிக உயரத்திற்கு   வந்துவிட்டதை உணர்த்துகிறது. இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்கிறது என்ற        தொல்பொருள் துறையினரின்   அறிவிப்புடன் நம்மை வரவேற்கிறது ஒரு கோவிலினிலருகிருக்கும் செக்போஸ்ட்.                                        
   9ம் 10ம் நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும்  முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமி தொலைவில் இருப்பதாக         சொல்லும் அந்த குறிப்பைபார்த்துவிட்டு பயணத்தை தொடர்கிறோம் சட்டென்று திரும்ம்பிய ஒரு திருப்பத்தில்  பள்ளத்தாக்கில்      பசுமையான தேவதாரு மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாக கும்பலாக பல கோவில்கள்.   சதுரமானகீழ்பகுதியாக துவங்கி,
நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையா  உயர்ந்து கோபுரமாக குவிந்த         உச்சியின்  மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தை தொப்பியாக அணிந்திருக்கும்  ஒரு பெரிய கோவில்.
அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால்  இடித்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாக   பல குட்டி (100கும்மேலிருக்கும்)கோவில்கள்.  அருகே சென்றதும் ஒருகிராமத்திருவிழாவிற்குள் நுழைந்தஉணர்வு. விழாக்காலமானதால்      கோவிலிருக்கும் அந்தசாலையில் மலைவாழ்மக்களக்குகாக அரசு அமைத்திருக்கும் பொருட்காட்சி. அன்று பிரதோஷ நாளானாதால்      உள்ளுர்/வெளியூர் கூட்டம். கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கபட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் மூர்த்தி ஜோகெஷ்வர் சுய்ம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 1அடி உயரமிருக்கும்



மூர்த்தியைச் சுற்றி மூன்றுபக்கங்களிலும் பக்தர்கள்          கர்ப்பககிரகத்தில் பொறுமையுடன் உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ன உடையில்அர்ச்சகர் வந்து அவர் ஆசனத்தில் அமர்கிறார்.       பாலில் தோய்த அரிசி தேவதாரு இலைகளுடன்அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.அவருடன் நாமும் செய்யும் அபிஷகம் முடிந்ததும்       மெல்லிய்ய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்ச்சிக்கும்போது நாமூம் அர்சிக்கிறோம்.          பின் தீபாரதனை. பூஜைமுடிந்தது.
பூஜைக்கு கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. முதலில்வருவபருக்கு ஸ்வாமியின் அருகே அமர முன்னுரிமை. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உத்திராஞ்சல் மாநில உயர்மன்ற நீதிபதி என்பதை வெளியில் வந்தபின்  அவருக்குள்ள   பாதுகாப்பை பார்த்தபின்தான்      தெரிந்துகொள்கிறோம்.





அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். வாயிலில் "வேண்டிக்கொள்ளும்          பக்தர்களுக்கு  செல்வம் சேரும்" என எழுத பட்ட வாசகங்கள். அருகில் அவ்வளவு கூட்டமிருந்தும் ஏன் இங்கு அதிகமில்லை என்ற நமது       கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில்     பற்றி சிந்திதுக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்கிகிறோம்.
வேடிக்கைக்காக சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ -நம்மை சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை        வாங்கிக்  கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"